Thursday, June 11, 2015

இடப்பெயர்ச்சி பலன்கள் - 12/ கடைசி.

கடந்த ஐந்து மாதங்களாக கொல்கத்தாவை என் ஊர் என்று சொல்லிக் கொண்டிருக்கிறேன். கொல்கத்தா... கோவில்தானா என்று திகைக்க வைக்கும் காளிகாட், கங்கைக்கரை தக்ஷினேஷ்வர், அந்த நாளைய கல்கத்தாவை ஓவியங்களாய் பதிந்து வைத்திருக்கும் விக்டோரியா மெமோரியல், எல்லோருக்குள்ளும் இழையோடும் ரபீந்திர சங்கீத், சந்தர்ப்பம் வாய்க்கும் போதெல்லாம் பெருமையோடு நினைவுகூறும் ரே, பாதாள ரயிலும், பேருந்துகளும், டாக்ஸிகளும், ஆட்டோ, சைக்கிள் ரிக்ஷாக்கள் போதாமல் இன்னும் ஆள் இழுக்கும் கை வண்டி,  நட்டநடு சாலையில் ஆமை வேகத்தில் நகரும் அரதப் பழசான ட்ராம், அது பாழாக்கிப் போட்டிருக்கும் பாதைகள்...

கணவர் உபயோகத்தில் இறகாட்டம் மிதந்த எங்கள் கார், இங்கே ஓட்டுனர் மற்றும் கொல்கத்தா சாலைகளின் உபயத்தில் கமர்கட்டாய் உருளுகிறது. மூன்று வருடங்களுக்கு முன்பு சும்மா எட்டிப் பார்க்க வந்திருந்த போது இருந்த அளவு இப்போது போக்குவரத்து நெரிசல் இல்லைதான். ஆனாலும் அதற்குப் பழகிய ஓட்டுனர்களின் பொறுமையின்மை நேரம் வாய்க்கும் போதெல்லாம் காதைப் பிளக்க வைக்கிறது. அடிக்கும் மஞ்சளில் குட்டி யானைகளாய் ஓடும் டாக்ஸிகள். அளவுக்கு அதிகமாக மாசுப்பட்டிருக்கும் காற்று மண்டலம்.

இன்னமும் கொல்கத்தா என்ன மாதிரி ஊர் என்று புரிந்து கொள்ள முடியவில்லை. ஆச்சர்யங்களாய் நிறைந்திருக்கிறது. அதீத பக்தியும் நவீனமும் கலந்து கட்டி ஒவ்வொரு நேரம் ஒவ்வொரு முகம் காட்டுகிறது. மெட்ரோவின் பளபளப்பின் அடிநாதமாய் கலாச்சார சாயம் குறைவில்லாமல். செழிப்பும் வறுமையும் அதிக இடைவெளியில்லாமல் ஒரே ஓவியத்தில் அதனதன் இருப்பை நிலைநாட்டிக் கொண்டு.

பள்ளிக்கூடம் போகும் குழந்தைகள் வீட்டு வாசலில் ஆட்டோ ஏறி டாட்டா சொல்லிப் போகும் பழக்கம் முழுதாக வரவில்லை. இன்னும் அம்மாவோ வீட்டு வேலைக்காரரோ போய் விட்டு, கூட்டி வருகிறார்கள். பத்திரக்குறைவு தான் காரணம் என்பது ஒரு அம்மாவிடமிருந்து கேள்விப்பட்டது. பள்ளிக்கூடம் விடும் நேரம் ஒருவர் மேல் ஒருவர் முட்டிக் கொண்டு நெருக்கியடித்து வாசலில் காத்திருக்கும் பெரும் கூட்டம் எனக்குப் புதிதாய் இருக்கிறது.

ஷ சப்தம் அதிகமாய் ஒலிக்கும் பெங்காலி பாஷை. திட்டினால் கூட இனிமையாய் இருக்கும் என்ற பெருமை பெங்காலியர்களுக்கு. ரொஷகொல்லாவும் சந்தேஷ¤ம் உருளைக்கிழங்கும் மீனும். உருளைக்கிழங்குக்கு பேர் கூட வைத்திருக்கிறார்கள்... 'சந்திரமுகி'! மீனைக் கொண்டாடுவதிலும் குறைவில்லை. வந்த புதிதில் கவனத்தை ஈர்த்த ஒரு நகைக்கடை விளம்பரம் 'இரண்டாயிரம் ரூபாய்க்கு நகை வாங்கினால் ஒரு ·ப்ரெஷ் ஹில்ஸா இலவசம்!' ஹில்ஸா வேறொன்றுமில்லை, மீன்தான்! நகைக்கடையில் இருந்து வெளியே வரும் போது ஒரு கையில் நகை, இன்னொன்றில் மீன்... கற்பனை செய்து பார்க்க கொஞ்சம் வினோதமாகத்தான் இருந்தது.

இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க... கொல்கத்தாவாசிகளின் அவசர உணவாகிவிட்ட 'ரோல்'. மைதா மாவினால் செய்த ஒரு பெரிய, சற்றே தடிமனான ரொட்டி. முட்டை போட்டோ, அல்லாமலோ, உள்ளே காய்கறியோ, கோழியோ, பனீரோ, இறைச்சியோ அடைத்து உருட்டி, கீழே ஒரு பேப்பர் நாப்கின் சுற்றி ரெடியாகி விடுகிறது. குறைந்த விலை. காத்திருக்கும் கூட்டத்தில் கூலிக்காரரும், டை கட்டின ஆசாமிகளும்.

தலைமுறை தலைமுறையாக இருக்கும் குஜராத்திகளும் மார்வாடிகளும் நேப்பாளிகளும். ப்யூட்டி பார்லர்களில் பெரும்பாலும் நேப்பாளிப் பெண்கள் ஆதிக்கம். எவ்வளவு பூஜா கொண்டாடுவீர்கள் என்ற என் கேள்விக்கு மாதம் ஒவ்வொரு பூஜாவின் பெயர் சொல்லிக் கொண்டு வந்த சிகை அலங்காரப் பெண்ணின் வரிசையில் சுபாஷ் ஜெயந்தியும் ஒரு பூஜா! என்னுடைய ஆச்சரியத்தைப் பார்த்து அதை இன்னும் உறுதிப்படுத்திச் சொல்கிறார்.

கொல்கத்தா பிடிக்க ஆரம்பித்திருக்கிறது. சிக்னலில் காத்திருந்த ஒரு நாள் சுவரொட்டியில் கண்ணில் பட்ட தெரசாவின் பெயர், மறந்தே போய் விட்ட எதையெதையோ நினைவு படுத்தியது. என்னுடைய ஐந்தாம் வகுப்பு அரைப்பரிட்சை ஜிகே பேப்பர் திருத்தின ஆசிரியர் தான் காரணமாயிருக்க வேண்டும். அந்தப் பரிட்சையில், கஷ்டப்படுபவர்களுக்கு எப்படி உதவுவாய் என்றோ என்னவோ ஒரு கேள்வி. கண் தெரியாதவங்களுக்கு உதவி செய்வேன். அவங்களுக்கு அப்படி, இவங்களுக்கு இப்படி என்று ஏதோ பதில் எழுதிய ஞாபகம்.

மூன்றாம் வகுப்பு வரை பக்கத்திலிருந்த நகராட்சிப் பள்ளியில் தான் படிப்பு. வீட்டுப் பாடமெல்லாம் எதுவும் கிடையாது. சாயந்திரம் பூராவும் விளையாடி விட்டு, ராத்திரி சாப்பாடு ஆனதும் வாசலில் பாய் போட்டு நானும் பாட்டியும் நிலாவையும் நட்சத்திரத்தையும் பார்த்துக் கொண்டே படுத்திருந்தது. திடீரென்று அடுத்த வருஷம் (தமிழ் மீடியம்னாலும்) கான்வென்ட்டில். முட்டி மோதி நாற்பதைத் தாண்டுவதே பெரிய விஷயம். அந்த அரைப் பரிட்சை ஜிகே பேப்பரில் 85 மார்க். அதுவும் வகுப்பில் முதல் மார்க். அப்போதிருந்து தான் சமூக சேவை என்று ஏதோ உள்ளுக்குள்ளே உதித்திருக்க வேண்டும். பெரியவளானதும் தெரஸா மாதிரி ஆகப்போகிறேன். அது செய்யப் போகிறேன், இது செய்யப் போகிறேன் என்று ஏதேதோ கனவுகள். ஆனால் யார்கிட்டயும் மூச்சு விட்டதில்லை. கேலி செய்வார்கள் என்ற பயம் தான்.

கல்யாணமே பண்ணிக்க போறதில்லை என்று நினைத்ததற்கு படிக்க படிக்கவே கல்யாணம். அதைத் தொடர்ந்த பொறுப்புகள், ஓட்டங்கள். என்னுடைய நேரங்கள் எல்லாருடையதாகிப் போக... என்னுடைய முடிவுகள் எல்லோரையும் அனுசரித்ததாக. இப்போது சட்டென்று பொறுப்புகள் எதுவும் இல்லாமல் போய்விட்டது போலிருக்கிறது. பதினெட்டு வருடங்களுக்கு முன் அப்பாவின் நிழலிலிருந்து கேள்வியே இல்லாமல் கணவருடைய நிழலுக்கு மாறிய நான்...
இப்போதைய நான்... ரொம்பத்தான் மாறிவிட்டிருக்கிறேன். வாழ்க்கையும். இப்போது எல்லா நேரமும் என்னுடையதாய். ஆனால் எதுவும் செய்ய இஷ்டமில்லாமல் விலகி நின்று கை கட்டி வேடிக்கை பார்க்கிறது மனம். ஏனோ இந்த முறை அதைத் தொந்தரவு செய்யத் தோணவில்லை.

ஆனாலும் எதையோ எதிர்பார்த்திருக்கிறது. இந்த முறை யாரால், எப்படி, என்ன என்று. சென்ற முறை லேடிஸ் க்ளப்பில் சந்தித்த மிஸஸ். மொஹந்தியோ, கணவருடைய அலுவலக விருந்தில் சந்திக்கும் யாராவதோ, வழக்கமாக போகும் சிட்டி சென்டரில் எதிர்படும் யாரோ, எதாவது செய்தித்தாள் விளம்பரமோ, என்னுடைய அஞ்சல் வழி கல்வியோ... எதாவது என் பாதையை மாற்றி எனக்கு எதையாவது அறிமுகப்படுத்தலாம். காத்திருக்கிறேன், அந்த முகம் தெரியாத மனிதருக்கு. அந்த மாற்றத்திற்கு.

4 comments:

துளசி கோபால் said...

என்னப்பா இப்படிச் சட்னு முடிச்சுட்டீங்க. இன்னும் கொஞ்சம் எழுதுங்களேன்!
இந்தப் பதிவில் எனக்குச் சொல்ல நிறைய இருக்கு:-)

கார் கமர்கட்டானது.... ஹிஹி
மஞ்சள் யானைகள் நம்மூரிலும் ஆதிகாலத்தில் இருந்ததே. யெல்லோ டாக்ஸி:-)

//செழிப்பும் வறுமையும் அதிக இடைவெளியில்லாமல் ஒரே ஓவியத்தில் அதனதன் இருப்பை நிலைநாட்டிக் கொண்டு.//
இது சூப்பர் சொல்லாட்சி!!!
நியூஸி ஃபுல்லா ஒரே 'சந்திரமுகி'கள்தான்:-)))))
அந்த ரோல் மாதிரிதான் இங்கேயும் பெரிய ஹார்ட்வேர் கடைகளின் வாசலில் தாற்காலிக டெண்ட் போட்டு கேஸ் பார்பிக்யூவில் சாஸேஜ் சிஸிலிங். ரொட்டிக்குப் பதிலா ரெண்டு ஸ்லைஸ் ப்ரெட். அதன் தலையில் கொஞ்சம் வதக்கிய வெங்காயமும் தக்காளி சாஸும் போட்டுக் கொடுக்கறாங்க. ஜஸ்ட் ஒரு டாலர்தான்.
லஞ்சுக்குன்னு தனியாப் போகவேணாமேன்னு மக்கள்ஸ் வாங்கி வாயில் அடைச்சுக்கிட்டு கடைகளுக்குள் போவாங்க. சின்னப் பொடிசுகளுக்கும் இதுவேதான் தீனி:-) ஏழை பணக்காரன்னு வித்தியாசம் எல்லாம் கிடையாது.
கடைகளுக்குள் நுழையும்முன்பே வெங்காயம் வதங்கும் மணம் அந்த ஏரியாவையே தூக்கிக்கிட்டுப் போகும். நான்வெஜ் சமாச்சாரமாச்சேன்னு வெங்காய வாசனையை மட்டும் மூக்கிலே பிடிச்சுக்கிட்டுப் போயிருவோம் நாங்க.
ஃபண்ட் ரெய்ஸிங் செஞ்சுக்கவும் இப்படி கடை போட்டுருவாங்க.
தெரஸாவை உலக அழகிகள் போட்டியில் கலந்துக்கும் இந்தியர்கள் இன்னும் மறக்கவில்லை. போட்டியில் ஜெயிச்சதும்(!!!) மதர் தெரெஸா ஜூனியர் ஆகிருவாங்க!
சூப்பரான தொடர்! மீண்டும் கொணர்ந்து போட்டதுக்கு மனம் நிறைந்த பாராட்டுகள்!
பின்குறிப்பு: நான் இன்னும் கொல்கத்தா போகலை. கோபால் பலமுறை போய் வந்த ஊர். இந்தியாவில் வேலை செஞ்சப்ப அவங்க ஹெட் ஆஃபீஸ் அங்கேதான்:-)

பத்மா அர்விந்த் said...

/அதைத் தொடர்ந்த பொறுப்புகள், ஓட்டங்கள். என்னுடைய நேரங்கள் எல்லாருடையதாகிப் போக... என்னுடைய முடிவுகள் எல்லோரையும் அனுசரித்ததாக. இப்போது சட்டென்று பொறுப்புகள் எதுவும் இல்லாமல் போய்விட்டது போலிருக்கிறது/

Nirmala. said...

Thank you Tuls!

//கடைகளுக்குள் நுழையும்முன்பே வெங்காயம் வதங்கும் மணம் அந்த ஏரியாவையே தூக்கிக்கிட்டுப் போகும். நான்வெஜ் சமாச்சாரமாச்சேன்னு வெங்காய வாசனையை மட்டும் மூக்கிலே பிடிச்சுக்கிட்டுப் போயிருவோம் நாங்க.//

நீங்க அதோட வெஜிடேரியன் வர்ஷன் வீட்ல ட்ரை பண்ணிப் பாத்தீங்களா? கட்டாயம் செய்திருப்பீங்கன்னு நினைக்கறேன். கேக்கவே yummy!

இத்தனை ஊர் பார்த்திருக்கீங்க... கொல்கத்தாவை ஏன் இன்னும் விட்டு வச்சிருக்கீங்க?! ஒரு துர்கா பூஜா சமயத்துல ப்ளான் பண்ணுங்க.

Nirmala. said...

/அதைத் தொடர்ந்த பொறுப்புகள், ஓட்டங்கள். என்னுடைய நேரங்கள் எல்லாருடையதாகிப் போக... என்னுடைய முடிவுகள் எல்லோரையும் அனுசரித்ததாக. இப்போது சட்டென்று பொறுப்புகள் எதுவும் இல்லாமல் போய்விட்டது போலிருக்கிறது/

That was very temporary Padma! அதெல்லாம் தீரக் கூடியதா?!