Thursday, October 03, 2013

கோலாலம்பூர்!


 சென்னை விமான நிலையத்துக்கு மலேசியா வெளிநாடுங்கற நினைப்பெல்லாம் இல்லை போல. பழைய டொண்டனக்கா இண்டர்னேஷனல் ஏர்போர்ட்டை தான் பயன்படுத்துகிறார்கள். அழுது வடியுது.

மலேசியா வெயிலடிக்காமல் லேசான தூறலோடும் அங்கங்கே நல்ல மழையோடும் வரவேற்றது. பத்தடிக்கு கொட்டும் மழையும் காய்ந்த ரோடும் மாறி மாறி வந்தது.

முதல் நாள் காலையில் சாப்பிட்ட மெக் டி பர்கரில் லேசான மீன் வாடை அடித்தது. காலங்காத்தால பர்கர்... கொடுமை!

சைனா டவுன் ட்யூப்ளிகேட் சாமான்களால் நிறைந்து கிடக்கிறது. மற்றொரு பக்கம் ரோட்டோர உணவகங்கள். நிறைய வழவழ கொழ கொழா சமாச்சாரங்கள் கண்ணில் பட்டது.

நடுவிலே ஒரு மாரியம்மன் கோவில். நல்ல நாதஸ்வர சகிதம் மாலை பூஜை. புடவை கட்டின ஒரு மலேய பெண்மனி வீட்டிலிருந்து நெய் விளக்கு கொண்டு வந்து சிரத்தையாக ஏற்றிக் கொண்டிருந்தார். இந்தியாவில் பார்க்கும் பக்திக்கும் மலேசியாவில் பார்த்ததற்கும் ஏதோ வித்தியாசம் தெரிந்தது. சரியாகச் சொல்லுமளவுக்கு கவனிக்க நேரமிருக்கவில்லை.

எதிர்த்தார்ப்போல இருந்த உணவகத்தில் மாலை ஐந்து மணிக்கு நல்ல சோறும் மீனும் கிடைக்கிறது. சாப்பாட்டை சோறு என்று சொல்லி நிறைய இடத்தில் கேட்டேன். சின்ன வயசில் எங்க வீட்டிலும் சோறு என்றுதான் சொல்லிக் கொண்டிருந்த ஞாபகம் வந்தது!

கொஞ்ச நாள் முந்தின சென்னை ஆட்டோ ட்ரைவர்களை போல ரெட் டாக்ஸி கொள்ளை.

பெட்ரோனாஸ் ட்வின் டவர்ஸ் ராத்திரியிலும் அழகு. பகலிலும். எப்போ பார்த்தாலும் அம்மாடியோன்னு இருக்கு. மேல போக ஒரு ஆளுக்கு 80 ரிங்கெட் ஜாஸ்தி தான்னாலும் கட்டாயம் பார்க்க வேண்டியது.

இருபத்தி நாலு மணி நேரத்துக்கு செல்லுபடியாகும் hop on hop off city tour மொத்த கோலாலம்பூரையும் இரண்டரை மணியிலிருந்து மூன்று மணிநேரம் சுத்தி வருது. சென்னைல ஏன் இந்தியாவிலயே ஏன் எங்கயும் இந்த மாதிரி சர்வீஸ் இல்லை?!

ஆகப்பெரிய பெவிலியன் மால் ஃபுட் கோர்ட்டில் அத்தனை கடல் வாழ் ஜந்துவும் கிடைக்கிறது. மொத்த ஏரியாவுமே மீன் வாசனை. அத்தனையிலும் எதை சாப்பிடவுமே தைரியம் வரவில்லை. வெஜிடேரியன்கள் பாட்டை நினைத்தால் ஐயோ என்றிருந்தது.

Flat noodles with fish balls!



மால்களுக்குள் நுழைந்து விட்டால் லண்டனும் ஸ்பெயினும் கேயெல்லும் ஒன்று போலவே இருக்கிறது. அதே ப்ராண்டட் கடைகள். அதே சாமான்கள். எல்லா பெரு நகரங்களும் ஒன்று போலவே.

அதே மாலில் ஒரு குங்குமப் போட்டுக்காரர் நின்ற வாக்கில் ஜோசியம் பார்க்கக் கூப்பிட்டார். பின்னாலிருந்து கேரளாக்காரன் என்ற தூண்டில் கூட விழுந்தது!

தமிழ்க்காரர்கள் தனியாக தெரிகிறார்கள். கொஞ்சம் raw வாக. A fine balance of adaptability and retaining identity is missing.

மத இன வேறுபாடுகளை பொருட்படுத்தாமல் கலந்த வாழ்க்கையாயிருக்கிறது.

தூன் சம்பந்தன் தெரியுமா என்று கேட்ட டாக்ஸிகாரர் பேச்சு 'கெடுத்திட்டியே ...' டோன்ல இருந்தது. விவரங்களுக்கு http://thulasidhalam.blogspot.in/2013/08/2.html

வெண்ணை கால்கள் தெரிய கையகல ட்ரவுஸரும் டீ ஷர்ட்டும் அணிந்த இளம்பெண்கள் தெருவில் மால்களில் பஸ்களில் ரேப் பயமின்றி இயல்பாக சுற்றுகிறார்கள். காய்ந்து கிடக்கறேன் காமிச்சுடாதேங்கற கோஷத்திற்கும் இந்த மனநிலைக்கும் நடுவிலே இருக்கும் இந்த பெரிய பள்ளத்தை இந்திய ஆண் எப்போ எப்படி தாண்டப்போறான்னு நினைச்சா கவலையாத்தான் இருக்கு.

Sunday, May 12, 2013

Postsecret.com

ரகசியங்கள் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம் - அதிர்ச்சியூட்டுபவையாக, சிறுபிள்ளைத்தனமாக, உணர்வுப்பூர்வமாக... என்று தன் வலைத்தளத்தை அறிமுகப்ப்டுத்துகையில் ப்ராங்க் சொல்கிறார். 2004 ம் ஆண்டு நவம்பர் மாதம் 3000 போஸ்ட் கார்டுகளை வாஷிங்டன் நகர தெருக்களில் விநியோகம் செய்த போது அது இவ்வளவு தூரம் விரிந்து பரவும் என்று யூகிக்கவில்லை என்கிறார்.

ஒரு பக்கம் காலியாகவும் மற்ற பக்கத்தில் அவருடைய விலாசமும் எளிய விதிமுறைகளோடும் கொடுத்த அட்டைகள். இன்றைக்கு வெவ்வேறு வடிவம் பெற்று உலகின் மூலை முடுக்குகளில் இருந்தெல்லாம் வந்து சேர்ந்த பெயர் குறிப்பிடப்படாத அரை மில்லியன் ரகசியங்களைப் பகிர்ந்து கொள்ளும் வலைத்தளம். 

ரகசியங்களை வாசிக்கும் போது முகமும் பெயருமற்ற அத்தனை மனிதர்களோடும் வெவ்வேறான உணர்ச்சிகளால் தொடர்ப்பு கொள்ள முடிவது நிஜம். மெல்லிய முறுவல், சிறு அதிர்வு, சோகம் எதற்கும் குறைவில்லை. தன்னை அழுத்தி தொல்லை கொடுத்துக் கொண்டிருந்த ரகசியங்களில் இருந்து விடுபடத்தான் இப்படி ஒன்றை ஆரம்பித்ததாக சொல்லும் இவருக்கு அரை மில்லியன் அனுபவங்கள்!

கைக்கெட்டும் தூரத்தில் இருக்கும் மனிதர்களை அறிந்து கொள்ள முடிவதில்லை, எங்கோ தொலைதூரத்தில் இருக்கும் யாரோவின் ரகசியங்களை அறிய முடியவது... நல்லதா கெட்டதா?!


 ஜன்னல் பகுதி - குங்குமம் தோழி, மார்ச் 2013 இதழுக்காக எழுதியது.

ஒரு சூத்திரனின் கதை - ஏ.என்.சட்டநாதன்.




பதிப்பாசிரியர்: உத்தரா நடராஜன். தமிழில்: கே. முரளிதரன், ஆ. திருநீலகண்டன்.

வாழ்க்கை குறிப்புகள் என்பது ஒரு தனி மனிதனின் வாழ்க்கையைத் தாண்டி அந்த காலகட்டத்தை பிரதிபலிப்பதாலே அது குறிப்பிடத்தக்க ஒன்றாகி விடுகின்றது. நம் கண் முன்னே நடந்து கொண்டிருக்கும், கொண்டிருந்த அத்தைகள், பாட்டிகள் என்ற ஒவ்வொரு சாதாரண மனிதர்களின் வாழ்க்கைகள் எல்லாமே ஒரு அனுபவம்.  முழுமையாக வெளிப்படாத, குடும்பத்தார்களின் நினைவில் மட்டுமே தங்கி மறந்து போன நீண்ட காவியங்கள். அதனாலேயே கைகளில் சிக்கும் இது போன்ற தடைகள் தாண்டி வந்தவர்களின் குறிப்புகள் நிச்சயம் ஒரு பொக்கிஷம்.
சட்டநாதன் அவர்களின் இந்த குறிப்பு பள்ளி மாணவர்கள் பயன்படுத்தும் கோடு போட்ட நோட்டு புத்தகத்தில்,  ஆங்கிலத்தில் எழுதப்பட்ட, முழுமை பெறாத குறிப்புகள். கடும் பொருளாதார சிக்கல்களுக்கு நடுவில் ஒரு பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் இருந்து சிரமப்பட்டு பெற்ற கல்வியும் அது கொண்டு சென்ற தூரங்களும் ஆச்சர்யமூட்டுபவை. புத்தகத்தின் தலைப்பும் அட்டைப்படமும் கொடுக்கும் தூண்டுதலைக் கடந்து ஒரு வாழ்க்கை குறிப்பாக வாசிக்க முடிந்தது.

தமிழ்நாட்டின் பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் தலைவராக அவர் சமர்ப்பித்த அறிக்கை அவருடைய பொது வாழ்வின் குறிப்பிடத்தக்க பங்களிப்பு.

புத்தகத்தின் சில வரிகள்:

'அந்தப் பெரிய வீட்டின் ஒட்டு மொத்தக் குரல் அவள் தான். இளமைக் காலத்தில் இன்னும் அழகாக இருந்திருக்க வேண்டும் என்று நான் அடிக்கடி நினைப்பேன். ஆனால் ஆழமான மனவருத்தங்களை, நம்பிக்கைத் துரோகங்களை சுமக்கும் ஒரு பெண்ணாகவே அவள் என் நினைவுகளில் இருக்கிறாள்.'

'அவ்வப்போது எனக்கு சோற்றுடன் கொஞ்சம் மோர் ஊற்றுவார்கள். என் தகப்பனாரோ பாட்டியோ சோற்றில் மோர் ஊற்றிச் சாப்பிட்டார்களா என்று தெரியவில்லை.'
'உதவி கேட்டு அடுத்தவர் வீட்டு வாசலில் நின்றவர்களால் தான் நான் அடைந்த அவமானத்தையும் விரக்தியையும் உணர முடியும். யாராலும் கவனிக்கப் படாமல் பல மணி நேரம் நிற்க வேண்டும். காலும் மனமும் வலிக்க ஆரம்பிக்கும் நேரத்தில் 'நான் திரும்பக் கூப்பிடுகிறேன்' என்றோ 'இன்னொரு சகோதரனிடம் சென்று கேள்' என்றோ சொல்லப்படும்.'

'இறுதியாண்டின் மத்தியில் என் நீளக் குடுமியை வெட்டி, கிராப் வைத்துக் கொண்டு வகுப்புக்குள் நுழைந்தேன். மாணவர்கள் மேஜையைத் தட்டியும் கூச்சலிட்டும் வரவேற்றார்கள்.'

'நான் நன்றாக படித்திருப்பதால் நான் பிராமணனாகத்தான் இருக்க வேண்டும் என்று நினைத்ததாக அவர் சொன்னார். ஆனர்ஸ் முதல் வகுப்பு ஒன்றும் பிராமணர்களின் தனி உரிமை இல்லை என்று பதில் சொன்னேன்.'

'இவர்களில் பலர் பிரம்மஞானவாதிகள். பொதுவாக சாதி பாகுபாடு பார்க்காதவர்கள். இந்த சந்திப்பில் நடந்த விஷயங்கள் அனைத்தும் காது, மூக்கு சேர்த்து கல்லூரி விடுதிகளிலும் நகரிலிருக்கும் உணவு விடுதிகளிலும் பரப்பப்பட்டன. எனக்கு ஒரு கதாநாயகனுக்குரிய அந்தஸ்து கிடைத்தது.'

முழுமை பெறாத இந்த குறிப்புகளோடு சென்னை பல்கலைக்கழகத்தில் 1981ல் பெரியார் ஈ.வெ.ராமசாமி நினைவு அறக்கட்டளை சொற்பொழிவுகளை இணைத்ததன் மூலம் வேறுவிதமான ஒரு முழுமையை அளித்திருக்கிறார், பதிப்பாசிரியரும் சட்டநாதனின் பேத்தியுமான உத்தரா நடராஜன்.


ஜன்னல் பகுதி - குங்குமம் தோழி, மார்ச் 2013 இதழுக்காக எழுதியது.

டொலெடோ, ஸ்பெயின்.



நவீனமான மாட்ரிட் நகரிலிருந்து எழுபது கிலோமீட்டர் தொலைவிலில் உள்ளது டொலெடோ என்ற பழமையான நகரம். குறைந்த ஜனத்தொகை, மிக‌ குறுகலான தெருக்கள். வாகனம் எதிரில் வரும் போது ஒற்றை வரிசையில் சுவரோடு சாய்ந்து நின்று வழிவிடச் சொல்லி முதலிலேயே அறிவுறுத்தப்பட்டோம். அதே போல் நிற்கவும் வேண்டியிருந்தது! மடிந்து மடிந்து செல்லும் இந்த பாதைகளில் தொலைந்து போவதும் எளிது. திரும்பின பக்கமெல்லாம் உயரமான கல் கட்டிடங்கள், தேவாலயங்கள். டொலெடோ ஒரு மத நல்லிணக்கமான பகுதியாக இருந்திருக்கிறது. கலைகளில் சிறந்து செழிப்பான நகரமாய்.

அங்கிருந்த ஒரு தேவாலயத்தில் கேள்விப்பட்ட குறிப்பு - அறுபது வயதான ஆண்மையில்லாத மன்னருடைய இளம் மனைவி கர்ப்பமுற்றதும் நாட்டில் குழப்பம் ஏற்பட்டது. மக்கள் இளம் மனைவி பக்கமும் மன்னரது சகோதரி பக்கமுமாக ரெண்டு பட, கடைசியில் ராஜ்ஜியம் சகோதரி கையில் போய் சேர்ந்தது. சகோத‌ரியின் குறிப்பிடத்தக்க காரியங்களில் ஒன்று கொலம்பஸூக்கு பொருளுதவி அளித்து கடல் பயணம் மேற்கொள்ள உதவியது. அவரது பயணத்தில் அமெரிக்கா கண்டுபிடிக்கப்பட ஸ்பானியர்கள் அமெரிக்காவிற்கு குடிபெயரத் தொடங்கினர். அப்படிப் பெயர்ந்த‌ குடும்பங்கள் டொலெடோ நக‌ரின் அவர்களது வீட்டு சாவியையும் கொண்டு சென்றிருந்தனர். பிற்காலத்தில் பொருளீட்டிக் கொண்டு திரும்பி விடும் எண்ணத்திலாக இருந்திருக்கலாம். சாவிகளைக் கண்டெடுத்த மூன்றாம் நான்காம் தலைமுறை மக்கள் வீடுகளை தேடி வந்ததாக சொல்லும் கதைகளை கேட்கும் போது அதன் சாத்தியங்கள் மறந்து ஒரு கற்பனை விரிந்தது.

ஜன்னல் பகுதி - குங்குமம் தோழி, மார்ச் 2013 இதழுக்காக எழுதியது.

Perfume - the story of a murderer

கடுமையான தண்டனை வழங்க மக்கள் முன்னால் கொண்டு வந்து நிறுத்தப்படும் ஒரு குற்றவாளியின் கதையைச் சொல்லத் தொடங்கும் குரலோடு பயணிக்கிறோம். பாரிஸ் நகரின் மீன் மார்க்கெட்டில் ஒரு மீன்காரி கழிவுகளுக்கு நடுவில் பெற்றுப் போடும் குழந்தை (Jean-Baptiste Grenouille) க்ருனலே பிறந்ததுமே தன்னைச் சுற்றியுள்ள வாசனைகளை ஒரு வேட்கையோடு உள் வாங்கத் தொடங்குகிறது. பிள்ளையைக் கொல்லப் பார்த்தாள் என்று பழியோடு அம்மா தூக்கு மேடை ஏற அனாதை ஆசிரமம் போய் சேர்கிறான்.  வளரும் போது அவன் பேசும் மொழி அவனுக்கு தெரிந்த வாசனைகளை குறிப்பிட போதுமான வார்த்தைகளை கொண்டில்லாததாக உணர்கிறான். ஒவ்வொரு வாசனையையும் துல்லியமாக பிரித்தறியும் அதி அற்புதமான நாசியோடு பிறந்திருப்பதையும் அறிகிறான்.

பதிமூன்று வயதானதும் ஆசிரமத்திலிருந்து வெளியே அனுப்பப்படும் க்ருனலே தோல் பதனிடும் தொழிற்சாலை சேர்கிறான். கடுமையான வேலைகளில் இன்னும் சில வருடங்கள் கழிகின்றது. முதல் முதலாக நகரத்துக்குள் செல்ல வாய்ப்பு கிடைக்கும் ஒரு நாளில் ஒரு அழகான பெண்ணின் வாசனையைத் தொடர்ந்து பின் செல்லும் அவன் கையால் தவறுதலாக அந்தப் பெண் இறந்து போகிறாள். ஒரு சந்தர்ப்பத்தில் நகரின் குறிப்பிட்ட வாசனை தயாரிப்பவருக்கு தோல் கொடுக்க போகும் போது அவர் கண்டுபிடிக்க சிரமப்பட்ட ஒரு வாசனை தைலத்தை அவன் நொடிகளில் தயாரித்துக் கொடுக்கிறான். அவனுடைய இடம் மாறுகிறது. அவனால் புதுப்புது தைலம் தயாரிக்கப் பட அதற்கு பதிலாக எந்த ஒரு பொருளின் வாசனையையும் கைப்பற்றும் வித்தையைக் கேட்கிறான்.   அவரிடமிருந்து கடிதம் பெற்று தொலைதூர நகருக்கு பயணிக்கிறான். அங்கே கற்ற வித்தையை வைத்து பெண்களின் உடல் வாசனையை பிரித்தெடுக்க தொடங்குகிறான், ஒவ்வொரு பெண்ணையும் கொன்று.  அவனால் உருவாக்கப்படும் உலகின் மிகச் சிறந்த வாசனை தைலமும் அது நிகழ்த்தும் மாயமுமாய் கதை முடிகிறது.
திரைப்படம் கூடுதல் சிறப்பாவது அதன் அற்புதமான ஒளியாக்கத்தினால். வெறுப்பூட்டாத கொலைகாரன்.

 ஜன்னல் - குங்குமம் தோழி, மார்ச் 2013 இதழுக்காக எழுதியது.

Saturday, March 16, 2013

காசி - 4

கும்பமேளா தந்த ஏமாற்றத்தில் அன்றைக்கு வேறெங்கும் போகப் போவதில்லை, அறையிலேயே இருக்கப் போகிறேன் என்று இருந்தேன். ஒரு மணி நேரத்திற்கு மேல் இருப்பு கொள்ளவில்லை. ஏற்கனவே மணி ஐந்தாகிவிட்டிருந்தது. தெருவெல்லாம் நிறைத்துக் கொண்டு வாகனங்கள். மொபைல் எண் கொடுத்திருந்த இரண்டு ஆட்டோ ட்ரைவர்களும் எங்கேயோ மாட்டிக் கொண்டிருப்பதாக சொல்லிவிட்டார்கள். அந்தக் கூட்டத்தில் ரிக்ஷாவில் ஏற என்னால் ஆகாது என்றிருந்தது. ஆனால் அதில் உட்கார்ந்து போகும் போது நல்ல உயரத்தில், தேரில் போவது போல இருந்தது என்பது நிஜம்! ஊரின் மொத்த ஜனமும் ரிஷாவில் தான் போகிறார்கள். அந்தக் குட்டி சீட்டில் அப்பா, அம்மா, அப்பா மடியில் ஒரு பதினெட்டு வயது பெண்... இப்படியெல்லாம் ஆச்சரியப்படுத்தினாலும், வேறு வழியே இல்லாதவரை, நானில்லை!

ஆக கேதார் காட் போய் நீளமாக நடக்கலாம் என்றிருந்தது முடியாமல் போனது. சிவராத்திரியை முன்னிட்டு ஆட்டோக்களை இன்னும் தூரத்திலேயே நிறுத்தி விட்டார்கள். அதற்கு கொஞ்சம் தள்ளி ரிக்ஷாக்களும். வேறு வழியில்லாமல் ஒரு ஆட்டோ, பின் ஒரு ரிக்ஷா மறுபடியும் தசாஸ்வமேத் காட். இன்றைக்கு கோவிக்கு போகும் வரிசை இன்னும் நீளமாய், ஏகப்பட்ட அடிதடிகளுமாய். தெருவெல்லாம் அடைத்துக் கொண்டு போகும் மக்கள். காட் ஆறு மணிக்கே ஆரத்திக்கு தயாராகி விட்டது. எங்கேயும் நிற்கக் கூட இடமில்லை. நீளத்திற்கு பிச்சைக்காரர்கள் துணி விரித்து காத்திருந்தார்கள். ஒரு பை நிறைய அரிசி கொண்டு வந்து ஒரொரு கையாக போகிற போக்கில் அந்த துணி விரிப்பில் கொட்டிப் போகிறார்கள். ஒரு இடத்தில் அன்னதானத்திற்கு ஒரு பெரிய வரிசை. இந்த பிச்சைக்காரர்கள் யாரும் ஏனோ அந்த வரிசைக்கு போகவில்லை!

அந்த இடம் கொஞ்சம் கொஞ்சமாக மக்களால் நிர‌ம்புவதை உணர முடிந்தது. மெல்ல நகர்ந்து அதே மணிகர்னிகா காட், அதே குறுகல் சந்து, அதே சௌக். வழியெல்லாம் கூட்டம் கூட்டமாக எல்லா விதமான வாகன‌ங்களிலும் மக்கள் வந்து சேர்ந்து கொண்டே இருந்தனர். அத்தனை கூட்டத்தை அந்த நெரிசலான ஊரில்... யோசிக்க பயமாக இருந்ததில் மிகுந்த சிரமப்பட்டு அறைக்குத் திரும்பினேன்.

மறுநாள் காலையில் விழிப்பு வந்த போது நேற்றய கூட்டம் தந்த அனுபவத்தில் இனி எங்கேயும் போகப் போவதில்லை. மத்யானம் ஊருக்கு கிளம்பும் வரை வேறெந்த சிந்தனையும் வரக்கூடாது என்றிருந்தேன். எட்டு மணிக்கு  ஜன்னல் திரை விலக்கிப் பார்த்த போது நேற்றய களேபரத்தின் சுவடு கூட இல்லை! சொல்லப் போனால் வழக்கமாக அந்த நேரத்தில் இருக்கும் சலசலப்பு கூட இல்லை. இப்படிக் கிளம்பி இங்கே போகலாமா, இல்லை அப்படிக் கிளம்பி அங்கே போகலாமா, one last time to ghat என்று ஓடின சிந்தனைகளை அடக்குவது சிரமமாக இருந்தது. ஆனாலும் போகவில்லை!

அந்த நேரத்தில் கவனத்தை மாற்ற உட்கார்ந்து பயணக்குறிப்புகள் எழுதிக் கொண்டிருந்த போது லோக்கல் டீவியில் சிவராத்திரி நிகழ்ச்சிகளை தொகுத்திருந்தார்கள்.

ராத்திரி அலஹாபாத்தில் பெரும் கூட்டமாக கங்கையில் மூழ்கியிருக்கிறார்கள். ஒரு இளம் வயது நிர்வாண சாமியார் சிலம்பு சுற்றிக் கொண்டிருந்தார். ஒருவர் கையில் வைத்திருந்த பேப்பரைப் பார்த்து மந்திரம் சொல்லிக் கொண்டே இன்னொரு கையால் கங்கை பூஜை செய்து கொண்டிருந்தார். சிரத்தையாக வழிபாடு செய்து முழுக்கு போட்டுக் கொண்டிருந்த வயதான தம்பதி, ஒரு கட்டத்தில் அவர் அந்த அம்மாள் மேல் தண்ணீர் வீசி விளையாட அந்த அம்மாள் அவருடைய முதுகைத் தடவித் தடவிக் குளிப்பாட்ட... Bliss!

இந்த பயணத்தில் செய்யாமல் விட்டது... முதல் நாளே முயற்சி செய்திருக்க வேண்டும், விட்டதால் காசி விஸ்வநாதரை இந்த முறை பார்க்க முடியவில்லை. கங்கையில் முழுக்கு போடவில்லை. சங்கமத்திலும். வேறெந்த கோவிலுக்கும் போகவில்லை. எந்த நாகா பாபாவையும் கும்பிடவில்லை. இது ஆன்மீகப் பயணமில்லை. என்னைத் திரும்பத் திரும்ப இழுத்தது கங்கைக் கரைதான். தனியாக போனதில் பெரிய சௌகரியமாக அதை உணர்ந்தேன். யாருக்காகவும் எதையும் செய்ய வேண்டியிருக்கவில்லை. பாஷையும் கொஞ்சம் ஊர் அறிமுகமும் இருந்ததால் எந்த சிரமமும் இருக்கவில்லை. அத்தனை கூட்டத்திலும் என்னுடைய பையிலிருந்து ஒரு பத்து ரூபாய் நோட்டு கூட காணாமல் போகவில்லை. வழிப்பறி, சீண்டல் எதுவுமில்லை. சிவராத்திரி கூட்டத்தில் தவறுதலாக மேலே இடித்ததற்கு ' மாஃப் கரோ மாயி' என்று சொன்னவரின் முகத்தைக் கூட கவனிக்க முடியவில்லை. முதல் முறை என்பதால் காலை நாலு மணிக்கு கங்கையைப் பார்க்க வேண்டும் என்று நினைத்ததையும் அந்த சிவராத்திரி முழு ராத்திரியும் கங்கை கரையிலேயே இருக்க வேண்டும் என்று நினைத்ததையும் செய்ய முடியவில்லை.  I had to survive, to tell this tale! அடுத்த முறை இந்த வசதிகளையெல்லாம் பொருட்படுத்தாமல் கங்கைக்கரையிலேயே இருக்கும் தங்கும் விடுதிகளில் தங்க வேண்டும். காலையில் எழுந்து ஜன்னல் திரையை விலக்கினால் கங்கை தெரிய வேண்டும்!

 

Friday, March 15, 2013

காசி - 3

வந்து இறங்கிய அன்றே அலஹாபாத்தில் கும்பமேளா நடந்து கொண்டிருப்பதாக தெரிந்தது. அது எப்போதோ முடிந்திருக்கும் என்று நினைத்திருந்தேன். ஆனந்த விகடன் கட்டுரை ஞாபகம் வந்து ஆசையாகவும் இருந்தது, கூடவே அந்தக் கூட்டத்தை நினைத்து பயமாகவும் இருந்தது. வழக்கமாக இத்தனை கூட்டம் சேரும் இடங்களில் நடக்கும் அசம்பாவிதங்கள், மேலும் ஏற்கனவே இங்கே ஒன்று ஆகிவிட்டிருந்தது. ஆனாலும் டாக்ஸிக்கு சொல்லி வைத்திருந்தேன்.

விசாரித்தவரையில் பயமொன்றும் இல்லை என்று தெரிந்தது. மூன்றாவது நாள் காலை எட்டு மணிக்கு கிளம்பினேன். காசியிலிருந்து 124 கிலோமீட்டர் தூரம். டாக்ஸி ட்ரைவர் நானறிந்த வரையில் ஒரு அக்மார்க் உத்திரபிரதேச ஆண்.  ஐந்தடிக்கு குறைவான உயரம். உலர்ந்த வற்றல் போல் முறுக்கின உடம்பு. தனியாகப் போகிறேன் என்பதே அவருக்குப் பிடிக்கவில்லை. ஆனாலும் அவருக்கு வேறு வழியிருக்கவில்லை. கோவிலுக்குப் போகிறேனா, சங்கமத்தில் குளிக்க போகிறேனா என்ற ரெண்டு கேள்விக்கும் இல்லை என்ற பின் அவருக்கு பேச எதுவும் இருக்கவில்லை. வழியில் விந்தியாசல் என்ற இடத்தில் ஒரு கோவில் இருக்கிறது என்று சொல்லி விட்டு நீங்க தான் கோவிலுக்குப் போகப் போறதில்லையே அப்ப வேண்டாமென்று விட்டார்.

காசியில் முதல் நாளே கவனித்தது, எல்லா வண்டிகளும் ஹாரனை அலற விட்டுக் கொண்டு தான் ஓட்டுகிறார்கள். இரண்டு சக்கர வாகனங்களுக்கு கூட லாரி போன்ற ஹார்ன். ஆனாலும் யாரும் அதை சட்டை செய்வதில்லை. வழி விட இடமில்லாத இடத்திலும் ஹார்ன் அடித்தால் என்ன செய்வது? ரெண்டாவது நாள் எனக்கும் அந்த எருமை மாட்டுத்தனம் வந்திருந்தது. காது தான் கிழிந்து விடுமோ என்றிருந்தது. ஆச்சரியமாக அதுவும் இல்லை. சத்தம் கேட்டுக் கேட்டு ஒரு மோன‌ நிலைக்கு போய் விடுகிறோம்! அதற்குப்பிறகு பின்னால் வருவது ரயிலேயானாலும் சரியே!

இவரும் அப்படியே. ஹார்னிலிருந்து கை எடுக்காமல் வண்டி ஓட்டுகிறார். டப்பாங்குத்து, மெலடி, பழையது, புதியது எல்லாம் கலந்த ஒரு பென் ட்ரைவ் பாடித் தீர்த்தது. அரை மணிக்கு ஒரு முறை ஒரு பொட்டலத்தை கிழித்து வாயில் போட்டுக் கொள்கிறார். அதற்கப்பறம் எது கேட்டாலும் ம்ம்ம், ம்ஹூம் மட்டும் தான். ஊரிலும் நிறைய பேர் இப்படித்தான். தவிர்க்க முடியாமல் பதில் சொல்ல வேண்டி வந்தால் நம் முன்னாலேயே துப்பி விட்டுப் பேசுகிறார்கள். இவர் கார் கதவைத் திறந்து துப்புகிறார். ஒவ்வொரு தடவை கதவைத் திறக்கும் போதும் பின்னாலிருந்து எதாவது வண்டி அலறுகிறது.

இரண்டே முக்கால் மணி நேர ஒரு வழி பயணத்தில் தேவையில்லாத கட் அடித்த போதும் சாலை விதிகளை மீறின போதும் பதட்டத்தை மறைக்க ஒரு தடவைக் கூட உபயோகிக்காத ஹேண்ட் ப்ரேக் லாக் ஆக இருக்கிறதா என்றும் உடைந்து கீழே கிடந்த ஃப்ரெஸ்னரை ஒட்ட வைக்க முயற்சி செய்வதிலும் கழித்தார். அவருக்கு அவருடைய வண்டி மேல் ரொம்ப அக்கறை என்று தெரிந்ததால் உள்ளே இருந்த என்னுடைய பத்திரம் பற்றி அதிகம் கவலையில்லாமல் இருக்க முடிந்தது. எனக்கும் வேறு வழியிருக்கவில்லை!

திரிவேணி சங்கமத்திற்கு போகும் பெரிய பாலம் வழியாக போகும் போதே மொத்த இடமும் தெரிந்தது. கண்ணிற்கு எட்டின தூரம் வரைக்கும் விரிந்து கிடக்கும் தளத்தில் செய்திருந்த ஏற்பாடுகளும் விருந்தாளிகள் வந்து விட்டுப் போன மிச்சங்களும் தெரிந்தது. தகர தட்டிகளால் பிரித்த பெரிய பெரிய இட‌ங்களுக்குள் தனித்தனியாக டெண்ட் எழுப்பியிருந்திருக்கிறார்கள். சீராக பாதை அமைத்து எல்லா இடங்களுக்கும் விளக்குகள் வைத்து... இந்த இடம் ஒரு மாதம் முன்னால் எப்படி இருந்திருக்கும் என்று ஓரளவு யூகிக்க முடிந்தது. I missed it!




அன்றைக்கு நடந்து கொண்டிருந்தது பொது ஜனங்களுக்கான (கும்ப)மேளா. பெட்டி படுக்கைகளோடு தொலைவிலிருந்தெல்லாம் வந்திருக்கிறார்கள் என்பது அவர்கள் களைப்பில் தெரிகிறது. எங்கேயோ பஸ் விட்டு இறங்கி சலிக்காமல் நடந்து போய் சங்கமத்தில் குளித்து விட்டு வருகிறார்கள். அங்கங்கே புடவைகளையும் விரிப்புகளையும் தற்காலிக கூடாரங்களாக கட்டி கீழே ஓய்வெடுக்கிறார்கள். ஒரு குடும்பம் ஸ்டவ் வைத்து பூரி சுட்டுக் கொண்டிருந்தது. நட்டநடு மைதானத்தில் ஒரு பெண்மணி கணவர் காலில் விழுந்து வணங்கி எழுந்த பின் வெட்கப்பட்டார்.






சாமியார்கள், நாகா பாபாக்கள் யாரையும் காணவில்லை. மிச்சமிருக்கும் சிலரையும் போலீஸ் தடியடித்து விரட்டுகிறது. நான் எதிர்பார்த்து வந்த மேளா இதுவாயிருக்கவில்லை. ஒரு மணி நேரத்தில் அங்கிருந்து கிளம்பி விட்டேன்.

காசி - 2

முதல் நாள் ஆட்டோ ட்ரைவரோடு பேசிக் கொண்டிருந்த போது கேதார் காட் - டில் இறங்கினால் இவ்வளவு நடக்க வேண்டியதில்லை. மேலும் அங்கிருந்து போட் பிடித்தால் ஒரு முழு சுற்று சுற்றி வரலாம் என்று தெரிந்தது. (எங்கிருந்து தொடங்கினாலும் அது சாத்தியம் தான். எல்லா காட் - டிலும் போட் இருக்கிறது!) இரண்டாவது நாள் நன்றாக தூங்கி மெதுவாக  எழுந்திருக்கலாம் என்று உத்தேசித்திருந்தேன். ஐந்தரை மணிக்கே விழிப்பு வந்து விட்டது. விழித்தவுடன் கங்கைக் கரையைப் பார்க்க வேண்டுமென்றிருந்தது. ஜன்னல் திரை விலக்கினால் கங்கை தெரிய வேண்டும் போல. பத்து நிமிஷத்தில் கீழே வந்தாலும் கொஞ்ச நேரம் வரை ஒரு காலி ஆட்டோவும் சிக்கவில்லை. மறுபடியும் ரிக்ஷாவில் ஏறத் தயக்கமாயிருந்தது. நின்ற ஒரு ஆட்டோவில் புத்தகக் கட்டோடு ஒரு கல்லூரி மாணவர். நான் தனியா போக ஏறினேனே, இவங்களை எதுக்கு என்றவரை சமாதானப்படுத்தி ஏற வேண்டியிருந்தது. என் ஏதேதோ கேள்விகளுக்கு ஒற்றை வார்த்தை பதில்கள். நான் ஆண்ட்டியா மேடமா என்று ஒவ்வொரு பதிலிலும் குழம்பி கடைசியில் இறங்கும் போது பரிட்சை நல்லா எழுது என்று சொன்ன‌ போது சரி மேடம் என்று சொல்லி ஒரு சிரிப்போடு கிளம்பினார். அத்தனை காலையில் நிறைய பேசும் மனநினையில் நான் இருந்தது போல அவர் இருந்திருக்கவில்லையாயிருக்கும்!

ஆறு மணிக்கெல்லாம் கேதார் காட் - டில் நல்ல வெளிச்சம், நல்ல கூட்டம். பத்து நிமிஷ பேரத்திற்குப் பின் போட் ஏறியானது.  வலது எல்லையில் ஹரிஷ்சந்திர காட் தொடங்கி, திரும்பி மணிகர்னிகா காட் வரை போய் மறுபடியும் கேதார் காட் வரை கொண்டு வந்து விடுவதாக ஏற்பாடு. ஏறக்குறைய எல்லா காட்- டிலும் சின்னதாகவோ பெரிய‌தாகவோ ஒரு கோவில் இருக்கிறது. அந்த காலை நேரத்தில் காட்- களில் இருக்கும் காவி வண்ணம், அது சாமியார்களின் உடுப்பாயிருக்கட்டும், தொங்கும் படுதாக்களாயிருக்கட்டும், சுவற்று நிறமாயிருக்கட்டும், வெயில் பட்டு மொத்த இடத்தையும் சிவப்பாக்கியிருந்த‌து.


காலை நேரத்தில் முக்கியமான காட்- களில் மட்டும் வெளியாட்கள். மற்ற இடங்களில் உள்ளூர்காரர்கள் அதிகம். வண்ணார்கள், மீன் பிடிப்பவர்கள், காந்தத்தை கயிற்றில் கட்டி காசு தேடும் சிறுவர்கள், போட்-டில் பூ விற்கும் சிறுமி, கோதுமை மாவை பிசைந்து கொண்டு வந்து துளித்துளியாய் கிள்ளி மீனுக்கு போடும் இஸ்லாமியர், கொழுகொழு குண்டு சாமியார் எல்லாரையும் கடந்து ஹரிஷ்சந்திர காட் போய் சேர்ந்தோம். அங்கெயும் ஒன்றிரண்டு பிணம் எரிந்து கொண்டிருந்தது.


 நிர்வாண சாமியார்கள் குளித்து திருநீறு குழைத்து உடம்பெல்லாம் பூசிக் கொள்கிறார்கள். அது காய்ந்து பரவும் வெள்ளைதான் நாள் பூராவுக்குமான உடை. தோளில் பையும் பருத்த தொப்பையுமாய் இன்னொரு பாபா நின்ற வாக்கில் ஆசிர்வாதம் செய்து கொண்டிருந்தார், சாம்பல் உடை கூட இல்லாமல்.




ரெண்டு மணி நேர போட் பயணம் முடிந்தது. போட் ஓட்டி வந்த வயதானவருக்கு எதுவும் பேசும் உத்தேசமிருக்கவில்லை. பாம்பு கடித்தவர்கள், தொழுநோயாளிகள், குழந்தைகள் மற்றும் சாமியார்களை எரிப்பதில்லை. கல்லைக் கட்டி ஆற்றில் போட்டு விடுவதாக ஏற்கனவே அறிந்திருந்த தகவலை மட்டும் சொன்னார்.

திரும்ப அறை, குட்டித் தூக்கம் முடிந்து கோவிலை பார்க்க கிளம்பிய போதே சிவராத்திரி களை கட்ட ஆரம்பித்து விட்டது. வழியெல்லாம் கழி அடித்து போட்டிருந்த வரிசையில் ஜனங்கள் காத்திருக்க தொடங்கி விட்டிருந்தனர்.  அதே தசாஸ்வமேத் காட். முதல்நாள் என்னை விரட்டியடித்த நாகா பாபாவிடம் பத்து பதினைந்து மார்வாடி பெண்மணிகள் கூடியிருந்தனர். அவர் பக்கத்திலிருந்த த‌ட்டில் பத்து ரூபாய் போட்டு சம்மணமிட்டு அமர்ந்திருந்த அவர் காலை ஒவ்வொருவராக தொட்டு வணங்கினர். பத்தே நிமிஷத்தில் இருநூறு ரூபாய் சேர்ந்து விட்டது. தட்டு நிறைய நிறைய பின்னால் அனுப்புவதும் பங்கு போடலும் நடந்து கொண்டிருந்தது. முக்காடு போட்ட பெண்கள், எதுவுமே போடாத சாமியார்கள்!

இன்றைக்கும் மணிகர்னிகா காட். முன்னால் போய்க் கொண்டிருந்த ஒரு கொரிய கூட்டத்தோடு அங்கிருந்த யாரோ என்னையும் மேலே போக சொன்னார்.  ஒரு பாதம் கூட கொள்ளாத அங்கங்கே உடைந்த அந்த சிறிய‌ படிக்கட்டுகள் ஏறி மேலே போனால் காலியான, கைவிடப்பட்ட ஒரு கட்டிடம். அதன் பால்கனியில் நின்றால் மொத்த மணிகர்னிகா காட் - டையும் பார்க்கலாம்.

பிணங்கள் தலையோடு கால் வரை மூடி வருகிறது. சில நேரம் ஆற்று வழியாக போட்- டில் கூட. ஆண்களை வெள்ளைத் துணியிலும் பெண்களை சிவப்புத் துணியிலும் சுற்றி வருகிறார்கள். ஐந்து நிமிடத்தில் மரக்கட்டைகளை அடுக்கி, சுற்றி வரக்கூட இடமில்லாமல் பக்கத்திலேயே இன்னொன்று எரிந்து கொண்டிருக்க, மொட்டை அடித்திருப்பவர் கையில் நீண்ட புல் போன்ற ஒன்றில் கற்பூரம் வைத்து எரியூட்டச் செய்கிறார்கள். அந்த கடைசி நிமிஷத்தை நின்று உணர யாருக்கும் நேரமிருப்பதில்லை. அவசர அவசரமாக தொடங்கி வைத்து விட்டு சாவகாசமாக காத்திருக்கிறார்கள்.

பெரும்பாலும் எல்லா காட்-களிலிருந்தும் ஊருக்குள் போகும் வழிகள் கல் பதித்த சிறு சந்துகள் தான். மணிகர்னிகா காட்டிலிருந்தும் அதே போல் போகும் ஒரு சிறு சந்துக்குள் நடக்கத் தொடங்கினேன். வழி கேட்ட ஒன்றிருவர் சௌக் போய் ஆட்டோ பிடிக்கச் சொல்லியிருந்தார்கள். ஒரு பத்து நிமிஷ நடையில் பிரதான வீதி வந்து விடுகிறது. அதற்குள் இரண்டு பிணங்களை எதிர் கொள்ள வேண்டியிருந்தது. அந்த குறுகலான சந்தில் வழிவிட்டு ஒதுங்கி நின்ற போது ஒரு கதவில் எட்டிப் பார்த்து போட்டோ எடுக்க வேண்டுமா என்று ஒருவர் கேட்டார். பிணம் தூக்கி வந்தவர்கள் அவரை சட்டை செய்யவில்லை. அவரும் பேசாமல் உள்ளே போய் விட்டார்.




அந்த குறுகலான‌ வழியிலும் டீக்கடை, சாப்பாட்டுக்கடை, பான், கோவில், துணிக்கடை, மளிகைக்கடை எல்லாமும் இருக்கிறது. ரோட்டோரக் கடைகளில் நல்ல மசாலா டீ கிடைக்கிறது. இர‌ண்டாவதாக ஒன்று உடனே குடிக்க சொல்லும் சுவையில். மொய்க்கும் ஈக்களை சகித்துக் கொள்ள முடியுமானால் ஜீராவில் முங்கிய மாவில் செய்த இனிப்புகள் நிறைய கிடைக்கிறது. நல்ல சாப்பாடு ஹோட்டல்கள் சுத்தக்குறைவான‌ இருட்டுச் சந்துகளில் இருப்பதாக வழி காட்டுகிறார்கள்.

அன்று சௌக்கில் ஆட்டோவே கிடைத்தது. இரண்டாம் நாள் சுற்று முடிந்தது.

Thursday, March 14, 2013

காசி - 1

முதல் முதலாக‌ காசிக்கு போனது குடும்ப பெரியவர்களுடைய‌ பிராத்தனைக்காக. நிச்சயமாக‌ அப்போது அந்த பிரயாணத்துக்கு நான் தயாராக இருந்திருக்கவில்லை. காரணம், காசி என்று நினைக்கும் போதே தோணின அழுக்கும் குப்பையும் கூட்டமும் தான். மேலும், வயசாகி கடைசி காலத்துல போக வேண்டிய ஒரு பிராயணத்துக்கு நான் இப்போவே ஏன் போக வேண்டும் என்று ஒரு தோணல். பிரயாண வழியும் ஊரும் என் நினைப்புகளை நிச்சயமாக்கிய‌து. பக்தியோடும் நம்பிக்கையோடும் படித்துறைக்கு வரும் மக்களுக்கும் இயந்திரத்தனத்தோடு காசொன்றே குறியாக காத்திருக்கும் பாண்டாக்களும் நடுவில் இது போன்ற இடங்களில் நிகழும் தத்தளிப்பான நாடகங்களைப் பார்க்க‌ சலிப்பாயிருந்தது. இதெல்லாம் முடித்து படகில் நீளத்திற்கு போன சவாரியில் தான் ஏதோ நிகழ்ந்திருக்க வேண்டும். காலம் காலமாக மக்கள் தீராத நம்பிக்கையோடு வந்ததும் அத்தனை மனிதர்களின் உணர்வுகளுக்குமான மௌன சாட்சியாக நிற்கும் இந்த படித்துறைகள் தான் என்னுடைய காசி. இந்த முறை இங்கிருந்த மூன்று நாட்களிலும் திரும்பத் திரும்ப என்னை இங்கே இழுத்ததை நான் முழுமையாக உணர முடிந்தது.

I survived to tell a tale என்பது கொஞ்சம் அதிகப்படியான பிரயோகம் போலத் தோன்றினாலும் எனக்கு அது பொருத்தமாக இருப்பதாகப் படுகிறது. இது என்னுடைய முதல் தனி பயணம். அது ஒரு நீண்ட நாள் ஆசை, கனவு... என்னவாகச் சொன்னாலும் சரியே. அப்படியான ஒரு வாய்ப்பு வந்த போது காசிதான் முதல் விருப்பமாயிருந்தது. இதை நான் சரியாக, பத்திரமாக செய்து முடிக்க வேண்டியது இத்தனை காலமாக நான் சுமந்த என்னுடைய நம்பிக்கைக்கும் இது போல இனிவரும் பயணங்களுக்கும் ரொம்ப அவசியமாக இருந்தது. வந்து இறங்கியதும் டாக்ஸி டிரைவர் கேட்ட முதல் கேள்வி 'தனியாகவா வந்தீங்க அம்மா?'. அதற்குப் பிறகு நிறைய பேர் கேட்டார்கள். எனக்கும் முதல் முறை ஆமாம் சொன்ன போது இருந்த பெருமிதம் இல்லாமல் போனது. நான் அதற்கு பழகி விட்டிருந்தேன்.

அன்றைக்கு மாலை படித்துறைக்கான முதல் பயணம். கங்கைக்கு போக வேண்டும் என்றாலே ஸ்வாதீனமாக 'தசாஸ்வமேத் காட்'க்குதான் கூட்டிப் போகிறார்கள். ஆட்டோக்காரர் இதுக்கு மேல ஆட்டோ போகாது என்று வழி சொல்லி இறக்கி விட்ட இடத்தில் இருந்து கூட்டத்தில் இரண்டு கிலோமீட்டர் நடக்க வேண்டியிருந்தது.

படி இறங்கினதும் முதலில் கண்ணில் பட்டது நாகா பாபாக்கள் எனப்படும் நிர்வாண சாமியார்கள். இதற்கு முந்தின காசி விஜயங்களில் இவர்களைப் பார்த்திருக்கவில்லை. அதிகாலை பிரம்ம முகூர்த்த நேரங்களில் கங்கைக்கு குளிக்க வருவார்கள் என்றும் ஜன நடமாட்டம் தொடங்கும் முன்னால் அவர்கள் இருப்பிடத்துக்கு போய் விடுவார்கள் என்றும் யாரோ கைடு சொல்லிக் கேட்டிருந்தேன். ஆர்வம் தாங்காமல் காமிராவைக் கையில் எடுத்ததும் ஏதோ கூச்சல். என்னவென்று புரிவதற்குள் ஒருவர் எழுந்து விரட்ட‌ ஆரம்பித்த பின்னால் தான் 'No photograph' என்று எழுதி வைத்திருப்பதையே கவனித்தேன்! ரெண்டு கைகளையும் உயர்த்தி ஸாரி சொல்லி நகர்ந்த போது 'என்னை வேண்டுமானால் போட்டோ எடுத்துக் கொள்' என்று கண்களாலே அனுமதி கொடுத்தார் கொஞ்சம் தள்ளி அமர்ந்திருந்த இன்னொரு நாகா பாபா.



அங்கே தொடங்கி வழி நெடுக விதவிதமான சாமியார்கள். சில நிர்வாண சாமியார்கள், வயசு வித்தியாசமில்லாமல், இயல்பாக திரிந்து கொண்டிருந்தார்கள். ஒன்றிரண்டு பேரை அப்படிப் பார்த்த பிறகு கூச்சம் தெளிந்து போனது.

இழுத்துக் கட்டிய படுதாவிற்குள் சின்னச் சின்னதாக‌ விக்கிரகங்கள், போட்டோக்கள். ஒரு வேல் ஒன்றைப் பதித்து கீழே கட்டைகளைப் போட்டு எரித்த சாம்பல். அந்த கட்டைகள் மேல் சில இடங்களில் தூக்குச்சட்டியில் பால் காய்ந்து கொண்டிருந்தது. சின்னதாய் சமையலும் கூட. அரட்டைகள், வாக்குவாதங்கள், மேலே விழுந்து பிடுங்காத பிச்சைக்காரர்கள், சிறு வியாபாரிகள், கங்கைக்கு ஆரத்தி பார்க்க அழைக்கும் போட்வாலாக்கள், கங்கையில் மிதக்க விட நாலு பூவும் ஒரு அகலும் வைத்து விற்கும் சின்னப் பெண்கள், எல்லா நேரங்களிலும் முழுக்கு போடும் ஜனங்கள்... ஒரு நாள் பூராவும் பார்த்தாலும் தீராது, சலிக்காது.

அங்கே இருந்த மூன்று நாளும் படித்துறை நடை போய் சேர்வது மணிகர்னிகா காட்-டில் தான். முதல் நாள் போன போது அங்கிங்கே என்று நான்கைந்து பிணம் எரிந்து கொண்டிருந்தது. பாதி எரிந்த பிணத்தை கழி கொண்டு இரண்டாக மடித்ததில் பாதம் ஆகாசத்தைப் பார்த்துக் கொண்டு எரிந்து கொண்டிருந்தது. சுற்றிலும் கூட்டம். குடும்பத்தார்கள் ஆரம்ப காரியங்கள் முடித்து எரிந்து முடிக்க காத்திருந்தனர். இதற்கு முன்னால் இருந்த பயம் இன்னபிற உணர்வுகளெல்லாம் கரைந்து இந்த பிரயாணத்துக்கு பின்னால் அது அத்தனை அதிர்ச்சி தராத‌, fact of life ஆக மாறியிருக்கிறது.


திரும்பி வரும் போது சரியாகத்தான் வந்து கொண்டிருக்கிறேன் என்று நினைத்துக் கொண்டு எங்கோ வழி மாறி விட்டிருந்தேன். ஒரு கட்டத்திற்கு மேல் பிடிபடாமல் போக ஆட்டோவும் கிடைக்காமல் சீட்டுக்கட்டுகளை சேர்த்திக் கட்டினது போல பொலபொலவென்றிருந்த சைக்கிள் ரிக்ஷாவில் ஏற வேண்டி வந்தது. பார்ப்பதற்கு அப்படி இருந்தாலும் அது குறுகலான மேடு பள்ளங்களால் ஆன சந்துகளில் சௌகரியமாகப் போனது. நான் தான் பயந்து கொண்டே உட்கார்ந்திருந்தேன்!

என்னுடைய முதல் நாள் முடிந்தது!