Monday, December 10, 2007

ஹிந்து ம்யூஸிக் ஃபெஸ்ட் -- 2

ஹிந்து ம்யூசிக் ஃபெஸ்ட்.... சென்ற முறை இதைப் பார்த்தது, எழுதினது, குங்குமத்திற்காக கச்சேரிகள் போனது, இனிய நண்பர் சக்ரபாணி அறிமுகமானது... இப்படி நிறைய காரணங்களால் மனதிற்கு ரொம்ப நெருக்கமானது. இந்த வருடமும் அதே ம்யூஸிக் அகடமி, சீஸன் டிக்கெட், முதல் வரிசை, அதே மிஸஸ். ஒய்ஜிபி, இலவச AVT பிரீமியம் காபி... நான் தான் அதே நானில்லை. சென்ற முறை இருந்த பிரமிப்பு போய் சகஜ மனப்பான்மை வந்ததில் கொஞ்சம் இழப்புதான். எனக்கு எல்லாமே சீக்கிரம் நிறம் ஒரு ஷேட் மாறிப் போய்விடுகிறது!

முதல் நாள் பாகிஸ்தானி தந்தை மகன் ஜோடி. உஸ்தாத் ஃபதேஹ் அலி கான் மற்றும் ருஸ்தம் அலி. பட்டியாலா கரானா பாணி. அப்பா நிறைகுட அமைதி, மகனின் ஷோமேன் முயற்சிகள்... தீபாவளி சரவெடி. சற்றே இரைச்சல் போல தோற்றம். கவர்னர் சங்கீதம் கேட்க வந்ததால் ம்யூஸிக் அகடமி டிடெக்டரும் செக்யூரிட்டியுமாய் அமர்க்களப்பட்டது. நண்பர் இரா. முருகனை ரொம்ப நாள் கழித்து பார்க்கக் கிடைத்தது. கையில் ஒரு மலையாள நாவலுடன்... மனுஷர் மாறவேயில்லை, அதே புன்னகை அதே சந்தோஷம்!

இரண்டாம் நாள் சிக்கில் குருசரண், அனில் ஸ்ரீனிவாசன் (பியானிஸ்ட்). அவர்களுடைய 'colour of rain' ஆல்பத்திலிருந்து ஒரு அழகான தமிழ் பாடலுடன் தொடங்கி முழு நீள தமிழ் பாடல்கள் கச்சேரி. குரலோடு இணைந்து செல்வதே தெரியாமல் இழையும் அனிலின் கைவண்ணம், எங்கேயுமே தன்னை முன்னிருந்தாமல், அட்சர சுத்தமாக பாடும் பாடகருக்கு மேடையமைத்துச் சென்றது. கொஞ்சம் பாரதியும், பெரும்பாலும் கேட்டிருந்த தமிழ் பாடல்களுமாய்... முழு ராக ஆலாபனையாக இல்லாமல், அதிகம் எளிமைப் படுத்தியும் விடாமல். குரலின் வசீகரம் எங்கேயோ மூடிக்கிடந்த கதவுகளைத் திறக்க கசியும் கண்களை துடைக்கும் சந்தர்ப்பங்கள் வாய்த்தது. ரொம்ப ஸ்லோ கச்சேரி என்று காதில் விழுந்த லேசான முணுமுணுப்புகளை முற்றாக புறக்கணித்து விடலாம். மைலாப்பூர் பட்டுச்சேலைகளெல்லாம் இடைவேளைக்குப் பின் காணவில்லை. 'சின்னஞ்சிறு பெண் போலே', ' சுட்டும் விழிச் சுடராய்'... 'அதரம் மதுரம்'... எல்லாமே மதுரம்!

மூன்றாம் நாள் பண்டிட் ராஜன் மிஸ்ரா, சாஜன் மிஸ்ரா சகோதரர்கள். வெண்பட்டு தலைமுடி. ஒரே மாதிரி சில்க் குர்த்தா. க்ளாசிக்கல் ஹிந்துஸ்தானி கச்சேரி. இளையவர் ராஜன் மிஸ்ரா சந்தோஷமாய் பாட மூத்தவர் தேவைப் பட்ட இடத்தில் ஜோடி சேர்ந்து கொண்டார். எந்த எளிமைப் படுத்துதலுமின்றி கட்டமைப்பிற்குள்ளே நீண்ட இசைப் பயணம். தவறாக இடை மறித்த கைத்தட்டல்களை மென்மையாக மறுக்கும் கண்டிப்பு. முதல் வரிசையில் உட்கார்ந்து கொண்டு ஹிந்தி வார்த்தைகளை புரிந்து கொண்டேனாக்கும் என்று ஆராவாரம் செய்து கொண்டிருந்தவரை என்னவேணாலும் செய்யலாம். ஒன்பதரை மணிக்கு ரசிகாஸ் விருப்பத்திற்காக தொடங்கிய தர்பாரியை எப்போது முடித்து, கடைசியாகப் பாட வைத்திருந்த பைரவியை பாடி முடித்தார்களோ நானறியேன்! பத்தரை மணிக்கு மேல் சங்கீதம் கேட்க காதுகளும் ஸ்ட்ரைக். நேரமாகிற டென்ஷன்.

வியாழக்கிழமை ஹரிஹரன், மாண்டலின் ஸ்ரீனிவாஸ் கஸல்பந்தி. சிட்டையாக சம்மணமிட்டு உட்கார்ந்த ஹரிஹரனை பார்க்க புதிதாக இருந்தது. சில நேரங்களில் மேடையிலிருப்பவர்களின் ஆளுமை வீச்சில் மற்றதெல்லாம் மறந்து போகும்... இந்தக் கச்சேரியும் அப்படித்தான். முதல் முதலாக ஸ்ரீனிவாஸைக் கேட்டது, அந்த வாத்தியம் விரல்களில் குழைந்தது, சீனியருக்கு வழிவிட்டு அடக்கியே வாசித்தது... எல்லாமே 'ஹரிஹரன் முன்னால் உட்கார்ந்து பாடுகிறார்' என்பதில் ரொம்பவே அடிபட்டுப் போனது. நேரத்தை இரண்டு பேரும் பகிர்ந்து கொண்டதில் யாரையுமே முழுமையாக ரசிக்க முடியவில்லை. 'உயிரே' பாடச் சொல்லிய குரல்களுக்கு, 'இங்கேயா?! சினிமாப்பாட்டா?!'... ஆச்சரியத்தோடு நாசுக்கான மறுப்பு. ரொம்ப எதிர்பார்த்து நானே சொதப்பிக் கொண்ட கச்சேரி. பாரதியார் பாட்டில் உச்சரிப்புப் பிழை நிரடியது. ஹரிஹரன் கொஞ்சம் கவனித்திருக்கலாம். என்னையும் கொஞ்சம் கச்சேரி கேட்க விட்டிருக்கலாம்!

வெள்ளிக் கிழமை 'ம்ருக்யா' - ஃப்யூஷன். ஒரு வயலின், இரண்டு பேஸ் கிடார், ஒரு கீபோர்ட், ஒரு பெர்கர்ஷனிஸ்ட், ஒரு ஆண் குரல், ஒரு பெண் குரல். வழக்கம் போல வயலின் கொஞ்சியது. ஒரு பேஸ் கிடாரிஸ்ட் கொஞ்சம் இசை அறிமுகம், உறுப்பினர் அறிமுகம் செய்து கொண்டிருக்க மற்றவர், 'என் பணி வாசித்துக் கிடப்பதே'... ஒரு சிலிர்ப்பில்லை, ஒரு மலர்ச்சியில்லை... ஆனாலும் ஒரு ஆழ்கடல் அமைதி... இருபதுகளில் இருந்த அவர் Fountain Head, Roark ஐ நினைவு படுத்திப் போனார். சுக்ருதி சென் குரல்... அல்ட்ரா மாடர்ன் அழகியின் நீண்ட ஒற்றைப் பின்னல் மாதிரி, ம்ருக்யாவிற்கு. தேன் குரல் இழுத்த இழுப்பிற்கெல்லாம் இசைந்தது. குலாம் காதர், ரசிகர்களுக்கு குலாம் பாய் ஆகிப் போனதில் சந்தோஷமான பாடல்கள் கேட்கக் கிடைத்தது. 'மஸ்த் கலந்தர்'க்கு மொத்த அகடமியும் கொண்டாட்டம் போட்டது. அத்தனையையும் ரசித்துவிட்டு் போன வருஷம் கேட்ட Indian Ocean ஐயும் ஞாபகப் படுத்திக் கொண்டது தேவையில்லைதான்.

சனிக்கிழமை ட்ரெடிஷனல் க்ராஸ்ஓவர்... தி ஃபாரஸ்ட், கொரியன் ட்ரூப். மேடை நிறைய வாத்தியங்களும் வாசிப்பவர்களும். சொந்த பாஷையில் குழுவின் கிடாரிஸ்ட் நீளமாகப் பேசிக் கொண்டு போக, மொழிபெயர்ப்பாளர் சுருக்கமாக மொழிபெயர்த்து காப்பாற்றினார். சின்னச் சின்ன அறிமுகங்கள் மட்டும் போதுமே என்று யாராவது அவருக்கு சொல்லிக் கொடுத்தால் தேவலை! மேடை நடுவில் மெல்லிய உடலும் சிறிய உருவமுமாய் ஒரு நாட்டுப்புற இசைக்கருவியை இழைந்து இழைந்து வாசித்த பெண்ணின் இசை அரங்கம் பூராவும் நிறைந்திருந்தது. நினைத்த மாத்திரத்தில் இப்போதும் காதில் ஒலிக்கிறது. குழல் வாத்தியங்கள், தந்தி வாத்தியங்கள் எல்லாமே காத்திரமாக தனித்து ஒலித்தன. சுலபமாக ஒன்றிரண்டு வாத்தியங்கள் வாசிக்கிறார்கள். சமயத்தில் பாடவும் செய்கிறார்கள். கண்ணுக்குத் தெரியாத ஒரு கயிற்றில் கட்டி மொத்த ட்ரூப்பும் சேர்ந்து ஒரு லயத்தோடு என்னை இழுத்துக் கொண்டிருந்தது போலிருந்தது. இழுபட்ட சுகம்... ஜூம்... ஜூம்... ஜூம்!

கடைசி நாள் இண்டியன் ஃப்யூஷன். த்ரிலோக், ப்ரஸன்னா, விக்கு வினாயக் ராம், மற்றும் செல்வ கணேஷ். ரொம்ப உரிமையோடு கலைஞர்களோடு மேலேருந்து உரையாடல்கள். சரியா கேட்கலைன்னு ஒரு குரல் வந்தது தான் தாமதம் த்ரிலோக் சலித்துக் கொள்ள சந்தர்ப்பம் கிடைத்து விட்டது. கூட ப்ரஸன்னாவும் சேர்ந்து கொள்ள ம்யூஸிக் அகடமி ஒலி அமைப்பாளர்களுக்கு தர்ம குட்டு. பெர்கர்ஷனிஸ்ட் த்ரிலோக், செல்வ கணேஷ் கஞ்சிரா கொஞ்சம் விளையாட்டு காட்டியது. விக்குவின் கடம் பதவிசாக உள்ளே நுழைந்து தன் பங்கு கைதட்டல்கள் வாங்கி விலகிக் கொள்ள இளையவர்கள் கூட்டணி களைகட்டிக் கொண்டது. சும்மா கேட்க வந்த சிவமணியை மேடைக்கழைத்து மரியாதை செய்ய, ரசிகர்களின் வற்புறுத்தலுக்காக வாசிக்க, 'ஹேய் இது ரொம்ப நல்லாயிருக்கே!' என்றிருந்தது.

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மாதிரி ரசிகர்கள். ஒவ்வொரு மாதிரி சங்கீதம். எல்லாமும் கேட்டதும் ரசிக்க முடிந்ததும் சுகம். இலக்கணம், ராகம் என்ற தேடல்கள் இல்லாமல் தன்னிச்சையாக ரசிக்க முடிந்தது நிறைவாக இருந்தது. ஏழு நாட்கள் மாலை வெளியே செலவழிக்க செய்ய வேண்டிய முன்னேற்பாடுகள் சிரமமாக இருந்தாலும் முடியும் போது அவ்வளவு தானா என்று தோன்றுவது தவிர்க்க முடிவதில்லை. அடுத்த வருஷத்திற்கான எதிர்பார்ப்பு தொடங்கிவிட்டது... நிறம் இன்னொரு ஷேட் மாறினாலும்!

Monday, November 26, 2007

பரோமா - The Ultimate Woman (1984)

பரோமா... சென்ற முறை கொல்கத்தா சென்றிருந்த போது பார்த்தது. 'ஒரு நல்ல படம் பார்ப்பவருடைய சூழலை மறக்கடித்து தனக்குள் இழுத்துக் கொள்ள வேண்டும்' என்று எங்கேயோ வாசித்தது நினைவிற்கு வருகிறது. அது போல உள்ளே இழுத்துக் கொண்ட சில புத்தகங்களூம் உண்டு. வாசித்துக் கொண்டிருக்கும் நாட்களில் முழுதாக ஆக்ரமித்துக் கொண்டு, சில நேரம் அந்த கேரக்டர்களோடு நீளமாக விவாதிக்க வைத்து... வாசித்து முடித்து விட்டால் அந்த கேரக்டரை தினப்படி சந்திப்பிருக்க வாய்ப்பில்லையென்று முடித்து விடாமல் நீட்டிச் சென்ற கிறுக்குத்தனங்களூம் உண்டு.

Back to topic... அபர்ணா சென் இயக்கி ராக்கி 'பரோமா' வாக நடித்தது. இதை வாசிப்பவர்களுக்கு இந்தப் படத்தை பார்க்கும் வாய்ப்பு குறைவு என்பதால் (கலெக்டர்ஸ் லிஸ்டிலெல்லாம் வரும் என்று தோணவில்லை!) உரிமை எடுத்து கதையைப் பற்றியும் பேச உத்தேசம். இத்தனை நாட்களுக்கு பிறகு அந்தப் படம் எவ்வளவு தூரம் தன்னை unfold செய்யும் என்று தெரியவில்லை.

ஒரு துர்க்கா பூஜை நாளில் தொடங்கும் கதை. ஃபாரின் ரிட்டர்ன் பெங்காலி புகைப்படக்காரர் ராகுல்... வயது பின்னிருபதுகளில்... அவரும் அவருடைய வெளிநாட்டு உதவியாளரும் அந்த நாளின் நிகழ்வுகளை படம் பிடித்துக் கொண்டிருக்கும் போது கதைக்குள் நுழையும் பரோமா... நாற்பதுகளில், ஒரு டிபிகல் பெங்காலி குடும்பத்தலைவி். எல்லோரும் மரியாதையாக 'பௌதி' என்று கூப்பிட்டுக் கொண்டிருக்க முதல் அறிமுகத்தில் பரோமா என்று ராகுல் பெயர் சொல்லி அழைக்கும் போது கொஞ்சம் அதிர்ச்சியும் ஆச்சர்யமுமாய் தலை நிமிர்த்திப் பார்த்து ... மறுக்க வேண்டுமா கூடாதா என்ற ஒரு குழப்பம்... இப்போதும் நினைவிருக்கும் ஒரு அழகான காட்சி.

புகைப்படக்காரர் ஒரு அழகான பெங்காலி பெண்ணைப் பற்றி புகைப்படம் சேகரிக்கிறேன் நீங்கள் மாடலாக இருக்க வேண்டும் என்று விண்ணப்பிக்க, மறுக்கும் அவளை முழு குடும்பமும் சம்மதிக்க வைக்கிறது. கணவன் அலுவலக வேலையாக பாம்பே போய் விட, வீட்டில் இருக்கும் வயதான மாமியார் வேறு ஆள் வருகையை அவ்வளவாக ரசிக்காது முகம் சுழிக்க, ஆரம்பத்தில் அட்ஜஸ்ட் செய்து கொள்ள சிரமப்படும் அவள் மெல்ல அவனோடு நெருக்கமாகிறாள். புகைப்படம் எடுக்கையில் அங்கிங்கே தொடுவதற்கு முதலில் தெரிவிக்கும் மறுப்பு பின்னர் சகஜமாகிறது.

நீண்ட உரையாடல்களில் அவள் சிறப்புகளை சிலாகிக்கும் அவன், மறந்தே போயிருக்கும் அவளை அவளுக்கு நினைவு படுத்துகிறான். சிதிலமாகிக் கொண்டிருக்கும் அவளுடைய அம்மா வீட்டின் மாடியறையில் முதல் முதலாக அவன் அவளைத் தொடுவதும், நெருக்கம் அடுத்த கட்டத்திற்கு போக முற்படுகையில் மறுத்து விலகும் அவள், அவனை தவிர்க்க முடியாமல் சேர்கிறாள். வீட்டிலிருக்கும் மாமியாரை சமாளித்து அவனோடு அதிக நேரம் செலவிடுகிறாள். ஒரே ஒரு சினேகிதிக்கு மட்டும் தெரிந்து தொடரும் உறவு அவன் திரும்பிச் செல்ல வேண்டிய நாள் வர, அவளையும் கூட வரச் சொல்கிறான். போக ஆசையிருந்தாலும் மறுத்து விடுகிறாள். சினேகிதியின் விலாசத்தில் கடிதத் தொடர்பு கொள்வதாக ஏற்பாடு. ஒன்றிரண்டு கடிதமும் வருகிறது. டூர் போயிருந்த கணவரும் திரும்பி வர, நடந்ததை ஒரு நல்ல கனவாக நினைத்து நிஜத்தோடு தன்னை பொருத்திக் கொள்ள தொடங்குகிறாள். புகைப்படங்களை வெளியிட்ட ஆங்கிலப் பத்திரிகையை அவளுடைய வீட்டு விலாசத்திற்கு ராகுல் அனுப்பி வைக்கிறான். அதிலிருந்த அவளுடைய ஒரு கவர்ச்சி புகைப்படத்தால் வீட்டிலும் வெளியிலும் வெடிக்கும் பூகம்பமும் அதிலிருந்து அவள் மீள்வதுமாய் முடிகிறது.

ஒரு கட்டத்திலிருந்து இன்னொரு கட்டத்திற்கு அந்த உறவு நகர்வது ரொம்ப இயல்பாக, எங்கேயும் லாஜிக் இடிக்காமல் போகிறது. ஒரு டிபிகல் பெங்காலிப் பெண், அதற்கு முன் வரை அப்படி ஒன்றாக தான் ஆவேன் என்று நினைக்காத பெண்ணின் வாழ்க்கையில் இப்படி நடப்பதும், அதை அவள் எதிர்கொள்வதும்... அவளுடைய குடும்பத்தின் ரியாக்ஷனும்... எல்லோருடைய பார்வையிலும் முழுதாக நியாயப் படுத்தப் பட்டிருந்தது. எல்லா கேரக்டரோடும் தொடர்பு படுத்திக் கொள்ள முடிவது வழக்கமாக நேர்வதில்லை.

குறிப்பிட்ட சில இயக்குனர்களின் எல்லா பெங்காலி படங்களிலுமே இயல்பு வாழ்கை அழகாக பதிவதாக உணர முடிந்திருக்கிறது. அது இதிலும். அந்த கேரக்டரை ராக்கியைத் தவிர வேறு யார் எப்படி செய்திருக்க முடியும் என்ற யோசனை சுற்றிச் சுற்றி அவரிடமே வந்து நிற்கிறது! ஒரு சின்ன கண்ணசைவு, உடலசைவு நிறைய விஷயம் பேசுகிறது. தொய்வில்லாமல் போகும் திரைக்கதை. பாஷை புரியாமல் பார்க்கும் போதும் அதிகம் இடரலில்லாமல் தொடர முடிந்தது. சந்தர்ப்பம் கிடைத்தால் மறுபடியும் ஒரு தரம் பார்க்க வேண்டும் என்று குறித்து வைத்திருக்கிறேன்.

Friday, November 02, 2007

காது வேட்டை

முடிந்து போனதற்காய் தவித்த பொழுதில்
முதல் காதல் படபடப்பில்
தடம் மாறி யோசனைகள்
உதித்த கணத்தில்

இப்படியொன்றில் தான்
தொடங்கியிருக்க வேண்டுமென்
காது வேட்டை

சொல்வதெல்லாம் கேட்பதாய்
கிரகிக்கவோர் மூளை கொண்டதாய்
பாரமேற்ற பிரதி யோசனை சொல்ல
குரலென்றொன்று இல்லாததாய்
அழுகையில் கரையும் வார்த்தைகளின்
அர்த்தம் தேடாததாய்...

தேடலனுபவம் தெளிவித்ததில்

ஆன்மீகக் காதுகள் வேண்டாம்
உயர்ந்து நெறியுமதன்
புருவ முடிச்சிலென்
வார்த்தைகள் சுணங்கிப் போகும்

விடலைக் காதுகள் வேண்டாம்
விளையாட்டுப் பொழுதுகளில்
துணையாயிருக்கட்டும்
என் எண்ணங்களின் கனம் தாங்க மாட்டா

என் போல் சுகித்து என் போலே துக்கிக்கும்
என்னினக் காதுகளும் வேண்டாம்
விடைகாணுமென் சூத்திரங்கள்
எழுப்பப் போகும் கண்டனங்களில்
ஏற்கனவே சலித்திருக்கிறேன்

சகவயது காதுகளில்
முதிர்ச்சி தேடுகிறேன்
முதிர்ந்த காதுகளின்
பழமையில் மிரள்கிறேன்

கல்தெய்வத்திடம் சொல்லப்படும்
ஓசையில்லா வேதனை சுமப்பவர்கள்
தேடல் முடிவில் சரணாகதியடைந்த
யாரோவின் வழித்தோன்றல்களாயிருக்கலாம்
தொடருமென் தேடலின்
தோல்வி முடிவில்
நானே தீர்வாகலாம்

என் காதுகள்...

சொல்வதெல்லாம் கேட்பதாய்
கிரகிக்கவோர் மூளை கொண்டதாய்
பாரமேற்ற பிரதி யோசனை சொல்ல
குரலென்றொன்று இல்லாததாய்
அழுகையில் கரையும் வார்த்தைகளின்
அர்த்தம் தேடாதாய்....

நன்றி: யுகமாயினி.

Friday, June 22, 2007

என்னுடைய எட்டு!

பள்ளிக்கூட நாட்களில் இருக்கும் இடம் தெரியாது... எந்த அளவு என்றால், ஆறாவது வகுப்பு பெற்றோர் சந்திப்பில் அம்மா, 'பொண்ணு எப்படிங்க?' என்று கேட்க, டீச்சர் இந்தப் பொண்ணு யாருன்னு ஒரு நிமிஷம் யோசிச்சு, நீ எந்த இடத்திலே உட்காருவே? ன்னு கேட்டும் நான் யாருன்னு தெரியாத அளவுக்கு! அப்புறமும் என்னோட இருப்பை நிலைநாட்ட எந்த முயற்சியும் எடுத்ததில்லை... இல்லைன்னு சொல்றதை விட என்ன செய்யனும்னு தெரியலை. கூட்டுக் குடும்பம்... ரொம்ப சாதாரணமான படிப்பு, பாஸானாலே சந்தோஷப்பட்டுட்டு இருந்த அக்காக்களுக்கு நடுவில் ஒன்பதாவது வகுப்பு வரை அப்படியே ஓடி... லீவ் வேகன்ஸிக்கு வந்த ஒரு இளம் ஆசிரியையின் சுவாரசியமாக படிக்க வைக்கும் சாமர்த்தியத்தில் எதிர்பார்க்காத மார்க்குகள் வாங்க ஆரம்பித்தது... அந்த போதையிலே மயங்கி படிக்கத் தொடங்கியது... பத்தாவது வகுப்பில் 443 வாங்கினது, மாநிலத்தில் முப்பத்தி ஒன்றாவது இடம், ஸ்காலர்ஷிப்பிற்கு தகுதியிருந்தால் விண்ணப்பிக்கவும் என்ற சர்டிபிகேட்டை ஊரெல்லாம் காட்டி சந்தோஷப்பட்ட அப்பா... முதல் பெரிய சந்தோஷம்.

வீம்புக்காக சேர்ந்த கம்ப்யூட்டர் கோர்ஸ்... படிப்பை விட்டு பதினோரு வருடம் ஆகிவிட்டிருந்தது... முதல் இரண்டு மாதம் சிஸ்டம் தடவின கதையெல்லாம் வெளியே சொல்ல முடியாது! தொண்ணூறு சதவிகிதம் கல்லூரி மாணவர்கள் கொண்ட இரண்டு பேட்ச், நூற்றைம்பது பேரில் முதலாவதாக வந்தது... சிடுசிடு மேனேஜர் மார்க்கெட்டில் பார்த்து சிரித்துக் கொண்டு சொன்ன போது... வாவ்!

இரண்டு வருட ஆசிரியர் பணி... எனக்கு என்னவெல்லாம் முடியும் என்று என்னை எனக்கே அடையாளம் காட்டின நாட்கள்.

யாருடைய குறுக்கீடும் இல்லாமல் வளர்த்தின பிள்ளைகள்... ஒரு கட்டத்திற்கு மேல் என்னை திணிக்காமல் வளர்த்தியது... நிறைய மாற்று கருத்துகள் எதிர்கொண்ட போதும், இன்னைக்கு ஐயாம் ஹாப்பி!

எந்த இலக்கும் வைத்துக் கொள்ளாமல் என் திருப்திக்காக மட்டும் எழுதப்படும் என் எழுத்து.

இரண்டு தரம் டிரைவிங் ஸ்கூலில் பயிற்சி பெற்றும் கார் ஓட்ட டிமிக்கி கொடுத்துக் கொண்டே இருப்பது, சமீப காலத்தில் புதிதாக ரெஸிபி எதுவும் கற்றுக் கொள்ளாமல் மசாலா பிராண்ட் மாற்றி, தக்காளியைக் கூட்டி குறைத்து என்னவோ புதுசா சமைச்சிருக்கற மாதிரி ஒரு பில்டப் கொடுப்பது, பேசியே காரியத்தை சாதிப்பது.

கட்டாயம் தர்ம மாத்து விழும்... ஆள் நகர்ந்ததும் கேலி செய்து சிரிக்கப் போகிறார்கள்... இப்படி பிழைக்கத் தெரியாம இருக்கியே... இது போன்ற சந்தர்ப்பங்களில் செய்ய நினைத்ததை மறு யோசனை இல்லாமல் செய்தது.

கல்யாணம் முடித்து டிரெயின் ஏறின எனக்கும் இன்றைய நானுக்கும் இருக்கும் வித்தியாசம்... தன்னம்பிக்கை, மினிமம் டிபெண்டன்ஸி, இளமையாக்கி வைத்திருக்கும் மனது, என் ரசனைகள், என் தேடல்கள்... எனக்கு என்னை ரொம்ப பிடித்திருக்கிறது.

எழுத உட்காரும் போது கூச்சமாக இருந்தாலும், ஆரம்பித்த பின் எட்டு மட்டும் என்பதால் நிறைய வெட்ட வேண்டி வந்தது. மொத்த நாளையும் ரீவைண்ட் பண்ணி அதிலே எல்லா நல்லதையும் பொறுக்கி எடுக்கும் போது ரொம்ப சந்தோஷமாக இருந்தது. சந்தோஷத்தைக் கொடுத்த பத்மாவுக்கு நன்றி. யாரெல்லாம் ஏற்கனவே அழைக்கப் பட்டிருக்கிறார்கள் என்று தெரியவில்லை! என் சாய்ஸ்...

துளசி
ஓசை செல்லா
தமிழ் நதி
ஜி.ராகவன்
சந்திரவதனா
ஆசிப்
மதுமிதா
அய்யனார்

விளையாட்டின் விதிகள்:

1. ஆடுபவர் தன்னைப்பற்றிய 8 தகவல்களை எழுத வேண்டும் (Players start with 8 random facts about themselves.), அதன் கீழ் இந்த விதிகளையும் எழுதவேண்டும்.

2. தொடர்ந்து எட்டுபேரை இந்த விளையாட்டிற்கு அழைக்க வேண்டும்; அவர்களுக்கு இந்த அழைப்பைப் பற்றி அறியத் தரவேண்டும்.

3. தொடர்பவர்(கள்) இதேபோல் எட்டு தகவல்களையும், விதிகளையும் எழுதி வேறு எட்டுபேரை அழைக்க வேண்டும்

Wednesday, May 16, 2007

ஓ! கொல்கத்தா!

'இன்னொரு' என்று சொல்ல முடியாமல், கடைசி என்று சொல்ல வைக்கும் கொல்கத்தா பயணம். போன தடவையே கடைசியாயிருக்க வேண்டியது! எங்களுக்குள்ளே இன்னும் கொஞ்சம் மிச்சம் மீதி இருக்கிறது போலிருக்கிறது.

ஒவ்வொரு தரமும் கொல்கத்தா வரும் போது விழித்துக் கொள்ளும் எல்லா விஷயங்களும் சென்ற முறையும், ஒரே மாத இடைவெளியில் இந்த முறையும் தவறாமல் நடந்து கொண்டிருக்கிறது. இந்த விழித்துக் கொள்ளும் சமாச்சாரங்களால் வரும் அவஸ்தைகளும். சென்னையில் ஏதோ யோசனையோட போகும் பயணங்களும் இங்கே வரும் போது கவனத்தில் வரும் சின்னச் சின்ன விஷயங்களுமாய்... மரங்களும் மனிதர்களும் கூடுதல் கவனம் பெறுவதும்... சாத்தியமேயில்லை என்று மறந்தே போயிருந்த சங்கதிகளை மறுபடியும் முயற்சி செய்வோமா என்ற உந்துதல்களும்... பத்து நாளைக்கு முன்னால் வாசித்த புத்தகங்களும், பார்த்த சினிமாக்களும், வெறும் பொழுதுகளில் ஓடும் யோசனைகளும் மெதுவாக மாறி வேறு நிறமாவதை ஒவ்வொரு முறை போல இந்த முறையும் அதே ஆச்சர்யத்தோடு கவனிக்கிறேன். இந்த ஊர் என்னவோ செய்கிறது!

மிச்சம் மீதி கொல்கத்தா ஞாபகங்கள்...

மூன்று வருஷம் முன்னால், கொல்கத்தா வந்து நான்கைந்து நாட்கள் தான் ஆகியிருந்தது... ஒரு விண்ணப்பத்திற்கான போட்டோவிற்காக ஸ்டூடியோ தேடி, தெரியாத தெருக்களில் இலக்கில்லாமல் அலைந்தது... யாரோ வழி சொல்லி நுழைந்த தியேட்டர் ரோடு 'Samir dass' ஸ்டூடியோ... சுவரெல்லாம் கறுப்பு வெள்ளை க்§ளாஸப் புகைப்படங்கள்... கொஞ்சம் ஆர்வமும் நிறைய தயக்கமுமாய் குரல் கொடுத்தது... யாரும் வராததால் வேறெங்கோ போய் அப்போதைக்கு காரியத்தை முடித்து விட்டாலும், இப்போதும் அந்தப் பக்கம் போகும் போது அதே ஆர்வம் தலைதூக்குகிறது. எப்போதும் போனதில்லை. ஒருவேளை இனிமேலும்!

'பரினீதா' படம் பார்த்த ஜோரில் அந்த ஓலையில் மூடிய படகுகளைத் தேடியது... விசாரித்தபோது 'அதெல்லாம் இப்போ கிடையாது, சினிமாவுக்காக செய்திருப்பாங்க' என்று சொல்லி ய¡ரோ நம்ப வைத்ததும்.. மறந்தே போய் விட்ட ஒரு நாள் அசந்தர்ப்பமான வேளையில் எங்கோ போய்க் கொண்டிருந்த போது திடீரென கண்ணில் பட்ட அந்த நினைவு மண்டபம்... ஜேம்ஸ் ப்ரின்ஸெப்... கொல்கத்தாவிலும் காசியிலும் ஊர் நிர்மாணத்தில் முக்கியமானவராய் இருந்தவர் நினைவாக அந்த நாளைய கொல்கத்தாவாசிகளால் கட்டப் பட்டது... படத்தில் சை·ப் பிய¡னோ வாசிக்க, வித்யா பாலன் பாடும் அதே மண்டபம்... பகல் நேரத்தில் ஒரு அழகு, ராத்திரி நேரத்தில் வேற மாதிரி... அங்கிருந்து காலாற நடந்தால் படகுத்துறை... அதே பரினீதா படகுகள்... ராத்திரி நேரத்தில் ஒற்றை லாந்தர் எரிய, கங்கையில் படகு சவாரி... சொர்க்கம்! கூட வருகிறவருக்கு கெரசின் வாசம் அலர்ஜி இல்லாம பார்த்துக் கொள்வது அவசியம்!:-)

காளிகாட்டில் இந்த முறை...

கணக்கில்லாத பலிகள்... ரத்தம் சொட்டும் அந்த பீடத்தில், பலிகளுக்கு நடுவில் தன்னுடைய தலையையும் அதே போஸில் வைத்து பக்திப் பரவசமாகும் மக்கள்.

கோவில் காம்பவுண்டிலேயே ஒரு ஓரத்தில் அமைதியாக ஒளிந்திருக்கும் ஏசு புகழ் பாடும் 'நிர்மல் ஹிருதய்' மதர் தெரஸா ஆசிரமம்... கடைசி நாட்களை எண்ணிக் கொண்டிருப்போரும், நடமாட முடியாதவர்களுமாய்... வெள்ளைத் தோல் இளம் வயது வாலண்டியர்கள்... அங்கிருந்த ஒரு கால் மணி நேரத்தில் பார்த்தது... மலஜலம் கழிப்பித்தல், ஷேவிங், உடுப்பு மாற்றல், குடிக்கக் கொடுப்பது... எல்லா வேலைகளையும் சிரித்த முகத்தோடு செய்பவர்களைப் பார்க்கும் போது... எப்போதும் போல 'நான் வேஸ்ட்' என்ற யோசனை... நன்கொடை சமாளிப்புகளில் உறுத்தல்கள் தான் மிச்சம்.

காலை பத்து மணிக்கு வேர்வை கசகசப்பில் சலித்துக் கொள்ளும் மார்க்கெட், வெயிலில் காயும் காய்கறிகள், கன்னா பின்னா நெரிசல்... இதற்கெல்லாம் சம்பந்தமே இல்லாமல் உறுத்தும் மேக்கப்பில் குடை நிழலில் காத்திருக்கும் பாலியல் தொழிலாளர்கள்... காளிகாட், சோனார்காச்சியின் சிஸ்டர் கன்சர்ன்... காலை நேரத்திலேயே சுறுசுறுப்பாயிருக்கிறது. கொள்வாரிருப்பதால் கடை!

ஒவ்வொரு தரம் காளிகாட் போகும் போதும் அந்த இடம் unfold ஆகி எதையாவது புதிதாகக் காட்டுகிறது... இது எல்லா இடங்களிலும் நடப்பதில்லை... அதனாலேயே திரும்பத் திரும்பப் போக வேண்டும் என்ற உந்துதல்.

கை நிறைய பெங்காலி படங்களாய் அள்ளிக் கொண்டு வந்து கிடக்கிறது. 'மெதுவா பார்த்துட்டு குடுங்க' என்று கடைக்காரர் மனமுவந்து கொடுத்ததில் மூச்சு திணறாமல் பார்க்க முடிகிறது. நேற்று பார்த்த முதல் படம் ஊத்திக் கொண்டது. இரண்டாவது படம்... Parama... பிடித்திருந்தது.


தொடரும் உத்தேசமிருக்கிறது....

Wednesday, April 04, 2007

Women & Men in my Life - Khushwant Singh

ஆங்கில புத்தகங்கள் வாசிப்பது ஏறக்குறைய இல்லை என்றாகிவிட்ட ஒரு சமயம் 'to kill a mocking bird' கிடைத்தது. வாசிக்க ஆரம்பித்து தாண்ட முடியாத பத்தம்பது பக்கங்களுக்குப் பிறகு 'வேண்டாம் போ' என்று விலக்கி வைத்தது 'அவ்வளவுதானா?' என்று கேட்டது. ரொம்ப லேட்டா தொடங்கி சீக்கிரம் முடிந்து விட்டதோ நமது ஆங்கில வாசிப்பு என்று தோன்றியது. சென்னை வந்ததில் இதுவும் ஒரு பெரிய மாற்றம். வெளியே இருந்த போது வாசிக்க தமிழ் புத்தகம் எதுவும் கிடைக்காத கட்டாயத்தால் எதேச்சையாக தொடங்கியது ஆங்கில நாவல் வாசிப்பு. இப்போதான் தமிழே வேண்டியமட்டும் கிடைக்கிறதே என்று அதிகம் வாசிக்காமல் இருந்தாலும், பழக்கம் விட்டதில் கொஞ்சம் வருத்தம்.

75% வரை தள்ளுபடி என்று ஆசை காட்டிய சென்னை oxford... பேருக்குத்தான் 75%... அந்த பகுதி எங்கே என்றே பார்க்கவில்லை! வழக்கமாக இழுக்கும் தலைப்புகள் பகுதியில். இதற்கு முன்னாலேயே பார்த்தும் வேண்டாம் என்று விட்ட Women & Men in my life - Khushwant singh... இந்த முறை மறுக்க முடியவில்லை. அவருடைய ஆட்டோபயாகிரபி, death at my doorstep எல்லாம் படித்து முடித்ததில்... என்னவோ எனக்கு அவரைப் பற்றி எல்லாம் தெரியும் என்ற தோணல். அதனாலேயே இதை வாசிக்கத் தொடங்கியதும்... மற்றபடி அதிகம் கேட்டிராத பொது வாழ்கை மனிதர்களை, அவருடைய புத்தகங்கள் மூலம் மட்டுமே அறிந்திருந்த அதே மனிதர்களைப் பற்றிய செய்திகளை கொஞ்சம் மாற்றங்களோடு இன்னொரு முறை கேட்பது... வீட்டில் இருக்கும் வயதானவர்கள் சொன்ன விஷயங்களையே திரும்பத் திரும்பச் சொல்வது போல! மனுஷனுடைய எழுத்து சுவாரசியதினாலே எத்தனை முறை கேட்டாலும் சலிப்பதில்லை.

இந்த புத்தகத்தை எழுதியதில் கோவித்துக் கொண்டு கொஞ்சம் பேர் 'உன் பேச்சு கா' விட்டுப் போய் விட்டதாகவும், வெளிப்படையாக சொன்ன நேசத்தில் கொஞ்சம் பேர் ரொம்ப சந்தோஷப் பட்டதாயும், என்ன எழுதியிருக்கு என்று படித்துப் பார்க்காமலேயே சிலர் மறுதலித்துப் போனதாயும் முன்னுரையில் சொல்கிறார். புத்தகத்தில் பெண்களைப் பற்றி எழுதியிருப்பதில் சொட்டுவது தனி ரசம்... குஷ்வந்த் சிங் ரக ரசம்! அனுபவித்து எழுதிருப்பதால் வாசிக்கும் போது அந்த பிரியம் அப்படியே உள்ளே இறங்கிவிடுகிறது.

வயது வித்தியாசமில்லாமல், இன்ன உறவு என்று சொல்ல முடியாத நேசத்தில், ஏதோ ஒரு விதத்தில் பாதித்த, வெவ்வேறு காலகட்டத்தில் சந்தித்த பெண்கள்... பெண்கள்... பெண்கள். கொஞ்சம் ஆண்களும்! நல்லதையும் கெட்டதையும் தாட்சண்யமில்லாமல் சொல்லிப் போகிறார். வெறும் மனசைத்
தான் பார்த்தேன் என்ற மழுப்பல்கள் இல்லாத 'பிந்தாஸ்' குறிப்புகள். தைரியம், சாமர்த்தியம், வெகுளித்தனம், திருட்டுத்தனம், mysterious... எல்லாமாய் பிடித்தவர்கள்.

சில வரிகள்....

'You Know how much weight i have shed? look.' She turned, pointing to her bare midriff. 'All gone. And dont u tell me slimming down does not suite me.'....... I have been to Bombay many times since but have not had the courage to call on her. I want to preserve the image of the Devyani Chaubal I had known: fat, full of life, malicious gossip, mimicry and a zest for life.

The lady persisted, 'Never mind the age difference, you still look like a married couple.' I slipped out of the dining hall and went to bed without dinner. After the compliment I didnt need any. I was little worried about how the rest of Nirmala's family would take that faux pas.

If this was true (men's gossip is less reliable than woman's) love formed very little part of Amrita's life. Sex was what mattered to her. She was a genuine case of nymphomania, ....

She put on her tape recorder at full blast, sang with it and talked at the top of her voice. I almost went round the bend and pitied her husband who had to put up with such exuberance every day.

ஆண்களைப் பற்றிய மீதிப் பாதி புத்தகம் கொஞ்சம் நியூஸ் ரீடிங் போல! மற்றபடி, ஒரே மூச்சில் படித்து முடித்த புத்தகம். முடித்த கையோடு ரொம்ப நாள் பெண்டிங் 'one hundred years of solitude' படிக்க வைத்ததில் குஷ்வந்த் சிங் பங்கு அதிகம். கொல்கத்தா வந்து, போன சனிக்கிழமை அவருடைய வழக்கமான column வாசித்ததும் இடையில் கொஞ்சம் தொய்ந்து போயிருந்த குஷ்வந்த் சிங்குடனான உறவு மறுபடியும் அதே போலாகி விட்டது.

தலைப்புதான் ரொம்ப தூண்டுகிறது... என்னையும் 'எழுதேன்' என்று! எப்போதாவது செய்யனும்.

Tuesday, April 03, 2007

The Namesake - Mira Nair


சுமார் ஒன்றரை வருடம் முன்பு இந்தப் படம் எடுப்பதற்காக மீரா நாயர் கொல்கத்தா வந்திருந்ததும் ஸ்டார் காஸ்டிங்கிற்காக நடந்த அமளிகளும் வாசித்த நினைவிருக்கிறது. வந்த ஒரு வாரமாய் ஒரு நல்ல பெங்காலி படம் பார்க்கக் கிடைக்காதா என்ற ஒரு அதிக முனைப்பில்லாத தேடலுக்கு பின் பெங்காலி சாயல் அடிக்கும் இந்தப் படம் வாய்த்தது. வழக்கம் போல இப்பவும் இது போல படங்கள் பார்க்க வரும்... எப்படிச் சொல்ல?!... கொஞ்சம் புத்திசாலி களை, வயது வித்தியாசமில்லாமல்...ம்ம்ம்... ஒரு sophisticated crowd. அங்கங்கே இளசுகளின் கெக்கேபிக்கே சிரிப்புகள் மெல்ல தலைகாட்டி, அதிலேயே ஷ்ஷ்ஷ்ஷ்... சொல்லி அடக்கிய குரலைத் தொடர்ந்து, அமைதியான சூழல். சென்னையில் சமீபகாலங்களில் பார்க்க நேர்ந்த படங்கள் எல்லாமே... ஏன் Water படத்தில் கூட அனாவசிய சத்தம் செய்து கொண்டிருந்த மக்களை நினைத்து ஏமாற்றமாயிருந்தது. நாம் இன்னும் நிறைய தூரம் போக வேண்டியிருக்கிறது!
ஜும்பா லாஹிரியின் நாவலை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருக்கிறது. இர்பான் கான், தபு கச்சிதமாக பாத்திரத்துடன் பொருந்திப் போகிறார்கள். அச்சுஅசலான கொல்கத்தா, அந்த மனுஷங்கள், 'ஏ' ந்னு இழுத்து பேசும் பேச்சு... தபு சொல்லும் போது ஒரிஜினல் பெங்காலி தோற்றுப் போகணும்! கொல்கத்தாவிற்கும் அமெரிக்காவுக்கும் மாறி மாறி பயணிக்கும் கதை... இது போல கலாச்சாரங்களுக்கிடையே நடக்கும் கதைகளை நிறைய பார்த்தாகிவிட்டதென்றாலும் இது கொல்கத்தா என்பதால் நெருக்கமாக உணர முடிந்தது.
பெரும்பாலான படங்களில் பார்க்கும் புத்தகம் வாசிப்பில் அதிக ஆர்வமுள்ள ஒரு கேரக்டர் இங்கேயும், அப்பாவாக. எத்தனை வருடங்கள் ஆனபோதும் வேர்களை விடாத, பெங்காலி ஜனங்களோடு அதிகம் புழங்கும் டிபிகல் அம்மா கேரக்டர், கலாச்சாரங்களுக்கு நடுவே திண்டாடும் பிள்ளைகள்... எழுபதுகளில் நடக்கும் கதையென்று சொல்வதால் நிறைய கேள்விகள் முடங்கிப் போகின்றன. Gogol என்ற பெயரைச் சுற்றி நிகழும் விஷயங்கள்... எல்லாமே உணர்வுபூர்வமாக.
மற்றபடி புதிதாக ஒன்றும் இல்லை. வலிய திணித்த ஆக்ராவைத் தவிர்த்தால், இன்னும் கொஞ்சம் என்று ஆர்வத்தைத் துண்டும் கொல்கத்தா, அதன் நிறம், கூச்சல், நெரிசல், சங்கீதம்... எல்லாமே. 'யதார்த்தமாய்' என்பதில் வரும் படுக்கை அறைக்காட்சிகள்... உறுத்தியதா என்றால், இல்லையென்றுதான் சொல்ல வேண்டும்.
மொத்தத்தில் படம் எனக்குப் பிடித்திருந்தது!

Wednesday, March 21, 2007

me n my weirdness

மொதல்ல இந்த weirdness பற்றி எழுதணுமான்னு ஒரு கேள்வி இருந்தது... நான் யார்.. எனக்கு பிடிச்சது என்ன... பிடிக்காதது என்ன... என் கிறுக்குத்தனங்கள் என்ன... இதெல்லாம் ஒரு நெருங்கின வட்டத்திற்கு மட்டும் தெரிந்த விஷயமா இருக்கணும்னு என்ற சிந்தனை இருந்தது. அப்புறம், இதில என்ன இருக்கு? நான் நான் என்று பேசறது எல்லாமே என்னோட ப்ளஸ் மட்டுமேவா? இந்த கிறுக்குத்தனங்களும் தானே? அதனால எழுதிட்டேன்! இப்படி ஒரு ஞானோதயம் கொடுத்த அலெக்ஸ்க்கு நன்றி.

1. எதுவாவது என்னை ரொம்ப பாதிக்கும் போது அதிலிருந்து வெளியே வர நான் செய்யும் முயற்சிகள் அந்த சூழ்நிலைக்கு கொஞ்சமும் பொருந்தாதாயிருக்கும்... உதாரணமா, எல்லோரும் சாப்பாடு தூக்கம் தொலைத்து சோகம் சுமக்கும் சூழ்நிலையில் நான் வயிறு முட்ட சாப்பிட்டு சுகமா தூங்கிடுவேன்!

2. கன்னா பின்னா தன்னம்பிக்கை, அதைவிட அதிக கன்னா பின்னா சிந்தனைகள்!

3. ரொம்ப அமைதியா டிப்ளமேடிக்கா வெளிப்பார்வைக்கு இருக்கும் எனக்கு எப்பவாவது மறை கழண்டால் போச்சு... சிரித்து தள்ளிடுவேன்... அந்த நேரத்தில் 'சிரி' ன்னு சொன்ன கூட நான் ஸ்டாப் சிரிப்புதான்... ஆச்சரியமா யாராவது பார்க்க ஆரம்பித்தால் இன்னும் அதிகமாக!

4. எல்லோரும் துணையோட, குடும்பத்தோட போகணும்னு நினைக்கிற இடங்களுக்கு தனியே போக விருப்பம்... காபி டே, சினிமா தியேட்டர், கோவில் ஏன் தொலைதூரப் பயணங்கள் கூட... கடைசிக்கு மட்டும் வீட்டு அய்யா இன்னும் அனுமதி கொடுக்கத் தயங்குகிறார்!

5. எதாவது ஒன்று வேண்டும் என்று ரொம்ப ஆசைப்பட்டு காத்துக் கொண்டேஏஏஏ இருந்து ஒரு கட்டத்தில் வேண்டாம் போ என்று முடிவு செய்த பின் மடியிலேயே வந்து விழுந்தாலும் 'நோ' தான்!

எனக்கு பிறகு யாரை அழைப்பது என்ற பெரிய குழப்பம் நீடித்ததால்... it is open to everybody who wish to continue...

Wednesday, March 07, 2007

கயிறு - மகளிர் தினத்திற்காக.

விபரம் தெரிந்த நாளாய்
உணர்ந்திருக்கும் கயிறு

கை கால் குரல் சிந்தனையென்று
நேரத்திற்கேற்ப நழுவி
இடம் மாறி இறுக்குமது

வெளிர் நிறத்தில் மெல்லியதொரு
நூலாய்க் கிடந்ததை
உரமேற்றி நிறமேற்றியதில்
அடர்ந்த சிகப்பில் இறுகி போனது
வாலிப நாட்களில்

தாயோடு படுக்கை பகிர்ந்தவன்
என்னோடு தாய்மடி பகிர்ந்தவன்
படுக்கை பகிர்பவன்
நண்பன் அவன் இவன்
எல்லோருக்குமுண்டு
ஒரு ஆண்கயிறு

அதிக தடிமனில்லாததாய்
அடர்ந்த நிறமேறாததாய்
இழுத்த இழுப்பிற்கெல்லாம்
இசைந்து கொடுப்பதாய்

உடலும் மனமும் தளர்ந்த
முதுகிழவியின் கயிற்றில்
உரமோ நிறமோ ஏற்றுவாரில்லை

பட்டத்தின் கயிறாய்
பாதுகாப்புக்கென்றாய்
நீளமாய் நூறு கதைகள்
திரும்பத் திரும்பச் சொன்னதில்
பறவைகள் பட்டங்களாகவே
வரித்துக் கொண்டன

நீள அகலமாய் பரந்த வானமும்
தேடி தெரிய சிறகுகளிருக்கும் பிரஞ்சையற்று
கயிறு கட்டிய கால்களோடு
பத்திரமான(!) வானத்தில்

கயிற்றில் நுனி யாரிடமென்றறியாமல்
எப்போது வேண்டுமானாலும்
முடக்க படலாமென்ற எச்சரிக்கையுடனும்...

அறுக்க முடியாத கயிறொன்றில்லை
பறக்க தொடங்கினால் எல்லையுமில்லை...

Thursday, February 22, 2007

சீஸன் குறிப்புகள் - கடைசி.

ஒரு பட்டியல்:

சின்ன பரபரப்போடு கடைக்குப் போய் புத்தகம் வாங்கி அங்கேயே நின்று அச்சில் வந்திருக்கும் எழுத்தை முதல் முதலாக வாசிக்கும் சந்தோஷம்... அது சொல்லியும் கேட்டுமே ரொம்ப பெரிய விஷயம் போல ஆகிப் போனதால் அதை கர்ம சிரத்தையாக செய்தேன்... அந்த ப்ளுஸ்டார் பஸ் ஸ்டாப் கடை... அதை எப்போது கடந்தாலும் அந்த ஞாபகம் வருகிறது. சீக்கிரம் மறக்க வேண்டும்!

ரசனை தொழிலாகக் கூடாது! இது கற்றுக் கொண்ட பாடம். விட்டேத்தியா ரசிக்க விடாம... இதைக் குறிச்சுக்கணுமோ அதைக் கவனிக்கணுமோ... சதா ஒரு குடைச்சல்.

அடங்கு அடங்குன்னு அடக்கி வைத்திருந்த கொம்பை செல்லமாக வளர விட ஒரு சந்தர்ப்பம். ரிப்போர்ட்டருக்கான முதல் குணாதிசயம் எங்கேயும் யார்கிட்டயும் எதுக்கும் தயங்காம தடாலடியா இருக்கச் சொன்ன குங்குமம் சப் எடிட்டர் ஜி.கௌதம்.

எந்த கச்சேரியை கவர் பண்ண வேண்டும் என்ற சுதந்திரத்தை எனக்கே தந்து விட்ட கௌதம், மற்றும் அவருக்கு பின் பொறுப்பேற்ற திரு. வள்ளிதாசன். யார் யாரையெல்லாம் கேட்க வேண்டும் பார்க்க வேண்டும் என்று நினைத்தேனோ அவர்களை ரிப்போர்ட்டர் என்ற ஹோதாவோடு சந்திக்க முடிந்தது. ரிப்போர்ட்டர்... அந்த வார்த்தைக்கு இருக்கும் வெயிட்டேஜ்... அதை முழுக்க அனுபவித்தேன்.

கர்நாடக சங்கீதம்... மிரட்டியது. தியானம் பழகுகிறவர்கள் அதிலிருந்து நழுவிப்போவது போல எப்போது கவனம் மாறுகிறது என்பது தெரியாமல் ஏதோ யோசனைக்குப் போய் திரும்பி வந்ததை நிறைய தடவை வேடிக்கை பார்த்தேன்.

வயலின் மேல் தீராத காதல் வந்தது. கலா ராம்நாத் தொடங்கி யார் வாசித்தாலும் பிடித்திருந்தது.

கவர் பண்ணாத ஒரு சஞ்சய் சுப்ரமணியம் கச்சேரியில் அந்த குரல் இழுப்பதை உணர முடிந்தது. அந்த அளவுக்கு எண்ணம் குவிவதை தாங்க முடியாமல் பாதி கச்சேரிக்கு மேல் முகத்தைத் வேறு பக்கம் திருப்பிக் கொண்டு உட்கார்ந்தது கிறுக்குத்தனம்!

ராகங்கள் அதன் ஆழம், அளவு இதெல்லாம் தெரிந்து கொண்டு ரசிக்கும் உங்கள் ரசனைக்கு என் ரசனை சளைத்ததில்லை என்று நண்பர் சக்கரபாணியோடான விவாதம்... என் முன்னால நீ பூஜ்யம்மா... வேறு சமயமாயிருந்தால் இதை வேற யாராவது சொல்லியிருந்தால் என்ன கோபம் வந்திருக்குமோ... இப்பவும் சொல்கிறேன் என் ரசனை சளைத்ததில்லை! எதுவுமே புரியாமல் கேட்கும் போதும் நான் விரும்பும் சந்தோஷம் எனக்கு வாய்க்கிறது... அது போதும்!

மூன்று மணி நேர கச்சேரி... முடிந்ததும் வீடு, சமையல்... அத்தனை சீக்கிரம் ஒரு மனநிலையிலிருந்து இன்னொன்றுக்கு மாறும் போது வெறுப்பாக இருந்தது. கச்சேரி முடிந்து கொஞ்சம் நேரம் தனிமை வாய்த்திருக்கக் கூடாதா?

பார்த்தவரை கேட்டவரை போதும் என்றிருந்தது. அதற்கு மேல் திகட்டியிருக்கும்.

ஏறக்குறைய சீஸன் முடிந்த போது ம்யூஸிக் அகடமியின் ஒரு வார நாட்டிய விழா... மறுபடியும் அதே சீஸன் டிக்கெட்... முன் வரிசை பந்தா... ஆடுபவர்களின் பெயர்கள் தந்த டெம்ப்டேஷன் எல்லாம் நேரப் பற்றாக்குறையால் தவிர்க்க வேண்டியதாயிற்று. அடுத்த வருஷம் 'கண்டிப்பாக' லிஸ்டில் அடிக்கோடிட்டு சிவப்பு மையில் எழுதி வைத்தாகிவிட்டது.

கேட்க முடியாமல் தவற விட்டவர்கள்... சிக்கில் குருசரண், ரஞ்சனி - காயத்ரி.

சந்தர்ப்பம் கிடைத்தும் கேட்காமல் விட்ட சில பெரிய தலைகளை ஏன் தவிர்த்தேன் என்ற கேள்விக்கு பதில் தேடிக் கொண்டிருக்கிறேன்!

Monday, February 19, 2007

சீஸன் குறிப்புகள் - 3

நந்தனார் சரித்திரம் - விஷாகா ஹரி - கார்த்திக் பைன் ஆர்ட்ஸ் வழங்கியது. ஆத்துக்காரருக்கு காபி கலந்து கொடுத்த கையோடு காலட்சேப நோட்டுப் புத்தகத்தைத் தூக்கிக் கொண்டு வந்து விட்டாரோ என்று ஆச்சர்யப்பட வைக்கும் எளிமை... அது விஷாகா ஹரி. எளிமை வெறும் தோற்றத்தில் மட்டுமே. அம்மணி உருவாக்கி வைத்திருக்கும் இமேஜ் காலட்சேபம் தொடங்குவதற்கு முன்பே காதில் விழுந்தது. சின்ன குழந்தைக்கும் புரிவது போல சொல்லும் திறமை பரவலாகப் பேசப்பட்டது. கோபால கிருஷ்ண பாரதியால் தமிழில் சுமார் இருநூறு வருடங்களுக்கு முன் எழுதப்பட்ட நந்தனார் சரித்திரத்தைச் சொன்ன காலட்சேபத்தில் கச்சேரி விகிதாச்சாரம் அதிகம். சொன்ன குரல் தேன்... கொஞ்சம் காத்திரமான தேன்.

நந்தனார் சரித்திரத்தை கண் முன்னே ஓட விட்டது குரலா, மொழி எளிமையா அல்லது அவரால் நிறைக்கப்பட்ட உணர்வா என்றால்... எல்லாம் தான். பாடுவதிலிருந்து கதை சொல்லத் தொடங்குவதும், கதையிலிருந்து பாடத் தொடங்குவதுமாய் இயல்பான ஃப்ளோ. ஆரம்பத்தில் கொஞ்சம் மெதுவாகப் போகிறதோ என்று தோன்றி பின்பாதியில் வேகமெடுத்தது. வழக்கமான தெலுங்கு கீர்த்தனைகள் கேட்கும் காதுகளுக்கு தமிழ் கீர்த்தனைகள் கேட்பதன் இதம் புரிந்தது. சுத்தமான உச்சரிப்பு. ஒன்றிரண்டு முறை ஒரே விஷயத்தை ஒரே வார்த்தைகளில் குறைந்த இடைவெளியில் இரண்டாவது முறை கேட்டது கொஞ்சம் நிரடியது. நர்த்தனமாடும் நடராஜர் என்று அரங்கில் மாட்டியிருக்கும் படத்தைக் கண்ணால் காட்டிப் பேச அத்தனை கூட்டமும் திரும்பி அந்த நடராஜரைப் பார்த்தது ரசிகர்கள் குறையா, காலட்சேபம் செய்பவர் குறையா? வர்ணிப்பில் அவரவர் மனதில் நடராஜரின் பிம்பத்தை உருவாக்க வேண்டாமா?

நிகழ்ச்சி முடிந்து மனநிறைவோடு செல்பவர்களைத்தான் வழக்கமாக பார்க்க முடியும்... இங்கே உரிமையோடு முத்தமிட்டு வாழ்த்தும் திருஷ்டி கழிக்கும் ரசிகர்களைப் பார்க்க முடிந்தது. வழக்கமான கச்சேரிகளுக்கு நடுவில் காலட்சேபம் என்று 'மாத்தி யோசி'த்த விஷாகா ஹரிக்கு வாழ்த்துகள்.

வெள்ளிக் கிழமை மாலை ஏழரை மணிக்கு பாரத் கலாச்சாரில் ஷோபனா குழுவினரின் நாட்டியம். ஷோபனா குழுவை ஒரு வார்த்தையில் வர்ணிப்பது என்றால்... 'நளினம்'. நடனமாடுபவர்களை ஒரு வார்த்தையில் சொல்ல வேண்டுமென்றால்... 'மயில்கள்'. உறுத்தாத அலங்காரம். தீர்க்கமான முத்திரைகள். ஷோபனாவின் ஸோலோவில் அவருடைய பாணியும் அது எப்படி அவரது மாணவிகளில் பிரதிபலிக்கிறது என்பதும் துல்லியமாகத் தெரிகிறது. கலைடாஸ்கோப் போல் மாறும் முகபாவங்கள். நாக்கை ஒருபக்கம் அதக்கி குறும்புத்தனம் காட்டுவதில் மயங்காதவர்கள் இருந்திருக்க முடியாது. 'அடங்கா கங்கையும் அடங்கும் உன் சடையில்' பதத்திற்கான அபிநயம் க்ளாஸ். ஒரு கண்ணை மூடி லேசாகப் பற்களைக் கடித்துக் காட்டும் குரோதத்திலும் நளினம் காட்டியது கற்பனைக்கு அப்பாற்பட்டது. வள்ளிக் குறத்தியும், கண்ணப்பனார் குறிப்பும்... எதைச் சொல்ல எதைவிட?!

குழுவினரோடு இணைந்து வழங்கிய கிருஷ்ண கோபியர் கொண்டாட்டம் அருமையான முத்தாய்ப்பு. கிருஷ்ணராக நடனமாடிய சிறுமிக்கு தனிப்பட்ட பாராட்டுகள். செல்லக் குறும்பும் சேட்டைகளுமாய்...! ஒரு குழுவாக இணைந்து நிகழ்த்தும் ஒரு நிகழ்ச்சிக்கு எவ்வளவு ஒருங்கிசைவு தேவை என்பது அழகாகத் தெரிந்தது. சுருக்கமாக, ஒரு விஷுவல் ட்ரீட்.... ஒரு மாலையை நிறைவு செய்ய... ஒரு நாளைப் பூர்த்தியாக்க... ஏகாந்தத்தில் நினைத்து அசைபோட.

Wednesday, February 07, 2007

சீஸன் குறிப்புகள் - 2

செவ்வாய் கிழமை மாலை பாரத் கலாச்சார்- ல் ஓ.எஸ். அருண் கச்சேரி. முல்லைவாசல் ஜி . சந்திரமௌளலி வயலின். ஜே. வைத்தியநாதன் மிருதங்கம். ஸ்ரீரங்கம் கண்ணன் மோர்சிங்.

நல்ல உயரம். ஏதோ ஸ்டூல் போட்டு உட்கார்ந்திருக்கிறாரோ என்று தோன்ற வைக்கும் அளவுக்கு. அனுபவித்துப் பாடிய 'இந்த்த தாமஸமா?' வும் 'அகிலாண்டேஸ்வரி'யை துணைக்கழைத்தும் ரசிகர்களைக் கட்டிப் போட செய்த முயற்சிகள். நான்கு மணி கச்சேரிக்கு பெரிய கூட்டம் எதிர்பார்க்க முடியாதென்றாலும் இருந்தவர்களாவது நல்ல ரசிகர்களாக இருந்திருக்கலாம்! ஐந்தாவது வரிசையில் ஆழ்ந்த தூக்கத்தில் ஒரு ரசிகை(?!), வாசலில் விநியோகிக்கப்பட்ட செய்திக்குறிப்புக்காக ஓவ்வொருவராய் எழுந்து போவதும், வந்து வாசிப்பதுமாயிருக்க... ஸ்வர சஞ்சாரத்தில் ம நி தா... ம த ம நி தா... நி தா நி... ச தா நி... ( மனிதா... மதமனிதா... நிதானி... சதா நீ) என்றென்னால்லாம் ஜாடையாகச் சொன்னதெல்லாம் கேட்காத ரசிகர்களுக்கு கச்சேரிக்கு நடுவில் வேண்டுகோள் வைக்க வேண்டியதாயிற்று. திருமதி ஒய்.ஜி.பி மன்னிப்பு கேட்டு பஜன் பாடச் சொல்லிக் கேட்டுக் கொண்டதும் ஆசிரியர் வந்து ஒரு சத்தம் போட்டதும் சொன்ன பேச்சு கேட்கும் பிள்ளைகள் போல ரசிகர்களில் கொஞ்சம் மாற்றம். 'யமுனை நதியே கண்ணனைக் கண்டாயோ?', 'ஆஜ் ஆயோ ஷ்யாம் மோஹனா'... இரண்டும் மெய்மறக்க வைத்தது.

நிகழ்ச்சி முடிந்து ரிலாக்ஸாக வெளியே வந்த அருணுக்கான கேள்வி... 'பாடுவது கச்சேரிக்காவா? ரசிகர்களுக்காகவா?' பதில் சொல்வதை சாமர்த்தியமாக தவிர்த்து ' நீங்களே சொல்லுங்கள் எப்படி இருக்க வேண்டும் என்று?' என்று எதிர்கேள்வி கேட்பதாக நினைத்துக் கொண்டாலும் ஆழ்ந்து ரசிக்காத ரசிகர்களுக்கு பாட நேரும் அவஸ்தை அவரது வார்த்தைகளில் புரிந்தது.

ஏழரை மணிக்கு அதே அரங்கில் மதுவந்தி அருண் வழங்கிய நாட்டியம். மறைந்த சாவித்திரி கணேசனுக்கான நினைவஞ்சலி. மெல்ல நிறமும் களையும் மாறும் அரங்கத்தை காண சுவையாயிருந்தது. மத்யான கச்சேரிக்கான எளிமையான அரங்கம் மாறி பட்டும் பளபளப்புமாக மாறிக் கொண்டிருந்தது. பத்மா சுப்ரமணியம், வைஜெயந்திமாலா பாலி, சௌகார் ஜானகி, கமலா செல்வராஜ்... நிகழ்ச்சிக்கு வந்திருந்த பிரபலங்களில் சிலர். 'கர்த்தவ்யம்' என்ற கருப்பொருள் கொண்ட நாட்டியத்தில் சீதையாகவும், ஊர்மிளையாகவும், ராமனாகவும், கிருஷ்ணனாகவும் மதுவந்தி. எளிய உடைமாற்றத்தில் வித்தியாசம் காட்டியது சிறப்பு. வாலியாகவும் சுக்ரீவனாகவும் வந்த இளைஞர்களின் வேகமும் ஈடுபாடும் குறிப்பிடாமல் போக முடியாது.

மதுவந்தியின் சற்றே பருமனான உடம்பு கொஞ்சம் உறுத்தல். இத்தனை கேரக்டகளாக மாறும் போது அடிப்படையாக எல்லா பாத்திரங்களுக்கு இருப்பதாக நாம் உணர்ந்திருக்கும் சாத்வீக பாவம் மிஸ்ஸிங்.

சத்தமில்லாமல் வந்தமர்ந்த பானுப்ரியாவைப் பார்த்த போது ஒரு கலைஞராக இவர் எப்படி ரசிப்பார் என்ற கேள்வி வந்தது. 'உங்களை அந்த முக்கிய பாத்திரத்தில் வைக்காமல் வெறும் ரசிகராக உங்களால் ரசிக்க முடியுமா?' என்ற கேள்விக்கு ஒரு சின்ன யோசனைக்குப் பிறகு, 'இப்போ அப்படித்தான் ரசிக்கிறேன். வீட்டுக்குப் போய் நிதானமாக யோசிக்கும்போது அப்படித் தோணலாம்.' என்றார்.

பத்து நிமிடத்திற்கொருமுறை செல்பேசியையை ஒளிர்வித்து அதிலிருந்த மகளின் புகைப்படத்தை பார்த்துப் பார்த்து மூடும் பானுப்ரியாவிற்கு வீட்டுக்கு போன பிறகு இதையெல்லாம் யோசிக்க நேரம் இருக்குமா?!

27 ம் தேதி மாலை ம்யூஸிக் அகடமியின் நான்கு மணி பாம்பே ஜெயஸ்ரீக்காக. மைசூர் ஸ்ரீகாந்த் வயலின். பூங்குளம் சுப்ரமணியம் மிருதங்கம். திருவனந்தபுரம் ராஜகோபால் கஞ்சிரா. நான்கு மணிவாக்கில் சாதாரணமாக இருந்த கூட்டம் அரைமணியில் திருவிழா கூட்டமானது. திரை உயரும் போது மேடையிலோ அரங்கிலோ எங்கும் இடமில்லை.

சிகப்புப் புடவை, மஞ்சள் ஜாக்கெட்டில் எளிய அலங்காரத்துடன் ஜெயஸ்ரீ. ஆற்றோட்டம் போன்ற குரல். அதிகம் வேகம் கொள்ளாமல் அமைதியாக ஓடுகிறது. இதமாக கால்களை நனைத்துக் கொண்டு. வெளியே வர மனசே வருவதில்லை. ஆஹிரியையும் பைரவியையும் ரசித்துப் பாடினார். வயலின் அழகாக ஜோடி சேர்ந்து கொண்டது. ராகம் தானம் பல்லவிக்குப் பிறகு வெளியேறி விட்ட சுத்த சங்கீதக் காதுகள் 'வண்ணச்சிறு தொட்டில்' இட்டு கண்ணனுக்கு பாடிய தாலாட்டை தவறவிட்டார்கள். தாலாட்டுக் கேட்டு கண்ணன் தூங்கினானோ இல்லையோ கேட்டவர்கள் கரைந்து போனார்கள். நிகழ்ச்சி முடிந்த போது எழுந்து நின்று கைத்தட்டிய கூட்டத்தின் திருப்தியை உணர முடிந்தது.

Tuesday, February 06, 2007

சீஸன் குறிப்புகள் - 1

ம்யூஸிக் அகடமியில் என்ன கிடைக்கும்? நல்ல சங்கீதம்? செவியோடு சேர்ந்து நாவு கம் வயிற்றுக்கும் விருந்து? நண்பர் கூட கிடைப்பார் தெரியுமா? கொஞ்சம் கூடுதல் அதிர்ஷ்டம் இருந்தால், எழுபது சொச்சம் வயதின் பெரும்பகுதியை சங்கீதம் ரசிக்கவே கழித்த, வித்வான்களுக்கும் தனக்கும் உள்ள தூரத்தை விஷய ஞானத்தில் கடக்கக் கூடிய, சுவாரசியமான நினைவுகளுக்குச் சொந்தக்கார... எக்ஸட்ரா எக்ஸட்ராகளோடு கூடிய நண்பரும் கூடக் கிடைப்பார்!

ஆச்சாரமாக, பக்தியோடு தொடங்கும் டிசம்பர் கச்சேரிகளுக்கு முன்னால் கொஞ்சம் ஜனரஞ்சகமாகக் கலக்கிய ஹிந்து ம்யூஸிக் பெஸ்ட்-ல் ஸ்டார் ஹோட்டல் பு·பேக்கு நடுவில் நானும் இருக்கேன்னு உரத்துச் சொல்லும் எண்ணெய் கத்தரிக்காய் குழம்பும் தயிர்சாதமும் போல கஸல்களுக்கும் மோஸார்ட்க்கும் நடுவில் கர்நாடக சங்கீதம் கலக்கிவிட்டுப் போன நாட்களில் அறிமுகமானார். இலக்கணவிதிகளுக்கு கட்டுப்பட்ட மரபுக் கவிதை, எந்த விதிகளாலும் பிணைக்கப்படாத புதுக்கவிதை... இரண்டு துருவங்களையும் இணைக்கும் அடிநாதம் கவிதை. இப்படி இரண்டு பேர் கச்சேரி கேட்கப் போனால் எப்படி இருக்கும்?!

டிசம்பர் 12-ம் தேதி ராமகிருஷ்ணா மிஷன் பள்ளி அரங்கத்தில் முத்ராவின் 12-வது பைன் ஆர்ட்ஸ் பெஸ்டிவல் வழங்கிய சஞ்சய் சுப்ரமணியம் கச்சேரி. வயலின் எஸ்.வரதராஜன், மிருதங்கம் குருவாயூர் துரை, கடம் திருப்புணித்துர ராதாகிருஷ்ணன். வாசலில் டென்ஷனாக முத்ரா பாஸ்கர், அவரை காம்பன்ஸேட் செய்ய வாயெல்லாம் வெள்ளையாய் ராதா பாஸ்கர். ஓரளவு பெரிய ஹாலில் ஏறக்குறைய ஐநூறு ஜோடி காதுகள். ஆர்ப்பாட்டமில்லாத ரசிகர் கூட்டம். வேஷ்டியும் வெள்ளைச் சட்டையும் சாயமேற்றிய கேசமுமாய், கர்நாடக சங்கீத விதவானுக்கான பிரத்யேக அடையாளங்கள் எதுவும் இல்லாமல் கச்சேரி முடித்து வேஷ்டியைக் களைந்து ஜீன்ஸ¤க்கு மாறினால் சத்யம் தியேட்டர் வாசல் கும்பலில் வித்தியாசமில்லாமல் கலந்துவிடக் கூடியவராய்... சஞ்சய் சுப்ரமணியம்.

சரியாக ஆறேகாலுக்கு தொடங்கிய கச்சேரி ஆரம்பம் முதலே ஜில்லென்ற வேகம் தான். வயலினும் வாய்ப்பாட்டும் இரண்டு சின்ன பசங்களைப் போல கைகோர்த்து உல்லாச ஓட்டம். இணையாயும், கொஞ்சம் நீ முந்தியா நான் முந்தியா என்றும். குரல் சொன்னபடி கேட்கும் போது சந்தோஷம் முகத்தில் தெரிகிறது. அந்த சந்தோஷத்தில் இன்னும் துள்ளலாய். முகமோ, அதன் பாவனையோ பற்றிக் கொஞ்சமும் கவலையில்லாமல் தளையில்லாத வேகம்.

சஞ்சயிடம் கேட்க குறித்து வைத்திருந்த கேள்வி... சபாக்களில் வாசிக்கும் போது எக்ஸ்டஸிக்கல் பாயிண்ட் ( ஒரு கணத்தில் எல்லாம் மறந்து போகும் நிலை) தொடுவதுண்டா? என்று. அவர் தொட்டாரா இல்லையா என்பது தெரிவதற்கு முன்பே மத்யமாவதியில் என்னைத் தொட வைத்தார். அதற்குப் பிறகு கொஞ்ச நேரத்திற்கு சங்கீதமென்ன எதுவுமே நினைவிருக்கவில்லை. 'கந்தனடி...' பாடி மறுபடியும் இழுத்து வந்தார். பாரதியின் 'திக்குத் தெரியாத காட்டில்...' க்கு ஒரு சபாஷ்.

'நல்லா பாடறார். பெரிய மனசு. முடிச்சுக்கட்டுமா பாஸ்கர்-ன்னு கேட்டுட்டு முடிச்சார் பாத்தியா? மத்யமாவதிலதான் கொஞ்சம் சுருதி பேதம்' - இது மரபுக்கவிதையின் கமெண்ட்.கடைசியில் அந்தக் கேள்வியை கேட்டு வைக்க நேரம் வாய்த்து, கேட்டதில்... ' என்ன? இன்னொரு முறை கேளுங்கள் என்று கேட்டு விட்டு... ', 'இல்லை. அப்படி எந்த இடத்தையும் தொடுவதில்லை. தனிமையில் பாடும் போது கூட'... ஆச்சரியம் தான்! கேள்வி சரியாக புரிந்து கொள்ளப் படவில்லையோ என்ற சந்தேகம் மட்டும் இன்னும் மிச்சம் இருக்கிறது!

மறுநாள் அதே இடத்தில் சுதா ரகுநாதன் நிகழ்ச்சிக்கு முன்னால் ராம்ஜியின் இசை மழலைகள் சத்யநாராயணா - கீ போர்ட், விக்னேஷ் - வாய்ப்பாட்டு... நல்லி குப்புசாமி ஏ.நடராஜன் ஜோடி தலைமையில் சுதாவுடன் சேர்ந்து போகோ சேனல் பரிசு பெற்றதற்கு ஒரு சிறிய பாராட்டு விழா. பெரியவர்கள் ஒரு பக்கம் பாராட்டிக் கொண்டிருக்க வாண்டு வித்வான்கள் சிறுபிள்ளைச் சிரிப்புகளுடன்.

மாறி மாறிப் பொழிந்த பாராட்டு மழை ஓய்ந்ததும் கச்சேரி தொடங்கியது. எம். ஆர். கோபிநாத் வயலின். திருவாரூர் வைத்தியநாதன் மிருதங்கம். ராமன் மோர்சிங். நீலப்புடவையும் தோதான ஆபரணங்களுமாய் சுதா. பெண் கலைஞர்களுக்கு பாடவோ வாசிக்கவோ தயார் செய்வதோடு இந்த அலங்கார மெனக்கெடல்கள் சந்தோஷமா? சுமையா? எனக்கென்னவோ ஒரு கட்டத்திற்கு மேல் சுமையாகத்தான் போய்விடும் என்று தோன்றுகிறது.

பைரவியில் வர்ணம் பாடி தொடங்கிய கச்சேரியில், குரல் ராகங்களின் ஆழங்களை அநாயசமாகத் தொட்டு மேதாவிலாசம் சொன்னது. கோவில் மணி ஓசை எவ்வளவு நேரம் கேட்க முடியும்? சுதாவின் குரலில் மூன்று மணிநேரம் சலிக்காமல் கேட்கலாம். சுதாவின் லதாங்கியும் ஆபேரியும் மரபுக்கவிதையை முழுசாக உள்ளே இழுத்துக் கொண்டது. அங்கே இங்கே அசையாமல் கச்சேரியில் ஆழ்ந்து போனது.வெளியே வரும் போது, ' ஆழ்ந்த இசை ஞானமுள்ள என் போன்ற ரசிகர்களை சபாக்கள் சரியாகப் புரிந்து நடத்துவதில்லை' என்ற வருத்தத்தை சொல்லி விட்டுப் போனது.

மொத்தத்தில் கர்மசிரத்தையான கச்சேரி.

Saturday, February 03, 2007

Babel & Parzania


ரசனைகள், அவற்றின் முனைப்பு இதெல்லாமே சந்தர்ப்பம் சூழ்நிலைகளால் மழுங்கிப் போய் விடுவதை இவ்வளவு துல்லியமாக உணரப் போகிறேன் என்று ஒரு வருஷம் முன்னால் நி¨னத்தும் பார்க்கவில்லை. ஐந்து நிமிடப் பயணத்தில் INOX ம் அது தடம் காட்டியதில் தொடர்ந்த பெங்காலிப் படங்களும் தந்த நிறைவெல்லாம் சென்னை வந்த பிறகு சத்யம் ரொம்ப தூரம், வேலைக்காரம்மா வேலை முடிக்கும் நேரம், பசங்க வீட்டுக்கு வரும் நேரம் போன்ற சில்லரை காரணங்களால் இழப்பதே தெரியாமல் இழந்தது பெரிய பர்சனல் சோகம். ஆரம்ப கால சென்னை வாழ்க்கையில் தேடிப் போன சத்யம் Lights On நிகழ்ச்சிகளும் சனி, ஞாயிறு காலை ஒன்பது மணி படங்களும் மெல்ல மெல்ல இல்லாமலே போனது உரைத்த ஒரு மாலை Parzania என்று ரொம்ப வேகமாகப் புறப்பட வைத்து இரண்டாவது வரிசை ஓக்கேவா என்று கேட்க, மறுத்ததால் வாய்த்தது Babel. ஒரு விஷயம்... அதைத் தெ¡டர்ந்து நிகழும் வெவ்வேறு விஷயங்கள்... அதை கச்சிதமாக இணைத்திருப்பது... கொஞ்சம் கூட தொய்வில்லாமல்... செதுக்கி வைத்த பாத்திரங்கள், அது காட்டும் முதிர்ச்சி, இப்படித்த¡ன் இருக்கப் போகிறது என்று எதிர்பார்த்த இறுதிக் காட்சி, முகத்தில் அறையாவிட்டாலும் யோசிக்க வைத்ததுமாய்... திரும்பி வரும் வழியெல்லாம் தொடர்ந்த படம் பற்றிய விவாதம்... நிச்சயமில்லாதது தான் வாழ்க்கை என்றால் எப்படி என்ற கேள்வியும், அது தானே அதன் சுவாரசியம் என்ற பதிலுமாய்... மகளும் நானும் அன்றைக்கு படுக்கப் போகும் போது கனமாக உணர்ந்தோம்.

ஆனாலும் Parzania வை விட மனதில்லாமல் அடுத்த நாள் படையெடுப்பில் வழக்கம் போல சத்யம்தியேட்டரின் ட்வின் சீட் இந்த முறையும் மகளுக்கு எனக்கும் வாய்த்தது. போயும் போயும் நாம ரெண்டு பேருமா இப்படி ஒட்டிக்கிட்டு படம் பார்க்கணும்! என்ற வழக்கமான செல்லச் சலிப்பொடு பாப்கார்னையெல்லாம் படம் தொடங்குவதற்கு முன்னாலே முடித்து விட்டு பார்க்கத் தயாரானது ம்ம்ம்... வலிய வருத்திக் கொண்ட இறுக்கம் போல என்று கூடச் சொல்லலாம். படத்தின் இந்த நிகழ்வு நடந்து முடிந்த போது தான் சூரத்திற்கு குடிபெயர்ந்திருந்தோம். அவ்வளவு பக்கத்தில் இத்தனை நடந்திருந்தும், ஊடகச் செய்திகளைக் காட்டிலும் கண் பார்த்த செய்திகள் சட்டென்று பரவும் சாத்தியமிருந்த போதும் அமைதியாயிருந்த அந்த நகரம் பெரிய ஆச்சர்யம்.

அந்த கலவரங்களின் போது குழந்தையை தவறவிட்ட ஒரு குடும்பத்தின் உண்மைக் கதை. சின்னச் சின்ன மாற்றங்கள் செய்து ஒரு கதை போன்ற தோற்றத்தில் பதியப் பட்ட நிஜம். முழு தியேட்டரும் உறைந்து போய்க் கிடந்தது. கதை நாயகன் Parzan னின் கற்பனையில் உருவாக்கி வைத்திருந்த, அவனுக்கும் அவன் தங்கைக்குமான Parzania என்ற உலகம், அதன் சந்தே¡ஷங்கள்... சாக்லெட் வீடுகளும் ஐஸ்க்ரீம் மலைகளும்... ஒரே நாளில் கலைந்து போவதும்.... தேடல்களும் தோல்வியும்...

யார் யார் எப்படி எப்படி நடித்தார்கள் என்று எழுதும் போது அது வெறும் படமாக பதிந்துவிடக் கூடாது என்பதால் இது மட்டுமே போதுமென்று தோன்றுகிறது. வழக்கம் போல!

Friday, February 02, 2007

சொல்லாமல் விட்டவை

கொஞ்ச நாளாக செய்ய வேண்டும் என்று நினைப்பதை செய்ய உட்காரவே ரொம்ப சமயம் எடுப்பதற்கு காரணம் என்ன என்று யோசித்துக் கொண்டேயிருக்கிறேன்! சென்ற முறை ஹிந்து ம்யூஸிக் ·பெஸ்ட் எழுதவும் அப்படித்தான் அநியாயத்திற்கு காலம் தாழ்த்தியிருந்தேன். ஆனாலும் அதை செய்யாமல் போயிருந்தால் இப்போது இதையும் எழுத வேண்டி வந்திருக்காது. இந்த இரண்டு மாதத்தின் அதிசுவாரசிய நிகழ்வுகள் என்னுடைய வாழ்க்கையில் இல்லாமல் போயிருந்திருக்கும்! அந்தப் பதிவோ அல்லது வெறும் தகவலோ மதி மூலமாக பத்திரிகை அ(ந)ன்பர் ஒருவரின் பார்வைக்குப் போய், அவருடைய மெயில் முகவரியைக் கையில் வைத்துக் கொண்டு நாலு நாள் முழித்துக் கொண்டிருந்தேன். முழித்ததற்கு காரணம், அந்த ம்யூஸிக் ·பெஸ்ட் சமயம் ஒரு நாளைப் போல தினமும் மாலையானால் புறப்பட்டும் போவதும், ராத்திரி பத்தரைக்கு மேல் வீடு வருவதும், இன்னைக்கு இவரைப் பார்த்தேன் அவரைப் பார்த்தேன் என்று கதை சொல்வதும், அவசர சமையலில் நாளை ஓட்டிக் கொண்டிருந்ததும், இதோ இன்னைக்கு... இல்ல இல்ல நாளைக்கு என்று என் மக்களின் பொறுமை வெடித்து விடப் போகிறது என்று அஞ்சியதும், நல்லவேளை அப்படியெதுவும் நடந்து விடாமல் முடிந்ததே பெரிய விஷயமாய் ஆசுவாசப் பட்டதனால்.... மறுபடியும் இது அவசியமா என்று தான் அந்த முழி. ஒரு சுபமாலையில் பிற்பாடு நண்பராகிப் போன அந்த அன்பருக்கு ஒரு மெயில் தட்டிப் போட அடுத்த நிமிஷம்(சத்தியமாய்) செல்பேசி அடித்தது பெரிய ஆச்சர்யம்.

அடுத்த நாள் போனதும் பேசியதும் எல்லாம் முடிந்து அழைப்பிதழ்களை எடுத்துக் கொடுத்து அவருடைய விசிட்டிங் கார்ட் எல்லாம் கொடுத்து கடைசியில் கேட்டது, 'உங்களுக்கு சங்கீதம் தெரியுமா?' என்பது! அவர் என்னை வரச் சொல்லியிருந்தது இந்த வருட சங்கீத சீஸனை கவர் செய்வதற்காக. எனக்கென்னவோ என் ரசனை மேல் ரொம்ப நம்பிக்கை. அது மட்டும் பே¡துமானதாய் தான் தோன்றியிருந்தது. ஆனாலும் தயங்கிய நண்பருக்கு சமாதானம் செய்ய தைரியம் வந்ததே திரு. சக்கரபாணி ஜிந்தாபாத் என்ற நம்பிக்கைதான். அவரோடு சேர்ந்து செய்து விட முடியும் என்ற ஆணித்தரமான யோசனையோடு வெளியெ வந்து முதல் தொலைபேசி அடித்தது அவருக்குத்தான். கொஞ்சம் நக்கல் கேலியெல்லாம் செய்தாலும் வருகிறேன் என்று ஒத்துக் கொண்டார்.

இரண்டு நாள் அவகாசம் கொடுத்து மூன்றாவது நாள் முதல் ரிப்போர்ட் கொடுத்து விடச் சொல்லியிருந்தார்கள். இன்னாரைக் கவர் செய், இந்த கச்சேரி வேணும் என்றெல்லாம் பத்திரிகையிலிருந்து கட்டாயப் படுத்தவில்லையாதலால் இரண்டு பேரும் பேசி ஏகமனதாய் முடிவு செய்தோம். யார் தெரியுமா? சஞ்சய் சுப்ரமணியம். அப்போது தான் விகடனில் அவரைப் பற்றிப் படித்திருந்தேன். போகப் போகின்ற சபாவிற்கு முன்னாலயே தகவல் போய் விட்டதால் எனக்காக பாஸ் காத்துக் கொண்டிருந்தது. ரொம்ப இளமையா, ஸ்மார்ட்டா ஒரு வித்வான் தோரணையெதுவும் இல்லாத....

இதுவரை எழுதி கிடப்பில் போட்டும் ஒரு பதினைந்து நாளாகிவிட்டது. உள்ளேயிருந்து விரட்டும் சில கேள்விகர்த்தா*க்களும் உறுத்தல்களும் இல்லாமல் இருந்திருந்தால் காணாமல் போயிருக்க வேண்டிய இது மறுபடியும் உயிர்பெறுகிறது! ஆனாலும் அந்த அளவு விவரமாக எழுதும் பொறுமை இல்லாமல் போனதால் பத்திரிகைக்கு அனுப்பிய, கத்தரி வெட்டு வலியறியாத ஒரிஜினல் வர்ஷன்களை ஒவ்வொன்றாய் போட உத்தேசம்.

* ம்யூஸிக் பெஸ்ட் பதிவில் விஸ்தாரமாய் பின்னூட்டமிட்ட மதிக்கு ஒரு பாடாவதி ப்ரௌஸிங் சென்டரில் நீளமாய் அடித்த பதில் கடைசி நிமிஷத்தில் காணாமல் போய் விட, வெறுப்பில் இரண்டு வரி ஆங்கிலப் பின்னூட்டத்தில் முடித்துவிட்டாலும் உறுத்தல் உறுத்தல்தான். அங்கேயே டிசம்பர் சீஸனுக்கு போகும் உத்தேசம் உண்டா என்று கேட்ட பாலாஜிக்கு... ஆசையிருக்கு, முடியுமான்னு தெரியலைன்னு அனுப்பிய பதிலுக்கும் அதே தலைவிதியாகிப் போனதால்.... இந்த தொடர் பதிவுகள்.