Thursday, July 02, 2009

ஒரு முரண் & இன்று தொடங்கி...

ஒரு முரண்.

ஆழத்தில் ஒலிக்கும் குரல்
வலுப்பெறும்
மொத்தமும் துறக்கச் செய்யும்
அத்தனை வலிமையாய்

தொட்டுப் புழங்கி
பிணைத்திருந்த மொத்தமும்
ஒற்றை விலக்கலில்
ஒதுக்கச் செய்யும்

புதியதோர் சுவாசமும்
அறியாத அனுபவங்களுமாய்
வலிகள் தந்து
சுயம் மறக்கச் செய்யும்

பதியும் பாதச் சுவடுகளை
நினைவிலிந்து அழித்து
திரும்ப இயலாமலாக்கி
தொலைந்து போகக் கூடும்

குரல் உணர்த்துவதெல்லாம்
தொட்டுக் குழைத்து
ஞாபகங்கள் தூவி
நமதாக்கிக் கொள்ள

உனக்கு பிடித்த நிறத்தில்
எனக்கான மணத்தில்
உயிராழத்தில் அழுத்தமாய்

நிறமோ வாசனையொ
தட்டியெழுப்பும் ஓர் நொடி
மெல்லக் கண்மூடி
நீயோ நானோ நினைவில் கொள்ள.


இன்று தொடங்கி...

மலையின் இறுக்கம் கொண்டேன்
என்னில் சலனமில்லை என்றேன்
காற்று சுமந்து வரும்
காதல் வாசமென்னை
கரைத்துச் செல்கிறது

விருட்சமாய் ஆழ ஊன்றி
கிளை பரப்பி நின்றேன்
நீண்ட நெடுங்காலமாய்
கத்தும் குருவிகளின்
அலகிலென் பச்சையம்
கடந்து செல்கிறது
காடு மலைகள் தாண்டி

ஆழ்கடலின் அமைதி கொண்டு
புலனடக்கி மோனத்திலிருந்தேன்
நிசப்தம் கிழித்து நீந்தி வரும்
பசித்த குழந்தையின் கேவலில்
மார்புகள் நேசம் சுரக்கின்றன

இழுத்தடக்கி மூடிக்கொள்ளும்
ஒவ்வொரு முயற்சியிலும்
எங்கோ ஓர் இடைவெளி விட்டு
கவனம் குவித்து காத்திருந்தேன்
தேடியென்னை நீயடைய

என் நீண்ட காத்திருப்பு
நேற்றோடு முடிந்தது.

நன்றி : வார்த்தை.