Saturday, June 13, 2015

Epilogue of இடப்பெயர்ச்சி பலன்கள்.

மரத்தடியில் ஒரு காலத்தில் எழுதியதெல்லாம் அவரவர் பேர் போட்டு ஒரு ஃபோல்டரில் வைத்திருந்தார்கள். எனக்கு தெரிந்து அது முழுக்க முழுக்க ஜெயஸ்ரீயின் உழைப்பு. ப்ளாக்  ஆரம்பித்தபோது ரொம்ப சுலபமாக அதற்கு ஒரு லிங்க் கொடுத்து மொத்தமாக மறந்தே போனதை மரத்தடி.காம் இல்லாமல் போன போது அவசரமாக ஒரு வோர்ட்ப்ரெஸ் பளாக்ல் சேமித்து வைத்தும், இது தவறிப் போயிருக்கிறது. அதனால் தான் இங்கே.

தினம் ஒன்றாக இந்த பனிரெண்டு நாட்களாக‌ இடப்பெயர்ச்சி பலன்களை ரீ-போஸ்ட் செய்யும் போது மறுபடியும் அந்த நாட்களுக்கு போய் விட்டு வந்தேன். நிறைய விஷயம் காலப் போக்கிலே நீர்த்துப் போயிருக்கிறது. குறிப்பாக‌, கோனார்க். அதோட தொடர்பு படுத்தி நான் வைத்திருந்த கனவுகளை மறந்தே போயிருக்கிறேன். இனிமேல் அது வெறும் கனவாய் மட்டும் இருக்கப் போகிறது. சும்மாவாவது ஒரு தரம் போய் பார்த்து விட்டு வர வேண்டும்.

இடையில் ஆறாவது பாகம் காணாமல் பழைய மெயில் குப்பைகளையெல்லாம் கிளறும் போது தான் தெரிந்தது இதை எழுத நான் எவ்வளவு தயங்கினேன் என்றும் சின்னக் கண்ணன் என்னை எழுத வச்சதும். ஒரு மாதிரி சொந்தக் கதையெல்லாம் கடை வைக்கற மாதிரி ஆயிடுமோன்னு நான் பயந்ததும் ஞாபகம் வருகிறது. ஆனால் இதெல்லாம் வெறும் புக் மார்க் தான். இதை நான் வாசிக்கும் போது விரியும் பெரிய படம் எனக்கே எனக்கு மட்டும் சொந்தமானது. (நானெல்லாம் எப்படி சுயசரிதை எழுதப் போறேனோ! அப்படி ரொம்ப நாளாக‌ சொல்லிக் கொண்டிருக்கிறேன்!)

அந்த தேடலில் கிடைத்த காபி க்ளப்பில் எழுதிய 'மலர்மஞ்சம்' போஸ்ட் ஏதோ தெரியாத ஃபாண்டில் இருக்கிறது. என்ன எழுதியிருப்பேன் என்பது ஞாபகம் இருந்தாலும் முழுதாக வாசிக்க ஆசையாக இருக்கிறது. இதுவரையான முட்டல்களில் எதுவும் ப்ரயோஜனமில்லை. ஆனால் மலர்மஞ்சம் மறுபடியும் வாசிக்க ஆரம்பித்திருக்கிறேன்.  கூடவே ஆதிகாலத்து அமெச்சூர் கவிதை முயற்சிகள். யம்மா... எல்லாருக்கும் அப்போது நிறைய பொறுமை இருந்திருக்கிறது. தட்டிக் கொட்டி சரி செய்திருக்கிறார்கள். பாராவின் புத்தகப்புழு குழுமத்திற்காக எழுதிய இரண்டு காதல் கவிதைகளுக்கும் அதே கதி. எங்கிருந்து பிடித்திருப்பேன் அந்த ஃபாண்ட்களை!

இத்தனை ஊர் சுத்தல்களுக்கெல்லாம் சேர்த்தி வைத்து கடந்த ஒன்பது வருடங்களாக சென்னை வாசம். ஒரு ஊரில் ரெண்டு வருஷத்துக்கு மேல் தங்காத நான் எப்படி இத்தனை நாள் ஓட்டினேன் என்பது ஆச்சரியம். ஆனால் சென்னை அலுத்துப் போய்விட்டது. இடப்பெயர்ச்சி பலன்கள் இரண்டாவது சீரீஸ் எழுதவாவது இங்கேயிருந்து மாற்றம் வர வேண்டும். வெளியூர்களில் இருக்கும் ஒரு ஆனானிமிட்டி இங்கேயில்லை. அந்த தைரியத்தில் தான் கொல்கத்தாவில் இருந்த போது சோனார்காச்சிக்கெல்லாம் போக யோசித்திருக்கிறேன். சென்னையில் வாலை சுருட்டிக் கொண்டிருக்கிறேன்.

Looking back... today I am more stable, calm and accepting.  ஆனாலும் மனசுக்குள் உணரும் தனிமை மட்டும் ஆழமாக, நீண்டதாக.

1 comment:

துளசி கோபால் said...

சூப்பர்!