Sunday, May 12, 2013

ஒரு சூத்திரனின் கதை - ஏ.என்.சட்டநாதன்.




பதிப்பாசிரியர்: உத்தரா நடராஜன். தமிழில்: கே. முரளிதரன், ஆ. திருநீலகண்டன்.

வாழ்க்கை குறிப்புகள் என்பது ஒரு தனி மனிதனின் வாழ்க்கையைத் தாண்டி அந்த காலகட்டத்தை பிரதிபலிப்பதாலே அது குறிப்பிடத்தக்க ஒன்றாகி விடுகின்றது. நம் கண் முன்னே நடந்து கொண்டிருக்கும், கொண்டிருந்த அத்தைகள், பாட்டிகள் என்ற ஒவ்வொரு சாதாரண மனிதர்களின் வாழ்க்கைகள் எல்லாமே ஒரு அனுபவம்.  முழுமையாக வெளிப்படாத, குடும்பத்தார்களின் நினைவில் மட்டுமே தங்கி மறந்து போன நீண்ட காவியங்கள். அதனாலேயே கைகளில் சிக்கும் இது போன்ற தடைகள் தாண்டி வந்தவர்களின் குறிப்புகள் நிச்சயம் ஒரு பொக்கிஷம்.
சட்டநாதன் அவர்களின் இந்த குறிப்பு பள்ளி மாணவர்கள் பயன்படுத்தும் கோடு போட்ட நோட்டு புத்தகத்தில்,  ஆங்கிலத்தில் எழுதப்பட்ட, முழுமை பெறாத குறிப்புகள். கடும் பொருளாதார சிக்கல்களுக்கு நடுவில் ஒரு பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் இருந்து சிரமப்பட்டு பெற்ற கல்வியும் அது கொண்டு சென்ற தூரங்களும் ஆச்சர்யமூட்டுபவை. புத்தகத்தின் தலைப்பும் அட்டைப்படமும் கொடுக்கும் தூண்டுதலைக் கடந்து ஒரு வாழ்க்கை குறிப்பாக வாசிக்க முடிந்தது.

தமிழ்நாட்டின் பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் தலைவராக அவர் சமர்ப்பித்த அறிக்கை அவருடைய பொது வாழ்வின் குறிப்பிடத்தக்க பங்களிப்பு.

புத்தகத்தின் சில வரிகள்:

'அந்தப் பெரிய வீட்டின் ஒட்டு மொத்தக் குரல் அவள் தான். இளமைக் காலத்தில் இன்னும் அழகாக இருந்திருக்க வேண்டும் என்று நான் அடிக்கடி நினைப்பேன். ஆனால் ஆழமான மனவருத்தங்களை, நம்பிக்கைத் துரோகங்களை சுமக்கும் ஒரு பெண்ணாகவே அவள் என் நினைவுகளில் இருக்கிறாள்.'

'அவ்வப்போது எனக்கு சோற்றுடன் கொஞ்சம் மோர் ஊற்றுவார்கள். என் தகப்பனாரோ பாட்டியோ சோற்றில் மோர் ஊற்றிச் சாப்பிட்டார்களா என்று தெரியவில்லை.'
'உதவி கேட்டு அடுத்தவர் வீட்டு வாசலில் நின்றவர்களால் தான் நான் அடைந்த அவமானத்தையும் விரக்தியையும் உணர முடியும். யாராலும் கவனிக்கப் படாமல் பல மணி நேரம் நிற்க வேண்டும். காலும் மனமும் வலிக்க ஆரம்பிக்கும் நேரத்தில் 'நான் திரும்பக் கூப்பிடுகிறேன்' என்றோ 'இன்னொரு சகோதரனிடம் சென்று கேள்' என்றோ சொல்லப்படும்.'

'இறுதியாண்டின் மத்தியில் என் நீளக் குடுமியை வெட்டி, கிராப் வைத்துக் கொண்டு வகுப்புக்குள் நுழைந்தேன். மாணவர்கள் மேஜையைத் தட்டியும் கூச்சலிட்டும் வரவேற்றார்கள்.'

'நான் நன்றாக படித்திருப்பதால் நான் பிராமணனாகத்தான் இருக்க வேண்டும் என்று நினைத்ததாக அவர் சொன்னார். ஆனர்ஸ் முதல் வகுப்பு ஒன்றும் பிராமணர்களின் தனி உரிமை இல்லை என்று பதில் சொன்னேன்.'

'இவர்களில் பலர் பிரம்மஞானவாதிகள். பொதுவாக சாதி பாகுபாடு பார்க்காதவர்கள். இந்த சந்திப்பில் நடந்த விஷயங்கள் அனைத்தும் காது, மூக்கு சேர்த்து கல்லூரி விடுதிகளிலும் நகரிலிருக்கும் உணவு விடுதிகளிலும் பரப்பப்பட்டன. எனக்கு ஒரு கதாநாயகனுக்குரிய அந்தஸ்து கிடைத்தது.'

முழுமை பெறாத இந்த குறிப்புகளோடு சென்னை பல்கலைக்கழகத்தில் 1981ல் பெரியார் ஈ.வெ.ராமசாமி நினைவு அறக்கட்டளை சொற்பொழிவுகளை இணைத்ததன் மூலம் வேறுவிதமான ஒரு முழுமையை அளித்திருக்கிறார், பதிப்பாசிரியரும் சட்டநாதனின் பேத்தியுமான உத்தரா நடராஜன்.


ஜன்னல் பகுதி - குங்குமம் தோழி, மார்ச் 2013 இதழுக்காக எழுதியது.

No comments: