Thursday, March 14, 2013

காசி - 1

முதல் முதலாக‌ காசிக்கு போனது குடும்ப பெரியவர்களுடைய‌ பிராத்தனைக்காக. நிச்சயமாக‌ அப்போது அந்த பிரயாணத்துக்கு நான் தயாராக இருந்திருக்கவில்லை. காரணம், காசி என்று நினைக்கும் போதே தோணின அழுக்கும் குப்பையும் கூட்டமும் தான். மேலும், வயசாகி கடைசி காலத்துல போக வேண்டிய ஒரு பிராயணத்துக்கு நான் இப்போவே ஏன் போக வேண்டும் என்று ஒரு தோணல். பிரயாண வழியும் ஊரும் என் நினைப்புகளை நிச்சயமாக்கிய‌து. பக்தியோடும் நம்பிக்கையோடும் படித்துறைக்கு வரும் மக்களுக்கும் இயந்திரத்தனத்தோடு காசொன்றே குறியாக காத்திருக்கும் பாண்டாக்களும் நடுவில் இது போன்ற இடங்களில் நிகழும் தத்தளிப்பான நாடகங்களைப் பார்க்க‌ சலிப்பாயிருந்தது. இதெல்லாம் முடித்து படகில் நீளத்திற்கு போன சவாரியில் தான் ஏதோ நிகழ்ந்திருக்க வேண்டும். காலம் காலமாக மக்கள் தீராத நம்பிக்கையோடு வந்ததும் அத்தனை மனிதர்களின் உணர்வுகளுக்குமான மௌன சாட்சியாக நிற்கும் இந்த படித்துறைகள் தான் என்னுடைய காசி. இந்த முறை இங்கிருந்த மூன்று நாட்களிலும் திரும்பத் திரும்ப என்னை இங்கே இழுத்ததை நான் முழுமையாக உணர முடிந்தது.

I survived to tell a tale என்பது கொஞ்சம் அதிகப்படியான பிரயோகம் போலத் தோன்றினாலும் எனக்கு அது பொருத்தமாக இருப்பதாகப் படுகிறது. இது என்னுடைய முதல் தனி பயணம். அது ஒரு நீண்ட நாள் ஆசை, கனவு... என்னவாகச் சொன்னாலும் சரியே. அப்படியான ஒரு வாய்ப்பு வந்த போது காசிதான் முதல் விருப்பமாயிருந்தது. இதை நான் சரியாக, பத்திரமாக செய்து முடிக்க வேண்டியது இத்தனை காலமாக நான் சுமந்த என்னுடைய நம்பிக்கைக்கும் இது போல இனிவரும் பயணங்களுக்கும் ரொம்ப அவசியமாக இருந்தது. வந்து இறங்கியதும் டாக்ஸி டிரைவர் கேட்ட முதல் கேள்வி 'தனியாகவா வந்தீங்க அம்மா?'. அதற்குப் பிறகு நிறைய பேர் கேட்டார்கள். எனக்கும் முதல் முறை ஆமாம் சொன்ன போது இருந்த பெருமிதம் இல்லாமல் போனது. நான் அதற்கு பழகி விட்டிருந்தேன்.

அன்றைக்கு மாலை படித்துறைக்கான முதல் பயணம். கங்கைக்கு போக வேண்டும் என்றாலே ஸ்வாதீனமாக 'தசாஸ்வமேத் காட்'க்குதான் கூட்டிப் போகிறார்கள். ஆட்டோக்காரர் இதுக்கு மேல ஆட்டோ போகாது என்று வழி சொல்லி இறக்கி விட்ட இடத்தில் இருந்து கூட்டத்தில் இரண்டு கிலோமீட்டர் நடக்க வேண்டியிருந்தது.

படி இறங்கினதும் முதலில் கண்ணில் பட்டது நாகா பாபாக்கள் எனப்படும் நிர்வாண சாமியார்கள். இதற்கு முந்தின காசி விஜயங்களில் இவர்களைப் பார்த்திருக்கவில்லை. அதிகாலை பிரம்ம முகூர்த்த நேரங்களில் கங்கைக்கு குளிக்க வருவார்கள் என்றும் ஜன நடமாட்டம் தொடங்கும் முன்னால் அவர்கள் இருப்பிடத்துக்கு போய் விடுவார்கள் என்றும் யாரோ கைடு சொல்லிக் கேட்டிருந்தேன். ஆர்வம் தாங்காமல் காமிராவைக் கையில் எடுத்ததும் ஏதோ கூச்சல். என்னவென்று புரிவதற்குள் ஒருவர் எழுந்து விரட்ட‌ ஆரம்பித்த பின்னால் தான் 'No photograph' என்று எழுதி வைத்திருப்பதையே கவனித்தேன்! ரெண்டு கைகளையும் உயர்த்தி ஸாரி சொல்லி நகர்ந்த போது 'என்னை வேண்டுமானால் போட்டோ எடுத்துக் கொள்' என்று கண்களாலே அனுமதி கொடுத்தார் கொஞ்சம் தள்ளி அமர்ந்திருந்த இன்னொரு நாகா பாபா.



அங்கே தொடங்கி வழி நெடுக விதவிதமான சாமியார்கள். சில நிர்வாண சாமியார்கள், வயசு வித்தியாசமில்லாமல், இயல்பாக திரிந்து கொண்டிருந்தார்கள். ஒன்றிரண்டு பேரை அப்படிப் பார்த்த பிறகு கூச்சம் தெளிந்து போனது.

இழுத்துக் கட்டிய படுதாவிற்குள் சின்னச் சின்னதாக‌ விக்கிரகங்கள், போட்டோக்கள். ஒரு வேல் ஒன்றைப் பதித்து கீழே கட்டைகளைப் போட்டு எரித்த சாம்பல். அந்த கட்டைகள் மேல் சில இடங்களில் தூக்குச்சட்டியில் பால் காய்ந்து கொண்டிருந்தது. சின்னதாய் சமையலும் கூட. அரட்டைகள், வாக்குவாதங்கள், மேலே விழுந்து பிடுங்காத பிச்சைக்காரர்கள், சிறு வியாபாரிகள், கங்கைக்கு ஆரத்தி பார்க்க அழைக்கும் போட்வாலாக்கள், கங்கையில் மிதக்க விட நாலு பூவும் ஒரு அகலும் வைத்து விற்கும் சின்னப் பெண்கள், எல்லா நேரங்களிலும் முழுக்கு போடும் ஜனங்கள்... ஒரு நாள் பூராவும் பார்த்தாலும் தீராது, சலிக்காது.

அங்கே இருந்த மூன்று நாளும் படித்துறை நடை போய் சேர்வது மணிகர்னிகா காட்-டில் தான். முதல் நாள் போன போது அங்கிங்கே என்று நான்கைந்து பிணம் எரிந்து கொண்டிருந்தது. பாதி எரிந்த பிணத்தை கழி கொண்டு இரண்டாக மடித்ததில் பாதம் ஆகாசத்தைப் பார்த்துக் கொண்டு எரிந்து கொண்டிருந்தது. சுற்றிலும் கூட்டம். குடும்பத்தார்கள் ஆரம்ப காரியங்கள் முடித்து எரிந்து முடிக்க காத்திருந்தனர். இதற்கு முன்னால் இருந்த பயம் இன்னபிற உணர்வுகளெல்லாம் கரைந்து இந்த பிரயாணத்துக்கு பின்னால் அது அத்தனை அதிர்ச்சி தராத‌, fact of life ஆக மாறியிருக்கிறது.


திரும்பி வரும் போது சரியாகத்தான் வந்து கொண்டிருக்கிறேன் என்று நினைத்துக் கொண்டு எங்கோ வழி மாறி விட்டிருந்தேன். ஒரு கட்டத்திற்கு மேல் பிடிபடாமல் போக ஆட்டோவும் கிடைக்காமல் சீட்டுக்கட்டுகளை சேர்த்திக் கட்டினது போல பொலபொலவென்றிருந்த சைக்கிள் ரிக்ஷாவில் ஏற வேண்டி வந்தது. பார்ப்பதற்கு அப்படி இருந்தாலும் அது குறுகலான மேடு பள்ளங்களால் ஆன சந்துகளில் சௌகரியமாகப் போனது. நான் தான் பயந்து கொண்டே உட்கார்ந்திருந்தேன்!

என்னுடைய முதல் நாள் முடிந்தது!

8 comments:

துளசி கோபால் said...

வாசிக்கும்போதே ரொம்ப த்ரில்லிங்கா இருக்குதுங்க.

தனியா ஊர் சுற்றும் அனுபவம் தனி ருசி என்றாலும் ........

நான் இனிமே வேறெங்கும் தனியாப் போகும் எண்ணமே இல்லை.

அடுத்த பகுதிக்கு வெயிட்டிங்!!!

வல்லிசிம்ஹன் said...

காசி பார்க்கிறேன் உங்கள் கண்கள் மூலமாக.
நிர்மலா! பயணம் சரி. தங்குமிடம்,சாப்பாடு எல்லாம்?
பாது காப்பு பயம் இல்லை என்று சொல்வார்கள்.
தனியாகப் போக பயம்.வீட்டைவிட்டுப் போக பயம்.இந்த இரண்டு பயத்தையும் வென்றுவிட்டீர்கள். இனி எல்லாம் சுதந்திரம்தான்.காலை கங்கை,மாலை ஆரத்தி எல்லாம் எதிர்பார்க்கிறேன்.திருப்பதி மலைகள் முந்நாட்களில் இப்படித்தான் என்னை ஈர்க்கும்.
கங்கையின் கதை சரித்திரம்.அது ஒரு தனி உலகம்.சீக்கிரமெ அடுத்த பகுதி வேணும்:)

யாத்ரீகன் said...

பல நாட்களுக்கு பிறகு எழுத ஆரம்பித்திருக்கீங்க.. தொடர் காசி பதிவுகளை எதிர்பார்த்து காத்திருக்கிறேன்

Geetha Sambasivam said...

அருமையான பதிவு. கங்கை ஒரு சமுத்திரத்தையே உள்ளடக்கியது. அதன் ஆழமும், வீச்சும், அகலமும் புரிந்துவிட்டால்! வாழ்த்துகள்.

கோமதி அரசு said...

காசி பயணக்கட்டுரை நன்றாக உள்ளது.

karunakaran said...

Aarambame nalla iruku unga ezuhtu ennayum ungalodu kootichelgirathu. vazthukkal. karunakaran

மதுமிதா said...

புகைப்படங்களும் காசி அனுபவங்களும் சுவாரஸ்யமானவை. இன்னும் ஒலிக்கட்டும் நிர்மலா.

Nirmala. said...

நன்றி துளசி. நன்றி வல்லிம்மா. எல்லா ஏற்பாடுகளும் இங்கயிருந்து கிளம்பும் போதே செய்திருந்தது. இத்தனை காலம் கழித்து இங்க எழுத வந்ததே பயப்பட எதும் இல்லை என்று சொல்லத்தான்! :-)

யாத்ரீகன், கீதா சாம்பசிவம், கருணாகரம், மது... ரொம்ப நன்றி.