Thursday, November 05, 2009

பெயரில்லாமல்...

இன்னதென்று சொல்லாமல் 
உருவமோ மணமோ ருசியென்றோ
அடையாளம் அறிவிக்காமல் 
தேடச் சொல்லி  பணிக்கப் பட்டிருக்கிறேன்
உள்ளுணர்வு சொல்லுமென்ற குறிப்போடு

சொற்களை அனுப்பி
உதடுகள் இணையும் முன்
காற்றில் கலைந்து செல்லும்
வார்த்தைகளின் தேடல் ஆரம்பம்

எழுதும் வரி முடித்து நீங்குமுன் 
அதிரும் சொற்கள் தம்
தேடல் தொடங்கிவிட்டிருக்கின்றன

நிலையில்லாமல் நானும் 
நகர்ந்து கொண்டிருக்கிறேன் 
விழித்த புலன்களுடன்
இடையறா தேடலோடு

தேடியதைக் கண்டடையும் போது
நானோ என் சொற்களோ 
எழுதிச் சென்ற வார்த்தைகளோ 
சந்தித்துக் கொள்ள 
உத்த‌ரவாதமில்லாத போதும்

நீள் வெளியில் 
நிறைந்திருக்கும் தேடல்களே 
மிச்சமாய் தொலைந்தே
போவேனென்ற போதும்.

*********************************************************



யாரோ கொண்டு வந்த 
ஓவியமது
எளிய ஒற்றை மரமும்
அதில் அடையாளமில்லாதொரு
சிறுபறவையும்
வெளிர் மஞ்சள் நிறத்திலாய்
தன்னிருப்பை தனித்துரைக்காது
எதிர் சுவரில் இத்தனை வருஷங்களாய்
எல்லாம் எனக்கான ஒரு நாளில்
நான் சேர்த்த நிறத்திலும் 
கூட்டிக் குறைத்த வடிவத்திலும்
ஆழ் நிறம் கொண்ட
ஓவியப்பறவை 
வளைந்த மூக்கு நுனியும்
கூர் நகமும் அடித்தொண்டை குரலும்
கொண்ட கழுகு போலானது
நான் கவனிக்காத நேரங்களில்
முழுச் சுவரிலும் வியாபித்து
சிறகசைக்கும் வேளைகளில் 
காணாமல் நடிக்கிறேன்


***********************************

நீ சொன்னதற்காக 
அந்த பெரிய கதவுகளை சார்த்தியாகிவிட்டது
இரண்டு ஜன்னல்களையும்

இருள் பரவி பழகியும் போனபின்
ஒளித்துவாரங்களைத் தேடித் தேடி 
அடைப்பதே பொழுது போக்காகிவிட்டது

பின் தொடர்ந்த நாட்களில்
இருட்டறைக்குள் தனியே
ஞாபகங்களை அழித்தொழிக்க துவங்கியிருந்தேன்

நாள் மறந்து நேரம் மறந்து
பழக்கமும் மறந்துபோய்
அலைபாய்தலாய் அறைக்குள் 
திரிந்திருந்த ஒரு மாலையில்
மழை கசிந்து கால் நனைந்த கணம்
நீல நிறத்தை விரல்
 நுனி
உணர்ந்து கொண்டது.

நன்றி : வார்த்தை.