சர்வ காலமும் சுமந்தலைகிறேன்
சலசலத்து நகர்ந்து கொண்டிருந்தது
கோபங்களால் துரோகங்களால்
குரோதத்தால் காதல்களால்
நிரப்பிச் சேர்த்ததில் ததும்பி நிற்கிறது
ஆவேசம் கொள்கிறது
ஆனந்தக் கூத்தாடுகிறது
மௌனத்தில் ஆழ்கிறது
குறிப்பறிந்து சிதறும் சாரல்களில்
கடும் புயல்களைக் கடக்கும்
உரம் கொள்கிறது
சீண்டல்களில் புரண்டெழும் ஞாபகங்களில்
தொலைந்து போகிறது
தேடிக் கண்டடைகிறது
தெளிவுறுகிறது
அகம் ஆர்ப்பரித்த போதும்
ஓர் அணக்கம் காட்டாதிருக்கிறது
ஆழ்கடலென்பதற்கு மேல் அதை
அறிந்தார் எவருமில்லை.