Tuesday, March 22, 2005

ஆகாசத்தில் ஒரு பஸ் சவாரி

திடீர் பயணம். கணவருக்கு நேரமில்லை. கூட நான்(அதுதான் முக்கிய காரணம். அவருடைய பயணச்செலவை அலுவலகம் பார்த்துக் கொள்ளும். எனக்கு?!). அதனால் இந்த முறை பயணம் Air Deccan ல். மற்ற ஏர்லைன்ஸில் பத்தாயிரத்து சில்லரை பயணம் இதில் முவாயிரத்து ஐநூறு மட்டுமே. கட்டணம் குறைவு என்று சொன்னதுமே முதல் யோசனை பாதுகாப்பாக இருக்குமா? என்று தான். ஏற்கனவே பயணம் செய்தவர்கள் தந்த ஆசுவாசத்தில் கிளம்பியாயிற்று.

முதல் வித்தியாசமாய் உணர்ந்தது பயணச்சீட்டைப் பார்த்தது தான். ஒற்றைத்தாள் தான் பயணச்சீட்டு. உள்ளே நுழையும் போதே ஐடென்டிபிகேஷன் ப்ரூப் பார்த்து தான் அனுப்புகிறார்கள். செக் இன் செய்யும் வரை பெரிதாக எந்த மாற்றமும் இல்லை. போர்டிங் பாஸில் இல்லாத இருக்கை எண் எல்லா விஷமமும் செய்தது. விமானத்திற்குள் நுழைய அழைப்பு வந்ததும் தடாலென்று விரையும் கூட்டம்... வரிசையில் முன்னால் செல்ல காட்டும் அவசரம்... பஸ் ஸ்டேண்ட் ஞாபகம் வந்தது. உள்ளே நுழைந்த பிறகு இன்னும் கொஞ்சம் அலைமோதல். சீட் பிடிக்க. முன் வரிசையில் ஒரு கைக்குட்டை கூட போடப் பட்டிருந்தது. எல்லா களேபரங்களையும் விமானப் பணிப்பெண்கள் ஒரு நக்கலான சிரிப்போடு வேடிக்கை பார்த்துக் கொண்டு.

ஏறியதும் நடக்கும் உபசரணைகள் எதுவும் கிடையாது. உட்கார்ந்து கொண்டாயா? ரொம்ப சந்தோஷம். குறுக்க நெடுக்க நடக்காதே... உன் தலைகளை எண்ண வேண்டும். உன் இடத்தில் உட்கார். நேராக உட்கார். பெல்ட் போடு. தண்ணியா? அதெல்லாம் பறக்கத் தொடங்கினப்பறம் தான். வழக்கமான பெல்ட் போட, கழட்ட, பாதுகாப்பு எச்சரிக்கைகள்... எல்லாம் முடிந்து பறக்கத் தொடங்கியதும் லேசாக படபடக்க ஆரம்பித்து அடங்கியது.

பெல்டைக் கழட்டி விட்டுக்கோன்னு சொன்னது தான் மாயம். முன்னால் உட்கார்ந்து ஏற்கனவே அலம்பல் பண்ணிக் கொண்டிருந்த மார்வாடிக் குடும்பம் சாப்பாட்டு மூட்டையை பிரிக்க ஆரம்பித்து விட்டது. பூரி பாஜி வாசம் சுற்றியும் பரவ, கருமமே கண்ணாயினராய் தொடர்ந்தனர். கொஞ்ச நேரத்தில் பணிப்பெண்கள் வழக்கமான சாப்பாட்டு வாகனத்தோடு. என்ன... இங்கே கைல காசு... வாயில நீ கேட்டது. அதுவும் அவர்கள் வைத்திருக்கும் நாலைந்து சமாச்சாரங்களில் ஒன்று. விலையெல்லாம் தேவலாம். காப்பித்தூளும் சக்கரையும் பால் பவுடரும் கலந்து ரெடிமேடாக கிடைக்கும் ஒரு பொட்டலமும் சுடுநீருமாய் கொடுப்பதைக் கலந்து காப்பியாக்கிக் குடித்துக் கொள்ள பத்து ரூபாய். dry சமோஸா, cup o noodles என்று எல்லாம் பக்கா ரெடிமேட் சமாச்சாரங்கள்.

மணியடித்துக் கூப்பிட்டால்... யாரும் வர மாட்டார்கள். அவர்களாக கடக்கும் போது கூப்பிட்டு எதுவும் கேட்கலாம். அடுத்த அரைமணி நேரத்தில் பறந்து கொண்டே ஷாப்பிங் செய்ய ஒரு அழைப்பு. இன்னொரு ட்ராலியை இழுத்துக் கொண்டு எதாவது வேண்டுமா என்று கேட்டுக் கொண்டு. என்ன விற்கிறார்கள் என்றே தெரியவில்லை. கடனே என்று ஒரே தள்ளில் முடித்துக் கொண்டார்கள். ஆங்... சொல்ல மறந்து விட்டேன். எல்லாவற்றிற்கும் முதலில்... அங்கங்கே மேலிருந்து ஒரு சின்ன டெலிவிஷன் ஸ்கிரீன் இறங்கியது. முப்பது ரூபாய்க்கு ஹெட்போன் வாங்கிக் களிக்கலாம் என்று. யாரும் வாங்கியது போல தெரியவில்லை. அநியாயத்திற்கு போரடிக்கும் நிகழ்ச்சி சத்தமில்லாமல் ஓடிக் கொண்டிருந்தது.

வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்ததில் இரண்டு மணி நேரம் ஓடிப் போய்விட்டது. பூவாட்டம் தரையிரங்கிய விமானம் எல்லா பயத்தையும் விரட்டி விட்டிருந்தது. மிகக்குறைந்த கட்டணம்... இருபத்தி ஒன்பது மணி நேர ரயில் பயணத்தை இரண்டு மணி நேரத்தில் முடித்துக் கொடுத்தது... ம்ம்ம்... திருப்தி.

திரும்பி அதே Air Deccan ல் வரும் போது பழகிப் போயிருந்தது!

2 comments:

Anonymous said...

நிர்மலா,

யாரிடமாவது இந்த Air Deccan நேரடி அனுபவத்தைக் கேட்கவேண்டும் என்று எண்ணி இருந்தேன். கேட்காமலே கொடுத்துவிட்டீர்கள்.

இந்தக் கட்டுரையை இன்னும் கொஞ்சம் மெருகேற்றினால் பத்திரிகையில் வெளியாக வாய்ப்பு உண்டே.

posted by: KVR

Anonymous said...

ராஜா... இதுதானே வேண்டாங்கிறது. நான் ஒண்ணு அனுப்ப... அவங்க எடிட் பண்ணறேன்னு எதாவது போட்டு வைக்க... வீட்டுக்கு ஆட்டோ வரவைக்கவா?!

posted by: