Monday, February 01, 2016

how-we-used-to-die-how-we-die-now

எனக்குத் தெரிந்து எங்கள் வீட்டில் நடந்த முதல் சாவு தாத்தா நடராஜ குருக்களுடையது. வருஷ வருஷம் அவர் அவருடைய அப்பாவுக்கு திதி கொடுப்பது என்கிற மோட்சதீப நிகழ்ச்சி உறவினர்கள் சூழ ஒரு சிறிய திருமணம் போல நடக்கும். பேரூரில் பெரிய தாத்தா சமாதியில் ஒரு பூஜையும் பின்னர் எங்கள் ஆஸ்தான திருமண மண்டபத்தில் ஒரு 200-300 பேர்களுக்கு சாப்பாடுமாக விமரிசையாக நடக்கும். அந்த வருஷமும் அதற்கு சாமான்கள் வாங்க, குறிப்பாக அரசாணிக்காய்/மஞ்சள் பூசணிக்காய் வாங்க வடவள்ளி சந்தைக்கு போயிருந்தார். வடவள்ளியில் எங்கள் அகிலாண்டப் பாட்டியின் தங்கை வீட்டில் தங்கி வாங்கி வருவதாக ஏற்பாடு. ஆறேழு கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் வடவள்ளிப் பயணமே அப்போதெல்லாம் காலையில் போய் சாயந்திரம் வர அவசரப் படும் வழக்கமிலாத நிதான நாட்கள். போனவர் கழிப்பறையில் மயங்கி விழுந்து விட்டதாக தகவல் வந்து கூட்டிக் கொண்டு வந்ததும் அப்பாவின் நெருங்கிய டாக்டர்  நண்பரின் மருத்துவமணையில் வைத்தியம் பார்த்ததும், ஸ்ட்ரோக் வந்து விட்டது, பிழைக்க வைக்க முடியாது என்று வீட்டுக்கு கொண்டு போகச் சொன்னதும், ஒரு குதிரை வண்டியில் வைத்து ஒரு ராத்திரி தாத்தாவை வீட்டுக்கு கூட்டி வந்ததும் துல்லியமாக நினைவிருக்கிறது. எனக்கு அப்போது பத்து, பதினோரு வயதிருக்கும்.

தாத்தாவை முதல் அறையில் படுக்க வைத்திருந்தார்கள். சுற்றிலும் யாராவது உட்கார்ந்திருப்பார்கள். மங்கை அக்காவுக்கும் மலரக்காவுக்கும் பல்ஸ் பார்க்க சொல்லிக் கொடுத்திருந்தார்கள். அவர்கள் ரெண்டு பேரில் யாராவது ஒருத்தர் மாறி மாறி பார்த்து நல்லாயிருக்கு, சுமாராயிருக்கு என்று சொல்லிக் கொண்டிருந்தார்கள். நீராகாரம் ஏதோ கொடுத்துக் கொண்டிருந்தார்கள். வடவள்ளிக்காரர்கள் யாரும் வந்தால் அறையின் ஓரத்தில் அமர்ந்து தேவாரம் பாடிப் போனார்கள். என் வயதுப் பேத்திகள் நான்கு பேருக்கு எந்த ஜோலியுமில்லை. யார் யார் வருகிறார்கள் என்று வேடிக்கை பார்ப்பதைத் தவிர. மூன்று நான்கு நாட்கள் கழிந்த பின் ஒரு மாலை நான்கு மணி சுமாருக்கு நாங்கள் எல்லோரும் சுற்றி நின்று பார்த்துக் கொண்டிருக்க அமைதியாக இறந்து போனார்.

நேற்று பேஸ்புக்கில் இந்த லிங்கில் வாசிக்கும் போது எங்கள் தாத்தாவைத்தான் நினைத்துக் கொண்டேன். http://exopermaculture.com/2016/01/19/how-we-used-to-die-how-we-die-now/