Tuesday, June 02, 2015

இடப்பெயர்ச்சி பலன்கள் - 2

உரண் (Uran) - எங்களுடைய இரண்டாவது ஊர். இதோ இதோ என்று இழுத்தடித்து
ஏறக்குறைய பத்து மாதம் கழித்து வந்த மாற்றலில் வந்து சேர்ந்த பம்பாயின்
புறநகர் பகுதி. தாதரில் இருந்து பஸ் ஏறிப் போய்க் கொண்டேஏஏஏ இருந்தால்
மூன்று மணி நேரத்தில் உரண். ஆனால் ஏனோ அது எப்போதும் ஒரு முடிவில்லாத
நீண்ட பயணமாகவே  தோன்றும். வி.டிக்குப் பக்கத்தில் இருந்து ஃபெரியில்
நாற்பதே நிமிடம். இவ்வளவு பக்கத்தில் இருந்தும் பாம்பேயின்
ஆர்ப்பாட்டங்களோ அமர்க்களமோ தீண்டாமல் அமைதியாய் இருக்கும். ஒரு
ஒற்றைத்தெரு கடைவீதி தவிர வேற எதுவும் குறிப்பிட்டு சொல்ல இருந்தது
போல் நினைவில்லை.

பாபு சேட் வாடி(wadi) பங்களா - எங்களுடைய வீடு. வாடி என்ற பேருக்கு
ஏற்ற மாதிரி எப்போதோ இருந்த தோட்டத்தின் மிச்சமாக ஒன்றிரண்டு
மரங்கள். மற்ற இடமெல்லாம் சருகுகாய் நிறைந்திருக்கும். வாசல் கேட்டிலிருந்து
பார்க்கும் போது ஒரு காலத்தில் அழகாக இருந்திருக்கக் கூடிய ஒரு பங்களாவின்
சிதைந்த தோற்றம். முதல் முதலாக பார்த்த போது இங்கேயா இருக்கப்
போறோம் என்று யோசனையாக இருந்தது. ஏற்கனவே ரொம்ப நாள்
பிரிந்திருந்ததில் எங்கே இருக்கச் சொன்னாலும் தயார் என்ற மனநிலையில்
இருந்ததால் வாயையே திறக்கவில்லை.

அந்த பங்களாவில்(!) எங்களையும் சேர்த்து ஐந்து குடித்தனம். எங்களுடைய வீடு
முன்னாலிருந்தது. எங்களுக்கும் பக்கத்துப் போர்ஷனுக்கும் சேர்த்து ஒரு பொது
வராண்டா. நடுவில் கம்பெனியிலிருந்து வந்த ஒரு தகர தடுப்பு. அடுத்து ஒரு
பெரிய அறை...வரவேற்பு அறையாகவும் படுக்கையறையாகவும் ஒரு
தார்பாலினால் பிரிந்திருந்தது. அடுத்து நீண்ட ஒரு அறை...இதுவும் ஒரு
தார்பாலின் உபயத்தில் சமையலறையாகவும் குளிக்கும் அறையாகவும். எல்லாம்
கணவர் ஏற்பாடு. சமையலறையில் ஒரு வட்ட மேசை...ஒரு கால் ஆடிக்கொண்டு.
அது தான் சமையல் மேடை. கோணலாய் L க்ளாம்ப் அடித்து ஒரு
பலகை...சாமானெல்லாம் வைக்க. பின்புறம் ஒரு பொது கழிப்பிடம். அதைப்
பற்றிப் பேசாமல் இருப்பது உத்தமம்.

சாமானெல்லாம் கல்கத்தாவுக்கு மாற்றலை எதிர்பார்த்து அங்கே போய்
விட்டிருக்க நாங்கள் பம்பாயில். ஒரு பம்ப் ஸ்டவ், ஐந்தாறு அலுமினியப்
பாத்திரம், ரெண்டு தட்டு, ரெண்டு டம்ளர், ஒரு சப்பாத்திக் கட்டை,
கோல்... "இதில் கொஞ்ச நாள் ஒட்டு. சாமான் சீக்கிரம் வந்துடும்"
என்றார். ஆறுமாதக் குழந்தையோடு அப்படியே எப்படி ஓடியது.... இப்போது
நினைத்தால் ஆச்சரியம்!

அந்த வீட்டில் பின்பகுதியில் இரண்டு குடும்பம். அண்ணன் தம்பிகள். இரண்டு
வீட்டிலும் இரண்டிரண்டு பெண்கள். சாய்மா, ஸக்கியா, ஷபானா, ஷகுப்தா.
இதில் ஸக்கியாவுக்கு பேசவும் கேட்கவும் முடியாது. நாலு பேரில் எதாவது
இரண்டு பேர் எப்பவும் எங்கள் வீட்டில் இருப்பார்கள். அதிகம் படிக்காத, வெளி
உலகத் தொடர்பு இல்லாத பெண்கள். கொஞ்சம் அளவுக்கு அதிகமான வெட்கம்,
சொல்ல முடியாத வெகுளித்தனம். எப்போதாவது அந்த ஒற்றைத் தெரு
கடைவீதிக்கு போக காலையிலிருந்தே பரபரப்பாக இருக்கும் பெண்கள். உருது
வாசம் வீசும் அவர்கள் ஹிந்தி. வெறும் புரிந்து கொள்ளும் அளவில் இருந்த
என்னை ஹிந்தி பேச வைத்த புண்ணியம் அவர்களுக்குத்தான். மூன்று மாதம் கழித்து
சாமானெல்லாம் வந்து சேர்ந்தது. புதிதாக கட்டிய ·ப்ளாட் இருக்கு
போயிடலாம் என்று கணவர் சொன்ன போது, ஏனோ போகத் தோணவில்லை.

பாஷை கொஞ்சம் கொஞ்சமாக பிடிபட ஆரம்பித்தது. அந்த சமயத்தில் ராஜ்
கபூர் இறந்து போய் விட அவர் நினைவாக தூர்தர்ஷன் போட்ட எல்லாப் படமும்
அர்த்தம் புரிந்து பார்க்க முடிந்தது. அதற்கப்புறம் தேடித் தேடி அவருடைய மற்ற
படங்களையும் பார்க்க வைத்தது. யார் என்ன என்று தெரியாமலே குருதத்தின் Mr
& Mrs 55 பார்த்து ஆச்சரியப்பட்டதும் அப்போதுதான். சமீபத்தில் The
Telegraph ல் ஒரு முழுபக்கம் வந்த அவருடைய நினைவுநாளை ஒட்டிய
கட்டுரையை படித்த போது இந்த மனிதர் ஏன் இப்படி அநியாயமாக செத்து
போனார் என்று இருந்தது. படத்தில் மதுபாலாவோடு ஒரு பாடல் காட்சி மட்டும்
மங்கலாக நினைவில்.

பதினொராவது மாதம் மாற்றல்! மறுபடியும் மூட்டை கட்டல்!

மூன்று நான்கு வருடம் கழித்து "humrahi" என்ற தொலைக்காட்சித் தொடரில்
எங்கள் பாபு சேட் வாடி பங்களா! குளித்து, மேக்கப் பண்ணிக் கொண்ட
பெண்ணாட்டம் பளபளவென்று பார்த்த போது ஏனோ நாங்கள் இருந்த போது இருந்த
புராதன அழகு இல்லாதது போல் இருந்தது.

1 comment:

வல்லிசிம்ஹன் said...

அமுதமான நினைவுகள். கோர்வையாகச் செல்லும் நடை.
நிம்மாவின் குண நலம் மிளிர்கிறது.. ஹம்ராஹியில் அந்த வீடு வந்ததா.