உரக்கப் பேசுவதில்லை
மெல்லிய குரலில்
ஓரிரு வார்த்தைகள் மட்டும்
அவை நேரடியாகப் போய்ச் சேர்வதில்லை
பெரும்பள்ளத்தில் இறங்கி ஏறி
அர்த்தம் இழந்து
வீரியமிழந்து
அங்கிருந்து பார்க்கும் போது
நரியாக பரியாக தெரிந்தாலும்
இங்கே நிர்மலாவாகவே நிற்கிறேன்
விலகி நகர்கிறேன்
மேலும் தனிமை கொள்கிறேன்
ஆள்க்கூட்டத்தில் தனியாகவா
முழுத்தனிமையா
இக்கேள்வியை எதிர்கொள்ளும் தோறும்
தனிமைக்கு வாக்களிக்கிறேன்
தக்க வைத்துக் கொள்ளும் வேட்கையில்
ஆனாலும் திரும்பி வருகிறேன்
ஒவ்வொரு முறையும்
நிறம் மாறி
அறிவார் யாருமின்றி.