Friday, February 02, 2007

சொல்லாமல் விட்டவை

கொஞ்ச நாளாக செய்ய வேண்டும் என்று நினைப்பதை செய்ய உட்காரவே ரொம்ப சமயம் எடுப்பதற்கு காரணம் என்ன என்று யோசித்துக் கொண்டேயிருக்கிறேன்! சென்ற முறை ஹிந்து ம்யூஸிக் ·பெஸ்ட் எழுதவும் அப்படித்தான் அநியாயத்திற்கு காலம் தாழ்த்தியிருந்தேன். ஆனாலும் அதை செய்யாமல் போயிருந்தால் இப்போது இதையும் எழுத வேண்டி வந்திருக்காது. இந்த இரண்டு மாதத்தின் அதிசுவாரசிய நிகழ்வுகள் என்னுடைய வாழ்க்கையில் இல்லாமல் போயிருந்திருக்கும்! அந்தப் பதிவோ அல்லது வெறும் தகவலோ மதி மூலமாக பத்திரிகை அ(ந)ன்பர் ஒருவரின் பார்வைக்குப் போய், அவருடைய மெயில் முகவரியைக் கையில் வைத்துக் கொண்டு நாலு நாள் முழித்துக் கொண்டிருந்தேன். முழித்ததற்கு காரணம், அந்த ம்யூஸிக் ·பெஸ்ட் சமயம் ஒரு நாளைப் போல தினமும் மாலையானால் புறப்பட்டும் போவதும், ராத்திரி பத்தரைக்கு மேல் வீடு வருவதும், இன்னைக்கு இவரைப் பார்த்தேன் அவரைப் பார்த்தேன் என்று கதை சொல்வதும், அவசர சமையலில் நாளை ஓட்டிக் கொண்டிருந்ததும், இதோ இன்னைக்கு... இல்ல இல்ல நாளைக்கு என்று என் மக்களின் பொறுமை வெடித்து விடப் போகிறது என்று அஞ்சியதும், நல்லவேளை அப்படியெதுவும் நடந்து விடாமல் முடிந்ததே பெரிய விஷயமாய் ஆசுவாசப் பட்டதனால்.... மறுபடியும் இது அவசியமா என்று தான் அந்த முழி. ஒரு சுபமாலையில் பிற்பாடு நண்பராகிப் போன அந்த அன்பருக்கு ஒரு மெயில் தட்டிப் போட அடுத்த நிமிஷம்(சத்தியமாய்) செல்பேசி அடித்தது பெரிய ஆச்சர்யம்.

அடுத்த நாள் போனதும் பேசியதும் எல்லாம் முடிந்து அழைப்பிதழ்களை எடுத்துக் கொடுத்து அவருடைய விசிட்டிங் கார்ட் எல்லாம் கொடுத்து கடைசியில் கேட்டது, 'உங்களுக்கு சங்கீதம் தெரியுமா?' என்பது! அவர் என்னை வரச் சொல்லியிருந்தது இந்த வருட சங்கீத சீஸனை கவர் செய்வதற்காக. எனக்கென்னவோ என் ரசனை மேல் ரொம்ப நம்பிக்கை. அது மட்டும் பே¡துமானதாய் தான் தோன்றியிருந்தது. ஆனாலும் தயங்கிய நண்பருக்கு சமாதானம் செய்ய தைரியம் வந்ததே திரு. சக்கரபாணி ஜிந்தாபாத் என்ற நம்பிக்கைதான். அவரோடு சேர்ந்து செய்து விட முடியும் என்ற ஆணித்தரமான யோசனையோடு வெளியெ வந்து முதல் தொலைபேசி அடித்தது அவருக்குத்தான். கொஞ்சம் நக்கல் கேலியெல்லாம் செய்தாலும் வருகிறேன் என்று ஒத்துக் கொண்டார்.

இரண்டு நாள் அவகாசம் கொடுத்து மூன்றாவது நாள் முதல் ரிப்போர்ட் கொடுத்து விடச் சொல்லியிருந்தார்கள். இன்னாரைக் கவர் செய், இந்த கச்சேரி வேணும் என்றெல்லாம் பத்திரிகையிலிருந்து கட்டாயப் படுத்தவில்லையாதலால் இரண்டு பேரும் பேசி ஏகமனதாய் முடிவு செய்தோம். யார் தெரியுமா? சஞ்சய் சுப்ரமணியம். அப்போது தான் விகடனில் அவரைப் பற்றிப் படித்திருந்தேன். போகப் போகின்ற சபாவிற்கு முன்னாலயே தகவல் போய் விட்டதால் எனக்காக பாஸ் காத்துக் கொண்டிருந்தது. ரொம்ப இளமையா, ஸ்மார்ட்டா ஒரு வித்வான் தோரணையெதுவும் இல்லாத....

இதுவரை எழுதி கிடப்பில் போட்டும் ஒரு பதினைந்து நாளாகிவிட்டது. உள்ளேயிருந்து விரட்டும் சில கேள்விகர்த்தா*க்களும் உறுத்தல்களும் இல்லாமல் இருந்திருந்தால் காணாமல் போயிருக்க வேண்டிய இது மறுபடியும் உயிர்பெறுகிறது! ஆனாலும் அந்த அளவு விவரமாக எழுதும் பொறுமை இல்லாமல் போனதால் பத்திரிகைக்கு அனுப்பிய, கத்தரி வெட்டு வலியறியாத ஒரிஜினல் வர்ஷன்களை ஒவ்வொன்றாய் போட உத்தேசம்.

* ம்யூஸிக் பெஸ்ட் பதிவில் விஸ்தாரமாய் பின்னூட்டமிட்ட மதிக்கு ஒரு பாடாவதி ப்ரௌஸிங் சென்டரில் நீளமாய் அடித்த பதில் கடைசி நிமிஷத்தில் காணாமல் போய் விட, வெறுப்பில் இரண்டு வரி ஆங்கிலப் பின்னூட்டத்தில் முடித்துவிட்டாலும் உறுத்தல் உறுத்தல்தான். அங்கேயே டிசம்பர் சீஸனுக்கு போகும் உத்தேசம் உண்டா என்று கேட்ட பாலாஜிக்கு... ஆசையிருக்கு, முடியுமான்னு தெரியலைன்னு அனுப்பிய பதிலுக்கும் அதே தலைவிதியாகிப் போனதால்.... இந்த தொடர் பதிவுகள்.

1 comment:

Boston Bala said...

---கத்தரி வெட்டு வலியறியாத ஒரிஜினல் வர்ஷன்களை ஒவ்வொன்றாய் போட உத்தேசம்.---

போடுங்க... போடுங்க... ஆர்வத்துடன் வெயிட்டிங்