Tuesday, January 31, 2006

சுருக்குப்பை(யிலிருந்து) - 1

அகிலாண்டம்மாள் சுருக்குப்பையில் காசு தேடும் போது... கொஞ்சம் சில்லரை, ஆறாய் மடித்த ஒன்று, இரண்டு ரூபாய் நோட்டுகள், வெட்டுப் பாக்கு, சட்டை பட்டன், இரும்பு வளையம்(?!)... என்னவெல்லாமோ கண்ணில் படும். இரண்டு புத்தகங்கள், ஒரு பயணம், கொஞ்சம் சினிமா... என்று தலைப்பு வைத்து எழுதத் தொடங்கிய இந்தப் பதிவை (ஏறக்குறைய)முடிக்கும் போது ஏனோ பாட்டியின் சுருக்குப்பை ஞாபகம் வந்ததில் தலைப்பு மாறி விட்டது.

முதலில் பயணத்தோடு தொடங்குகிறேன், மற்றவை அங்கங்கே சேர்ந்து கொள்ளும்!

மாலை ஆறு மணிக்குக் கிளம்பியிருக்க வேண்டும். ஆனால் கிளம்பப் போகும் அறிகுறி ஒன்றும் எட்டு மணி வரை காணவில்லைதான். இதோ இதோ என்று சொல்லி இரவு ஒன்பதரைக்கு கிளம்பியது. காத்திருந்த நேரத்தில் எட்டிப் பார்க்கத் தொடங்கிய அலுப்பை விரட்டியடிக்க சொல்லிக் கொண்டது, 'சேரும் இடத்தை விட சேர்ந்து செல்லும் இந்தப் பயணத்தை அனுபவியேன்' என்பது தான்.

ஆனால் Spicejet முதலாளிக்கு என்னோடு சேர்த்து அந்த இருநூற்றுச் சொச்சம் பயணிகளை சும்மாவாச்சும் கொல்கத்தாவிலிருந்து லக்னோ வரைக்கும் கூட்டிப் போய் திரும்பக் கூட்டி வர ஏதோ நேர்த்திக் கடன் போலிருக்கிறது. அதை அந்த டிசம்பர் மாத குளிர் ராத்திரியில் வெற்றிகரமாக நிறைவேற்றி விட்டார்.

விமானத்தின் உள்ளே நுழைந்ததும் ஒரு டம்ளர் தண்ணீர். அடுத்து நிறைய காற்றும் கொஞ்சம் வேர்க்கடலையும் அடைத்த ஒரு பொட்டலம். லக்னோ வரைக்கும் போனதும் கேப்டன் அழைத்து 'தில்லி நேற்றெல்லாம் காலை நாலு மணி வரை கூட நல்லாத்தான் இருந்தது, இன்னைக்கு இதோ பதினோரு மணிக்கே மசமசத்து விட்டது. எனக்கு வேற எங்கேயும் இறக்க அனுமதியில்லை, அதனால் திரும்ப கொல்கத்தாவிற்கே போகிறோம்' என்று அறிவித்த போது... தாஜ்மகால், நைனிதால், முசோரி, குளிர், அதில் சூடாக இறங்கும் தேநீர், வாயைத் திறந்தால் வரும் புகை, அதற்காகவே சும்மா சும்மா திறந்து பார்க்கும் கிறுக்குத்தனம், Radisson கபாப் (இதைப் பற்றி பேசிப் பேசி வெறியேற்றி வைத்திருந்த கணவர், எப்படியாச்சும் நேரம் ஒதுக்கி அங்கே போயே ஆகணும்னு போட்டிருந்த ப்ளான்) எல்லாம் லக்னோ வானில் பொசுக்கென்று கரைந்து போனது!

இறங்கினதும் அந்த அர்த்த ராத்திரியில் அது ஒரு பட்ஜெட் சர்வீஸ் என்பதையும் மறந்து, சாப்பாடு குடுக்க மாட்டியா? தங்க ஏற்பாடு பண்ண மாட்டியா? என்று ஒரு கும்பல் கிளம்ப, வீட்டுக்குப் போய்விடலாம் என்று யோசிக்காமல் முடிவு செய்தோம். இதே விமானம் காலை பதினொரு மணிக்கு கண்டிப்பாகக் கிளம்பிவிடும் என்று உறுதி(?!)யாகச் சொல்லிக் கொண்டிருந்த ஒரு Spicejet சிப்பந்தியிடம், 'நாங்க இங்கேயே உட்கார்ந்திருக்கோம். காலையில மறந்துடாம சொல்லுங்க' என்று சொல்லிக் கொண்டிருந்த ஒரு பெரியவருடைய பொறுமையைப் பார்த்து பொறாமையாயிருந்தது.

இந்தப் பயணத்தில் தான் அந்த இரண்டு புத்தகங்களில் ஒன்றான கரிச்சான் குஞ்சு எழுதிய 'பசித்த மானுடம்' வாசிக்க ஆரம்பித்தது. ரொம்ப சுவாரசியம் என்று சொல்ல முடியாவிட்டாலும் நேரம் கிடைத்த போதெல்லாம் வாசிக்கத் தூண்டியது. ஏகப்பட்ட பாத்திரங்கள், ஆனாலும் அதிகம் குழப்பாமல் போனது. பட்டும் படாமலும் சொன்னாதென்றாலும் அந்தக் காலத்திலேயே ஓரினச்சேர்க்கை பற்றி எழுதியிருக்கும் ஆச்சர்யம் இன்னும் மிச்சம் இருக்கிறது. கணேசன் பாத்திரம் சுவாதீனமாக அங்கங்கே சேர்த்துக் கொள்ளும் உறவுகள் அந்த நாட்களில் சாத்தியமா?!

எந்தப் படைப்புமே கற்பனைச் சேர்க்கையின்றி வாழ்க்கையைப் பிரதிபலிக்கும் என்பதற்கு உத்திரவாதம் இல்லை என்பதால் அந்தக் கோணத்தில் அதிகம் யோசிக்க வேண்டியதில்லைதான்.

தொடர்கிறது...

Tuesday, January 17, 2006

15 Park Avenue

Image hosted by Photobucket.com

ஏறக்குறைய ஒரு வருடமாகவே செய்தியில் இருந்த படம். பூடானில் படப்பிடிப்பு, ஸ்வபூமி(கொல்கத்தாவில் உள்ள ஒரு கலாச்சார மையம்) யில் இன்று கொன்கனா ஷபனா ஆஸ்மி, சௌமித்ர சட்டர்ஜி, வஹிதா ரெஹ்மான், தீர்த்திமான் சட்டர்ஜி, ஷெ·பாலி ஷா என்று குறிப்பிட்டுச் சொல்லக் கூடியவர்கள் பங்கு பெற்ற... அபர்னா சென்னின் இந்தப் படத்திற்கு நிறைய எதிர்பார்ப்பு இருந்தது.

ஒரு Schizophrenic மீட்டி(மிதாலி)யாக கொன்கனா. ஐந்து குழந்தைகளுக்கு தாயாக Mrs.Roy என்று தன்னைக் கற்பனை செய்து கொள்ளும் பாத்திரம். அவருடைய half sis, பிஸிக்ஸ் ப்ரொபஸர் அஞ்சலி மாதூர் (ஷபானா)... தங்கைக்காக சொந்த வாழ்க்கையில் நிறைய சமரசங்கள் செய்து கொள்ளும், கன்வல்ஜித்-ன் காதலி. அதிகம் பட்டுக் கொள்ளாத சகோதரன். வயதான அம்மாவாக வஹிதா ரெஹ்மான்.

இல்லாத 15, Park Avenue விலாசத்தைத் தேடியும், தன் குழந்தைகள் பேரை சொல்லி, அவன் கூப்பிடறான், இவள் அழறாள்... செய்தியில் பார்த்த சதாம் ஹ¤சேன் கற்பனை கணவருக்கு முதலாளியாக, இதோ இப்போ வந்துடுவான் நான் என் வீட்டுக்கு போகணும், பேங்கில் இருந்து என் பணத்தை எடுத்துக் கொடு... இப்படி அதிகம் முரணில்லாத ஒரு கற்பனை உலகம், அதே சமயம் நிஜ உலகை தனக்கு எதிராக நினைத்துக் கொண்டு... எல்லாமே அக்காவாக, சில நேரம் அக்காவையும் சந்தேகப்பட்டுக் கொண்டு...

மீட்டியின் ஒரு தற்கொலை முயற்சியில் மனநல மருத்துவராக கதையில் நுழையும் குணால் (தீர்த்திமான் சட்டர்ஜி). பதினோரு வருடத்திற்கு முன்னால் மீட்டிக்கு நடந்த அசம்பாவிதம், அதற்கு தானும் ஒரு வகையில் பொறுப்பு என்ற குற்ற உணர்வோடு அஞ்சலி, அவரை அதிலிருந்து வெளியே கொண்டு வரும் குணாலின் முயற்சிகள், கொஞ்சம் கவிதையாக அவர்களுக்கு இடையில் ஓடும் நெருக்கம்...

பூடானில் விடுமுறைக்கு போயிருக்கும் சமயம் எதேச்சையா சந்திக்கும் மீட்டியின் முன்னாள் காதலன் ஜோஜோ(ராஹ¤ல் போஸ்), மனைவியாக ஷெ·பாலி ஷா. மீட்டிக்கு தன்னை அடையாளம் தெரியவில்லை, ஆனால் தன்னை கணவனாக நினைத்துக் கொண்டு இவ்வளவு நாளாக ஒரு கற்பனை வாழ்க்கை வாழ்கிறாள் என்று தெரிந்த குற்ற உணர்வு. சின்னதாக சந்தேகப்படும் மனைவிக்கும், தன் உறுத்தலுக்கும் நடுவில் ஜோஜோ...

நிறைய விஷயங்களை அந்த இரண்டரை மணிக்குள் அடைக்க முயற்சி செய்ததில்... இன்னும் கொஞ்சம் ஜோஜோ, மீட்டி, அஞ்சலி, குணால் இருந்திருக்கலாம் என்று தோண வைக்கிறது. அங்கங்கே கொஞ்சம் ஹிந்தி, கொஞ்சம் பெங்காலி, கொஞ்சமே கொஞ்சம் தமிழ் எட்டிப் பார்க்க முழு நீள ஆங்கிலப் படம், இயல்பாக இருக்கிறது. ப்ளாஷ்பேக்கில் இளமையாக காட்ட முயன்ற ராஹ¤லும் ஷபானாவும் தேறவில்லை. வஹிதா ரெஹ்மான், சௌமித்ர சட்டர்ஜி... அதிகம் உபயோகப் படுத்தப்படாமல் போயிருக்கிறார்கள். இன்னும் கொஞ்சம் பூடான் கூட இருந்திருக்கலாம்!

மல்ட்டிப்ளெக்ஸ் தியேட்டரில் வழக்கம் போல பெண்கள் கூட்டம்... ரிதுபர்னோ கோஷின் படங்களிலும் இப்படி ஒரு பெண்கள் கூட்டம் கண்ணில் பட்டது. கொஞ்சம் இலக்கிய ஒளிவட்டத்தோடு இங்கே பார்க்கும் கொல்கத்தா ஒரு முழு கொல்கத்தா அல்லாத போதும் இந்த முகம் எப்போதும் போல ஆச்சர்யத்தை விட்டுப் போனது.