Wednesday, October 05, 2005

Maine Gandhi Ko Nahin Maara

Image hosted by Photobucket.com

ஹிம்மத் கர்னே வாலோங்கி ஹார் நஹி ஹோத்தி (தைரியத்தோடு செயல் படுபவர்களுக்கு தோல்வி வருவதில்லை)- இந்த கவிதை வரிகளோடு தொடங்குகிறது படம்.

ஒரு பழைய காலத்து மும்பய் நகர வீடு, வீட்டு மேசை நாற்காலியெல்லாமும் அதே பழைய நாட்களை சொல்லிக் கொண்டு. மேசையில் ஒரு மார்க்வெஸ் புத்தகம் கூட கண்ணில் பட்டது. ஹிந்தி புரோபஸர் உத்தம் சௌத்ரியாக அனுபம் கேர், மகள் ட்ரிஷாவாக ஊர்மிளா, இன்னும் தேடித் தேடி தேர்ந்தெடுத்த கலைஞர்கள். வயது காரணமாக வேகமாக நினைவாற்றலை இழந்து கொண்டிருக்கும் தகப்பனை கரிசனத்தோடு கவனித்துக் கொள்ளும் மகள். கேருக்கும் ஊர்மிளாவுக்கும் பாத்திரமாகவே மாற இன்னொரு சந்தர்ப்பம். மறதியோடு போராடும் அப்பாவுக்காக
வாழ்க்கையோடு சமரசங்களும், அந்த சமரசங்களின் அழுத்தம் தாங்காமல் வெடிப்பதுமாய்... அம்மணிக்கு கண், உதடு, கழுத்து நரம்பு எல்லாம் பேசுகிறது. ஊர்மிளாவின் பாத்திரத்தோடு சட்டென்று நெருங்கிக் கொள்ள முடிந்தது.

இடைவேளைக்கு சில நிமிடங்களுக்கு முன்னால் கேர், 'நான் காந்தியை வேணும்னு கொல்லவில்லை' என்று முதல் முறையாக சொல்லும் வரை இந்தப் படத்தில் காந்தி எங்கே வருகிறார் என்ற யோசனை வந்தது நிஜம். மனநல மருத்துவர், அவருடைய சோதனைகள், அவர் முயற்சிக்கும் தீர்வு... எல்லா இடங்களிலும் கேரின் ஆக்ரமிப்பு. விரல் நடுக்கங்களும், காதோர சிலும்பல்களை தடவி தடவி பதட்டத்தை மறைப்பதும்... முதலில் வீட்டிலிருக்கும் வயதானவர்களையும், நாளைக்கு நமக்கும் தான் என்றும் நினைக்க வைப்பதே அந்த நடிப்புக்கு வெற்றி.

பொம்மன் இரானி, கேஸட்டில் நான்கு கலந்தடித்தவைகளுக்கு நடுவில் ஒரே ஒரு பாட்டு பாடினாலும் உருக்கிப் போகும் ஹரிஹரன் மாதிரி, கொஞ்சமே வந்து காட்டுக் கத்து கத்திட்டு போகிறார். உயிரோட்டமுள்ள கத்தல்! கொஞ்சம் வஹிதா ரெஹ்மானும். தலைப்பில் காந்தியைப் போட்டதில் ரெண்டு வகை ரியாக்ஷனும் இருக்க வாய்ப்பிருக்கிறது. முழுக்க முழுக்க காந்தியோடு தொடர்பு படுத்த முடியாமலும், இல்லவே இல்லை என்று விலக்க முடியாமலும் போகலாம். தலைப்பைப் பார்த்து, 'நான் வரலையே'ன்னு சொன்ன மகனும் ஒரு பதம்.

ஆனால், முதுமையையும் மன நோய்களையும் பற்றி இவ்வளவு ஆழமாக இதுவரை இந்தியப் படங்களில் பார்த்ததில்லை. சுஜாதா சொன்னது போல இனிமேல் இந்த மனநோய்கள் அதிகம் அலைக்கழிக்கும். நீண்ட ஆயுளும் தீராத மன அழுத்தங்களுமாய்.