Thursday, July 02, 2009

ஒரு முரண் & இன்று தொடங்கி...

ஒரு முரண்.

ஆழத்தில் ஒலிக்கும் குரல்
வலுப்பெறும்
மொத்தமும் துறக்கச் செய்யும்
அத்தனை வலிமையாய்

தொட்டுப் புழங்கி
பிணைத்திருந்த மொத்தமும்
ஒற்றை விலக்கலில்
ஒதுக்கச் செய்யும்

புதியதோர் சுவாசமும்
அறியாத அனுபவங்களுமாய்
வலிகள் தந்து
சுயம் மறக்கச் செய்யும்

பதியும் பாதச் சுவடுகளை
நினைவிலிந்து அழித்து
திரும்ப இயலாமலாக்கி
தொலைந்து போகக் கூடும்

குரல் உணர்த்துவதெல்லாம்
தொட்டுக் குழைத்து
ஞாபகங்கள் தூவி
நமதாக்கிக் கொள்ள

உனக்கு பிடித்த நிறத்தில்
எனக்கான மணத்தில்
உயிராழத்தில் அழுத்தமாய்

நிறமோ வாசனையொ
தட்டியெழுப்பும் ஓர் நொடி
மெல்லக் கண்மூடி
நீயோ நானோ நினைவில் கொள்ள.


இன்று தொடங்கி...

மலையின் இறுக்கம் கொண்டேன்
என்னில் சலனமில்லை என்றேன்
காற்று சுமந்து வரும்
காதல் வாசமென்னை
கரைத்துச் செல்கிறது

விருட்சமாய் ஆழ ஊன்றி
கிளை பரப்பி நின்றேன்
நீண்ட நெடுங்காலமாய்
கத்தும் குருவிகளின்
அலகிலென் பச்சையம்
கடந்து செல்கிறது
காடு மலைகள் தாண்டி

ஆழ்கடலின் அமைதி கொண்டு
புலனடக்கி மோனத்திலிருந்தேன்
நிசப்தம் கிழித்து நீந்தி வரும்
பசித்த குழந்தையின் கேவலில்
மார்புகள் நேசம் சுரக்கின்றன

இழுத்தடக்கி மூடிக்கொள்ளும்
ஒவ்வொரு முயற்சியிலும்
எங்கோ ஓர் இடைவெளி விட்டு
கவனம் குவித்து காத்திருந்தேன்
தேடியென்னை நீயடைய

என் நீண்ட காத்திருப்பு
நேற்றோடு முடிந்தது.

நன்றி : வார்த்தை.

Monday, June 15, 2009

32 பதில்களில் கொஞ்சம் நான்.


ஆறுமாசமா இங்கே எதுவுமே எழுதவில்லை. ஏனோ தோணவில்லை. இப்போது வாசித்துக் கொண்டிருக்கும் 'பல நேரங்களில் பல மனிதர்கள்' தான் என்னுடைய ரீ எண்ட்ரியாக இருக்கும்ன்னு நினைத்திருந்தேன்.

எப்பவுமே இந்த மாதிரி கேள்விகள் உடனே எழுத வைக்கும். நம்மளைப் பத்தி நாம நினைக்க மறந்து போன விஷயங்களையெல்லாம் கிளறிக் கிளறி வெளியே கொண்டு வர்றதால. சும்மாவே நான் எதையாச்சும் யோசிச்சிட்டே இருக்கற ஆளு. அதையெல்லாம் சொல்லுன்னு வேற சொன்னா நம்மளை கட்டி நிறுத்த முடியாது தான். கேள்விகள் கொடுத்து என் நீண்ட நிசப்தம் கலைத்த( நிசப்தம் கலையும் நேரங்கள் - நம்ம டேக்லைன்!) சுரேஷ் கண்ணனுக்கு நன்றி.


1) உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது? உங்களுக்கு உங்க பெயர்
பிடிக்குமா?


அப்பா வைத்த பெயர். வீட்டிலே ஒரு பெரிய தாத்தா எங்க குடும்பத்து பொண் குழந்தைகளுக்கெல்லாம் பெயர் வைத்துக் கொண்டிருந்தார். மங்கையர்கரசி, மலர்விழி, பூங்குழலி, தேன்மொழி, எழிலரசி... அவளோட அவர் சிவலோக ப்ராப்தி அடைந்துவிட்டதால நமக்கு பேர் வைக்கற சான்ஸ் அப்பாக்கு கிடைத்தது. இல்லைன்னாலும் அதை அவரோட பெரியப்பாவுக்கு விட்டிருப்பாரான்னு சந்தேகம் தான். அந்த வரிசையிலே நான் நிர்மலா தேவி. வாலை வெட்டி விடற கைங்கர்யம் நமது. ஸோ வெறும் நிர்மலா.

சின்ன வயசில அது வழக்கமான பேரா இல்லாம இருந்ததால பிடிக்கும். அர்த்தம் உணர்ந்தப்போ இன்னும் அதிகமா. இப்போ அது வெறும் அடையாளம் மட்டுமே. ஆனாலும் வித்யாசமான பெயர்களைக் கேட்கும் போது கண் விரித்து அர்த்தம் கேட்டு சந்தோஷப்படறது நிஜம்.

2) கடைசியா அழுதது எப்போது?

முந்தாநாள் சாயந்திரம் பால்கனில உட்கார்ந்து கொண்டு. ஒரு பைசா பெறாத காரணத்தை ஹார்மோன்கள் தூண்டி விட்டதில் கொஞ்சம் கண்ணீர் மழை பெய்து துடைத்து விட வேண்டியதாயிற்று.

3) உங்களுக்கு உங்க கையெழுத்து பிடிக்குமா?

பிடிக்கும்.

ஐந்தாவது வரை கையெழுத்து சகிக்காது. எனக்குத் தெரிந்த ஒரு அக்கா நான் படிக்கிற பள்ளிக் கூடத்திலேயே எனக்கு வகுப்பாசிரியராக சேர்ந்ததும் உன் நோட் புக் குடு பார்க்கலாம்னு கேட்டப்போ நான் தயங்கினது இப்பவும் நினைவிருக்கிறது. அவசரமா அதை எப்படியாச்சும் சரி செய்ய முடியுமான்னு போராடி எதுவும் பண்ண முடியாம அப்படியே கொடுத்தேன். ஒரே நாள்ல திருப்பிக் கொடுத்துட்டாங்க. ஆறாவது போனதும் க்ரேஸி மிஸ் தினமும் கையெழுத்து பழகச் சொன்னதை சரியாக பயன்படுத்திக் கொண்டதில் படித்து முடிக்கும் வரை அழகான கையெழுத்தாயிருந்தது. இப்பவும் கொஞ்சம் எழுதிப் பழகினால் அதே அழகோட எழுத முடியும்.


4) பிடித்த மதிய உணவு?

சந்தோஷமாக நான் சமைக்கும் எதுவும். ஞாயிற்றுக் கிழமை மட்டும் பிரியாணி.

5) நீங்கள் வேறு யாராவதாக இருந்தால் உங்களோட நட்பு வச்சுக்குவீங்களா ?


நிச்சயமாக. வருஷக்கணக்கில் பார்க்காத நட்பை இன்னைக்கு பார்க்கும் போதும் விட்ட இடத்திலிருந்து அதே எக்ஸைட்மெண்டோடு தொடர முடிந்திருக்கிறது. எதிராளிதான் பெரும்பாலான நேரங்களில் ஹேய் என்னாச்சு உனக்குன்னு ஒரு பார்வை பார்க்க, அதுக்கப்பறம் அடக்கி வாசிக்க பழகியிருக்கேன்!

6) கடல்ல குளிக்கப் பிடிக்குமா? அருவியில் குளிக்கப் பிடிக்குமா?

அருவியிலென்று நினைக்கிறேன். இதிலெல்லாம் குளித்து வருஷமாகிறது.

7) ஒருவரைப் பார்க்கும்போது முதலில் எதைக் கவனிப்பீர்கள்?

பேசற ஸ்டைல், மேனரிஸம்... கொல்கத்தா காபி டேயில் பழியாய் கிடந்து வருகிறவர்களையும் போகிறவர்களையும் வேடிக்கை பார்த்தது ஞாபகம் வருகிறது.

8) உங்க கிட்ட உங்களுக்குப் பிடிச்ச விஷயம் என்ன? பிடிக்காத வி
ஷயம் என்ன?


வயதே நினைவிருப்பதில்லை - பிடித்ததும் பிடிக்காததும்.


9)உங்கள் துணைவர்/துணைவி கிட்டே உங்களுக்குப் பிடிச்ச/பிடிக்காத விஷயம்?


அசாத்திய பொறுமை - பிடித்ததும் பிடிக்காததும்.

10) இப்போ யார் பக்கத்துல இல்லாம போனதுக்கு வருந்துகிறீர்கள்?

அது அந்த நேரத்து மனநிலையை பொறுத்து. ஆனால் யாருமில்லாமல் இருப்பது போல சுகம் வேறில்லை.

11) இதை எழுதும்போது என்ன நிறத்தில் ஆடை அணிந்துள்ளீர்கள்?

மெரூன் சல்வார், பச்சை நிற கமீஸ்.

12) என்ன பார்த்து/கேட்டுக்கொண்டு இருக்கிறீர்கள்?

NDTV Profit டீவியில் ஓடிக்கொண்டிருக்கிறது.

13) வர்ணப் பேனாவாக உங்களை மாற்றினால், என்ன நிறப் பேனாவாக மாற ஆசை?

நீலம்.

14) பிடித்த மணம்?


நாலைந்து மாதக் குழந்தையிடம் தாய்ப்பாலும், ஜான்ஸன்ஸ் பேபி சோப்பும் கலந்து வரும் மணம், பசிக்கும் நேரத்தில் பிரியாணி வாசனை, கொஞ்சம் வருஷம் முன்னால் உபயோகித்திருந்த nina ricci mild, பச்சை நிறத்தில் கொஞ்சம் தடிப்பான மடல்களோடு சின்ன வயதில் எங்கேயோ முகர்ந்து பார்த்திருந்த பெயர் தெரியாத ஒரு பூ வாசனை, மருதாணிப்பூ, அப்பாவின் கோகுல் சாண்டல், சிகரெட், பெட்ரோல்...

15) நீங்கள் அழைக்கப்போகும் பதிவரிடம் உங்களுக்குப் பிடித்த விஷயம்? அவரை நீங்கள் அழைக்கக் காரணம் என்ன?

அவருடைய எழுத்து தான். அவர் இந்த கேள்விகளுக்கெல்லாம் பதில் எழுதினால்( எப்படியும் எழுதப்போறதில்லை!) எப்படி இருக்கும் என்ற க்யூரியாஸிட்டிதான்.

16)உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவுகளில் உங்களுக்குப் பிடித்த பதிவு?

கொஞ்சம் சினிமா, கொஞ்சம் புத்தகங்கள்.

17) பிடித்த விளையாட்டு?

வேகமாக நடந்தாலே பொம்பளைப் புள்ளைங்க அதிர அதிர நடக்காதீங்கன்னு அகிலாண்டம்மாள்(பாட்டி) சொல்லிச் சொல்லி வளர்ந்ததில் எந்த விளையாட்டையும் விளையாடியதில்லை.

18) கண்ணாடி அணிபவரா?

இல்லை.

19) எந்த மாதிரியான திரைப்படம் பிடிக்கும்?


படத்தின் எதாவது ஒரு அம்சத்தோடு என்னைத் தொடர்பு படுத்திக் கொள்ள முடியும் எந்தப் படமும் பிடிக்கும்.


20) கடைசியாகப் பார்த்த படம்?

dosar - the companion - rituparno ghosh (பெங்காலி)

21) பிடித்த பருவ காலம் எது?


குளிர்காலம். சென்னை வந்த பிறகு அப்படி ஒரு சீஸனே இல்லாமல் போனது!

22) என்ன புத்தகம் படித்துக்கொண்டு இருக்கிறீர்கள்?

பல நேரங்களில் பல மனிதர்கள் - பாரதி மணி.

23) உங்கள் டெஸ்க்டாப்பில் இருக்கும் படத்தை எத்தனை நாளைக்கு ஒருமுறை மாற்றுவீர்கள்?

நான் செலக்ட் செய்வதும் இல்லை, மாற்றுவதும் இல்லை.

24) பிடித்த சத்தம்? பிடிக்காத சத்தம்?

பிடித்தது - வாய்விட்டு சிரிக்கும் சிரிப்பு, மனதிற்கு நெருக்கமான சில குரல்கள், தண்ணீரின் சலசலப்பு, மழை, wind chimes...

பிடிக்காதது - சீரியல் கத்தல்கள்.

25) வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக தொலைவு?


கோயம்புத்தூரிலிருந்து இரண்டு ராத்திரி இரண்டு பகல்கள் ட்ரெயினில் காந்திதாம் போகும் போதுதான் போய்க் கொண்டே இருப்பது போலிருக்கும்.

26) உங்களிடம் ஏதாவது தனித்திறமை இருக்கிறதா?

இருக்க வேண்டும். எனக்குத் தெரியவில்லை.

27) உங்களால் ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு விஷயம்?

அப்படி எதையும் நினைப்பதில்லை. என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது என்பதற்காக எதுவும் நின்று போகப் போவதில்லை!


28) உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?

என்னுடைய யோசனை, ஞாபகங்கள்.

29) உங்களுக்குப் பிடித்த சுற்றுலாத் தலம்?

டார்ஜிலிங்.

30) எப்படி இருக்கணும்னு ஆசை?

இப்படியே.

31) கணவர்/மனைவி இல்லாமல் செய்ய விரும்பும் காரியம்?

தூரமா முன்னே பின்னே தெரியாத ஊருக்கெல்லாம் பிரயாணம்.

32) வாழ்வு பற்றி ஒரு வரியில் சொல்லுங்க

புரியாமயே இருக்கட்டுமே அதனால என்ன?!

Thursday, December 25, 2008

சுருக்குப்பை - 2008

அதிகம் கேட்டது - disturbia - Rihanna, வீணையடி நீயெனக்கு - எதையோ தேட இணையத்தில் கிடைத்த பாரதியார் பாடல் - எஸ்பிபி குரலில், pappu cant dance saala, ishq ada hai, போன மாதம் முழுக்க - நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை.

அதிகம் பார்த்த வீடியோ - gimme more - Britney Spears - (sexy figure n innocent face - deadly combo), mayya mayya - mallika sheravat பாட்டின் ஓபனிங் சீனுக்காக.

ரசித்த படங்கள் - Rock on, jhodha akbar, பொய் சொல்ல போறோம், the bridges of madison county, into the wild...

பெரிய ஐயோ - saawariya. jab se tere naina தவிர்த்து!

ஜொள்ளு லிஸ்டில் புது வரவு - ஃபர்ஹான் அக்தர்.

ஆஹா - தீபிகா படுகோன்.

தினமும் காலையில் வாசிக்க விரும்புவது - ஜெயமோகன் வலைப்பதிவு.

சந்தோஷம் - 'மகளிர் மட்டும்' - எட்டு பேர் பெண்கள் குழு கனஜோராக போய்க் கொண்டிருப்பது.

ரெசல்யூஷன் - நோ வாழைப்பழம். :-(

வருத்தம் - ப்பூ இவ்ளோதானான்னு ரொம்ப பெருமையடிச்சிட்டு இருந்த ஷேர் டிரேடிங் ஊத்திக் கொண்டது.

வாசித்ததில் பிடித்தது - காட்டில் ஒரு மான் - அம்பை.

பாதியில் விட்டது - a fine balance - Rohinton mistry, Shantaram - gregory david roberts. முன்னது பிழியும் சோகம், ரெண்டாவது நீளம்.

கச்சேரி - பாம்பே ஜெயஸ்ரீ, டி.எம்.கிருஷ்ணா. ஹிந்து ம்யூஸிக் ஃபெஸ்டில் ரொம்ப ரசிப்பேன்னு நினைத்த நிகழ்ச்சிகளை எல்லாம் தாண்டி உலுக்கிப் போட்ட கச்சேரி. கர்னாடக சங்கீதம் கேட்கும் போது வழக்கமாக நிகழும் அலைபாய்தல்களை ஆரம்பம் முதலே கட்டுக்குள் கொண்டு வந்து 'சர்வம் ப்ரம்ம மயம்' தர்பாரி கானடாவில் கேட்கும் போது எத்தனையோ நாட்களாக சேர்த்து வைத்திருந்த சோகத்தையெல்லாம் தட்டி எழுப்பி இப்ப அழுன்னு அழ அடித்த கச்சேரி. உனக்கு அந்தப் பாட்டா ரொம்ப பிடித்திருந்தது என்று ஆல்டைம் ம்யூஸிக் பார்ட்னர் சக்ரபாணி அய்யா ஏன் திரும்பத் திரும்பக் கேட்டார் என்பது இன்னும் புரியாத ஆச்சர்யம். (அந்த ராகம் பற்றிச் சொன்னதும் அவரே) அன்று இரவு வெகு நேரம் வரை தூங்கமுடியவில்லை. இன்னொரு வருஷத்துக்கு இது எதேஷ்டம்.

லைட் ம்யூஸிக் - அதே ஹிந்து ம்யூஸிக் ஃபெஸ்டில் ஸ்ரீநிவாஸ், சின்மயி, நரேஷ் அய்யர் & அனுராதா ஸ்ரீராம் வழங்கிய பழைய ஹிந்தி சினிமா பாடல்கள். ம்யூஸிக் அகடமி இதுக்கு ஓகே சொன்னது பெரிய ஆச்சர்யம்! சிரத்தையாக தேர்ந்தெடுத்த பாடல்கள். sincere effort. டிட்பிட்ஸ் - ஸ்ரீநிவாஸுக்கு வெள்ளைக் குர்த்தா பொருந்தின அளவு கலர் எடுபடவில்லை. நரேஷ் அய்யரின் சுருள் தலைமுடி ஆஹா. சின்மயி ஸ்வீட். உடைகள்தான் கொஞ்சம் gaudy. அனுராதா ஸ்ரீராம் இரண்டரை மணி நிகழ்ச்சிக்கு நான்கு முறை உடை மாற்றியது ஓவர்.

பிடித்த இடங்கள் - மணாலிக்கு பக்கத்தில் செய்ஞ் என்ற சின்ன ஊர். தங்கியிருந்த கெஸ்ட் ஹவுஸுக்கு முன்னால் சம்மணமிட்டு உட்கார்ந்திருந்த பிரம்மாண்ட மலையும் மூடியிருந்த கதவு ஜன்னல்களைத் தாண்டி கேட்ட செய்ஞ் நதியின் கூச்சலும் . குளிர்காலத்தில் முழு மலையும் பனியால் மூடியிருக்குமாம். அங்கே வசிப்பவர்கள் அந்த ஆறு மாதத்திற்கு மலைமேலேயே வாசம். எத்தனை யோசித்தும் அந்த வாழ்க்கையை முழுதாக கற்பனை செய்ய முடியவில்லை. முயற்சித்துப் பார்க்கும் ஆர்வம் இருக்கிறது.

மணாலியில் ரோர்க் நினைவிடத்தில் ஒரு தாழ்ந்த தளிர் பச்சை மரத்தின் கீழே போட்டிருந்த கருங்கல் உட்காருமிடம். குளிர்ச்சியும் ஏகாந்தமுமாய். அங்கே உட்கார்ந்திருக்கும் போது அந்த முழு பயணமும் அந்த இடத்தில் உட்கார்ந்து அப்படி உணர்வதர்காக மட்டும் என்றிருந்தது. அங்கே வாழ்ந்த அந்த தம்பதிகளை நினைத்து கொஞ்சம் பொறாமை வந்தது.

சொல்ல முடியாமல் போனது - டிக்கெட்டுடன் ஒரு durex condom இலவச இணைப்பாக வைத்து மிரட்டிய ராக் ஷோ. ஐந்தரை மணிக்கு என்று அறிவித்திருந்த மைதானத்தை தேடிப் போக ஆறானது. சொல்லி வைத்தது போல அத்தனை பேரும் ஏறக்குறைய முழு கறுப்பில் தான் உடை. அந்த நுழைவாயிலில் நின்றிருந்தவர்களில் முப்பது வயதுக்கு மேலிருந்தவர்களை எண்ணிவிடலாம். ஏழு மணிக்கு தகரத் தடுப்பை தட்டி உள்ளே விடச் சொல்லி ரகளை மெல்ல ஆரம்பித்தது. உள்ளே விட ஆரம்பித்தவுடன் முண்டியடித்த கூட்டம் நடுவில் மாட்டிக் கொண்ட ஒற்றை 'நானை' அலுங்காமல் பத்திரமாக உள்ளே கொண்டு போய் சேர்த்த அத்தனை இளைஞர்களுக்கும் நன்றி.

திருப்தி - உயிர்த்திருப்பது.

சோகம் - சாப்பிடப் போன இடத்திலோ சினிமா அரங்கிலோ குண்டுகளெதும் வெடிக்காமல் இன்னும் உயிரோடிருப்பதற்காக சந்தோஷப் படுவது.

Tuesday, December 09, 2008

ஒரு முத்தம்

சென்னை மழையும், வீட்டு விசேஷமுமாய் சேர்ந்து ஒரு பத்து நாட்கள் நிறைய பேரோடு இருக்க நேர்ந்தது. பொதுவாகவே தனிமை விரும்பி, ஒரு நாளின் சில மணிநேரங்களாவது தனியாக இருக்காது போகும் போது தோன்றும் அசௌகரியமும் மெல்ல பரவும் சிடுசிடுப்பையும் எப்போதும் உணர்ந்திருக்கிறேன். அதனாலேயே இது போன்ற நாள் பூராவும், தொடர்ந்தும் உறவினர்களோடு கழிக்க நேரிடும் சமயங்களுக்காக முன் கூட்டியே என்னை தயார் செய்து கொள்ள வேண்டியிருந்திருக்கிறது.

இந்த சில நாட்களில் கவனித்தது...

ஐந்து வயதுக்குக் கீழான ஒரு குழந்தை கூட இருக்கவில்லை. குழந்தையின் சிரிப்பிலும் மழலைப் பேச்சிலும் பரவியிருக்கக் கூடிய மென்மை அறவே இல்லை. எல்லாரும் எல்லா நேரமும் பெரியவர்களாகவே இருந்தோம்.

அறுபது ப்ளஸ் ஆண்கள் கூடுதல் சிடுசிடுப்பாக இருந்தார்கள். அவர்களில் ஒருவருக்கும் ஒருவரோடும் ஒத்துப் போகவேயில்லை. மாமனார் - மருமகன், அண்ணன் - தம்பி... எந்த உறவும் விதிவிலக்கில்லை.

ஆண்கள் கையில் டீவி ரிமோட் கிடைத்தால் தவறியும் கீழே வைக்காமல் இருந்தார்கள். பத்து பதினைந்து பேர் உட்கார்ந்து பார்த்துக் கொண்டிருக்கும் போதும் கூச்சமில்லாமல் சேனல் மாற்றிக் கொண்டே இருந்தார்கள். பெண்கள் சீரியல் பார்க்கத் தொடங்கும் போது பகல் சீரியலுக்கு அலுத்துக் கொண்டவர்கள், ப்ரைம் டைம் சீரியல்களுக்கு சத்தமில்லாமல் ஜோடி சேர்ந்து கொண்டார்கள்.

தான் வாங்கி வந்திருந்த ஒரு விசிடி ரொம்ப பிடித்திருந்ததால் வந்திருந்த எல்லாரோடும் மூன்று நாட்களில் நான்காவது முறையாக ஒரே படத்தை ஓடவிட்ட அப்பாவைப் பார்க்க பயமாகவும் கவலையாகவும் இருந்தது.

பெண்கள் சிக்கனத்திற்கும் கஞ்சத்தனத்திற்கும் வித்தியாசம் தெரியாமல் அதை சாமர்த்தியமாக நினைத்து தங்களை இன்னும் சாமர்த்தியசாலிகளாக்கும் முயற்சிகளில் இருந்தார்கள். அதில் ஒருவருக்கொருவர் போட்டி வேறு.

கணவரை ஊரில் விட்டுவிட்டு தனியாக வந்த பெண்கள் சுதந்திரமாக இருந்தார்கள். நாளுக்கு ஒரு முறை செல்போனில் பேசும் போது வழக்கமில்லாத பிரியமாய் பேசினார்கள். வறட்சியான குடும்ப வாழ்க்கைக்காக சலித்துக் கொண்டவர்கள் மக்கள் கல்யாணத்தைப் பற்றி கவலைப் பட்டார்கள்.

அரட்டை, விளையாட்டுகள், கேலிகளுக்கு குறைவில்லை.

கடைசி நாள் கிளம்புவதற்கு முன் சாப்பாட்டு மேசையில் யாரோடோ பேசிக் கொண்டிருக்கும் போது 'கிளம்பறோம்மா' என்று சொல்லி வலது நெற்றியில் அப்பா கொடுத்த அவசர முத்தத்தில் அதுவரை தளும்பிக் கொண்டிருந்ததெல்லாம் நிலை கொண்டது.

Wednesday, October 22, 2008

என் சினிமா சினிமா

போன தொடர் விளையாட்டிலேயே கடைசியில் ரொம்ப குழப்பியது யாரை தொடர அழைப்பது என்பதுதான். கலவையாக ஒரு லிஸ்ட் போட்டு கடைசியில் எல்லாவற்றையும் டிலீட் செய்து ஓபன் இன்விடேஷன் என்று தப்பித்துக் கொண்டேன். இப்போது அதை முதலிலேயே முடிவு செய்து விட்டதால் நோ குழப்பம். ஓபன் இன்விடேஷன் விட தெரிந்த நான், தானாக இந்த விளையாட்டில் சேர்ந்து கொள்ளாததும் முரண் தான். ஸோ... அழைப்பு விடுத்த கேயாரெஸ்ஸுக்கு நன்றி.

1. எந்த வயதில் சினிமா பார்க்க ஆரம்பித்தீர்கள்? நினைவுதெரிந்து கண்ட முதல் சினிமா? என்ன உணர்ந்தீர்கள்?

ஆரம்பித்தது நினைவில்லை. நினைவிலிருப்பது - பத்ரகாளி. கோவை ராயல் அல்லது இருதயா தியேட்டரில்.

2. கடைசியாக அரங்கில் அமர்ந்து பார்த்த தமிழ் சினிமா?

சரோஜா.

3. கடைசியாக அரங்கிலன்றி பார்த்த தமிழ் சினிமா எது, எங்கே, என்ன உணர்ந்தீர்கள்?

வேறெங்கேயும் தமிழ் படம் முழுதாகப் பார்ப்பது ரொம்ப குறைவு.

4. மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா

மகாநதி. டீவியில் எப்போதாவது பார்க்க கிடைத்தால் பார்க்கவும் முடியாமல், விடவும் முடியாமல் ஒரு அலைமோதல் இருக்கும்.

5-அ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா-அரசியல் சம்பவம்?

தாக்கியது எதுவும் இல்லை. இதிலெல்லாம் தாக்கம் வர அனுமதிப்பதில்லை. குஷ்பு விஷயத்தில் கொஞ்சம் கடுப்பானதுண்டு.

5-ஆ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா-தொழில்நுட்ப சம்பவம்?

தொழில்நுட்ப விஷயங்களை ரசிப்பதோடு சரி.

6. தமிழ்ச்சினிமா பற்றி வாசிப்பதுண்டா?

ரொம்ப மேலோட்டமாக. சிற்றிதழ்கள் கிழிப்பதை சிரிப்போடு சில நேரங்களில். சாருவின் கட்டுரைகளையும் சேர்த்தி. :-)

7.தமிழ்ச்சினிமா இசை பற்றி?

எப்போதும் ரசித்தது. அந்தந்த காலகட்டங்களில் எம்.எஸ்.வி, இளையராஜா, ரஹ்மான், ஹாரிஸ்... எல்லாருமே. சினிமா இசை இல்லாமலிருந்திருந்தால் என்னுடைய மன அழுத்த நேரங்களில் என்ன செய்திருப்பேன்?

8. தமிழ் தவிர வேறு இந்திய, உலக மொழி சினிமா பார்ப்பதுண்டா? அதிகம் தாக்கிய படங்கள்?

எல்லா படங்களும் பார்ப்பதுண்டு. அங்க்லேஷ்வரில் வீட்டுக்கு ரொம்ப பக்கத்தில் இருந்த ஒரு வீடியோ காஸட் லைப்ரரியில் இருந்த எல்லாப் படங்களும் பார்த்து முடித்திருந்தேன். அப்போது நிறைய மலையாளப் படங்களும். கொல்கத்தா போன பிறகு பெங்காலி படங்கள். தற்போது இணையத்திலிருந்து உலகப் படங்கள்.

நினைவிலிருந்து கொண்டு ஒன்றிரண்டு நாட்கள் தொந்தரவு செய்த படங்கள் நிறைய. சட்டென்று நினைவுக்கு வருவது மாத்ருபூமி, ஷக்தி, அந்தர்ஜலி யாத்ரா(பெங்காலி)...

9. தமிழ்ச்சினிமா உலகுடன் நேரடித்தொடர்பு உண்டா? என்ன செய்தீர்கள்? பிடித்ததா? அதை மீண்டும் செய்வீர்களா? தமிழ்ச்சினிமா மேம்பட அது உதவுமா?

இல்லை.

10. தமிழ்ச்சினிமாவின் எதிர்காலம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

நிறைய தூரம் போக வேண்டும்.

11. அடுத்த ஓராண்டு தமிழில் சினிமா கிடையாது, மற்றும் சினிமா பற்றிய சமாச்சாரங்கள், செய்திகள் எதுவுமே பத்திரிகைகள், தொலைக்காட்சி, இணையம் உள்ளிட்ட ஊடகங்களில் கிடையாது என்று வைத்துக்கொள்வோம்? உங்களுக்கு எப்படியிருக்கும்? தமிழர்களுக்கு என்ன ஆகும் என்று நினைக்கிறீர்கள்?

பெரிதாக எந்த பாதிப்பும் இருக்காது. தமிழர்கள் தவித்துப் போவார்கள்.


இந்தப் பதிவு எழுத ஆரம்பித்தபோது நிறைய விஷயங்கள் நினைவுக்கு வந்தது. சினிமாவும் புத்தகங்களும் எல்லா நேரங்களிலும் கூடவே இருந்திருக்கிறது. எப்படியாவது வாரத்தில் மூன்று நான்கு படங்கள் பார்த்து விடுகிறேன். சொந்த கலெக்ஷனில் உள்ளது, டீவி, நண்பர்கள், மகள் கொண்டு வந்து சேர்ப்பது. ஒரு சுவாரசியமான திரைப்படம் பார்க்கும் போது மெல்ல உள்ளே இழுத்து, எதாவது ஒரு விஷயத்தோடு தொடர்பு ஏற்பட்டு, அந்த இரண்டு மணி நேரம் வேறொரு உலகத்திற்கு போய் விட வைக்கிறது. சில நேரங்களில் திரும்பி வரப் பிடிக்காமல்.

இவ்வளவு சினிமா பார்க்க என் அம்மா முதல் காரணம். அம்மாவுக்கு அந்த நாட்களில் எல்லாப் படமும் பார்க்க பிடிக்கும். நான், கௌரி, அம்மா மூன்று பேரும் தான் சினிமாவுக்குப் போவோம். வீட்டிலிருந்து பெரும்பாலான தியேட்டர்கள் நடந்து போய்விடக் கூடிய தூரம் தான். டிக்கெட், இடைவேளையில் ஒரு கோன் ஐஸ்கிரீம்... ஒரு ஆளுக்கு நாலு ரூபாய். வாரத்திற்கு ஒன்றாவது பார்த்திருந்தோம்.

பத்தாவது படிக்கும் போது பள்ளிக்கூடத்திலிருந்து கிளம்பும் போது நானும் குந்தவியும் நாளைக்கு இன்னது படித்து முடிக்க யோசித்து வீட்டுக்கு வந்தால் அம்மா சினிமாவுக்கு கிளம்பிக் கொண்டிருப்பார். படிக்கணுமேன்னு லேசாக இழுத்தால், ராத்திரி வந்து படிச்சுக்கப்பா... எல்லா நேரமும் என்ன படிப்பு என்று கூட்டிப் போய்விடுவார். மறு நாள் காலையில் முழுதாக முடிக்க முடியவில்லை என்று குந்தவிக்கு காரணம் சொல்லும் போது அவளால் நம்பவே முடியாது. அவள் வீட்டில் சினிமா என்ற பேச்சே ஆகாது!

கல்லூரிக்கு போன பிறகும் கூட எங்களுடைய ஆறு பேர் க்ரூப்பில் யார் வீட்டிலும் சினிமா பார்க்க அனுமதியில்லை. மூன்றாவது செமஸ்டர் ஹோலி பண்டிகைக்காக முதல் முதலாக கட் அடித்து பார்த்த முந்தானை முடிச்சில் ஆரம்பித்து மீதி ஒன்றரை வருடத்தில் பார்த்தது எல்லாம் வீட்டில் அம்மாவோடு ஒருதரம், காலேஜில் கட்டடித்து ஒரு தரம். நாற்பத்தி ஏழு படங்கள் பார்த்ததாக ஒரு லிஸ்ட் போட்டதும், கடைசி செமஸ்டரில் அட்டெண்டென்ஸ் போதாததும் நினைக்கும் போது சின்னதாக ஒரு சிரிப்பு வருகிறது.

டிக் டிக் டிக் பார்த்து வீட்டுக்கு வரும்போது காதல் கடிதம் அப்பாவிடம் மாட்டிக் கொண்டு டோஸ் வாங்கினது, ரிலீஸ் ஆன சமயத்தில் வயது போதாது என்று என்னை கழட்டி விட்டுப் போன தப்புத்தாளங்களை எப்போதுமே பார்க்க முடியாமல் போனது, கட் அடித்துப் பார்த்த நாற்பத்தி ஏழு படங்களின் போதும் இன்னைக்கு மாட்டிக்கப் போறேன் என்று பயந்திருந்த மாதிரி ஒரு தடவை கூட ஆகாதது, ஒரு ஞாயிறு மதியம் முதல் மரியாதை பார்த்துக் கொண்டு இருக்கும் போது கரெண்ட் போய்விட எதிர் வீட்டில் மீதிப் படத்தை முடித்து வீட்டுப் படி ஏறும் போதே 'எனக்கு உள்ளே போரடிக்கிறது' என்று அலார்ம் அடித்ததில் குறைப் பிரசவத்தில் மகளைப் பெற்றெடுத்தது... மறக்க முடியாதது.

வட இந்திய வாழ்க்கையில் அறிமுகமான ராஜ்கபூர், தேவ் ஆனந்த், வைஜயந்தி மாலா படங்களைத் தேடித் தேடி பார்த்தது... எங்கே கலைப்படங்களுக்கு தடம் மாறினேன் என்று நினைவில்லை. அவற்றோடு அதிகம் தொடர்பு கொள்ள முடிந்தது. பிறகு பெங்காலி படங்கள். அதிலே தெரிந்த ரியாலிட்டி, வித்தியாசமான முயற்சிகள், சென்னை நண்பர்கள் அறிமுகப் படுத்திய உலகப்படங்கள்... இத்தனை வருஷங்களில் எத்தனை படங்கள்! சினிமா ஒரு எஸ்கேபிஸம். அம்மாவுக்கும் அப்படித்தான் இருந்திருக்க வேண்டும்.


Wednesday, October 15, 2008

புத்தகங்களோடு நான்

மற்ற நேரங்களில் தோணுகிறதோ இல்லையோ தொடர் விளையாட்டுகளுக்கு எப்போதும் மறுப்பில்லை. ராம்கிக்கு நன்றி.



1. நீங்கள்
படிக்க நேர்ந்த முதல் நாவல் எது?

நினைவில்லை. ஐந்தாவதோ ஆறாவதோ படிக்கும் போது பொழுது போகாமல் வாசிக்க ஆரம்பித்த சாருலதா வாக இருக்கலாம். கல்கியிலிருந்து கிழித்த பக்கங்களை பைண்ட் பண்ணி அம்மா வைத்திருந்தது. கதாநாயகி குதிரை மேல் உட்கார்ந்திருக்க, ஊட்டியில் நடப்பதாக வரும் கதை.

2. எந்த வயதிலிருந்து நாவல்கள் படிக்க ஆரம்பித்தீர்கள்?

பத்து பதினோரு வயதிலிருந்து இருக்கலாம். சுவாரசியமாக வாசிக்க ஆரம்பித்தது பதின்ம வயதுகளின் தொடக்கத்தில் கௌரியோடு சேர்ந்து. ரெண்டு பேரும் சேர்ந்து வாசிப்பதும் அதைப் பற்றி பேசுவதுமாய்... அந்த வெகுளித்தனம், ஆர்வம் எல்லாமே தனி.

3. எந்த வகையான நாவல்கள் உங்களுக்குப் பிடிக்கிறது?

வாசிக்க ஆரம்பித்த காலங்களில் எது கிடைத்தாலும் வாசித்திருக்கிறேன். இப்போது வாசித்ததில் பிடிக்கும் எழுத்தாளர்களின் எந்த மாதிரியான படைப்பும் வாசிக்கப் பிடிக்கிறது.

4. ஒரு நாவலை எப்படி படிக்க தேர்ந்தெடுக்கிறீர்கள்?

அ. ஏற்கனவே அந்த நாவலைப் படிக்க நேர்ந்தவர்கள் சொல்லக் கேட்டு

இ. நாவலாசிரியரின் பேரைப் பார்த்து

உ. புத்தகத்தின் வடிவமைப்பையும், அட்டையையும் பார்த்து (ரொம்ப சில நேரங்களில் இதுவும்)

5. நாவல்களுக்கும், சிறுகதைகளுக்கும் உள்ள வித்தியாசம் என்ன என்று நினைக்கிறீர்கள்?

அ. பக்க அளவு

6. நாவல்களைப் படிக்கிற போக்கில் குறிப்பிட்ட கதாபாத்திரங்கள் கதையின் மையப் பாத்திரமாக எப்படி உருவெடுக்கிறது?

எழுத்தாளர் முன்வைப்பதிலிருந்து தான்.

7. ஒரு நாவலுக்கு, குறிப்பாக எத்தனை பக்கங்கள் இருக்கலாம் என்று கருதுகிறீர்கள்?

முன்னூறு நானூறு பக்கங்களாவது.

8. மிக அதிகமான பக்கங்கள் உள்ள நாவல்களைப் பார்த்ததும் என்ன தோன்றுகிறது?

ரொம்ப பெரிய நாவல் அதற்கான தருணத்திற்கு சலிக்காமல் காத்திருக்கும்.

9. நாவலின் சில அத்தியாயங்களைப் படித்ததுமே, இறுதிப்பக்கங்களுக்குச் செல்லும் வழக்கமுண்டா?

எப்போதும் இல்லை.

10. எந்த சமயங்களை நாவல்கள் படிக்கத் தேர்ந்தெடுத்துக் கொள்கிறீர்கள்?

தனிமை வாய்க்கும் போதெல்லாம்.

11. பாதி வரைப் படித்து, முடிக்காமல் போன நாவல்கள் எவை?

சிலது இருக்கிறது, ஆனால் முடித்துவிடுவேன்.

12. பெரும் எதிர்பார்ப்புடன் படித்து, பிடிக்காமல் போன நாவல்கள் எவை?

பிடிக்காமல் போனது என்று சொல்வதற்கில்லை... எதிர்பார்த்த அளவு இல்லாமல் இருந்திருக்கிறது.

13. தாங்கள் படிக்க நினைத்து இதுவரை படிக்காமலே இருக்கிற நாவல்கள் எவை?

ஜெமோவின் விஷ்ணுபுரம், கொற்றவை

14. படித்ததில் பிடித்த பத்து தமிழ் நாவல்கள் எவை?

ஆரம்பகால பாலகுமாரன் நாவல்கள், தி.ஜா, சாண்டில்யன், கல்கி, ஆதவன், ஜெமோ... பத்திலெல்லாம் அடங்காது.

15. படித்ததில் பிடித்த பத்து பிற இந்திய மொழி நாவல்கள் எவை?

தமிழ் தவிர வேறு இந்திய மொழிகள் எதிலும் வாசிக்கத் தெரியாது

16. படித்ததில் பிடித்த பத்து வெளிநாட்டு நாவல்கள எவை?

Ayn Rand , ஆங்கில ரமணிச்சந்திரன் என்று தெரியாமல் ஆரம்பகாலத்தில் வாசித்த Danielle Steel.

17. திரும்பத் திரும்ப படித்த நாவல்கள் எவை?

மோகமுள், மெர்க்குரிப்பூக்கள், இரும்பு குதிரைகள்...

18. படிக்கும் முன்னரோ, படித்த பின்னரோ நாவலின் தலைப்புகள் குறித்து யோசிப்பது உண்டா?

சிலநேரங்களில்.

19. நாவல்களில் வந்த கதாபாத்திரங்களை தங்கள் லட்சிய மனிதர்களாக வரித்துக் கொண்டதுண்டா? அப்படி இருந்தால் குறிப்பிடுங்களேன்.

பாலகுமாரனின் ஆண் கதாபாத்திரங்களில், குறிப்பாக கரையோர முதலைகள் ஹீரோ, மயங்கிய விடலை பருவங்களில் அப்படி ஒரு ஆளை சந்திக்க வேண்டும் என்ற ஆசை இருந்தது. லட்சிய மனிதராக யாரும் இருந்ததில்லை.

20. பிற மொழி நாவல்களுக்கும் தமிழ்மொழி நாவல்களுக்கும் என்ன வித்தியாசங்களை உணர்கிறீர்கள்?

பெரிதாக எதும் உணர்ந்ததில்லை.

21. உலகின் பிறமொழிகளுக்கு எடுத்துச் செல்லப்பட வேண்டும் என கருதிய தமிழ் நாவல்கள் எவை?

ரொம்ப ரசிக்கும் எந்த எழுத்தும்.

22. வாசித்ததில் தங்களது இயல்பு நிலையை வெகுவாக தொந்தரவு செய்த நாவல்கள் எவை?

ரத்த உறவு, ஏழாம் உலகம்.

23. கதாபாத்திரங்களின் உரையாடல் எப்படி இருக்க வேண்டும்?

ஆ.பேச்சு வழக்கு

24. தாங்கள் இதுவரையில் வாசித்த நாவல்களில் பிடிபடும் பொதுத்தன்மைகள் எவை எவை?

இதுவரை அந்த கோணத்தில் யோசித்ததில்லை. ஒன்றோடு ஒன்றை தொடர்பு படுத்திப் பார்த்ததில்லை.

25. எந்த நாவல்களைப் படித்ததும், அவற்றை எழுதிய எழுத்தாளரை சந்திக்க வேண்டும் என்று தோன்றியது?

ஆரம்பகாலங்களில் பாலகுமாரன்.

26. தாங்கள் நாவல்களை தொடர்ந்து ஒரே மூச்சில் படிப்பீர்களா? அல்லது விட்டு விட்டு பல்வேறு சமயங்களில் படிப்பீர்களா?

நாவல்களை வாசிக்க தனிமை வேண்டும்.

27. உள்ளடக்கத்திற்காக மட்டுமின்றி மொழிநடைக்காகவே லயித்துப் படிப்பது யார் யாருடைய நாவல்களை?

சமீபகாலங்களில் வாசிக்கும் எல்லாவற்றிலும் உள்ளடகத்தை விட மொழிநடை ரசிப்பே பிரதானமாயிருக்கிறது.

28. கதாபாத்திரங்களின் இயல்பு மீறி, நாவலாசிரியரே வலிந்து பேசுவது போல தோன்றியிருக்கிறதா. அப்படியானால், அந்த நாவல்கள் பற்றி உங்கள் அபிப்ராயம் என்னவாகிறது?

ரொம்ப சில நேரங்களில்.

29. நாயகத் தன்மையற்ற நாவல்களைப் படித்திருக்கிறீர்களா? குறிப்பிடுங்களேன்.

இல்லையென்றே தோண்றுகிறது.

30. கவிதை, சிறுகதைகளைத் தாண்டி, நாவல்கள்தான் இலக்கியத்தின் உச்சம் என்று கருதுகிறீர்களா?

இல்லை.

31. தாங்கள் கடைசியாக படித்த தமிழ்நாவல் எது?

கன்னியாகுமரி - ஜெமோ.

32. நாமும் ஒரு நாவல் எழுதவேண்டும் என்று உங்களுக்குத் தோன்றுவதுண்டா?

இதுவரை இல்லை. சுயசரிதை எழுத ஆசை உண்டு.


தொடர விரும்பும் எல்லோருக்கும் அழைப்பு...



Thursday, October 09, 2008

பெயர்தல் குறிப்புகள்


நான் உடல்பெயர்கிறேன்
இடமும் பெயர்கிறேன்
பறந்து

மார்புகளை துறக்கும் நேரம்
சிறகுகள் முளைத்துவிடுமென்று
எனக்கு நிச்சயமாகத் தெரியும்

மனுஷிக்காய் சுமந்ததை
துவாரங்களில் வடியவிட்டு
லேசாகியிருப்பேன்

ஞாபகங்களை செறிவூட்டி
நீல நிற தீற்றலாய் சேர்த்திருப்பேன்

உருமாறும் கடைசி கணம்
மிஞ்சியிருக்கும்
காதலோ குரோதமோ
கொண்டதோர் பறவையாகி...

கழியும் யுகங்களின் ஓர்
சாயும் வேளை
கூட்டத்தில் சேராத
நீல மூக்கு கழுகையோ
நீலம் பாரித்த குருவியையோ
என் பேர் சொல்லி கூப்பிடு
முழுதும் துறக்க முடியாதெனக்கு.


நன்றி : வார்த்தை.

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது