Saturday, May 16, 2015

ஜப்பான் பயணம் - கடைசி.

நாரிட்டாவில் இறங்கும் போதே வெளிர் நிறத்தில் செர்ரி பூத்திருந்தது. வெயில் ஆரம்பித்துவிட்டதாலேயே நிறமிழக்க தொடங்கியிருந்தது. மவுண்ட் ப்யூஜி பக்கம் இன்னமும் குளிரடிப்பதால் நல்ல பிங்க் நிறத்தில் பூத்திருந்தது.

எங்கேயும் சிரித்தோ சத்தமாகவோ பேசும் பெரியவர்களைக் காண முடியவில்லை. இறுகிய/அமைதியான முகத்தோடே வளைய வருகிறார்கள். மெட்ரோ ரயில் பயணங்களில் மொபைல் போனில் முகம் புதைத்துக் கிடக்கிறார்கள்.

எங்கும் எதிலும் சுத்தம். குப்பையையே காணவில்லை. ஒரே ஒரு இடம் தவிர முழு பயணத்திலும் அதே சுத்தமான, சூடான கழிப்பறைகள். பொது கழிப்பறைகள் உட்பட.

பரிமாறும் வசதிக்காக எங்கள் குழுவின் நான் சேர்த்த மூன்று பேர் மட்டுமேயான அசைவ ஆசாமிகளுக்கு தனி டேபிள். அதனாலேயே அந்த தென்னிந்திய குழுவோடு கொஞ்சம் பழக முடிந்தது. அப்படி ஒரு மத்தியானத்தில்தான் கண்ணில் தண்ணீர் வர சிரிக்க வைத்த செல்வியின் அறிமுகம் கிடைத்தது. அவரோடு ஒரு போட்டோ எடுத்துக் கொள்ள நினைத்தது முடியாமல் போய்விட்டது. சென்னையில் எங்கேயாவது எதிர்படுவாரா என்று பார்க்க வேண்டும்.

மொத்த ஜப்பானின் இந்திய உணவக சமையல்காரர்களும் ஒரே ஆளிடம் சமையல் கத்துக் கொண்டது போல எல்லா இடங்களிலும் ஒரே சுவையில் மதியமும் இரவும் ஒரு சுட்ட கோழித் துண்டு பரிமாறப்பட்டது.

ஒரு நாள் கூட பயணத்திட்டமல்லாமல் காலாற நடக்கவில்லை. லோக்கல் சாப்பாடோ சூஷியோ சுவைக்கவில்லை. குடும்பத்தோடு போயிருந்த  flexi tour களில் மாலை நேரங்கள் எங்களுடைய சௌகரியத்திற்கு விட்டிருப்பார்கள். மலாகா, ஸ்பெய்னில் தங்கியிருந்த இடத்தில் இருந்து படகுத்துறை வரை நடந்து போன போது எதேச்சையாக ஒரு இந்திய‌ உணவகத்தை கண்டதும், திறந்த வெளி உணவகத்தில் அந்த மாலை நேரமும் வைனும் பஞ்சாபி சமையல்காரர் பரிமாறிய பிரியாணியும் மறக்கவே முடியாது. இந்தப் பயணத்தில் ஒவ்வொரு நாளும் மதியமும் இரவும் மாறாத‌ சுவையில் ஒரே மெனுவில் இந்திய உணவகச் சாப்பாடு அலுப்பூட்டினாலும் ஜப்பானிய உணவு பார்க்கும் போதே கொஞ்சம் திகிலூட்டத்தான் செய்தது.

ஒரு சுமோ மல்யுத்த‌ வீரரையும் காணவில்லை. அவர்கள் அதிகம் வெளியே வருவதில்லை என்று சியோமி சொன்னார்.

பெரிய ஊர்களைத் தவிர்த்த மற்ற இடங்களில் தெருவில் மனிதர்களையே காண முடியவில்லை. வெறிச்சோடிக் கிடக்கிறது.

ஒரு அதி தீவிர ஆணாதிக்க சமூகமாக ஜப்பானிய சமூகம் இருந்திருக்கிறது. அரச குடும்பம் தொடங்கி எல்லா உரிமைகளும் ஆண் குழந்தைகளுக்கு மட்டும் தான். சம அந்தஸ்துள்ள, உதாரணத்திற்கு ஒரு சமுராய் குடும்ப‌த்துப் பெண் இன்னொரு சமுராய் குடும்பத்தில் மணம் செய்தால் மட்டுமே மேற்கொண்டு சமுராய் பெயரைக் கொள்ள முடியும். இல்லாவிட்டால் சாதாரணாகிவிடுவார். அரச குடும்பத்துப் பெண்களும் இதற்கு விதிவிலக்கில்லை. ஆனால் இப்போதும் அப்படியா என்று தெரியவில்லை.

சமுராய் என்பது வெறும் குலப்பெயராக மட்டுமே உள்ளது. வாளெடுத்து நடந்த சமுராய்கள் இல்லவே இல்லையாம். சாம்பிளுக்கு கூட ஒருத்தரும் இல்லை. நம்ம ரஜினியும் விக்ரமும் தான் மிச்சம் போல.

வீட்டு வாசலில் செடிகளில் களை பறிக்க இரண்டாக மடிந்திருந்த அந்த வயதான அம்மணிக்கு எண்பது வயதுக்கு குறையாமலிருக்கும். ஆரோக்கியமான வயதானவர்களைப் பார்க்க நிறைவாக இருந்தது. குண்டான மனிதர்களையே அதிகம் பார்க்க முடியவில்லை. அதே அரிசிச் சாப்பாடுதான், அளவிலேதான் நாம் பெரும் தப்பு செய்கிறோம் போல. என் வயதே இருக்கும் சியோமி என் எடையில் பாதிக்கும் குறைவாயிருக்கிறார்.

ஆங்கிலம் செல்லுபடியே ஆவதில்லை. கடைகளில் சாமான்கள் வாங்கும் போது மொத்த பில் கணக்கை கால்குலேட்டரில் தட்டிக் காண்பிக்கிறார்கள். கொடுத்த பணத்திற்கு சரியான மிச்சம் தருகிறார்கள். எங்கேயும் ஏமாற்றோ திருட்டோ வழிப்பறியோ சீண்டலோ எதுவுமில்லை. எல்லா இடங்களில் அதி பத்திரமாக உண‌ர்ந்தோம்.

ஏறக்குறைய இந்திய ஐம்ப‌து பைசா ஒரு யென். ஒரு ஆயிரத்தை எடுத்தால் நிமிஷத்தில் செலவாகிவிடுகிறது. ஆனால் 100 யென் கடைகளில் சலிக்கும் வரை வாங்கித் தீர்த்தோம். இந்தியாவிலிருந்து போகும் போது இந்த 100 யென் கடைகளைப் பற்றி தோழி சொன்ன போது ஐம்பது ரூபாய்க்கு என்ன கிடைக்கும் என்று நினைத்திருந்தேன். ஏகப்பட்டது கிடைக்கிறது.

இரவு எட்டு மணியோடு டூர் பஸ் வேலையை முடித்துக் கொள்கிறது. அதற்குப் பிறகு எங்கேயாவது போக வேண்டுமென்றால் நாமேதான் ஏற்பாடு செய்து கொள்ள வேண்டியிருக்கிறது. நேர விஷயத்தில் ரொம்ப கறார். கடைசி நாள் காலாச்சார நிகழ்ச்சிக்கு பிறகு நேரமாகி விட்டதால் மெட்ரோ ரயிலில் திரும்பி வந்தோம். ஓசாகா ரயில் நிலையத்தில் ரயிலில் இருந்து இறங்கி ஹோட்டல் பேஸ்மெண்ட்டில் இருந்த வாசலை அடைய நாற்பது நிமிஷம் நடந்தோம். அத்தனை பெரிய ரயில் நிலையம். ஏர்போர்ட் போல இருந்தது. தினமும் இப்படி பயணம் செய்கிறவர்களுக்கு தனியே வாக்கிங் எதுவும் தேவையில்லை.

புடவை கட்டியிருந்த நாளில் கொஞ்சம் பெருமிதமாக இருந்தது. இனிமேலான இது போன்ற பயணங்களில் முடிந்த வரை புடவை உடுத்த வேண்டுமென்று நினைத்துக் கொண்டேன்.

வெறும் பெண்களாக போயிருந்ததாலோ என்னவோ எல்லா நேரமும் சிரித்துக் கொண்டேயிருந்தோம். மூன்றாவது நாள் எனக்கு திருமணமாகிவிட்டது என்பதையே மறந்து விட்டிருந்தேன். பொறுப்புகளற்ற அது ஒரு மாதிரியான மனநிலை. கூட இருந்த பதினைந்து பேரும் தான் என்னுடைய நாற்பத்தேழு வருட கடந்த காலத்தின் ஒரே கனெக்ஷன் போல இருந்தது. அது விடுதலையல்ல, ஆனாலும் ஏதோ ஒன்று. திரும்பி வந்த நாள் காலையில் டீக்கு எவ்வளவு தண்ணீர் வைப்பேன் என்று ஒரு நிமிஷம் ஞாபகம் வரவில்லை.

ஆனாலும் எட்டாவது நாள் என் வட்டத்திற்குள் வந்து விட்டிருந்தேன்.

4 comments:

துளசி கோபால் said...

கச்சிதம்! ஆனால் இவ்ளோ சீக்கிரம் முடிஞ்சுபோச்சேன்னு இருக்கு எனக்கு:(

Nirmala. said...

நன்றி துள்ஸ்! அவ்வளவுதான் வந்துச்சு! :-)

Unknown said...

உன்னில் என்னையே கண்டேன், நிம்ஸ்:

"
புடவை கட்டியிருந்த நாளில் கொஞ்சம் பெருமிதமாக இருந்தது. இனிமேலான இது போன்ற பயணங்களில் முடிந்த வரை புடவை உடுத்த வேண்டுமென்று நினைத்துக் கொண்டேன்.

வெறும் பெண்களாக போயிருந்ததாலோ என்னவோ எல்லா நேரமும் சிரித்துக் கொண்டேயிருந்தோம். மூன்றாவது நாள் எனக்கு திருமணமாகிவிட்டது என்பதையே மறந்து விட்டிருந்தேன். பொறுப்புகளற்ற அது ஒரு மாதிரியான மனநிலை. கூட இருந்த பதினைந்து பேரும் தான் என்னுடைய நாற்பத்தேழு வருட கடந்த காலத்தின் ஒரே கனெக்ஷன் போல இருந்தது. அது விடுதலையல்ல, ஆனாலும் ஏதோ ஒன்று. திரும்பி வந்த நாள் காலையில் டீக்கு எவ்வளவு தண்ணீர் வைப்பேன் என்று ஒரு நிமிஷம் ஞாபகம் வரவில்லை.

"

இன்னும் கொஞ்சம் எழுதியிருக்கலாம் , நிம்ஸ் !!!

Unknown said...

உன்னில் என்னை கண்டேன் நிம்ஸ்:

" புடவை கட்டியிருந்த நாளில் கொஞ்சம் பெருமிதமாக இருந்தது. இனிமேலான இது போன்ற பயணங்களில் முடிந்த வரை புடவை உடுத்த வேண்டுமென்று நினைத்துக் கொண்டேன்.

வெறும் பெண்களாக போயிருந்ததாலோ என்னவோ எல்லா நேரமும் சிரித்துக் கொண்டேயிருந்தோம். மூன்றாவது நாள் எனக்கு திருமணமாகிவிட்டது என்பதையே மறந்து விட்டிருந்தேன். பொறுப்புகளற்ற அது ஒரு மாதிரியான மனநிலை. கூட இருந்த பதினைந்து பேரும் தான் என்னுடைய நாற்பத்தேழு வருட கடந்த காலத்தின் ஒரே கனெக்ஷன் போல இருந்தது. அது விடுதலையல்ல, ஆனாலும் ஏதோ ஒன்று. திரும்பி வந்த நாள் காலையில் டீக்கு எவ்வளவு தண்ணீர் வைப்பேன் என்று ஒரு நிமிஷம் ஞாபகம் வரவில்லை.

என் இவ்வளவு சீக்கிரம் முடித்தாய் என இன்னும் இன்னும் வாசிக்க தூண்டியது. இன்னும் கொஞ்சம்.... ....