Sunday, May 29, 2005

இது சரியா ஜக்ஜித்ஜி?

ஜக்ஜித் சிங்கை கவனித்துக் கேட்க ஆரம்பித்தது கடந்த பத்து வருடங்களாகத்தான். அவரும் சித்ரா சிங்கும் இணைந்து வழங்கிய ஒரு சிடி மூலமாகத்தான் அறிமுகமானார். இதமான குரலோடு அவருக்கான சில நேரங்களை எனக்குக் கொடுத்துப் போயிருக்கிறார்.

சனிக்கிழமை மாலை Science City அரங்கத்தில் அவருடைய இசை நிகழ்ச்சி. ஆறு மணிக்கு மேல் என்று அழைப்பிதழ் சொன்னது. சக வாத்தியகாரர்கள் எல்லோரும் வெள்ளையில் இருக்க, நடுவில் முழு கறுப்பில் ஹார்மோனியத்துடன் ஜக்ஜித் சிங் அமர்ந்திருக்க, திரை விலகும் போது மணி ஆறேமுக்கால். ஒவ்வொருவரையும் அறிமுகப்படுத்தும் போது அவர்கள் அவரவர் வாத்தியத்தை வாசிக்க கூடவே ஒலிபெருக்கி அளவைக் கூட்டவும் குறைக்கவும் சொல்லிக் கொண்டிருந்தார். அவ்வளவு சீக்கிரத்தில் திருப்தி வரவில்லை. இதை இன்னும் கூடச் சேர்த்து, அதைக் கொஞ்சம் குறை... ஒரு வழியாக ஏழுமணிக்கு முதல் கஸல்.

ஆலாபனையோடு தொடங்கிய குரல் பக்கத்தில் வந்து ஹலோ சொல்லிப் போனது. முதல் கஸல் முடிந்து இரண்டாவது தொடங்கும் போது வசியம் பண்ண ஆரம்பித்திருந்தது. மெல்ல அந்தக் குரல் தன்பக்கம் இழுப்பது போலவும், அதை நோக்கிப் போவதைப் போலவுமிருந்தது. அரங்கத்திலிருந்தவர்கள், வாத்தியக்காரர்கள் விலகிப் போக அந்தக் குரலும் நானும் மட்டும் ஒரு வட்டத்திற்குள் என்று உணரத் தொடங்கும் போது வயலினின் ஒலிப்பெருக்கியை சரி செய்யச் சொல்லி வட்டத்தைச் சிதைத்தார். மறுபடியும் குரல் வசீகரிக்க ஆரம்பிப்பதும், எதாவது பேசி வட்டத்தைக் கலைப்பதுமாயிருந்தார்.

தண்ணீர் குடிக்க டம்ளர் வேண்டும் என்பதை ஒலிப்பெருக்கியில் பாட்டுக்கு இடையில் சொன்ன போது 'இது சரியா ஜக்ஜித்ஜி?' என்றிருந்தது. ஆரம்பித்த ஒரு மணி நேரத்தில் 'ஐந்து நிமிட இடைவேளை... பத்து பதினைந்து நிமிடத்திற்குப் பிறகு சந்திக்கலாம்' என்று ஜோக்கடித்த போது சிரிப்பு வரவில்லை.

நாற்பது நிமிடத்திற்குப் பிறகு மறுபடியும் பாட ஆரம்பித்த போது 'நான் ஒன்னும் அதிக நேரம் கேட்கப் போவதில்லை. ஒன்றிரண்டு கேட்டு விட்டு போய் விடப் போறேன்' என்று மனதிற்குள் சொல்லிக் கொண்டு தான் கேட்க ஆரம்பித்தேன். முதல் பாதியில் ஏமாற்றியதை இரண்டாம் பாதியில் ஈடுகட்டினார் என்று தான் சொல்ல வேண்டும். தேர்ந்தெடுத்த பாடல்கள், கொஞ்சலும் குழைவுமாய்... குரல் அவர் சொன்ன படி கேட்டது. சிரமமே இல்லாமல், சுவாசிப்பது போலத்தான் பாடவும் செய்கிறார் என்று நினைக்க வைத்தார். 'உன் வசியத்திற்கெல்லாம் மயங்க மாட்டேன்' என்று பிடிவாதமாய் அமர்ந்திருந்தவளை தாளம் போட வைத்ததில் அந்தக் குரலுக்கு ஒரு சந்தோஷம்.

பாதிப் பாட்டில் எழுந்து போக வேண்டாம் என்று முடியக் காத்திருக்க, போக விடாமல் நாற்பது நிமிடம் தொடர் சங்கீதம். ஒரு பாட்டு முடிய முடிய அடுத்தது தொடங்க... எழுந்திருக்க மனமில்லைதான். ஒன்பரை மணிக்கு கச்சேரி முடிந்தது. இசையென்னும் இன்ப வெள்ளத்தில் மூழ்க ஓடோடி வந்த என்னை கொஞ்சம் ஏமாற்றித்தான் விட்டார். வெறும் கால் மட்டும் தான் நனைந்தது போலிருந்தது.

ஆனாலும் தான் என்ன... ஆற்றங்கரையில் குட்டைப்பாறை மேல் உட்கார்ந்து காலாட்டிக் கொண்டு நனையும் சுகத்தைக் குறை சொல்ல முடியுமா?!

Saturday, May 21, 2005

ஒரு பயணம்... 36 லிருந்து 3க்கு. (புகைப்படங்கள்)

Image hosted by Photobucket.com

மாலில் இருந்து டார்ஜிலிங்.

Image hosted by Photobucket.com

டார்ஜிலிங் தேயிலைத் தோட்டம்.

Image hosted by Photobucket.com

டீஸ்டா நதி (மேலிருந்து).

Image hosted by Photobucket.com

வழியில் பார்த்த சிறிய நீர்வீழ்ச்சி.

Image hosted by Photobucket.com

முதல் முதலாக கண்ணில் பட்ட பனிமலை.

Image hosted by Photobucket.com

Image hosted by Photobucket.com

சாங்கோ ஏரி.

Image hosted by Photobucket.com

Image hosted by Photobucket.com

ஏரிக்கரையில் யாக்.

ஒரு பயணம்... 36 லிருந்து 3க்கு.(3)

மூன்றாவது நாள் பார்த்த பாறைப் பூங்கா(Rock garden)வும், கங்கா மையா பார்க்கும் சுற்றுலா பயணிகளுக்காவே நிர்மாணிக்கப் பட்டது. வலிந்து திணித்த அழகோடு, பெரிதாக ஒட்டவில்லை. மூன்று நாள் டார்ஜிலிங்கில் இருந்ததில் கவனித்தது... எல்லாக் குழந்தைகளும் அழகுதான். ஆனால் இங்கே இன்னும் கொஞ்சம் கூட. பனியில் இயற்கையாகவே கன்னத்து மேட்டில் பூத்திருக்கும் சிவப்பு தான் காரணமாயிருக்கும்.

இளைஞர்கள் நீளமாக முடி வளர்க்கிறார்கள். மலைப்பாதையில் நடந்து நடந்து முறுக்கேறிய உடம்பும், செதுக்கின முகமும், பட்டுப் போன்ற முடியுமாய்... உயரம் மட்டும் கூடுதலாய் இருந்தால் மாடலிங் உலகில் இவர்களை அடிக்க ஆளிருக்காது. பெண்களுக்கு முகப்பரு, bad hair days தொல்லைகள் பற்றியெல்லாம் தெரிந்தே இருக்காது என்றிருந்தது. பாரம்பரிய உடை அணிந்த பெண்கள் அடிக்கடி கண்ணில் படுகிறார்கள். காலர் வைத்த முழுக்கை பெண்கள் சட்டை, அதன் மேல் ஒரு முழு நீள அங்கி, பின் பக்கம் இழுத்துக் கட்டி... அழகாகத்தான் இருக்கிறது. போன தடவையே தேடியது, இந்த முறை ஒன்று வாங்கி விட்டேன். நைட்டியாகவாவது உபயோகப் படுத்தலாம் என்று தான். அப்படிச் சொன்னதற்காக கடைக்காரப் பெண் கோபித்துக் கொண்டார். எங்கள் உடை உங்களுக்கு நைட்டியா என்று. பெரும்பாலானோர் நேப்பாளி பாஷை பேசுகிறார்கள். ரோடுகள் தாறுமாறாய் வளைந்து, ஏறி இறங்குகிறது. சொந்த வண்டி எடுத்துக் கொண்டு போகும் யோசனை இருந்தால் மறந்து விடுவது நல்லது.

டார்ஜிலிங் டீ திடம் குறைவாக, லேசான கசப்பு சுவையோடு. ஆசை தீர அங்கே குடித்துக் கொள்ள மட்டும் செய்யலாம். ஊருக்கு வாங்கிக் கொண்டு போகாமலிருப்பது உத்தமம். அந்தத் தண்ணீருக்கும் அந்த குளிருக்கும் தான் அது நன்றாக இருக்கிறது. சென்ற முறை வாங்கி வந்து கடுப்படித்ததில் அந்த வேலைக்கே போகவில்லை. மோமோ எனப்படும் சிற்றுண்டி விசேஷம். மைதா மாவில் சின்ன பூரிகளாக தேய்த்து உள்ளே காய்கறி(பெரும்பாலும் முட்டைக்கோஸ்) அல்லது இறைச்சி அடைத்து ஆவியில் வேக வைத்துக் கொடுக்கிறார்கள். கொல்கத்தாவில் பெரிய சைனீஸ் உணவகங்களில் கிடைக்கும் மோமோ எதுவும் அந்த ரோட்டோரக்கடையில் விற்பதற்கு ஈடாகாது. அந்த குளிருக்கு காரமாக ஒரு சிவப்புச் சட்னியோடு சாப்பிட... ஆஹா!

ஷாப்பிங் செய்ய ஏகப்பட்ட curio shop கள். கலைப் பொருட்களில் ஆர்வம் இருப்பவர்கள் அள்ளிக் கொண்டு வரலாம். எங்களுடைய கோட்டா சென்ற முறையே முடிந்து விட்டதால் இந்த முறை எதுவும் தேவையிருக்கவில்லை. சிவப்புப் பட்டில் சுவற்றில் தொங்கவிடும் புத்தரை வாங்காமல் வந்தது தான் ஒரே குறை. தஞ்சாவூர் சித்திரங்களைப் போல தங்கம் உபயோகித்து, ஆனால் மிகுந்த நுணுக்கமான வேலைப்பாடுகளோடு 'தாங்கா' ஓவியங்கள் யானை விலை, குதிரை விலையில். இந்த முறையும் தடவிப் பார்த்துவிட்டு வந்துவிட்டேன்.

மறுநாள் காலையில் கேங்டாக் (Gangtok) கிற்குக் கிளம்பும் போது லேசாக மழை பெய்து கொண்டிருந்தது. அதே மலைகளும் பள்ளத்தாக்குகளும் பனி மூட்டமும்... கூடுதலாக ஒரு மணி நேரப் பயணத்திற்குப் பின் சேர்ந்து கொள்ளும் டீஸ்டா(Teesta) நதி. ஆரம்பத்தில் அதலபாதாளத்தில் ஆழ அகலமாய் ஓடிக் கொண்டு பயமுறுத்துகிறது. ஆனால் எங்கேயிருந்து பார்த்தாலும் அழகாயும். அடுத்த ஒரு மணி நேரத்தில், பத்தடி இறங்கினால் கைகளை அளைய விடலாம் என்ற தூரத்தில்.

டார்ஜிலிங்கில் இருந்து கேங்டாக் மூன்று மணி நேர பிரயாணம். கேங்டாக்கில் தங்கும் விடுதிக்குப் போய்ச் சேர்ந்த போது அவர்கள் எங்களை அவ்வளவு சீக்கிரம் எதிர்பார்த்திருக்கவில்லை. மறுநாள் காலையில் தான் உங்களுடைய ஊர் சுற்றிப் பார்க்கும் படலம். அதுவரை ஓய்வெடுத்துக் கொள்ள வேண்டியது தான் என்றார். மாலையில் நடக்க ஆரம்பித்த கொஞ்ச நேரத்தில் தெருக்களெல்லாம் நினைவு வந்து விட்டது. ஒரு பெரிய மார்க்கெட், நீள நடந்தால் ஒரு பேருந்து நிறுத்தம், தங்கும் விடுதிகள், சௌமின்(chowmein) என்று பெயர் மாற்றிக் கொண்ட நூடுல்ஸ்... தலைநகருக்கு இதெல்லாம் ரொம்ப குறைச்சல்!

டார்ஜிலிங்கை விட அதிக எண்ணிக்கையில் சிகப்பு வஸ்திரம் தரித்த பிக்குகள். எல்லா வயதிலும். டவேரா விளம்பரத்தில் வரும் குழந்தைகள் வயதில் கூட. இவ்வளவு சின்ன குழந்தைகளை எதற்காக இப்படி அனுப்புகிறார்கள்? குடும்பத்தில் யாராவது ஒருவர் அப்படி ஆக வேண்டும் என்பது கட்டாயமா? கூம் மொனஸ்ட்ரியில் பார்த்த போது அது ஏதோ கட்டாயத்திற்காகத் தான் என்பது போல ஏன் எனக்குத் தோண்றியது? எத்தனை வருடம் அங்கேயே இருக்க வேண்டும்? முடிந்த பின் அவர்கள் என்ன செய்வார்கள்? நிறைய கேள்விகள். யாரிடம் கேட்டால் பதில் கிடைக்கும் என்று தெரியவில்லை. என்ன தெரிந்து கொள்ள வேண்டும், கேளுங்கள் சொல்கிறேன் என்ற சிநேகபாவம் யார் முகத்திலும் தெரியவில்லை. ஒருவேளை வெளிமனிதர்களோடு அவசியமில்லாமல் உரையாடுவதற்கு அனுமதியில்லாமலிருக்கலாம்!

மறுநாள் காலையில் போன ரூம்டெக் மொனஸ்ட்ரியில் சிலவருடங்கள் முன்பு இந்தியாவிற்கு தஞ்சமாக வந்த இளைஞர் தலாய்லாமா புகைப்படம் நடுவில். தவிர நிறைய பித்தளை விக்ரகங்கள், ஒரு சின்னக் குழந்தையின் புகைப்படம்... அங்கேயும் நாங்கள் போயிருந்த சமயம் பிரார்த்தனை நடந்து கொண்டிருந்தது. பிரார்த்தனைக் கூடத்தைச் சுற்றி பிக்குகள் தங்கும் அறைகள். பின்புறம் இருந்த பெரிய கட்டிடம் பாடசாலை போலிருந்தது. வெளியாட்களுக்கு உள்ளே போக அனுமதியில்லை.

அது தவிர ஒரு ஸ்தூபி, ஒரு சிறிய அருங்காட்சியகம், பூங்கா. எல்லா இடங்களிலும் சின்னக் குழந்தைகளை அந்த சிகப்பு ஆடையில் திரும்பத் திரும்ப பார்த்ததில் எதிலும் மனது ஒட்டவில்லை. மறுநாள் காலையில் தான் சங்கோ(Tsamngo) ஏரிக்கு போவதாக இருந்தது. காலையில் சீக்கிரமே வண்டி வரும் என்று சொல்லியிருந்ததால் அதிகம் அலையாமல் அன்றைய தினத்தை முடித்துக் கொண்டோம். ராத்திரி குளிரும் அதிகம் இல்லை. நவம்பர் மாத கொல்கத்தா போல இதமாக.

காலையில் எட்டரை மணிக்கு வண்டி வந்திருந்தது. முதல் நாளே யார் யார் போகிறோம், பெயர், வயது விபரங்கள் எல்லாம் கேட்டுக் கொண்டார்கள். ஏரி இந்தியா - சீன எல்லைக்கு மிக அருகில் இருப்பதால் இந்த விபரங்களெல்லாம். கரடுமுரடான மலைப்பாதைப் பயணம். இடையிடையே சின்னதாயும் பெரிதாயுமாய் நீர்வீழ்ச்சிகள். சிலவற்றில் தடுப்புக்கம்பிகளோடு. சுற்றுலாப் பயணிகளின் வாகனங்களைத் தவிர சுற்றுவட்டாரத்தில் வேறு நடமாட்டங்கள் இல்லை.

ஒன்றரை மணி பயணத்திற்கு பிறகு ஒரு இராணுவ கேம்ப், அதை ஒட்டி ஒரு சிறிய கிராமம். இந்த உயரத்திற்கு வரும் போது சுற்றிலும் பனி மூட்டம். பத்தடி தூரத்திற்கு அப்பால் எல்லாம் மங்கலாக. குளிர் நன்றாக உரைக்கத் தொடங்கி விட்டது. கேம்ப் வாசல்களில் அங்கங்கே கொஞ்சம் கொஞ்சமாய் பனி உறைந்து கிடக்கிறது. வீட்டுக் கதவைத் திறந்தால் அந்தப் பனியில் கால் வைக்காமல் போக முடியாது. வாசலில் பனி கொட்டிக் கிடக்கிறது. ஹவ் ஸ்வீட்!

என்னமாய் குளிர்கிறது என்று நினைத்துக் கொண்டே ஒரு வளைவைத் தாண்டியது தான். தூரத்தில் ஒரு மலை. முழுக்க முழுக்க பனியால் மூடி. உருகி வழிந்த நீர் மட்டும் இடையிடையே கோடிழுத்தது போலிருக்க... முதல் முதலாக அப்படி ஒன்றை நேரில் பார்க்கக் கிடைத்தது. இவ்வளவு அழகானதை இன்னும் பக்கத்தில் பார்க்க முடிந்தால் என்றும். நாங்கள் பக்கத்திற்குத்தான் போய்க் கொண்டிருந்தோம். அடுத்த ஒரு மணி நேரத்தில் இன்னும் இன்னும் கொஞ்சம் என்று போனதில் 12400 அடி உயரத்திற்கு வந்து விட்டிருந்தோம். திரும்பிய பக்கமெல்லாம் வெள்ளைப் பனி. வெடவெடக்க வைக்கும் குளிர்.

இறங்கி கொள்ளுங்கள் என்று சொன்ன இடத்தில் சுற்றிலும் மூன்று நான்கு மலைகள் சூழ்ந்திருக்க நடுவில் சாங்கோ ஏரி. சலனமில்லாமல் ஏரி விரிந்திருக்க பார்ப்பது நிஜமா என்றிருந்தது. இப்படி ஒன்றை நிச்சயமாய் எதிர்பார்த்திருக்கவில்லை. சென்ற முறை ஜூன் மாதத்தில் வந்திருந்த போது நிறைய குளிராயிருந்தது. லேசான பனிமூட்டம் இருந்தது. ஆனால் மருந்துக்குக் கூட எங்கேயும் பனியிருக்கவில்லை. அப்போது அங்கிருந்தவர்கள் சொல்லக் கேட்டு ஜனவரி மாதத்தில் ஏரியே உறைந்திருக்கும், அந்த நேரத்தில் வந்து பார்க்க வேண்டுமென்று நினைத்ததும், ஒவ்வொரு ஜனவரியிலும் வர முடியாமல் போனதுமாய்... மே மாதத்தில் இவ்வளவு பனியை எதிர்பார்க்கவில்லைதான். வேலை வேலை என்று வராத கணவரும், பரிட்சையிருப்பதால் வர முடியாமல் போன மகளும் இதையெல்லாம் பார்க்கவில்லையே என்றிருந்தது.

ஏரிக்கு ஒரு புறம் ஏழெட்டு கடைகள். சூடாக டீயும் மோமோவும் சௌமினும் கிடைக்கிறது. டீ குடிக்கும் போதே கடைக்காரப் பெண் Yak (பனி எருமையா?) ல் போகவில்லையா என்றார். இங்கேயும் அங்கேயும் அலைந்து கொண்டிருக்கும் ஏறக்குறைய ஐநூறு கிலோ எடையுள்ள அதன் பக்கத்தில் நின்று புகைப்படம் எடுக்க மட்டுமே தைரியம் இருந்தது. வேண்டாம் என்று போன எங்களை விடவில்லைதான். ஏரிக்கு இந்தப் பக்கம் என்ன இருக்கிறது, அந்தப் பக்கம் யாக்கில் ஏறிப் போய்ப் பாருங்கள், பனியைக் கையிலேயே தொடலாம் என்று ஆசை காட்டி கடைசியில் அதில் ஏற்றியே விட்டார்.

முழங்கால் வரையான காலணி, போட்டுக் கொள்ள ஜாக்கெட் எல்லாம் அங்கேயே வாடகைக்குக் கிடைக்கிறது. யாக்கில் ஏற ஒரு ஆளுக்கு நூற்றி அறுபது ரூபாய். அரசாங்கம் நிர்ணயித்த கட்டணமாம். ஏறி உட்கார்ந்தால் கல்லும் கரடுமாய் இருக்கும் ஒற்றையடிப் பாதையில் லாவகமாய் நடக்கிறது. ஆரம்ப பயம் தெளிந்ததும் யாக் ஓட்டுனரோடு பேச்சுக் கொடுத்ததில்... யாக்கின் பெயர் திங்கா, ஓட்டுபவர் தாவா, தூரமாய் கை காட்டி அந்த கிராமத்தில் தான் வசிக்கிறோம். புல்லும் கோதுமை மாவும்(?!) சாப்பிடும். மலைக்கு அந்தப் பக்கம் இருந்து வாங்கிக் கொண்டு வந்து பழக்கியது. குழந்தையாய் இருக்கும் போது ரொம்ப முரடாய் இருந்ததாகவும், இப்போது சமத்தாய் சொன்ன பேச்சு கேட்கிறது...

ஒன்றிரண்டு முறை கீழே தள்ளி விடுமோ என்று பயமுறுத்தினாலும் பத்திரமாய் அந்தப் பக்கம் கொண்டு போய் சேர்த்து விட்டது. தூரத்திலிருந்து பார்த்து மலைத்த பனி இப்போது காலடியில். கையில் எடுத்து உருண்டையாக்கும் போது எதிர்பாத்த அளவு உரைக்கவில்லை. அந்தக் குளிருக்கு கைகள் பழகிவிட்டிருந்தது. வாடகைக்கு எடுத்த ஜாக்கெட்டின் மேல் உட்கார்ந்து பனிச்சறுக்கிக் கொண்டிருந்தார்கள் ஒரு இளம் சர்தார்ஜி ஜோடி. சுற்றிலும் பனி, ஆடாமல் அசையாமல் ஒரு ஏரி, ஏறக்குறைய நிசப்தம், இடையிடையே சர்தார்ஜினியின் சிரிப்பு... எங்கேயோ காணாமல் போவது போலிருந்தது.

திங்காவிற்கு அடுத்த சவாரிக்கான நேரமாகிவிட்டதால் கிளம்ப வேண்டியதாயிற்று. திரும்ப வரும்போது தாவாவிடம் இப்பொது என்ன டெம்பரேச்சர் இருக்கும் என்று கேட்ட போது, 'அது இருக்கும் மேம்சாப், ஒரு மூணு டிகிரி'.

!!!!

Wednesday, May 18, 2005

ஒரு பயணம்... 36 லிருந்து 3க்கு. (2)

"நாளைக்கு காலையில் மூன்றரை மணிக்கு தயாராக இருங்கள், டைகர் ஹில்ஸ¤க்கு உங்களைக் கூட்டிக் கொண்டு போக வண்டி வரும்".

"என்னது மூன்றரை மணிக்கா??? அதுவும் இந்தக் குளிரிலா?"

அப்படிக் கேட்பேன் என்று எதிர்பார்த்தது அவர் முகத்தில் தெரிந்தது. டார்ஜிலிங் எனக்குப் புதிதில்லை. இதற்கு முன்னால் வந்திருக்கிறேன் என்று சொன்னதும், "ஓ, அப்படியா? அப்ப சரி. காலையில் மூன்று இடங்கள் பார்த்து விட்டு அறைக்கு வந்து ஓய்வு எடுத்துக் கொள்ளுங்கள். மதியம் மீதி பார்க்க ஏற்பாடு செய்கிறேன்" என்று சொல்லி விட்டுப் போனார். காலையில் சரியாக மூன்றே முக்காலுக்கு வண்டி வந்திருந்தது. ராத்திரி பூராவும் ஹீட்டர் சூட்டில் மரத்தளம் போட்ட அந்த அறை சொர்க்கமாக இருந்தது. வெளியில் வந்ததும் குளிர் இழுத்துக் கட்டிப் பிடித்துக் கொண்டது. ஸ்வெட்டர், ஷால் எல்லாம் தாண்டி 'நான் எப்படி?' என்று கேட்டது. 'ஆஹா... உன்னை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு!' என்று சொல்ல வாய் திறக்க, பற்கள் தாளம் போட, சந்தோஷத்தில் வயது மறந்து போனது.

வழி நெடுக பெரிய ப்ளாஸ்க்கும் கையுமாய் உள்ளூர் இளம்பெண்கள், லிப்ட் கேட்டுக் கொண்டு. டார்ஜிலிங் வந்திருந்த சுற்றுலாப் பயணிக் கூட்டம் டைகர் ஹில்ஸ¤க்குப் படையெடுத்ததில் அந்த நேரத்திலும் ட்ராபிக் ஜாம். இந்த டைகர் ஹில் பயணம் சூரிய உதயமும் கஞ்சன் ஜங்காவைப் பார்க்கவும் தான்.

முதல் முதலாக கஞ்சன் ஜங்காவைப் பார்க்க கிளம்பிய போது நினைவுக்கு வந்தது, பள்ளி நாட்களில் படித்த வாஸந்தி தொடர்கதை தான். வீட்டில் ஏதோ பிரச்னை என்று சொல்லிக் கொள்ளாமல் டார்ஜிலிங்கில் வேலை தேடிக் கொண்டு கிளம்பும் நாயகி, போய்ச் சேர்ந்த அன்று இரவு படுக்கப் போவதற்கு முன் நாயகன் காலையில் நான்கு மணிக்கு எழுந்து ஜன்னல் வழியாகப் பாருங்கள், கஞ்சன் ஜங்கா தங்கம் போல மின்னுவதைப் பார்க்கலாம் என்று சொல்ல, அவள் நாலு மணிக்கா என்று நொந்து கொண்டே எழுந்து ஜன்னல் திரை விலக்க... அவளோடு சேர்ந்து அன்று நானும் பார்த்திருந்தேன்.

அந்தக் கற்பனையை ஒப்பிட்டுப் பார்க்க நிஜம் இன்றாவது தெரியுமா என்று நினைத்துக் கொண்டே போகும் போது லேசாக மழை துளிர்க்க ஆரம்பித்திருந்தது. ஓட்டுனர், "மழை பெய்ய ஆரம்பித்தால் அவ்வளவு தான். எதற்கும் போய் பாருங்கள். மழை நின்றதும் தெரிந்தாலும் தெரியலாம்" என்று சொல்ல, இப்போதும் இல்லையா என்றிருந்தது. அரைமணி நேரக் காத்திருத்தலுக்குப் பின் சூரியன் மெல்ல எட்டிப் பார்க்க அதுவரை சூரியனையே பார்க்காதது போல ஒரு கூச்சல். மலையே அரண்டிருக்கும்! சூரியன் வந்தும் பனி விலகாததால் அப்போதும் கஞ்சன் ஜங்கா தெரியவில்லை!

அங்கிருந்து நேராக Ghoom Monastry. கூம் இடத்தின் பெயர். அங்கிருக்கும் ரயில் நிலையம் உலகின் இரண்டாவது உயரமான இடத்தில் இருக்கும் ரயில் நிலையம். ஏறக்குறைய எட்டாயிரம் அடி உயரத்தில் என்று பார்த்ததாக நினைவு. மேலே ஒன்றிரண்டு இடங்களுக்கு அழகான ஒரு ரயில் குறுக்கும் நெடுக்குமாய் ஓடுகிறது. மொனஸ்ட்ரிக்கு நாங்கள் போன போது வழிபாடு நடந்து கொண்டிருந்தது. ஆறேழு வயதிலிருந்து எல்லா வயதிலும் சிவப்பு நிற அங்கியும் மஞ்சள் நிற மேல்சட்டையுமாய் பிக்குகள். நடு வரிசை தவிர மற்ற வரிசைகளில் வாய் மட்டும் மந்திரம் உச்சரிக்க கவனமெல்லாம் அலைபாய்ந்து கொண்டு. மொனஸ்ட்ரி ஒரே வண்ணமயமாய். சிவப்பு நிறம் தூக்கலாக, மற்றும் மஞ்சள், நீலம், பச்சை, வெள்ளை நிறத்தில் நிறைய வேலைப்பாடுகளோடு. உருவ வழிபாடு. பளபளக்கும் சிவப்புப் பட்டில் நிறைய அலங்காரங்கள். புத்தர், மஞ்சுஸ்ரீ என்ற ஒரு பெண் தெய்வம்... இன்னும் பெயர் தெரியாத நிறைய விக்ரகங்கள், சிறிதும் பெரிதுமாய்.

அடுத்து இராணுவத்தில் உயிர்விட்ட கூர்கா பிரிவினருக்கான நினைவு சதுக்கம். சதுக்கத்தைச் சுற்றியும் கடைகள். ஸ்வெட்டர், ஷால், செருப்பு, லொட்டு லொசுக்கு. இந்த இடத்தையாவது விட்டு வைத்திருக்கலாம் என்றிருந்தது. ரயில் பாதை ஒன்று சுற்றிக் கொண்டு போகிறது. பாதையை மறித்து இந்தக் கடைகள். இதில் ரயில் போகாதா என்றதற்கு, "ஒன்பதரைக்குத்தான் ரயில் ஆரம்பிக்கும். அதுவரைக்கும்" என்றார்கள். அதற்கப்புறம் எங்கே போவார்கள்?!

இங்கே இன்னொன்றும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும். அதை டெலஸ்கோப் என்று தான் சொல்கிறார்கள், பார்க்கவும் அப்படித்தான் தெரிகிறது, பத்து ரூபாய்க்கு அதில் டார்ஜிலிங்கின் முக்கிய இடங்களைக் காண்பிக்கிறார்கள். இடம் தெரிந்து, பெயர் மனதிற்குள் பதிவதற்குள் திருப்பி அடுத்த இடம், அதன் பெயர். இப்போது அதில் சேர்ந்திருக்கும் புது இடம், 'மே ஹ¥ நா' பள்ளிக்கூடம். இதோடு காலைசுற்றல் முடிந்தது.

மதியம் இரண்டு மணிக்கு அடுத்தது. வயதான ஒரு ஓட்டுனர், வழியெல்லாம் பேசிக் கொண்டே. அவர் வாயைக் கிண்டியதில்... பெரும்பாலும் இந்துக்கள், மற்றும் புத்த மதத்தினர் வசிக்கின்றனர். மற்றவர்கள் ரொம்பக் குறைவு. புத்த மதத்தவர்கள் வீட்டு முன்னால் நீண்ட ஒரு மூங்கில் நிறுத்தப்பட்டிருக்கும். உச்சியில் ஒரு கும்பம் போல வெள்ளை நிறத்தில். கீழே பச்சை, மஞ்சள், நீலம், சிகப்பு, வெள்ளை நிறத்தில் துணி சுற்றியிருக்கும். அதற்குக் கீழே நீளத்திற்கு இணைக்கப்பட்டிருக்கும் துணியில் அவர்கள் மொழியில் பிரார்த்தனை எழுதப் பட்டிருக்கும். அந்தத் துணி காற்றில் அசைந்தாடும் போது அவர்கள் பிராத்தனை அசைந்து மேலே செல்வதாக அவர்கள் நம்பிக்கை. இளைஞர்கள் சீக்கிரம் பணம் சம்பாதிக்கும் ஆர்வத்தில் பெரும்பாலும் டூரிஸ்ட் வண்டி ஓட்டுகிறார்கள். படிப்பில் அவ்வளவு நாட்டமில்லை. இருக்கும் கொஞ்சம் பட்டதாரி இளைஞர்களும் வங்கிக் கடனில் சொந்த வண்டி வாங்கி ஓட்டத்தான் விரும்புகிறார்கள். ராயல் ஹவுஸ் என்றழைக்கப் படும் ஒரு பழைய கட்டிடத்தைக் காட்டி, இங்கேதான் நிவேதிதா அன்னை வசித்திருந்தார். உயிர்விட்டதும் இங்கேதான். இதை ஒரு நினைவுச் சின்னமாக்க முயற்சி செய்து கொண்டிருக்கிறார்கள். சின்ன சின்னதாக இப்படி நிறைய சொல்லிக் கொண்டே வந்தார்.

மதியம் முதலில் பார்த்தது Himalayan Mountaineering Institute(HMI) - ன் அருங்காட்சியகம். பெரும்பான்மையான இடத்தை டென்சிங் ஆக்ரமித்திருந்தார். ஏறும் போது அவர் உபயோகப் படுத்திய பொருட்கள், புகைப்படங்கள், குறிப்புகள். அவருக்குப் பின்னால் போனவர்கள், முன்னால் போக முயற்சித்தவர்கள், ஜப்பானின் முதல் முழுக்க பெண்களால் ஆன குழு, அங்கிருந்து கொண்டு வந்த கல்.... விபரங்கள், மேலும் விபரங்கள். ஒரளவுக்கு மேல் பார்க்க முடியவில்லை. வழக்கமாக அருங்காட்சியகங்களுக்குள் நுழைந்த கொஞ்ச நேரத்தில் வரும் மென்டல் ப்ளாக்.

HMI ஐ ஒட்டி ஒரு விலங்குகள் சரணாலயம். எல்லாம் போரடித்துக் கொண்டு படுத்துக் கிடந்திருந்தன. சென்ற முறை போன போது பெயர் சூட்டி ஷேமம் விசாரித்து வந்த சிங்கத்தைக் காணவில்லை. கூட வருபவர்கள் நடக்க சலித்துக் கொள்ளாதவர்களாய் இருந்தால் மூலைக் கொன்றாய் இருக்கும் சில அரிய விலங்குகளைப் பார்த்து வரலாம். அடுத்து போவதாக இருந்த Ropeway ஒன்றரை வருடத்திற்கு முன் நடந்த ஒரு விபத்திற்குப் பின்னால் நிறுத்தி வைத்திருப்பதாக சொன்னார்கள். அதைத் தாண்டி போகும் வழியில் HMI ன் பயிற்சி வகுப்பு நடக்கும் மலையும் பள்ளத்தாக்குகளும். அதற்குப் பக்கத்தில் ஆர்வத்தில் முயற்சி செய்ய விரும்பும் அமெச்சூர்களுக்காக கயறுகட்டி பாதுகாப்பான ஒரு சின்ன குன்று.

அடுத்து போனது Tibetian Refugee Camp. அங்கே தரைக்கம்பளம் பின்னும் நீண்ட அறையில் முதலில் உட்கார்ந்திருந்த முதாட்டிக்கு எத்தனை வயதிருக்கும் என்று ஆச்சரியமாயிருந்தது. முகமெல்லாம் ஆழமாக முதுமையின் ரேகைகள். யார் உள்ளே நுழைந்தாலும் பச்சைப் பிள்ளையாட்டம் ஒரு சிரிப்பு அவர் முகத்தில். கை பாட்டுக்கு வேலையாய். அந்த தளம் பூராவும் கம்பளம் நெய்ய நூல் இழை தயாரித்துக் கொண்டிருந்தார்கள். மேலே போய் பாருங்கள் என்று கை காட்டியதில் அடுத்த தளத்தில் ஆழ்ந்த நிறங்களில் விதவிதமான கம்பளங்கள் தயாராகிக் கொண்டிருந்தது.

நெய்து கொண்டிருந்த நடுத்தர வயதுப் பெண்மணி ஒருவர் பக்கத்தில் அழுதழுது ஓய்ந்த ஒரு குழந்தை நம்பிக்கை இல்லாமல் நின்று கொண்டிருந்தது. திரும்பிக் கூடப் பார்க்காமல் அவர் கவனம் பூராவும் கம்பளத்தில். கீழே இருந்த மைதானத்தில் இளைஞர்கள் கூடைப்பந்து விளையாடிக் கொண்டிருந்தனர். வாலிப வயதுப் பெண்கள் அவர்கள் விளையாடுவதைப் பார்த்துக் கொண்டு. அதற்குள்ளேயே ஒரு பள்ளிக்கூடம். கம்ப்யூட்டர் சென்டர் கூட.

அங்கிருந்த விற்பனையகத்தில் அங்கே தயாராகும் பொருட்கள் விற்பனைக்கு. கம்பளப்பிரிவு மே மாதம் 2006 வரை ஆர்டர் புக்காகியிருப்பதாக சொன்னது. உலோகத்திலும், மரத்திலுமாய் நிறைய கைவினைப் பொருட்கள். வெளியே ஒரு சுவற்றில் சீனர்களை திபெத்தை விட்டு வெளியேறச் சொல்லி ஒரு போஸ்டர்.

கிளம்பும் போது ஓட்டுனர் காட்டியதைப் பார்த்ததும் 'ஹா' என்றிருந்தது. அதுவரை காடுகள் சூழ்ந்த மலைகளின் மேலிருந்த மேகம் விலகியதில் அதற்குப் பின்னால் பிரம்மாண்டமாய் முழுக்க முழுக்க பனியால் மூடிய கஞ்சன் ஜங்கா. மாலை நேரத்து மஞ்சள் வெயிலில் தகதகவென்று மின்னிக் கொண்டு. ஆசை தீரப் பார்ப்பதற்குள் மறுபடியும் மேகம் மூடி விட்டது. அவ்வளவு பிரம்மாண்டமும், ஒரே நொடியில் பார்வையிலிருந்து மறைந்துவிட்டது. ஆனாலும் கற்பனைச் சித்திரத்தோடு ஒப்பிட்டுக் கொள்ள அதுவே போதுமாயிருந்தது. வாஸந்தியின் எழுத்துக்கு ஒரு சலாம் போட்டு விட்டு அறைக்குத் திரும்பினோம்.

Tuesday, May 17, 2005

ஒரு பயணம்... 36 லிருந்து 3க்கு. (1)

வெயில் கொளுத்தி ஓய்ந்த ஒரு கசகசப்பான மாலையில் தான் தொடங்கியது அந்தப் பயணம். அடுத்த வரியாக பயணமென்றால் எனக்கு ரொம்பப் பிடிக்கும் என்று எழுத நினைத்து, யாருக்குத்தான் பிடிக்காது என்று புத்தி பதில் கேள்வி கேட்க அங்கேயே நின்று விட்டது. பிடித்திருக்கத்தான் வேண்டும்... இல்லாவிட்டால் ஐம்பத்தி ஏழு வயது, பசி தாங்காது, தூக்கம் கெட முடியாது, அதிகம் நடக்க முடியாது என்று எத்தனையே உபாதைகள் இருந்த போதும் சந்தர்ப்பம் கிடைத்தால் உடனே கிளம்ப அம்மாவுக்கு ஒவ்வொரு முறையும் தோணாது. ஆனால் பயணம் பிடிக்காத மனிதர்களையும் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறேன்!

இவ்வளவு பயணமெல்லாம் இப்போது தான். கல்யாணத்திற்கு முன்னால் குறிப்பிட்டுச் சொல்லும் படி எங்கேயும் போனதில்லை. ஐந்தாறு வயதில் மொட்டைத் தலையோடு சாமுண்டேஸ்வரி கோவிலிலும் பெங்களூரில் ஏதோ மண்யாணை மேல் உட்கார்ந்திருந்ததும் புகைப்படம் மூலம் மட்டுமே அறிந்த பயணங்கள். அதற்குப் பிறகு ஏன் நாங்கள் எங்கேயுமே போகவில்லை? குடும்பத்தோடு ஒன்றாக போகும் பயணங்கள் தரும் சந்தோஷங்களை விட வேறு விஷயங்கள் முக்கியமாகிப் போய் விட்டிருக்கலாம்!

மறுபடியும் முதல் வரிக்கே வருகிறேன். அந்தப் பயணம் கொல்கத்தாவிலிருந்து சிலிகுரிக்கு. ஒரு ராத்திரி நேரத்தில் முடிந்து போய்விடும் அந்தப் பயணத்தில், முதல் முதலாக ஸ்லீப்பர் கோச்சில் பயணித்தது என்பதைத்தவிர, குறிப்பிட்டுச் சொல்ல எதுவும் இல்லை. வழக்கமான ஒரு ஊரிலிருந்து இன்னொரு ஊருக்குப் போகும் பயணம் போல. அதுவும் ராத்திரி நேர பிரயாணத்தில், ஏறியதும் தூங்கிப் போய்விடும் சக பயணிகளின் முகம் கூட பதிவதில்லை.

சிலிகுரியில் காலையில் இறங்கியதும் பேருந்து நிலையத்தில் வந்து கூட்டிக் கொண்டு போவதாக சொன்ன பயண ஏற்பாட்டாளரின் தகவலே இல்லை. செல்பேசியில் விசாரிக்கும் போது நான் நின்று கொண்டிருக்கும் இடத்தை விசாரித்து விட்டு, அங்கேயே இருங்கள் இதோ வந்து விடுகிறேன் என்று சொல்லிய அடுத்த நிமிடம் முன்னாலிருந்தார். " நான் அந்தப்பக்கம் உங்களுக்காக காத்திட்டிருந்தேன் மேடம். வண்டியில் குடிக்கத் தண்ணீர் வைத்திருக்கிறேன், செய்தித்தாள் வைத்திருக்கிறேன். மேலே போய் சேர்ந்ததும் உங்களை தொலைபேசியில் தொடர்பு கொள்கிறேன். நீங்கள் திரும்பிப் போகும் வரை உங்கள் தேவைகளை கவனிக்க வேண்டியது என் பொறுப்பு ". I'm Lovin it ஐ மனதிற்குள் சொல்லிவிட்டு வெளியே மிக்க நன்றி என்று சொல்லித் தொடர்ந்தது
பயணம்.

சிலிகுரி... சட்டென்று அதன் பச்சையில் குளிர்வித்தது. போதாததற்கு காற்றில் ராத்திரி பெய்து விட்டுப் போயிருந்த மழையின் ஈரம். ஐந்து நிமிடப் பயணத்திலேயே மலைப் பாதை தொடங்கிவிட்டது. கூடவே குறுகலான ஒரு ரயில் பாதையும். வழியெல்லாம் குறுக்கே கடப்பேன், நின்று பார்த்து விட்டு உன் பயணத்தை தொடர்ந்துக்கோ என்று ஆரம்பத்திலேயே ஒரு அறிவிப்பு. சொல்றது யார் தெரியுமா? அந்த ஆராதனா ' மேரே சப்னோ கி ராணி' ரயில் பாதை தான். வழியெல்லாம் ரோட்டின் இந்த ஓரத்திலும் அந்த ஓரத்திலுமாய் மாறி மாறி கூடவே வருகிறது.

காதோரம் குளிர் உறைக்க ஆரம்பித்ததும் அதுவரை வெறுமனே பார்த்துக் கொண்டிருந்த மலையும் பள்ளத்தாக்குகளும் கூடுதல் அழகாகிவிட்டது போலிருந்தது. ஒவ்வொரு வளைவிலும் ஆழமாகிக் கொண்டே போகும் பள்ளத்தாக்குகளும் ஏறிக் கொண்டே போகும் குளிருமாய். குண்டும் குழியுமாய் இருந்த ரோடோ, காலையிலிருந்து ஒன்றும் சாப்பிடாததோ எதுவும் பெரிதாக உரைக்கவில்லை. மூன்றரை மணிநேரப் பயணத்தில் டார்ஜிலிங் போய்ச் சேர்ந்திருந்தோம்.

நூறு வருடப் புராதன ஒரு தங்கும் விடுதியில் அறை ஒதுக்கியிருந்தார்கள். அன்றைக்கு சுற்றிப் பார்க்கும் வேலை எதுவும் இல்லாததால் மாலையில் காலாற நடக்கப் போன போது நான்கு வருடத்தில் டார்ஜிலிங் அதிகம் நெரிசலாகி விட்டது போலிருந்தது. வழி நெடுக தெருவோரக்கடைகளும் கூடுதல் சுறுசுறுப்பாக வியாபாரமுமாய். தெருமுடிந்து சட்டென்று விரியும் மாலில் இன்னும் அதிகம் மனிதர்கள். நாலடி தூரத்தில் நடப்பவர் தலைக்கு சற்று மேலே மிதந்து கொண்டு போகும் வெள்ளைப் பனி மூட்டம். நேற்று இதே நேரம் வியர்வை கசகசப்போடு பேருந்து ஏறியது நினைவு வந்தது. வெட்பமானி பத்து டிகிரி என்று சொன்னது. நான்கு வருடத்தில் கொஞ்சமும் மாறாமல் இருந்த உணவகத்தில் இரவு சாப்பாட்டை முடித்து அறைக்கு வந்த போது அங்கிருக்கும் வரை ஏற்பாடுகளை கவனிக்கும் திரு. முகர்ஜி காத்திருந்தார்.