Thursday, April 27, 2017

ஒரு முகமூடியின் ஒப்புதல் வாக்குமூலம் - யுகியோ மிஷிமா. தமிழில் கார்த்திகைப் பாண்டியன்

சமீபகாலத்தில் இரண்டே நாட்களில் வாசித்து முடித்தது இந்தப் புத்தகத்தைத்தான். புதினங்கள் மெல்ல அதன் சுவாரசியத்தை இழக்க நிஜங்களைச் சொல்லும் எழுத்துகள் அந்த இடத்தை நிரப்பிக் கொள்ளத் தொடங்கிவிட்டது. சுய சரிதை என்பதுதான் முதல் கொக்கி. பிறழ்ந்த காமம் இரண்டாவது. அதிர்ச்சியோ முன்முடிவுகளோ இல்லாமல் வாசிக்க முடியும் என்பதில் சந்தேகமில்லாததால்தான் ஆரம்பித்திருந்தேன். தெரிந்த விஷயங்களும் என் எல்லைகளை மீறிச் சென்றவைகளையும் வாசிப்பதில் இருந்த ஆர்வம் உள்ளே இழுத்துக் கொண்டது.

1930களில் பிறழ்ந்த காமம் எந்த சமுதாயத்திற்குமே ஜீரணிக்க முடிந்திருக்காது. தானே அதை புரிந்து கொள்ள முயற்சித்ததும் உறுதி செய்து கொண்டதுமான போராட்டம்தான் இந்த புத்தகம். எல்லோருமே ஒன்றின் மேலொன்றாக முகமூடிகளோடிருக்க தான் மட்டும் ஒரு அசாதாரண, கூடுதல் முகமூடி அணிந்து கொள்ள வேண்டி வந்தது பெரிய உறுத்தலாகிறது. சுற்றியுள்ள மொத்த உலகமும் ஒரு ஒழுக்கில் ஓடிக் கொண்டிருக்க தான் மட்டும் வேறு. அதை யாரிடமும் சொல்ல முடியாத போது இப்படியாகத்தான் பதிந்து வைக்க வேண்டியிருந்திருக்கும். அதை ஒரு வெறித்தனத்தோடு கொஞ்சமும் பாசாங்கில்லாமல் மேசையிலிட்டு கிழித்து பரப்பி வைப்பதில் ஒரு சுயவதை, ஒரு திருப்தி. அத்தனை கால தனிமையையும் துயரத்தையும் இப்படி அல்லாமல் வேறெப்படியும் வெல்ல இயலாதுதான்.

ஆரோக்கியம் குன்றிய உடல், தனிமைப் படுத்தப்பட்ட நாட்கள், வாசிப்பு, தன்னை அறிதல் என்று நீளும் புத்தகத்திற்கு இரண்டு மொழிகள். எளிமையாக சொல்லிக் கொண்டே போகும் மொழி அங்கங்கே மடங்கி மடங்கி முடிவில்லாமல் நீள்கிறது. முடியாத வரிகளில் தொலைந்து போகும் போது வருவது நிச்சயமாக ஆர்வம் அல்ல, பெரும் சலிப்பு. அது மூல நூலின் மொழியா, மொழிபெயர்ப்பாளருடையதா தெரியவில்லை. மூல நூலுடையதாக இருக்கும் பட்சத்திலும் வாக்கியங்களை சுருக்கும் சலுகை மொழிபெயர்ப்பாளருக்கு இருக்கும் என்றே நினைக்கிறேன். ஏழெட்டு வரிகளுக்கு நீளூம் வாக்கியங்களும் வார்த்தைகளின் நேரடி மொழிபெயர்ப்புகளும் பெரிய குறை.


 //ஒருவிசயத்தை அதன் மொத்தமும் தவறானது என்று தீர்மாணிப்பது அதன் எந்தப் பகுதி உண்மையானது அல்லது எது பொய்யானது போன்ற சந்தேகங்களால் என்னைச் சித்திரவதை செய்வதை விடச் சற்றே வலி குறைந்தது என்பதைக் கண்டறிந்து விட்டதால், நிதானமாக முகமூடிகளைக் களைவதன் மூலம் என் பொய்மையை எனக்குணர்ந்திய இந்த வழிமுறைக்கு ஏற்கனவே நான் மெல்ல மெல்ல பழகியிருந்தேன்//

//தொண தொணக்கும் பெட்டி//

// மேலும் ஒழுங்கீனம்தான் என்னுடைய இயல்பின் அடிப்படையாகவும் முழுமுதற் கொள்கையாகவும் இருந்ததால், ஒரு பெண்ணுடனான குற்றம் சொல்லவியலாத உறவில், எனது நன்மதிப்புக்குரிய நடத்தையில், மேலும் உயரிய கொள்கைகளையுடைய மனிதனாக நம்பப்படுவதில், நல்லொழுக்கம் நிரம்பிய தீவிர உணர்வை நான் கண்டுபிடித்தேன்.//


ஆனாலும் இரண்டே நாட்களில் வாசித்து முடித்தேன்.