Tuesday, March 22, 2005

ஒற்றைச் செருப்பு

பிரதான நாற்சந்தி நடுவில் கிடக்கிறது
வெளிர்கருப்பில் குதியுயர்ந்ததொரு
பெண்கள் செருப்பு

காதலன் முதுகில் மார்பு உரைய
விரையும் வேகத்தில்
நழுவியது உணராத
காதலியுடையதாயிருக்கலாம்

வேகப் பேருந்து
செருப்புக்காக நிற்காதென்று
வழியின்றி தவறவிட்ட
பெண்ணுடையதாயிருக்கலாம்

நடுத்தெருவென்றும் பாராமல்
விழி உருட்டி
உரத்த குரலில் ஏசுபவனின்
மனைவியுடையதாயிருக்கலாம்

ஒற்றைச் செருப்போடா
சேரும் இடம்வரை போயிருப்பாள்?

முதலாமது நழுவியது உரைத்தபோதே
மற்றதையும் நழுவவிட்டிருந்தால்
வேறு கால்களிலாவது
ஜோடி சேர்ந்திருக்கலாமென்று
யோசித்திருக்க மாட்டாளா?

நடுத்தெருவில் மல்லாந்து கிடக்கிறது
பரிதாபமாய்

துணையைத் தவறவிட்ட
ஜீவனின் தவிப்பில்
சற்றும் குறைவில்லாமல்

போகிற போக்கில் நானும்
விரலசைக்காமல் கடந்த போதும்
நினைவுகளில் ஒற்றைச் செருப்பின்
விரட்டல்கள் தொடர்கிறது

என்னதான் செய்திருக்க வேண்டும் நான்?

எண்ணிக்கை மறந்து போன
பதில் தெரியாத
இன்னொரு கேள்வி!

ஆகாசத்தில் ஒரு பஸ் சவாரி

திடீர் பயணம். கணவருக்கு நேரமில்லை. கூட நான்(அதுதான் முக்கிய காரணம். அவருடைய பயணச்செலவை அலுவலகம் பார்த்துக் கொள்ளும். எனக்கு?!). அதனால் இந்த முறை பயணம் Air Deccan ல். மற்ற ஏர்லைன்ஸில் பத்தாயிரத்து சில்லரை பயணம் இதில் முவாயிரத்து ஐநூறு மட்டுமே. கட்டணம் குறைவு என்று சொன்னதுமே முதல் யோசனை பாதுகாப்பாக இருக்குமா? என்று தான். ஏற்கனவே பயணம் செய்தவர்கள் தந்த ஆசுவாசத்தில் கிளம்பியாயிற்று.

முதல் வித்தியாசமாய் உணர்ந்தது பயணச்சீட்டைப் பார்த்தது தான். ஒற்றைத்தாள் தான் பயணச்சீட்டு. உள்ளே நுழையும் போதே ஐடென்டிபிகேஷன் ப்ரூப் பார்த்து தான் அனுப்புகிறார்கள். செக் இன் செய்யும் வரை பெரிதாக எந்த மாற்றமும் இல்லை. போர்டிங் பாஸில் இல்லாத இருக்கை எண் எல்லா விஷமமும் செய்தது. விமானத்திற்குள் நுழைய அழைப்பு வந்ததும் தடாலென்று விரையும் கூட்டம்... வரிசையில் முன்னால் செல்ல காட்டும் அவசரம்... பஸ் ஸ்டேண்ட் ஞாபகம் வந்தது. உள்ளே நுழைந்த பிறகு இன்னும் கொஞ்சம் அலைமோதல். சீட் பிடிக்க. முன் வரிசையில் ஒரு கைக்குட்டை கூட போடப் பட்டிருந்தது. எல்லா களேபரங்களையும் விமானப் பணிப்பெண்கள் ஒரு நக்கலான சிரிப்போடு வேடிக்கை பார்த்துக் கொண்டு.

ஏறியதும் நடக்கும் உபசரணைகள் எதுவும் கிடையாது. உட்கார்ந்து கொண்டாயா? ரொம்ப சந்தோஷம். குறுக்க நெடுக்க நடக்காதே... உன் தலைகளை எண்ண வேண்டும். உன் இடத்தில் உட்கார். நேராக உட்கார். பெல்ட் போடு. தண்ணியா? அதெல்லாம் பறக்கத் தொடங்கினப்பறம் தான். வழக்கமான பெல்ட் போட, கழட்ட, பாதுகாப்பு எச்சரிக்கைகள்... எல்லாம் முடிந்து பறக்கத் தொடங்கியதும் லேசாக படபடக்க ஆரம்பித்து அடங்கியது.

பெல்டைக் கழட்டி விட்டுக்கோன்னு சொன்னது தான் மாயம். முன்னால் உட்கார்ந்து ஏற்கனவே அலம்பல் பண்ணிக் கொண்டிருந்த மார்வாடிக் குடும்பம் சாப்பாட்டு மூட்டையை பிரிக்க ஆரம்பித்து விட்டது. பூரி பாஜி வாசம் சுற்றியும் பரவ, கருமமே கண்ணாயினராய் தொடர்ந்தனர். கொஞ்ச நேரத்தில் பணிப்பெண்கள் வழக்கமான சாப்பாட்டு வாகனத்தோடு. என்ன... இங்கே கைல காசு... வாயில நீ கேட்டது. அதுவும் அவர்கள் வைத்திருக்கும் நாலைந்து சமாச்சாரங்களில் ஒன்று. விலையெல்லாம் தேவலாம். காப்பித்தூளும் சக்கரையும் பால் பவுடரும் கலந்து ரெடிமேடாக கிடைக்கும் ஒரு பொட்டலமும் சுடுநீருமாய் கொடுப்பதைக் கலந்து காப்பியாக்கிக் குடித்துக் கொள்ள பத்து ரூபாய். dry சமோஸா, cup o noodles என்று எல்லாம் பக்கா ரெடிமேட் சமாச்சாரங்கள்.

மணியடித்துக் கூப்பிட்டால்... யாரும் வர மாட்டார்கள். அவர்களாக கடக்கும் போது கூப்பிட்டு எதுவும் கேட்கலாம். அடுத்த அரைமணி நேரத்தில் பறந்து கொண்டே ஷாப்பிங் செய்ய ஒரு அழைப்பு. இன்னொரு ட்ராலியை இழுத்துக் கொண்டு எதாவது வேண்டுமா என்று கேட்டுக் கொண்டு. என்ன விற்கிறார்கள் என்றே தெரியவில்லை. கடனே என்று ஒரே தள்ளில் முடித்துக் கொண்டார்கள். ஆங்... சொல்ல மறந்து விட்டேன். எல்லாவற்றிற்கும் முதலில்... அங்கங்கே மேலிருந்து ஒரு சின்ன டெலிவிஷன் ஸ்கிரீன் இறங்கியது. முப்பது ரூபாய்க்கு ஹெட்போன் வாங்கிக் களிக்கலாம் என்று. யாரும் வாங்கியது போல தெரியவில்லை. அநியாயத்திற்கு போரடிக்கும் நிகழ்ச்சி சத்தமில்லாமல் ஓடிக் கொண்டிருந்தது.

வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்ததில் இரண்டு மணி நேரம் ஓடிப் போய்விட்டது. பூவாட்டம் தரையிரங்கிய விமானம் எல்லா பயத்தையும் விரட்டி விட்டிருந்தது. மிகக்குறைந்த கட்டணம்... இருபத்தி ஒன்பது மணி நேர ரயில் பயணத்தை இரண்டு மணி நேரத்தில் முடித்துக் கொடுத்தது... ம்ம்ம்... திருப்தி.

திரும்பி அதே Air Deccan ல் வரும் போது பழகிப் போயிருந்தது!

Friday, March 18, 2005

மறுபடியும் ஒரு சென்னைப் பயணம்.

ராஜா கல்யாணத்திற்குப் போய் விட்டு வந்த போது இன்னும் கொஞ்ச நாளைக்கு சென்னை போக வேண்டியிருக்காது என்று தான் நினைத்தேன். பத்தாவது வகுப்பு பொது தேர்வு எழுதப் போகும் மகனுக்கு அட்வைஸ், ஆசிர்வாதம் எல்லாம் அப்போதே முடித்துவிட்டுத் தான் வந்தேன் என்றும்.

பின்னொரு சமயம் மகளோடு தொலைபேசியில் பேசும் போது 'பாவம் அவன். அவனோட இந்த முக்கியமான சமயத்தில நாம யாரும் கூட இருக்கப் போறதில்லை'. ஒரு எமோஷனல் ப்ளாக் மெயில் செய்யறோம் என்று தெரியாமலே சொல்லி விட்டுப் போனதில் வழக்கம் போல கொஞ்சம் உறுத்தல். பரிட்சை சமயத்தில் கூடத்தான் இருக்க முடியாது... சரி இன்னொரு தரம் பார்த்து விட்டாவது வரலாம் என்று தான் இந்த பயணம். அதிசயமாக சைட்டை மறந்து (மறந்தெங்கே... அங்கேயும் செல்பேசி விரட்டாமல் இருக்கப் போவதில்லை) மூன்று நாள் சென்னையில் இருக்க கணவரும் முடிவு செய்ததில் இது.

போகிற போக்கில் மகள் சொல்லி விட்டுப் போனதில் நான் எழுதிய பொதுத் தேர்விலிருந்து ஒவ்வொன்றாக நினைவு வந்து விட்டுப் போனது. இதை எழுத வைத்தது மகளின் பொதுத் தேர்வு நினைவுகள்.

அவள் எழுதியது ஒரிஸ்ஸாவில். கணவர் அப்போது சூரத்திற்கு மாற்றல் ஆகிப் போய் விட்டிருந்ததால் வீடு பெரிய ஹல்லா குல்லா இல்லாமல் வழக்கம் போல தான் இருந்தது. அப்பப்ப கொஞ்சம் டீவி, கொஞ்சம் அரட்டை, ராத்திரி நேரங்களில் அவள் படித்துக் கொண்டிருக்க நான் இணைய அரட்டைகளும், புத்தக வாசிப்புமாய்.

பரிட்சை நாட்களில், தடுக்கி விழும் தூரத்தில் இருக்கும் பள்ளிக் கூடத்திற்கு ஒரு மணி நேரம் முன்னாலேயே போயிருப்பாள். நான் அரை மணி நேரம் முன்னால் பள்ளிக் கூடத்தில் இருக்க வேண்டும் என்பது அன்புக் கட்டளை. போட்டது மகளல்ல. அபிஷேக். அவளுடைய நண்பன். ராத்திரி நேரம் மூன்று மணிக்கும் நாலு மணிக்கும் அலாரம் வைத்து, அடிக்கும் போது ஒரே போடு போட்டு விட்டு தூங்கிப் போன நாட்களிலெல்லாம் போன் செய்து எழுப்பிப் படிக்க வைத்தவன். 'இப்படித் தூங்கறீங்களே?' என்று ரெண்டு பேருக்கும் டோஸ் விடுபவன்.

பரிட்சை தொடங்கிய பின் பள்ளிக் கூடத்திற்குள் நுழையும் போது பார்க்க வேண்டும். கடைசி நேர உருப்போடல்கள், குறுக்கும் நெடுக்குமாய் வேக வேகமாய் எதற்கோ நடந்து கொண்டு, யாராவது ஒரு கேள்வி கேட்க திடீடென்று அதற்கு பதில் தேடி எல்லாரும் அலைமோதுவது, கண்ணில் பட்ட அம்மா அப்பாக்கள் காலெல்லாம் தொட்டுக் கும்பிட்டு...

நான் உள்ளே நுழையும் போது அவன் எங்கேயிருந்து வருகிறான் என்று தெரியாது... சட்டென்று பக்கத்தில் வந்து கையைப் பிடித்துக் கொள்வான். கையில் எந்த புத்தகமும் இருக்காது. எதையும் அந்த நேரத்தில் படிக்க மாட்டான். அங்கே நடக்கும் ஆர்ப்பாட்டங்களை எல்லாம் ரெண்டு பேரும் அமைதியாக பார்த்துக் கொண்டு உட்கார்ந்திருப்போம். எங்கிருந்தாவது மகள் குரல் கேட்கும், 'வந்துட்டியா?' என்று. உள்ளே நுழைய பத்து நிமிஷம் இருக்கும் போது ஒரு தரம் பக்கத்தில் வந்து ஒன்றிரண்டு வார்த்தை பேசி விட்டுப் போய் விடுவாள்.

உள்ளே போக கடைசி மணி அடிக்கும் வரை அபிஷேக் கூடவே உட்கார்ந்திருப்பான். மணி அடித்ததும் அமைதியாக எழுந்து bye aunty என்று சொல்லிவிட்டுப் போவான். அவன் வகுப்புக்குள் நுழையும் வரைக்கும் நான் அங்கேயே நிற்க வேண்டும். உள்ளே போகும் போது ஒரு தரம் திரும்பிப் பார்க்கும் போது நான் அவனைப் பார்த்துக் கொண்டிருக்க வேண்டும். இது எதுவும் முன் கூட்டியே பேசி முடிவு செய்ததல்ல... தானாகவே.

இப்போதும் ஒவ்வொரு பரிட்சைக்கும் முன்னால் புவனேஷ்வரிலிருந்து ஒரு மிஸ் கால் வரும். கைவேலையை முடித்துக் கூப்பிடலாம் என்று நினைப்பதற்குள் நாலைந்து முறை குரல் கொடுத்து விடும். சில நேரங்களில் கொஞ்சம் கோபத்தோடு கூப்பிட்டால்... sorry aunty என்று தொடங்கும் உடையாடலில் கோபப்படத் தோணாதுதான்.

இந்த முறை மகனைப் பார்க்கும் போது இதெல்லாம் நினைவு வரும். ஒருவேளை சொல்லக் கூட செய்யலாம். அவனும் பரிட்சை ஹாலுக்குள் போவதற்கு முன் திரும்பிப் பார்க்க நினைப்பானோ?

Wednesday, March 16, 2005

கோவிந்தா... கோவிந்தா!

ஒன்பது வருஷம் முன்பு சிமெண்ட் ப்ராஜக்ட் ஜெட்டிக்காக(jetty) குஜராத்தில் இருந்தோம். அப்போ அந்த ப்ராஜக்ட் காலனியில் அவர்களுக்காக ஒரு DAV பள்ளிக்கூடம் ஆரம்பித்தார்கள். பிரின்ஸிபல், இன்னும் சில பதவிகளுக்கு வெளியில் இருந்து ஆட்கள் வந்தார்கள். மற்ற தேவைகளுக்கு அந்த ப்ராஜக்ட் ஆபிஸர்களின் மனைவிகளில் B.Ed படித்தவர்களுக்கு முன்னுரிமை கொடுத்து, மற்றவர்களை அப்புறமாவது சேர்த்துக் கொண்டார்கள்.

பள்ளிக்கூடம் எட்டாவது வகுப்பு வரை மட்டும். ஏனென்றால் அதற்கு மேல்பட்ட வகுப்பு படிக்கும் குழந்தைகள் யாரும் அப்போது காலனியில் இல்லை. எட்டாவது வகுப்பு மாணவி, பெயர் நினைவில்லை, எப்பவும் முதல் ரேங்க் தான். ஏனென்றால் அந்த வகுப்பில் அவள் மட்டுமே. ஒரு ஸ்டூடண்ட்க்காக அந்த வகுப்பு நடந்தது! ஆபிஸர் பொண்ணில்லையா?!

அப்போது என் மகன் முதல் வகுப்பில். அவனுடைய ஆசிரியர் M.A(Eng), B.Ed. ஆந்திராக்காரர். தெலுங்கு பேசுவது போலவே ஆங்கிலமும் பேசுவார். அதே accent ல். கொஞ்ச நாள் என் மகனும் அவரைப் போலவே பேசுவதைப் பார்த்துக் கொண்டு வீட்டில் நாங்கள் முட்டிக் கொண்டதில் அவன் யாரைப் போல பேச முயற்சி செய்வது என்று குழம்பியது என்னவோ நிஜம்.

காலனி லேடீஸ் க்ளப்பில் அவர் ஆங்கிலத்தை கேலி செய்து பேசும் போது 'அவர் M.A(Eng)... தெலுங்குல' என்று. கேலி செய்து சிரித்ததாக நினைத்தது... இன்னைக்குக் காலையில் அந்த கோவிந்தாவைக் கூப்பிட வைத்து விட்டது!

University test of English, written in Telugu

Pratispardhito yela meeru vyavaharistharu?
Samajam lo prati paurudu cheyalsina kartavyamulu yevi?

That’s English for you if you are in Guntur.

And that’s only two of the questions in the Communicative English paper that Bachelor of Education students faced in some parts of the Andhra Pradesh town.
Over 75 of them responded in like manner, writing answers in Telugu to questions in that language, like those given above that should have read:

How will you approach your opponent and win him over?
What are the basic duties of a citizen towards society?

Acharya Nagarjuna University of Guntur handed out the Telugu translation by mistake during the B.Ed final examinations that got over on Saturday.

The varsity has the practice of providing question papers in Telugu for all subjects other than a student’s main subject and the sciences. It has even allowed answers in Telugu in the Sanskrit and Hindi papers.

“The Telugu translation is given only to help students understand the questions. It was not meant that they should answer in Telugu,” said Suresh Alapati, a lecturer who is involved in the examination process.

The students maintained they did nothing wrong because the paper was in Telugu. “There was no mention of restrictions in the question paper on answering it in Telugu,” said Gopinath Rao, one of those who answered in their mother tongue.

The practice, according to senior faculty member Rammohan Rao, was restricted to non-English subjects.

“The answers in Telugu have defeated the very purpose of their studying Communicative English,” rued a professor of the university.

The subject was started two academic sessions ago for non-English-medium students in all courses so they could write their bio-data and correspondence in English, a senior faculty member told The Telegraph over phone.

The varsity’s other students who received the English version and answered in that language are worried about the fallout of the fiasco.

“We might lose marks along with those who wrote in their mother tongue,” said Prabhakar, a 21-year-old student of the local A.C. College.

The practice, however, is nothing new, according to Vedamurthy Gopalan, a lecturer of the university.

MA English students in most of Andhra’s universities are allowed to write answers in Telugu, he said.

“The practice continues even today to help students from the Telugu medium,” he added.

The B.Ed students have found support in Lok Satta, an NGO that champions people’s issues. It has urged the university to correct the error by passing all students who answered in Telugu.

G.S. RADHAKRISHNA IN HYDERABAD

(நன்றி - The Telegraph)

அடப்போங்கப்பா!

Monday, March 14, 2005

இந்த விசுவை(க்களை) என்ன செய்ய?

நேற்று(ஞாயிறு) மத்யானம் கணவர்கிட்டயிருந்து வலுக்கட்டாயமாக ரிமோட்டை வாங்கி சேனல் மேயும் போது சன் டிவியில் அரட்டை அரங்கம். எப்போ நடந்த நிகழ்ச்சி என்றெல்லாம் தெரியாது.

ஒரு பத்து பனிரெண்டு வயது சிறுவன் சொன்னது " ஆண்கள் தண்ணியைப் போன்றவர்கள். அதில் ஒரு கல் விழுந்தால் கொஞ்சம் அலை அடித்து ஓய்ந்து விடும். ஆனால் பெண்கள் கண்ணாடி போன்றவர்கள். அதில் ஒரு கல் விழுந்தால் உடைந்து விடும். அப்புறம் அவர்களை வாழ்நாள் பூராவும் ஒட்டவைக்க முடியாது". வார்த்தைகள் மாறி இருக்கலாம். சொன்னது என்னவோ இது தான்.

சொல்லி முடித்து அந்த சிறுவன் கைத்தட்டல்களை வாங்கிக் கொண்டு உட்கார்ந்து கொள்ள விசு பக்கத்தில் உட்கார்ந்திருந்த ஒரு சின்னப் பெண்ணைப் பார்த்து, " பார்த்தியாம்மா, நீங்கல்லாம் அம்மா இது செய்யாதே அது செய்யாதேன்னு சொன்னால் பேசாமல் கேட்டுக்கணும். நீங்கல்லாம் கண்ணாடி மாதிரி", என்று சொல்ல அந்த சின்னப் பெண் எழுந்து ஏதோ சொல்ல வர்றதுக்குள்ள நிகழ்ச்சி ஒளிபரப்பு முடிந்து விட்டது.

இது எதுவும் அந்தக் குழந்தைகள் தானே யோசித்து சொன்ன மாதிரி தெரியவில்லை. கைத்தட்டலுக்காக யாரோ சொல்லிக் கொடுத்ததை சொன்ன மாதிரி இருந்தது. ஆனால் இனிமேல் இப்படி யோசிக்கத் தொடங்கும். அந்தப் பெண் குழந்தை வீட்டுக்குப் போய் என்ன யோசித்திருக்கும்? நான் கண்ணாடியா? நான் உடைந்தால் ஒட்டவே முடியாதா என்றா? அந்த சிறுவன் என்ன யோசித்திருப்பான்? என் வாழ்கையின் சலனங்களால் பெரிய பாதிப்பெல்லாம் வரப் போவதில்லை என்றா?

முன்னெல்லாம் இப்படிக் கேட்டால் ரொம்ப கோபம் வரும். அப்புறம் கொஞ்ச நாளா இதையெல்லாம் புறங்கையால் ஒதுக்க முடிந்தது. இன்றைக்கு ஏனோ இதைக் கேட்ட பிறகு பழைய கோபம் சுறுசுறுன்னு ஏறியது தான் மிச்சம்.

பாதி ஞாயிற்றுக் கிழமையை வீணாக்கிய புண்ணியம் விசுவுக்கு.

Sunday, March 06, 2005

Fat Mama வைப் பார்த்தது.

நேற்று காலை செய்தித்தாள் சொல்லி விட்டது மாலை நான்கு மணிக்கு Fat Mama வரப் போவதை. ஞாயிற்றுக் கிழமை மத்தியானத்திற்கே சொந்தமான குட்டித்தூக்கம் போட்டு மூன்றறை மணிக்கு தொலைக்காட்சிப் பெட்டியில் தேடினால்... எல்லா சேனலும் ஒழுங்கா ஒளிபரப்பாகிக் கொண்டிருக்க பிபிசி மட்டும் கரகரவென்று. சத்தமும் தெரியவில்லை... படமும் தெளிவில்லாமல். இன்றைக்கும் இல்லைதான் என்று சலித்துக் கொண்டிருக்கும் போது சட்டென்று சரியாகி செய்திப் படம் தொடங்கியது.

இருநூறு வருடங்களுக்கு முன்னால் காலனி ஆதிக்கம் சென்ற இடங்களில் அவர்களோடு பயணித்து இந்தியா வந்திருக்கிறார்கள். சீன செய்தித் தாள் வெளிவந்திருக்கிறது. வியாபாரமும், கலாச்சார பங்களிப்புமாய் நன்றாகத்தான் இருந்திருக்கிறார்கள். 62 க்குப் பிறகு எல்லாம் மாறி விட்டிருக்கிறது. கூட்டமாக ஏழுநாள் பயணமாக இராஜஸ்தானுக்கு வலுக்கட்டாயமாக கொண்டு போகப் பட்டது... 66 ல் திருப்பி அனுப்பிய போது வெறும் முப்பது ரூபாய் வழிச் செலவுக்கு கொடுத்ததும், இரண்டு மூன்று நாள் பட்டினியாக திரும்பி வந்ததும்... இதையெல்லாம் நம்மால் முழுதாகப் புரிந்து கொள்ள முடியுமா என்றிருக்கிறது.

ஐம்பதாயிரத்துக்கும் அதிகமாயிருந்தவர்கள் கணிசமாகக் குறைந்து தற்போது வெறும் ஐந்தாயிரத்தில் நிற்கும் வருத்தம் அவர்கள் பேச்சில். அடுத்த தலைமுறையில் பெரும்பாலோர் கனடாவிற்கும் அமெரிக்காவிற்கும் குடிபெயர்த்த பிறகு மிஞ்சியது இவர்கள் மட்டும். சீன செய்தித்தாள் படிக்க ஆளில்லாமல் நின்று போய் விட்டது. ஆனாலும் தினமும்(!) கையால் எழுதி காப்பி எடுத்து வாசிக்கப் படும் சீன மொழி செய்தித்தாள் இன்றும் இருக்கிறது. நாலணாவிற்கு ஒரு பெரிய கிண்ணம் நிறைய நூடுல்ஸ¤ம் காய்கறிகளும் கலந்த சூப் செய்து விற்று வந்த Fat Mama வை டொரண்டோ வாழ் இந்திய சீனர்களும் நினைவு வைத்திருக்கிறார்கள். சூப் சுவையை விட Fat Mama வின் அன்பு அவர்கள் பேச்சில் அதிகம் தெரிகிறது.

Women Dragon Dance Group ம், புதுவருடக் கொண்டாட்டங்களுமாய் இன்னும் இதுவே அவர்கள் இடமென்று இருக்கிறார்கள், கொஞ்சம் ஒட்டாமல் பேசினாலும். அரைமணி நேர படத்தில் சொல்ல முடிந்தது ரொம்பக் குறைவே. எல்லாக் குரல்களும் எதிர்மறையாய் இருந்தாலும் ஒருவர், "இன்னும் அதையே நினைத்துக் கொண்டிருக்க முடியாது" என்று சொன்ன போது கொஞ்சம் ஆறுதலாக இருந்தது.

முழு செய்திப் படத்திலும் பேசினவர்கள் எல்லாம் ஐம்பதைக் கடந்தவர்களே. இளைய தலைமுறை சீன இந்தியர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை தெரிந்து கொள்ள ஆர்வமாயிருந்தது.

Saturday, March 05, 2005

The Legend of Fat Mama - ஒரு செய்திப் படம்.

வியாழக்கிழமை காலையில் செய்தித்தாளைத் திறந்து இன்னைக்கு என்ன நடக்கப்போகிறது கொல்கத்தாவில் என்று மேய்ந்து கொண்டிருந்த போது முதல் பக்கத்தில் ஒரு மூலையில் சின்னதாக ஒரு செய்தி: The Legend of Fat Mama என்ற ஒரு செய்திப் படத்தின் ப்ரிவியூ பெங்கால் கிளப்பில் என்று. பெங்கால் கிளப்பில் நான் மெம்பரும் இல்லை. மெம்பராக இருப்பவர் எவரையும் எனக்குத் தெரியவும் தெரியாது. சரி என்று மேலே வாசித்துக் கொண்டு போனதில் மூன்றாவது பக்கத்தில் அதே படத்தைப் பற்றி கொஞ்சம் பெரிதாக ஒரு பெட்டிச் செய்தி. கொல்கத்தாவில் வசிக்கும் சீனர்களைப் பற்றித்தான் அந்த செய்திப் படம் என்று.

Image hosted by Photobucket.com

திரையரங்குகளில், ஷாப்பிங் மால்களில்... சீனர்கள் இங்கே நிறைய கண்ணில் படுகிறார்கள். வெண்ணெய்யை வழித்து பூசினது போல சருமம், கொஞ்சம் குள்ளமாக, பெரும்பாலும் ஒல்லியாக, அநியாயத்துக்கு ஸ்ரெயிட்டா தலைமுடி... சில நேரங்களில் நேப்பாளிகளையும் சீனர்களையும் குழப்பிக் கொள்கிறேனோ என்று தோண்றுகிறது. நேப்பாளி பெண்கள் வகிட்டில் குங்குமம் வைத்துக் கொண்டு துர்கா பூஜையும் சிவராத்திரியும் கொண்டாடிட்டு குழப்பமேயில்லாமல் இருக்கிறார்கள். குழப்பமெல்லாம் எனக்குத்தான்!

போன வாரம் கூட டிபார்ட்மெண்ட் ஸ்டோரில் ஒரு பெண் இங்கே இரண்டு அங்கே இரண்டு என்று தனித்தனி பில் போட்டு சாமான்கள் வாங்கி அந்த பில்களில் ஒன்றை எங்கேயோ தவற விட்டு... ரொம்ப பதட்டமாக... அவசர அவசரமாக அவர் ஏதோ சொன்னது யாருக்கும் புரியவில்லை. அந்த இடத்தில் அவர் அவரை பொருத்திக் கொள்ள சிரமப்படுவது போல தோண்றியது. அவர் சீனராகத்தான் இருக்க வேண்டும்.

ரபீக் ஏலியாஸ் (Rafeeq Ellias) என்பவரால் இயக்கப் பட்ட இந்த செய்திப் படம் கொல்கத்தாவில் படமாக்கப் பட்டுள்ளது. 60-70 களில் இங்கே வசித்த, சீன உணவுகளை கொல்கத்தா வாசிகளுக்கு அறிமுகம் செய்த ஒரு பெண்மணியைப் பற்றியது. (அப்படியென்றால் அப்போதிருந்து தான் சீன உணவுகள் இங்கே பிரபலமா? யாரைப் பார்த்தாலும் chowmein என்று உண்ணப்படும் நூடுல்ஸ் அப்போதுதான் அறிமுகமானதா?!) சீனர்களின் புது வருடக் கொண்டாட்டங்களோடு தொடங்கும் படம் அதிலேயே முடிவதாக சொல்லி... கடைசியில் BBC ல் சனிக்கிழமை மதியம் இரண்டு மணிக்கு ஒளிபரப்பாகும் என்று வாசித்ததும் அட! பரவாயில்லையே... இன்னைக்கு முடியாவிட்டாலும் சனிக்கிழமையே பார்க்கக் கிடைக்கும் என்றிருந்தது. பார்த்து விட்டு அதை ப்ளாகிலும் எழுதுவதாக இருந்தது... ஏனோ இன்று ஒளிபரப்பாகவில்லை. நாளை மார்ச் 6 மாலை நான்கு மணிக்கு மறுஒளிபரப்பு என்றிருக்கிறது. அப்போதாவது வருகிறதா என்று பார்க்க வேண்டும்!