Tuesday, February 05, 2019

கொல்கத்தா 2019


கொல்கத்தாவை விட்டு வந்து பனிரெண்டு வருடமாகிறது. இடையில் ஒரு முறை போயிருந்திருக்கலாம். நினைவிலில்லை. ஏர்ப்போர்ட் முதற்க்கொண்டு மாறியிருக்கிறது. ராஜார்காட் என்னும் ஒரு பொட்டல்வெளியில் பயணித்து சால்ட்லேக் போய்ச் சேர்வோம். இப்போது அந்த பொட்டல் வெளியையே காணவில்லை. டாக்ஸி பார்க் ஸ்ட்ரீட் கொண்டு சேர்த்த வழியை எனக்கு அடையாளமே தெரியவில்லை. ஆனால் கொல்கத்தாவிற்கே உரித்தான சந்து பொந்துகளில் மாற்றமில்லை. அதிலிருந்து புறப்படும் மனிதர்களிலும். அந்த தெருவோரக் கடைகளில் பத்து ரூபாய்க்கு காலைச் சிற்றுண்டியை இப்போதும் முடித்துவிட முடியும் போலத்தான் இருக்கிறது. புதிதாக ஏகப்பட்ட ப்ளைஓவர்கள். உயரமான தளத்தில் பயணிப்பதால் எங்கிருந்து எங்கே செல்கிறோம் என்பது பிடிபடவேயில்லை. ஒரு கட்டத்திற்கு மேல் தெரிந்து கொள்வதை விட்டு விட்டேன்.

Oxford Bookstore
பார்க் ஸ்ட்ரீட் அப்படியே இருக்கிறது. Flury'sம் மற்ற பெரும்பாலான கடைகளும். ஆக்ஸ்போர்ட் புத்தகக் கடையும். தெருவோர புத்தகக் கடைகளில் அதே புத்தகம் பத்து சதவிகித தள்ளுபடியில். அதே இடம், அதே வரிசை, அதே கடைக்காரருமாய் இருக்கலாம். சென்னையில் மூடிப் போன புத்தகக் கடையெல்லாம் ஞாபகம் வந்தது. வாங்குகிறோமோ இல்லையோ, ஞாயிற்றுக்கிழமைகளில் நுங்கம்பாக்கம் லேண்ட்மார்க்கிற்கு தவறாமல் போய்க் கொண்டிருந்தோம். 
 
எங்களுடைய வழக்கமான Bar - B - Que வின் மேஜை நாற்காலிகள் கூட இடம் மாறவில்லை. காலம் அப்படியே நின்று போனது போலிருக்கிறது. 
 
 
காளிகாட்டில் நட்ட நடுவில் புதிதாக கட்டிடம் ஏதோ எழும்புகிறது. மற்றபடி அதே துரத்தல், நெரிசல். முதல்முதலாக ஒரு மழை நாளின் சகதியில் காளிகாட்டிற்கு வந்திருந்ததும் இதுவா காளி கோவில் என்று சலித்துக் கொண்டதும் நினைவுக்கு வருகிறது. காசியைப் போலவே முதலில் சேராமல் பின்னாடி அது ஒரேயடியாக சேர்ந்து போனதில் காளிகாட் இரண்டாவது. அதே விரட்டல், நகையெல்லாம் பத்திரம் பத்திரம்ன்னு சொல்லிச் சொல்லி இழுக்காத குறையாக கூட்டிப் போய் யாரிடமோ ஒப்படைத்து அவர் நாலு பேரைக் கேட்டு ரெண்டு மந்திரம் சொல்லி, இரண்டாயிரம் உண்டியலில் போடு என்று மிரட்டி இருபது ரூபாய்க்கு திட்டி விரட்டி விட்டதில் காளியைப் பார்த்தேனா என்று நினைவில்லை. பலி களம் ரத்தச் சகதியாயிருந்தது. ஒரு இளம் ஆட்டின் கூக்குரல் மட்டும் காதில் கேட்டது. பார்க்கத் தோணவில்லை.
 
காளிகாட்டில்
முன்னெப்போதோ இப்படி சுற்றி வந்த போது நிர்மல் ஹ்ருதய் கண்ணில் பட்டு உள்ளேயும் போயிருந்தேன். அந்த ஆழத்திற்குள் இருந்து என்னை மீட்டெடுக்க திராணியில்லை. நிறைய விஷயங்களுக்கு கண்களை மூடி, காதுகளை அடைத்துக் கொள்கிறேன், இப்போதெல்லாம்.

இந்தப் புறம் ஒரு குஜராத்திக்காரர் மேற்பார்வையில் ஒரு பெரிய பாத்திரம் நிறைய சாப்பாடும் ஒரு வாளி காய்கறிக் குழம்பும் விநியோகமாகிக் கொண்டிருந்தது. பத்து வருடமாக ஒவ்வொரு வாரமும் செய்கிறாராம். எல்லா நேரமும் யாராவது எதாவது கொடுத்துக் கொண்டிருப்பார்கள் என்றார். பத்தடி தள்ளி ஒரு பெண் அட்டைப் பெட்டியில் பிஸ்கெட் பாக்கெட்களை விநியோகித்துக் கொண்டிருந்தார். சென்னையில் இதைச் செய்யும் ஆர்வம் வந்திருக்கிறது.



Bar-B-Q
கொல்கத்தா கிளம்புவதற்கு முன் பார்க்க ஆரம்பித்திருந்த Four more shots pleaseக்கான ப்ளெக்ஸ் ஊரெல்லாம். ப்ளைஓவரின் ஒவ்வோரு தூணுக்கும் ஒவ்வொரு கேரக்டரின் பிரம்மாண்டமான போஸ்டர்கள், ஒரு டெலிவிஷன் சீரீஸ்க்காக! சென்னையில் அதைப் பற்றி மூச்சு கூட விட்ட மாதிரி தெரியவில்லை. ஒரு கொல்கத்தாவாசிக்கு ஜீரணமாவது சென்னைக்காகாது என்பது தெரிந்தது. எதுக்கு வம்பென்று விட்டிருக்கலாம்!

பின்னே எதற்காக கொல்கத்தா போயிருந்தேனோ அந்த வெட்டிவேலைகளையெல்லாம் முடித்து மறுநாள் சால்ட் லேக்கிற்க்கு. இரண்டு வருஷம் எங்கள் வீடாயிருந்த வீட்டு பால்கனியை கீழேயிருந்தே பார்த்துவிட்டு கிளம்பியாயிற்று.