Thursday, November 05, 2009

பெயரில்லாமல்...

இன்னதென்று சொல்லாமல் 
உருவமோ மணமோ ருசியென்றோ
அடையாளம் அறிவிக்காமல் 
தேடச் சொல்லி  பணிக்கப் பட்டிருக்கிறேன்
உள்ளுணர்வு சொல்லுமென்ற குறிப்போடு

சொற்களை அனுப்பி
உதடுகள் இணையும் முன்
காற்றில் கலைந்து செல்லும்
வார்த்தைகளின் தேடல் ஆரம்பம்

எழுதும் வரி முடித்து நீங்குமுன் 
அதிரும் சொற்கள் தம்
தேடல் தொடங்கிவிட்டிருக்கின்றன

நிலையில்லாமல் நானும் 
நகர்ந்து கொண்டிருக்கிறேன் 
விழித்த புலன்களுடன்
இடையறா தேடலோடு

தேடியதைக் கண்டடையும் போது
நானோ என் சொற்களோ 
எழுதிச் சென்ற வார்த்தைகளோ 
சந்தித்துக் கொள்ள 
உத்த‌ரவாதமில்லாத போதும்

நீள் வெளியில் 
நிறைந்திருக்கும் தேடல்களே 
மிச்சமாய் தொலைந்தே
போவேனென்ற போதும்.

*********************************************************



யாரோ கொண்டு வந்த 
ஓவியமது
எளிய ஒற்றை மரமும்
அதில் அடையாளமில்லாதொரு
சிறுபறவையும்
வெளிர் மஞ்சள் நிறத்திலாய்
தன்னிருப்பை தனித்துரைக்காது
எதிர் சுவரில் இத்தனை வருஷங்களாய்
எல்லாம் எனக்கான ஒரு நாளில்
நான் சேர்த்த நிறத்திலும் 
கூட்டிக் குறைத்த வடிவத்திலும்
ஆழ் நிறம் கொண்ட
ஓவியப்பறவை 
வளைந்த மூக்கு நுனியும்
கூர் நகமும் அடித்தொண்டை குரலும்
கொண்ட கழுகு போலானது
நான் கவனிக்காத நேரங்களில்
முழுச் சுவரிலும் வியாபித்து
சிறகசைக்கும் வேளைகளில் 
காணாமல் நடிக்கிறேன்


***********************************

நீ சொன்னதற்காக 
அந்த பெரிய கதவுகளை சார்த்தியாகிவிட்டது
இரண்டு ஜன்னல்களையும்

இருள் பரவி பழகியும் போனபின்
ஒளித்துவாரங்களைத் தேடித் தேடி 
அடைப்பதே பொழுது போக்காகிவிட்டது

பின் தொடர்ந்த நாட்களில்
இருட்டறைக்குள் தனியே
ஞாபகங்களை அழித்தொழிக்க துவங்கியிருந்தேன்

நாள் மறந்து நேரம் மறந்து
பழக்கமும் மறந்துபோய்
அலைபாய்தலாய் அறைக்குள் 
திரிந்திருந்த ஒரு மாலையில்
மழை கசிந்து கால் நனைந்த கணம்
நீல நிறத்தை விரல்
 நுனி
உணர்ந்து கொண்டது.

நன்றி : வார்த்தை.

Thursday, July 02, 2009

ஒரு முரண் & இன்று தொடங்கி...

ஒரு முரண்.

ஆழத்தில் ஒலிக்கும் குரல்
வலுப்பெறும்
மொத்தமும் துறக்கச் செய்யும்
அத்தனை வலிமையாய்

தொட்டுப் புழங்கி
பிணைத்திருந்த மொத்தமும்
ஒற்றை விலக்கலில்
ஒதுக்கச் செய்யும்

புதியதோர் சுவாசமும்
அறியாத அனுபவங்களுமாய்
வலிகள் தந்து
சுயம் மறக்கச் செய்யும்

பதியும் பாதச் சுவடுகளை
நினைவிலிந்து அழித்து
திரும்ப இயலாமலாக்கி
தொலைந்து போகக் கூடும்

குரல் உணர்த்துவதெல்லாம்
தொட்டுக் குழைத்து
ஞாபகங்கள் தூவி
நமதாக்கிக் கொள்ள

உனக்கு பிடித்த நிறத்தில்
எனக்கான மணத்தில்
உயிராழத்தில் அழுத்தமாய்

நிறமோ வாசனையொ
தட்டியெழுப்பும் ஓர் நொடி
மெல்லக் கண்மூடி
நீயோ நானோ நினைவில் கொள்ள.


இன்று தொடங்கி...

மலையின் இறுக்கம் கொண்டேன்
என்னில் சலனமில்லை என்றேன்
காற்று சுமந்து வரும்
காதல் வாசமென்னை
கரைத்துச் செல்கிறது

விருட்சமாய் ஆழ ஊன்றி
கிளை பரப்பி நின்றேன்
நீண்ட நெடுங்காலமாய்
கத்தும் குருவிகளின்
அலகிலென் பச்சையம்
கடந்து செல்கிறது
காடு மலைகள் தாண்டி

ஆழ்கடலின் அமைதி கொண்டு
புலனடக்கி மோனத்திலிருந்தேன்
நிசப்தம் கிழித்து நீந்தி வரும்
பசித்த குழந்தையின் கேவலில்
மார்புகள் நேசம் சுரக்கின்றன

இழுத்தடக்கி மூடிக்கொள்ளும்
ஒவ்வொரு முயற்சியிலும்
எங்கோ ஓர் இடைவெளி விட்டு
கவனம் குவித்து காத்திருந்தேன்
தேடியென்னை நீயடைய

என் நீண்ட காத்திருப்பு
நேற்றோடு முடிந்தது.

நன்றி : வார்த்தை.

Monday, June 15, 2009

32 பதில்களில் கொஞ்சம் நான்.


ஆறுமாசமா இங்கே எதுவுமே எழுதவில்லை. ஏனோ தோணவில்லை. இப்போது வாசித்துக் கொண்டிருக்கும் 'பல நேரங்களில் பல மனிதர்கள்' தான் என்னுடைய ரீ எண்ட்ரியாக இருக்கும்ன்னு நினைத்திருந்தேன்.

எப்பவுமே இந்த மாதிரி கேள்விகள் உடனே எழுத வைக்கும். நம்மளைப் பத்தி நாம நினைக்க மறந்து போன விஷயங்களையெல்லாம் கிளறிக் கிளறி வெளியே கொண்டு வர்றதால. சும்மாவே நான் எதையாச்சும் யோசிச்சிட்டே இருக்கற ஆளு. அதையெல்லாம் சொல்லுன்னு வேற சொன்னா நம்மளை கட்டி நிறுத்த முடியாது தான். கேள்விகள் கொடுத்து என் நீண்ட நிசப்தம் கலைத்த( நிசப்தம் கலையும் நேரங்கள் - நம்ம டேக்லைன்!) சுரேஷ் கண்ணனுக்கு நன்றி.


1) உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது? உங்களுக்கு உங்க பெயர்
பிடிக்குமா?


அப்பா வைத்த பெயர். வீட்டிலே ஒரு பெரிய தாத்தா எங்க குடும்பத்து பொண் குழந்தைகளுக்கெல்லாம் பெயர் வைத்துக் கொண்டிருந்தார். மங்கையர்கரசி, மலர்விழி, பூங்குழலி, தேன்மொழி, எழிலரசி... அவளோட அவர் சிவலோக ப்ராப்தி அடைந்துவிட்டதால நமக்கு பேர் வைக்கற சான்ஸ் அப்பாக்கு கிடைத்தது. இல்லைன்னாலும் அதை அவரோட பெரியப்பாவுக்கு விட்டிருப்பாரான்னு சந்தேகம் தான். அந்த வரிசையிலே நான் நிர்மலா தேவி. வாலை வெட்டி விடற கைங்கர்யம் நமது. ஸோ வெறும் நிர்மலா.

சின்ன வயசில அது வழக்கமான பேரா இல்லாம இருந்ததால பிடிக்கும். அர்த்தம் உணர்ந்தப்போ இன்னும் அதிகமா. இப்போ அது வெறும் அடையாளம் மட்டுமே. ஆனாலும் வித்யாசமான பெயர்களைக் கேட்கும் போது கண் விரித்து அர்த்தம் கேட்டு சந்தோஷப்படறது நிஜம்.

2) கடைசியா அழுதது எப்போது?

முந்தாநாள் சாயந்திரம் பால்கனில உட்கார்ந்து கொண்டு. ஒரு பைசா பெறாத காரணத்தை ஹார்மோன்கள் தூண்டி விட்டதில் கொஞ்சம் கண்ணீர் மழை பெய்து துடைத்து விட வேண்டியதாயிற்று.

3) உங்களுக்கு உங்க கையெழுத்து பிடிக்குமா?

பிடிக்கும்.

ஐந்தாவது வரை கையெழுத்து சகிக்காது. எனக்குத் தெரிந்த ஒரு அக்கா நான் படிக்கிற பள்ளிக் கூடத்திலேயே எனக்கு வகுப்பாசிரியராக சேர்ந்ததும் உன் நோட் புக் குடு பார்க்கலாம்னு கேட்டப்போ நான் தயங்கினது இப்பவும் நினைவிருக்கிறது. அவசரமா அதை எப்படியாச்சும் சரி செய்ய முடியுமான்னு போராடி எதுவும் பண்ண முடியாம அப்படியே கொடுத்தேன். ஒரே நாள்ல திருப்பிக் கொடுத்துட்டாங்க. ஆறாவது போனதும் க்ரேஸி மிஸ் தினமும் கையெழுத்து பழகச் சொன்னதை சரியாக பயன்படுத்திக் கொண்டதில் படித்து முடிக்கும் வரை அழகான கையெழுத்தாயிருந்தது. இப்பவும் கொஞ்சம் எழுதிப் பழகினால் அதே அழகோட எழுத முடியும்.


4) பிடித்த மதிய உணவு?

சந்தோஷமாக நான் சமைக்கும் எதுவும். ஞாயிற்றுக் கிழமை மட்டும் பிரியாணி.

5) நீங்கள் வேறு யாராவதாக இருந்தால் உங்களோட நட்பு வச்சுக்குவீங்களா ?


நிச்சயமாக. வருஷக்கணக்கில் பார்க்காத நட்பை இன்னைக்கு பார்க்கும் போதும் விட்ட இடத்திலிருந்து அதே எக்ஸைட்மெண்டோடு தொடர முடிந்திருக்கிறது. எதிராளிதான் பெரும்பாலான நேரங்களில் ஹேய் என்னாச்சு உனக்குன்னு ஒரு பார்வை பார்க்க, அதுக்கப்பறம் அடக்கி வாசிக்க பழகியிருக்கேன்!

6) கடல்ல குளிக்கப் பிடிக்குமா? அருவியில் குளிக்கப் பிடிக்குமா?

அருவியிலென்று நினைக்கிறேன். இதிலெல்லாம் குளித்து வருஷமாகிறது.

7) ஒருவரைப் பார்க்கும்போது முதலில் எதைக் கவனிப்பீர்கள்?

பேசற ஸ்டைல், மேனரிஸம்... கொல்கத்தா காபி டேயில் பழியாய் கிடந்து வருகிறவர்களையும் போகிறவர்களையும் வேடிக்கை பார்த்தது ஞாபகம் வருகிறது.

8) உங்க கிட்ட உங்களுக்குப் பிடிச்ச விஷயம் என்ன? பிடிக்காத வி
ஷயம் என்ன?


வயதே நினைவிருப்பதில்லை - பிடித்ததும் பிடிக்காததும்.


9)உங்கள் துணைவர்/துணைவி கிட்டே உங்களுக்குப் பிடிச்ச/பிடிக்காத விஷயம்?


அசாத்திய பொறுமை - பிடித்ததும் பிடிக்காததும்.

10) இப்போ யார் பக்கத்துல இல்லாம போனதுக்கு வருந்துகிறீர்கள்?

அது அந்த நேரத்து மனநிலையை பொறுத்து. ஆனால் யாருமில்லாமல் இருப்பது போல சுகம் வேறில்லை.

11) இதை எழுதும்போது என்ன நிறத்தில் ஆடை அணிந்துள்ளீர்கள்?

மெரூன் சல்வார், பச்சை நிற கமீஸ்.

12) என்ன பார்த்து/கேட்டுக்கொண்டு இருக்கிறீர்கள்?

NDTV Profit டீவியில் ஓடிக்கொண்டிருக்கிறது.

13) வர்ணப் பேனாவாக உங்களை மாற்றினால், என்ன நிறப் பேனாவாக மாற ஆசை?

நீலம்.

14) பிடித்த மணம்?


நாலைந்து மாதக் குழந்தையிடம் தாய்ப்பாலும், ஜான்ஸன்ஸ் பேபி சோப்பும் கலந்து வரும் மணம், பசிக்கும் நேரத்தில் பிரியாணி வாசனை, கொஞ்சம் வருஷம் முன்னால் உபயோகித்திருந்த nina ricci mild, பச்சை நிறத்தில் கொஞ்சம் தடிப்பான மடல்களோடு சின்ன வயதில் எங்கேயோ முகர்ந்து பார்த்திருந்த பெயர் தெரியாத ஒரு பூ வாசனை, மருதாணிப்பூ, அப்பாவின் கோகுல் சாண்டல், சிகரெட், பெட்ரோல்...

15) நீங்கள் அழைக்கப்போகும் பதிவரிடம் உங்களுக்குப் பிடித்த விஷயம்? அவரை நீங்கள் அழைக்கக் காரணம் என்ன?

அவருடைய எழுத்து தான். அவர் இந்த கேள்விகளுக்கெல்லாம் பதில் எழுதினால்( எப்படியும் எழுதப்போறதில்லை!) எப்படி இருக்கும் என்ற க்யூரியாஸிட்டிதான்.

16)உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவுகளில் உங்களுக்குப் பிடித்த பதிவு?

கொஞ்சம் சினிமா, கொஞ்சம் புத்தகங்கள்.

17) பிடித்த விளையாட்டு?

வேகமாக நடந்தாலே பொம்பளைப் புள்ளைங்க அதிர அதிர நடக்காதீங்கன்னு அகிலாண்டம்மாள்(பாட்டி) சொல்லிச் சொல்லி வளர்ந்ததில் எந்த விளையாட்டையும் விளையாடியதில்லை.

18) கண்ணாடி அணிபவரா?

இல்லை.

19) எந்த மாதிரியான திரைப்படம் பிடிக்கும்?


படத்தின் எதாவது ஒரு அம்சத்தோடு என்னைத் தொடர்பு படுத்திக் கொள்ள முடியும் எந்தப் படமும் பிடிக்கும்.


20) கடைசியாகப் பார்த்த படம்?

dosar - the companion - rituparno ghosh (பெங்காலி)

21) பிடித்த பருவ காலம் எது?


குளிர்காலம். சென்னை வந்த பிறகு அப்படி ஒரு சீஸனே இல்லாமல் போனது!

22) என்ன புத்தகம் படித்துக்கொண்டு இருக்கிறீர்கள்?

பல நேரங்களில் பல மனிதர்கள் - பாரதி மணி.

23) உங்கள் டெஸ்க்டாப்பில் இருக்கும் படத்தை எத்தனை நாளைக்கு ஒருமுறை மாற்றுவீர்கள்?

நான் செலக்ட் செய்வதும் இல்லை, மாற்றுவதும் இல்லை.

24) பிடித்த சத்தம்? பிடிக்காத சத்தம்?

பிடித்தது - வாய்விட்டு சிரிக்கும் சிரிப்பு, மனதிற்கு நெருக்கமான சில குரல்கள், தண்ணீரின் சலசலப்பு, மழை, wind chimes...

பிடிக்காதது - சீரியல் கத்தல்கள்.

25) வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக தொலைவு?


கோயம்புத்தூரிலிருந்து இரண்டு ராத்திரி இரண்டு பகல்கள் ட்ரெயினில் காந்திதாம் போகும் போதுதான் போய்க் கொண்டே இருப்பது போலிருக்கும்.

26) உங்களிடம் ஏதாவது தனித்திறமை இருக்கிறதா?

இருக்க வேண்டும். எனக்குத் தெரியவில்லை.

27) உங்களால் ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு விஷயம்?

அப்படி எதையும் நினைப்பதில்லை. என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது என்பதற்காக எதுவும் நின்று போகப் போவதில்லை!


28) உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?

என்னுடைய யோசனை, ஞாபகங்கள்.

29) உங்களுக்குப் பிடித்த சுற்றுலாத் தலம்?

டார்ஜிலிங்.

30) எப்படி இருக்கணும்னு ஆசை?

இப்படியே.

31) கணவர்/மனைவி இல்லாமல் செய்ய விரும்பும் காரியம்?

தூரமா முன்னே பின்னே தெரியாத ஊருக்கெல்லாம் பிரயாணம்.

32) வாழ்வு பற்றி ஒரு வரியில் சொல்லுங்க

புரியாமயே இருக்கட்டுமே அதனால என்ன?!