Thursday, November 24, 2005

காஷ் மே...

'சமுதாயம் வரிக்கும் திருமணம், குடும்பம், பொறுப்பு, அதன் தொடர்பான கடமைகள் என்ற கோடுகளுக்குள் அதிகம் கேள்விகள் இல்லாமல், இருந்தாலும் பெரிய போராட்டங்களில்லாமல், சின்ன முணுமுணுப்பு, கொஞ்சம் சலசப்பு காட்டி வாழும் பெரும்பான்மை. மீறினாலும் மதிப்பாக ஆன்மிகம், துறவு, (போலிச் சாமியார்களும்
சேர்த்தே) ஒரு சிறுபான்மை. அதிலும் சேராமல் இதிலும் சேர்த்தியில்லாமல் இன்னொரு சிறுபான்மை. இவர்களை குறுகுறுப்பான ஓரக்கண் பார்வையில் பார்த்துக் கொண்டு அவசரமாக விலகிக் போன காலங்கள் போய், பொருட்படுத்தாமல் இருக்கப் பழகி, பரிதாபப் பட்டு... எல்லாம் தாண்டி அவர்களை அவர்களாகப் புரிந்து கொள்ள முடியும் என்ற நிலைப்பாடு வந்திருக்கிறது.'

இப்படி ஒரு முன்னுரை மனதில் எழுதி வைத்து அந்த சந்திப்புக்கான முனைப்பு தொடங்கியது நட்சத்திர வாரத்திற்கான அழைப்பு வந்த போது. எப்படியாவது அதற்கு முன் சந்தித்து விடவும் அந்த சமயத்தில் கட்டாயம் அவர்களைப் பற்றி ஒரு பதிவு இடவும் ஒரு வேகம் இருந்தது. பழக்கமில்லாத ஊர், அதிகம் நண்பர்களும் இல்லை. யார் இதற்கு உதவி செய்வார் என்ற யோசனையில், எண்ணத்தில் தட்டுப் பட்டது ரேணுபாலா மொஹந்தி. மாதாந்திர லேடீஸ் க்ளப் கூட்டத்தில் வெட்டி அரட்டை நேரத்திலும் எதாவது செய்ய வேண்டும் என்ற முனைப்புடன் இருப்பது அவர் மட்டுமே. அவரிடம் அந்த சந்திப்பு நோக்கத்தைச் சொல்லி யாரையாவது தெரியுமா என்று கேட்டதற்கு விசாரித்துச் சொல்வதாகச் சொன்னார். சரியாக இரண்டாம் நாள் ஒன்றிரண்டு NGO க்களைப் பற்றிச் சொல்லி தொலைபேசி எண்ணும் தந்தார்.

முதலாவதாகக் கொடுத்திருந்த எண் தான் எனக்குத் தேவையானதாய் இருந்தது. தொலைபேசியில் தொடர்பு கொண்ட போது யார், என்ன, எதற்காக என்ற விபரம் கேட்டுக் கொண்டு யாரிடமிருந்தாவது அறிமுகக் கடிதம் தேவையிருக்கும், ஆனாலும் நீங்கள் விரும்பும்வது போல இந்த வாரத்தில் முடியாது, அடுத்த வாரம் பார்க்கலாம் என்று சொல்லி விட்டார். என்னுடைய நட்சத்திர வார அவசரமோ, ஆர்வமோ அவருக்கு அவசியமில்லாமல் இருந்தது.

அடுத்த படையெடுப்பு கணவரிடம். வேறென்ன அந்த அறிமுக கடிதத்திற்காகத்தான். ஏற்கனவே இதைப் பற்றிப் பேசியிருந்தாலும் 'அவசியம் போகணுமா' என்ற கேள்வியோடு வாங்கித் தந்தார். நாலுவரி அறிமுகக் கடிதத்தில் குட்டியாய் ஒரு கையெழுத்தும் மங்கலாய் ஒரு ரப்பர் ஸ்டாம்புமாய். வேறு வழியிருக்கவில்லை. அதைக் கொண்டு வர அந்த NGO அமைப்பிடம் அனுமதி கேட்டு, வரச் சொன்ன நாள் போன போது அமைப்பின் தலைவி அலுவலகத்தில் இல்லை. காத்திருந்த நேரத்தில் அவர்களுடைய சேவைகள் பற்றிய பட்டியலும் புகைப்படங்களும் சுவரெல்லாம் தொங்க, பார்க்கக் கிடைத்தது. அவருடைய காரியதரிசியிடம் விபரம் சொல்லி கொடுத்து விட்டு வந்தாலும் அவர் அதைக் காண்பிப்பாரா என்ற சந்தேகம் இருந்தது. இப்போதும் வேறு வழியிருக்கவில்லை.

அதற்குப் பின் தொடர்ந்த தொலைபேசி விசாரிப்புகளில் எப்போதும் இல்லாதிருந்தது தலைவியும், குறைவில்லாமல் இருந்தது சலிப்பும். ஒரு கட்டத்தில் 'எங்களுக்கு உங்களைப் போன்ற ஆட்களுக்கு செலவிட நேரமில்லை. நீ யாரென்று தெரியாது. எதிலோ எழுதுகிறாய் என்கிறாய்... என்ன எழுதப் போகிறாயோ, அதனால் எங்களுக்கு தொல்லை வரலாம், நீ புகைப்படம் எடுக்க வேண்டும் என்பாய், அந்த இடத்தைப் பற்றித் தெரியுமா உனக்கு? உன்னை அங்கே அழைத்துப் போகும் அவசியம் எங்களுக்கு என்ன? ' என்று சொல்லி என் தொடர் தொலைபேசி கோரிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப் பட்டது.

NGO க்களின் துணை என்ற பாதுகாப்போடு போக நினைத்தது முடியாமல் போய்விட்டது. அப்போது எழுத நினைத்த பதிவும் எழுத முடியவில்லை. இனியும் போக முடியும் என்று தோன்றவில்லை. சோனார்காச்சியும் அவர்கள் வாழ்க்கையும் இனிமேலும் அவ்வப்போது கண்ணில் படும் ஊடகங்கள் வாயிலாகத்தான்.

காஷ் மே...

Saturday, November 19, 2005

குஷ்வந்த் சிங் என்றொரு குழந்தை

வழக்கமாக பத்து பதினைந்து நிமிடங்களில் முடிந்து விடும் செய்தித்தாள் வாசிப்பு சனிக்கிழமைகளில் மட்டும் கொஞ்சம் எதிர்பார்ப்போடு இன்னும் சில நிமிடங்கள் நீடிக்க குஷ்வந்த் சிங் தான் காரணமாயிருப்பார். பெரும்பாலும் சவசவன்னு போகும் அவருடைய அந்த வாராந்திர பத்தியை ஏனோ விட மனசு வந்ததில்லை. எப்போதாவது ஒரு சின்ன சிரிப்பு... சில தகவல்கள், கொஞ்சம் அரசியல், பழைய நண்பர்கள்... எல்லாமுமாயிருக்கும்.

இன்றைக்கு மார்க்வெஸ்ஸின் My Melancholy Whores பற்றி கொஞ்சம் விலாவரியாக கதை சொல்லி கடைசியில் இப்படி முடிக்கிறார்...

I am unable to fathom reasons which induced Marquez to write this novella almost entirely confined to prostitutes. The urge to write about my own fantasies came to me when i was in my 80s. I churned out 'The Company of Women'. I wrote a short prefatory note admitting that when a man ages, his sexual desires travel from his middle to his head. And all that I have written were imaginary sex-escapades of an octogenarian. Needless to say it was panned by most critics, and predictably also went into several editions. Marquez's latest will make it to the top world's best-seller list and earn him another fortune. It does not shake me. My consolation is that I did a better job than he even if the world does not agree with me.

இந்த 'The Company of Women' புத்தகம் கைக்கு கிடைத்தது ரொம்ப எதேச்சையாக. எதையோ தேடி விசாரிக்க, அது சேரன் டவர்ஸ்ல தான் கிடைக்கும் என்று யாரோ வழிகாட்ட, அந்த சேரன் டவர்ஸையே தேட வேண்டியிருந்தது. கடைசியில் தேடிப் போன சாமான் கிடைக்கவில்லை, ஓடாத புத்தகக் கடையை முடிவிடும் முடிவிலிருந்த ஒரு புத்தகக் கடைக்காரர் கிடைத்தார். மனசில் தோன்றிய விலைக்கு புத்தகங்களை தள்ளி விடும் உத்தேசத்திலிருந்தார். அப்போது வாங்கிய மற்ற புத்தகங்கள் நினைவில்லை. ஆனால் இந்த புத்தகம் வெறும் எழுபத்தி ஐந்து ரூபாய்க்குக் கொடுத்தார். அது தான் முதல் குஷ்வந்த் சிங் எழுத்து அறிமுகம். அந்த புத்தகம் வாசித்த அந்த ஆறேழு நாட்களும் இருந்த உணர்வை எப்படிச் சொல்ல என்று தெரியவில்லை. ஆனால் சில விஷயங்களை சொல்லி விட்டுப் போயிருக்கிறது. அந்த வாசிப்பு மயக்கம் தான் இன்னும் குஷ்வந்த் சிங் எழுத்துகளை எங்கே பார்த்தாலும் விட முடியாமல் விரட்டுகிறது.

ஆனாலும் இன்றைக்கு ஏனோ அவரைப் பார்க்கும் போது தொண்ணூறு வயதுக் குழந்தை (ஆச்சுதானே குஷ்வந்த் சிங்ஜி?) போலிருக்கிறார். என் பொம்மை தான் உசத்தி என்று சொல்லும் குழந்தை!

Wednesday, November 09, 2005

ANTARMAHAL: Views of the Inner Chamber

Image hosted by Photobucket.com

படம் விரட்டின விரட்டில் தேடிப் போய் பாஷை புரிய வைக்கும் இடத்தில் பார்த்துவிட்டு வந்தாயிற்று. 'அப்படியாயிருக்குமோ? சேச்சே அதுவாயிருக்காது' என்று நினைத்ததெல்லாம் அப்படியேதான் அதேதான் என்று சொல்லிவிட்டது. பாஷை சரியாகப் புரியாமல் அரைகுறையாய் புரிந்து எதையாச்சும் சொல்லிவிட வேண்டாம் என்று தான் அப்படி ஒரு மொட்டை பதிவு. என்ன செய்ய? படம் பார்த்து விட்டு வந்ததும் அதைப் பற்றி எழுதாமல் இருக்க முடியவில்லை.

ரிதுபர்னோ கோஷின் இன்னொரு பீரியட் படம். ஜமீந்தாரை படம் வரைய வந்த வெள்ளைக்காரர் தான் கதை சொல்லி. 1858 நடக்கும் கதை. சல்லாபி ஜமீந்தாருக்கு(ஜாக்கி ஷெராப்) ராணி விக்டோரியாவிடமிருந்து ராய் பகதூர் பட்டம் வேண்டும். ஆண் வாரிசு ஒன்று கட்டாயம் வேண்டும். இது இரண்டும் தான் பெரிய தலைவலி. முதல் மனைவியாக ரூபா கங்கூலி. புதிதாக வந்த இளம் மனைவியாக சோஹா அலி கான். தலைவலியைத் தீர்க்க எதையும் செய்ய தயாராகிறார் ஜமீந்தார். அந்த 'எதையும்'ல், வரபோகும் துர்கா பூஜைக்கு துர்காவின் உடலில் ராணியின் முகத்தை வைத்து சிலை செய்ய உத்தரவிடுவதும், புரோகிதர் வேதம் வாசிக்க, கேட்டுக் கொண்டே புணர்வதும் அடங்கும். ராணி முகச்சாயலில் சிலை செய்ய வருபவராக அபிஷேக்பச்சன். இந்த பாத்திரங்கள், அதன் இயலாமைகள், தவிப்பு, உணர்வு உரசல்கள்... இதில் ஓடும் கதை.

புரோகிதரை வைத்துக் கொண்டு புணர மறுக்கும் இளம் மனைவிக்காக முதல் மனைவி கட்டிலுக்கும் வாசிப்பவருக்கும் நடுவில் திரை போடச் சொல்கிறார். திரைக்கு அந்தப் பக்கம் ஜமீந்தாரும் இளம் மனைவியும். இந்தப் பக்கம் வாசிப்பவரைச் சீண்ட அவர் முன்னே அமர்ந்து கொஞ்சமாய்(?!) துகிலுரிகிறார். 'பிள்ளை பெற்றுக் கொள்ள நீ செய்வது தவறில்லை என்றால், நான் செய்வதும் தவறில்லை'.

மோப்பம் கண்ட புரோகிதர் கடைசியில் ஜமீந்தாரை வைத்தே பரிகாரம் என்ற பேரில் முதல் மனைவியோடு தன்னையும் சேர்த்து ஐந்து புரோகிதர்கள் புணர அனுமதி வாங்கிக் கொள்கிறார்! ராணியின் முகச்சாயல் துர்கா, பெரிய குற்றம், பரிகாரம், அஸ்வமேத யாகம், குதிரை, அது ஊரெல்லாம் சுற்றி வந்ததில் தீட்டு, அதைப் போக்க வீட்டு பெரிய மருமகள் குதிரையோடு புணர்ந்து சுத்தம் செய்ய வேண்டும், ஆனால் இப்போது அப்படியெல்லாம் செய்ய வேண்டாம் அதற்குப் பதில் இந்த ஐந்து புரோகிதர் சமாச்சாரம்! ஆக்ரோஷமாய் மறுக்கும் முதல் மனைவி பிறகு 'இதையே சாதகமாக்கிக் கொண்டு ஒரு பிள்ளையைப் பெற்றுக் கொண்டு உன் இடத்தைக் காப்பாற்றிக் கொள்' என்ற சேடி பெண்ணின் ஆலோசனையையும் ஏற்றுக் கெள்கிறார். அவசியம் வந்தால் எதுவும் மாறும்... எப்படியும் மாறும்!

கடைசியில் துர்காவை இளம் மனைவியின் முகச்சாயலில் செய்து விட்டு சிலை செய்தவர் தலைமறைவாகிறார். அதை அவமானமாக நினைத்து இளம் மனைவி தற்கொலை செய்து கொள்கிறார். புரோகிதர்களோடு புணரக் குறித்த நாளில் முதல் மனைவி விலக்காகிக் போகிறார்!

விலக்கானது தெரிந்தும் 'அமி ஜாபோ(நான் போவேன்/கிறேன்?!)... அமி ஜாபோ' என்று திரும்பத் திரும்பச் சொல்லி உடைந்து அழும் போது... அந்த பாத்திரத்தை அதன் அவஸ்தையை இதைவிட வேறெப்படியும் சொல்ல முடியாது. விரிந்த அந்தக் கண்களில் மாறி மாறி வெளிப்படும் கோபமும் இயலாமையும்... ரூபா கங்கூலியின்
பாதிப்பு இன்னும் கொஞ்ச நாளுக்கு இருக்கும். இப்படி ஒரு பாத்திரம் செய்த பிறகு என்ன மாதிரி உணர்வார் என்று ஒரு கேள்வி வருகிறது. ஆனால் அம்மையாருக்கு இதொன்றும் புதிதல்ல என்றே தோன்றுகிறது.

சோஹா அலி கான் சின்ன பூனைக்குட்டி போலிருக்கிறார். மெல்லிய குரலும், உயராத விழிகளும்... அந்தக் காலத்துப் பெண்கள் இப்படித்தான் இருந்திருப்பார்களானால் ரொம்ப பரிதாபம் தான். அபிஷேக் பெங்காலி பேசினால் எப்படி இருக்கும் என்ற கற்பனை பலூனுக்கு பரிதாபமாய் காற்று போய் விட்டது. ஹிந்தி பேசும் பிஹாரியாக தப்பித்துக் கொண்டார். முரட்டு ஜமீந்தாருக்கு ஜாக்கி(அய்யோ இப்படி எழுதவே பிடிக்கலை!) அழகாய் பொருந்துகிறார். மனுஷன் பாதிப் படம் புணரும் போஸிலேயே முடித்து விட்டார்! இத்தனை விலாவரியாக இவ்வளவு முறை அதைக் காண்பித்திருக்க வேண்டாம் தான். படம் ஆரம்பிப்பதே அந்த போஸில் தான். மழை இல்லாததால் புழுக்கமாயிருப்பதையும், வியாபாரிகள் நல்ல பணம் சம்பாரித்துக் கொண்டதையும் பற்றி சலித்துக் கொண்டு, கூட ஒரு ஏப்பமும் விட்டு... கோழிக்குஞ்சு போல் ஒடுங்கிக் கொண்டிருக்கும் இளம் மனைவியோடு தொடங்கும் முதல் காட்சி!

ஆள் உயரத்துக்கு வெள்ளையாய் புல் பூத்திருக்கும் நதிக்கரையை எங்கே பிடித்தார்களோ! அழகான ஒளிப்பதிவு. இழைத்து இழைத்து படம் எடுத்தது தெரிகிறது. மை தீட்டிய கண்களும், ரவிக்கையில்லாத தோள்களில் நிறைந்து கிடக்கும் நகைகளும்... அரங்கத்திற்குள் இருந்த நேரத்தை magical moments ஆக்கும் வித்தை பிடித்திருந்தது. படம் முடியும் போது ஒரு சின்ன அதிர்வை எல்லோருக்குள்ளும் தந்ததை இரண்டு நாளும் உணர முடிந்தது. ஒரு ஆழ்ந்த நிசப்தத்திற்கு பின் கலைந்து செல்லும் திரையரங்கம்... என்னவோ செய்தது.

Tuesday, November 08, 2005

புத்தகமும் கையுமாக...

கடந்த ஒரு மாதமாக புத்தகமும் கையுமாக கழிந்தது. நான்கு புத்தகங்கள். அதுவும் ஆறாம் வகுப்பு வாண்டு வாசிக்கும் பாட புத்தகம் அளவில். அதைப் படித்து ஒரு பரிட்சை. ஊதித் தள்ளி விடலாம் என்ற நினைப்பெல்லாம் படிக்க ஆரம்பித்த முதல் வாரத்திலேயே காணாமல் போய் விட்டது. படிக்கும் போது புரிகிறது. சுவாரசியமாகத்தான் இருக்கிறது. அதைப் பற்றி ஆயிரத்து இருநூறு வார்த்தைகளில் எழுது என்றால் என்ன எழுதுவது என்ற கலக்கம் வந்ததென்னவோ நிஜம். ஆனால் எழுதப் போனபோது அத்தனை சிரமமாயிருக்கவில்லை. ஏதோ ஒரு நுனியை
பிடித்துக் கொண்டு இழுக்க சில நேரம் மலையே வந்தது. சிலநேரம் கண்ணாமூச்சி காட்டிப் போனது. மொத்தத்தில் சுவாரசியமாயிருந்தது.

வாசித்த விஷயங்களோடு நிறைய விஷயங்களை தொடர்பு படுத்திக் கொள்ள முடிந்தது. ப்ராய்டுடனான காதல் கொஞ்சம் தீவிரமாகியிருக்கிறது. புத்தகஅலமாரியில் கவனிக்காமல் கிடக்கும் அவருடைய புத்தகங்களை படிக்கும் ஆர்வம் தலை தூக்கியிருக்கிறது. சாய்வு நாற்காலியில் சாய்ந்து மேலோட்டமாய் படிக்காமல் கவனமாக படிக்க வேண்டியதன் அவசியம் புரிந்திருக்கிறது. இன்னும் கொஞ்சம் ஆழமாகப் போகும் ஆர்வம் வந்திருக்கிறது. பரிட்சை முடிந்த கடைசி நாள் அப்பாவுடனான தொலைபேசி உரையாடல் ஒரு மறக்க முடியாத, சொல்ல முடியாத ஒரு உணர்வை தந்திருக்கிறது...

'அப்பா, நரேன் சென்னைக்கு பத்ரமா போய் சேந்துட்டான்'

'அப்டியா... வழியில எதாச்சும் சாப்டானா?'

'தெரியலையே... நான் பேசலை. அவர்தான் பேசியிருக்கார்'

'ஏன்? நீ எங்க போன?'

'எனக்கு மத்யானம் பரிட்சை இருந்துதுப்பா'

'அப்டியா... நல்லா எழுதுனியா?'

'மொதல் மூனும் நல்லா எழுதினேன். இன்னைக்கு அவ்வளவு சரியா எழுதல'

'ஒழுங்கா படிச்சாதான ஆகும். எப்பப்பாரு டீவியும் கம்ப்யூட்டருமா இருந்தா...'

பள்ளிக்கூடம் போற மகளை கண்டிக்கிற தொனியில் அப்பா செல்லமாக திட்டிக் கொண்டே போக, ஒரு கணத்தில் இரண்டு பேரும் சிரிக்க தொடங்க...

ANTARMAHAL - ஒரு பாஷை தெரியாத பார்வையில்.

நான் பார்த்த ரிதுபர்னோ கோஷின் இரண்டாவது படம். சோக்கர் பாலியின் சாயலோடு கொஞ்சம் எதிர்பார்ப்பை தூண்டியதாயிருந்தது.

பாஷை தெரியாமல் படம் பார்க்கும் desperation என்னவென்று இன்றைக்கு புரிந்தது. ஹாஸ்ய படமாயிருக்கும் பட்சத்தில் பேசுவது புரியாவிட்டாலும் செய்கைகள் சில நேரம் சிரிப்பை வர வைக்கும். இவ்வளவு உணர்ச்சி கொப்பளிக்க என்னதான் சொல்றாங்க என்று தவிப்போட பார்க்க வைத்த படம். தியேட்டர் வாசலில்
வைத்திருந்த விளம்பர அட்டையில் with english sub-titles என்று போட்டிருந்ததை பற்றி அதிகம் அக்கறையில்லாமல் தான் பார்க்கப் போயிருந்தேன். படிப்பதில் கவனம் போனால் படத்தை ரசிக்க முடியாது என்று தான். sub-titles என்னவோ வரவில்லை. ஆனால் ஏன் போடலைன்னு திரும்பி வர்றப்ப டிக்கெட் கொடுத்த மகராசனை கேள்வி கேட்டுட்டு தான் வந்தேன்.

வீட்டுக்கு வந்து போன வார பேப்பரில் அதோட விமர்சனம் வந்திருந்ததே அதையாவது பார்த்து படத்தைப் பற்றி இன்னும் கொஞ்சம் தெரிஞ்சுக்கலாம் என்ற முயற்சியும் வீணானது. விமர்சனம் எழுதிய புண்ணியவானும் கதையைச் சொல்லாமல் விட்டிருக்கிறார். என்னைப் போல!

ஆனால் வேறொரு தியேட்டரில் sub-titles உடன் வருவதாக சொல்லியிருக்கிறார். இன்னொரு தரம் பார்த்தே ஆக வேண்டும். அதுவரை அந்த கேரக்டர்கள் எல்லாம் என்னதான் பேசியிருக்கும் என்ற க்யூரியாசிட்டியோடு நான் இருக்கப் போகிறேன். பார்த்து விட்டு வந்து கொஞ்சம் போல சொல்கிறேன்.