Friday, March 15, 2013

காசி - 3

வந்து இறங்கிய அன்றே அலஹாபாத்தில் கும்பமேளா நடந்து கொண்டிருப்பதாக தெரிந்தது. அது எப்போதோ முடிந்திருக்கும் என்று நினைத்திருந்தேன். ஆனந்த விகடன் கட்டுரை ஞாபகம் வந்து ஆசையாகவும் இருந்தது, கூடவே அந்தக் கூட்டத்தை நினைத்து பயமாகவும் இருந்தது. வழக்கமாக இத்தனை கூட்டம் சேரும் இடங்களில் நடக்கும் அசம்பாவிதங்கள், மேலும் ஏற்கனவே இங்கே ஒன்று ஆகிவிட்டிருந்தது. ஆனாலும் டாக்ஸிக்கு சொல்லி வைத்திருந்தேன்.

விசாரித்தவரையில் பயமொன்றும் இல்லை என்று தெரிந்தது. மூன்றாவது நாள் காலை எட்டு மணிக்கு கிளம்பினேன். காசியிலிருந்து 124 கிலோமீட்டர் தூரம். டாக்ஸி ட்ரைவர் நானறிந்த வரையில் ஒரு அக்மார்க் உத்திரபிரதேச ஆண்.  ஐந்தடிக்கு குறைவான உயரம். உலர்ந்த வற்றல் போல் முறுக்கின உடம்பு. தனியாகப் போகிறேன் என்பதே அவருக்குப் பிடிக்கவில்லை. ஆனாலும் அவருக்கு வேறு வழியிருக்கவில்லை. கோவிலுக்குப் போகிறேனா, சங்கமத்தில் குளிக்க போகிறேனா என்ற ரெண்டு கேள்விக்கும் இல்லை என்ற பின் அவருக்கு பேச எதுவும் இருக்கவில்லை. வழியில் விந்தியாசல் என்ற இடத்தில் ஒரு கோவில் இருக்கிறது என்று சொல்லி விட்டு நீங்க தான் கோவிலுக்குப் போகப் போறதில்லையே அப்ப வேண்டாமென்று விட்டார்.

காசியில் முதல் நாளே கவனித்தது, எல்லா வண்டிகளும் ஹாரனை அலற விட்டுக் கொண்டு தான் ஓட்டுகிறார்கள். இரண்டு சக்கர வாகனங்களுக்கு கூட லாரி போன்ற ஹார்ன். ஆனாலும் யாரும் அதை சட்டை செய்வதில்லை. வழி விட இடமில்லாத இடத்திலும் ஹார்ன் அடித்தால் என்ன செய்வது? ரெண்டாவது நாள் எனக்கும் அந்த எருமை மாட்டுத்தனம் வந்திருந்தது. காது தான் கிழிந்து விடுமோ என்றிருந்தது. ஆச்சரியமாக அதுவும் இல்லை. சத்தம் கேட்டுக் கேட்டு ஒரு மோன‌ நிலைக்கு போய் விடுகிறோம்! அதற்குப்பிறகு பின்னால் வருவது ரயிலேயானாலும் சரியே!

இவரும் அப்படியே. ஹார்னிலிருந்து கை எடுக்காமல் வண்டி ஓட்டுகிறார். டப்பாங்குத்து, மெலடி, பழையது, புதியது எல்லாம் கலந்த ஒரு பென் ட்ரைவ் பாடித் தீர்த்தது. அரை மணிக்கு ஒரு முறை ஒரு பொட்டலத்தை கிழித்து வாயில் போட்டுக் கொள்கிறார். அதற்கப்பறம் எது கேட்டாலும் ம்ம்ம், ம்ஹூம் மட்டும் தான். ஊரிலும் நிறைய பேர் இப்படித்தான். தவிர்க்க முடியாமல் பதில் சொல்ல வேண்டி வந்தால் நம் முன்னாலேயே துப்பி விட்டுப் பேசுகிறார்கள். இவர் கார் கதவைத் திறந்து துப்புகிறார். ஒவ்வொரு தடவை கதவைத் திறக்கும் போதும் பின்னாலிருந்து எதாவது வண்டி அலறுகிறது.

இரண்டே முக்கால் மணி நேர ஒரு வழி பயணத்தில் தேவையில்லாத கட் அடித்த போதும் சாலை விதிகளை மீறின போதும் பதட்டத்தை மறைக்க ஒரு தடவைக் கூட உபயோகிக்காத ஹேண்ட் ப்ரேக் லாக் ஆக இருக்கிறதா என்றும் உடைந்து கீழே கிடந்த ஃப்ரெஸ்னரை ஒட்ட வைக்க முயற்சி செய்வதிலும் கழித்தார். அவருக்கு அவருடைய வண்டி மேல் ரொம்ப அக்கறை என்று தெரிந்ததால் உள்ளே இருந்த என்னுடைய பத்திரம் பற்றி அதிகம் கவலையில்லாமல் இருக்க முடிந்தது. எனக்கும் வேறு வழியிருக்கவில்லை!

திரிவேணி சங்கமத்திற்கு போகும் பெரிய பாலம் வழியாக போகும் போதே மொத்த இடமும் தெரிந்தது. கண்ணிற்கு எட்டின தூரம் வரைக்கும் விரிந்து கிடக்கும் தளத்தில் செய்திருந்த ஏற்பாடுகளும் விருந்தாளிகள் வந்து விட்டுப் போன மிச்சங்களும் தெரிந்தது. தகர தட்டிகளால் பிரித்த பெரிய பெரிய இட‌ங்களுக்குள் தனித்தனியாக டெண்ட் எழுப்பியிருந்திருக்கிறார்கள். சீராக பாதை அமைத்து எல்லா இடங்களுக்கும் விளக்குகள் வைத்து... இந்த இடம் ஒரு மாதம் முன்னால் எப்படி இருந்திருக்கும் என்று ஓரளவு யூகிக்க முடிந்தது. I missed it!




அன்றைக்கு நடந்து கொண்டிருந்தது பொது ஜனங்களுக்கான (கும்ப)மேளா. பெட்டி படுக்கைகளோடு தொலைவிலிருந்தெல்லாம் வந்திருக்கிறார்கள் என்பது அவர்கள் களைப்பில் தெரிகிறது. எங்கேயோ பஸ் விட்டு இறங்கி சலிக்காமல் நடந்து போய் சங்கமத்தில் குளித்து விட்டு வருகிறார்கள். அங்கங்கே புடவைகளையும் விரிப்புகளையும் தற்காலிக கூடாரங்களாக கட்டி கீழே ஓய்வெடுக்கிறார்கள். ஒரு குடும்பம் ஸ்டவ் வைத்து பூரி சுட்டுக் கொண்டிருந்தது. நட்டநடு மைதானத்தில் ஒரு பெண்மணி கணவர் காலில் விழுந்து வணங்கி எழுந்த பின் வெட்கப்பட்டார்.






சாமியார்கள், நாகா பாபாக்கள் யாரையும் காணவில்லை. மிச்சமிருக்கும் சிலரையும் போலீஸ் தடியடித்து விரட்டுகிறது. நான் எதிர்பார்த்து வந்த மேளா இதுவாயிருக்கவில்லை. ஒரு மணி நேரத்தில் அங்கிருந்து கிளம்பி விட்டேன்.

3 comments:

கோமதி அரசு said...

ஹார்னிலிருந்து கை எடுக்காமல் வண்டி ஓட்டுகிறார். டப்பாங்குத்து, மெலடி, பழையது, புதியது எல்லாம் கலந்த ஒரு பென் ட்ரைவ் பாடித் தீர்த்தது. அரை மணிக்கு ஒரு முறை ஒரு பொட்டலத்தை கிழித்து வாயில் போட்டுக் கொள்கிறார்.//

பொட்டலத்தை கிழித்து வாயில் போட்டுக் கொள்வது கார் கதவை திறந்து துப்புவது திகிலூட்டும் அனுபவம் தான்.
படங்கள் எல்லாம் அருமை.

வல்லிசிம்ஹன் said...

திகில் பயணமாக இருக்கிறது.தில் இருந்தால்தான் போக முடியும் நிர்மலா.
வெகுவாக ரசித்தேன்.
ஃபேஸ்புக் போவதை விட்டுவிட்டேன்.
முடிந்தவரை படங்களை இங்கே அப்லோட் செய்ய கோரிக்கை வைக்கிறேன். அருமையான நிதர்சனமான கட்டுரை. தான்க்ஸ் பா.

Nirmala. said...

அதெல்லாம் ஒன்னும் இல்லை வல்லிம்மா... பத்திரம் பத்திரம் பயந்துட்டே முயற்சி பண்ணாம விட்டுடறோம். இந்த கட்டுரைகள் யாரையாச்சும் இன்ஸ்பயர் பண்ணுச்சுச்சுன்னா... இந்த சுய புராணத்துக்கு ஒரு அர்த்தம் கிடைக்கும்! :-)