Friday, May 30, 2008

இன்னொரு பயணம்...

இறங்க வேண்டிய நிறுத்தம்
நெருங்கிக் கொண்டிருக்கையில்
வழிமறித்து பக்கத்திருக்கையில் வந்தமர்ந்தாய்
தாண்டிச் செல்வது
கணநேரத்தில் சாத்தியமென்றாலும்
நகராமல் கட்டிக் கிடக்கிறேன்

நித்தமும் பழகிய பாதையில்
கண்ணிற்கு நழுவிய காட்சிகளை
பக்கத்திலிருந்து காட்டுகிறாய்

மறந்து விட்ட கனவுகளை
ஒவ்வொன்றாய்
விரல்களை ஊசியாக்கி
பொறுக்கியெடுத்து கோர்க்கிறாய்
வாசனை பரவுகிறது

உள்ளோடும் இசையை
உணர்ந்திருந்தேனென்றாலும்
நானேயொரு வாத்தியமென்று
தெரிந்திருக்கவில்லை
உன் விரல் தீண்டும் வரை

கட்டுகள் தளர்த்தி
களியாட்டமாகிறது
பின்பாயும் காலத்தின் வேகம்
பரவசம் நிறைக்கிறது
விலக்கிக் கொள்ளாமல் தடுமாறுகிறேன்

மோனத்திற்கும் நிஜத்திற்குமாய்
வீசியாடும் ஊஞ்சல்
மோனத்திலே நிலை கொள்ள துடிக்கயில்

தவிர்த்திருக்க முடியாத திருப்பத்தில்
சிறியதோர் குலுக்கலுடன்
முடிவுக்கு வரும் பயணம்
கனவுகளைக் கலைத்ததா
கலைந்ததற்கான ஆட்சேபனையா
யோசிப்பதில் ஆர்வமில்லாதிருக்கிறது

தேர்வு செய்யவோர் வாய்ப்பு
கொடுப்பது போல் கொடுத்து
தெரிவாக்க மறுக்கப் பட்ட
சந்தர்ப்பம் நீ

சந்தோஷித்தேனா துக்கம் கொண்டேனா
புரியாததோர் வெளியில்
மிதந்து செல்கிறேன்
கால் பாவும் போது
வெடித்து வடியப் போகும்
எரிமலையை சுமந்து கொண்டு.

நன்றி : வார்த்தை.

Sunday, May 25, 2008

ஜெயமோகன் சிறுகதைகள்... கொஞ்சம் குஷ்வந்த் சிங்...

ஒரு தலைப்பு கொடுத்து கதையோ கவிதையோ எழுதித் தரச் சொல்வது என்னைப் பொறுத்த வரை பரிட்சைக் கட்டுரைகளை நினைவு படுத்தும் ரிடிகுலஸ் சமாச்சாரம் என்றாலும், அப்படி ஒரு தவிர்க்க முடியாத சந்தர்ப்பம் வரும் போது கொஞ்சம் முட்டிப் பார்க்கும் உத்வேகம் வரும் என் முரண்பாட்டை எப்போதும் ரசித்திருக்கிறேன். அப்படி ஒரு சந்தர்ப்பம் கொடுத்து கதை எழுதச் சொன்ன போது ஒரு ரெபரென்ஸுக்காக(!) இரா. முருகன் சிறுகதை தொகுப்பும், ஜெயமோகன் சிறுகதை தொகுப்பும் வாங்கி வந்து வாசிக்க ஆரம்பித்திருந்தேன். இரண்டையும் மாறி மாறி வாசிக்கும் போது சிறுகதை எழுதுவது சுலபமாகத்தான் தெரிந்தது. ஓரளவிற்கு பிடிமானம் கிடைத்து விட்டதாக நினைத்து எழுத ஆரம்பித்ததும், எழுதியதை வாசித்துப் பார்த்த போதும்... ரொம்ப சலிப்பாக இருந்தது. இந்தப் புத்தகங்கள், என் சிறுகதை முயற்சி இரண்டையும் குழப்பிக் கொள்ள வேண்டாமென்ற முடிவெடுத்து கதையை எழுதி முடித்ததும் ஆசுவாசப்படுத்திக் கொண்டதும் ஆயுசுக்கும் நினைவில் வைத்துக் கொள்ள விரும்பும் ஒரு அனுபவம்.

காடும் ஏழாம் உலகமும் உச்சகட்ட வாசிப்பனுபவமாய் இருந்த போதும் நண்பர் சிபாரிசில் வாசித்த விசும்பு அனுபவம் நிச்சயம் வேறானது. வாசித்து முடித்த கையோடு மறுவாசிப்பு செய்ய வைத்த (இரண்டு கதைகளை தவிர்த்து) ஆச்சர்யம். இரண்டாவது முறை வாசிக்கும் போதும் அதே பசியோடு அந்தக் கதைகளை ருசிக்க முடிந்தது எனக்கு முதல் முறையாக நிகழ்ந்தது. ஒன்றிரண்டு முறை அந்தக் கதைகளைப் பற்றி பேச நேர்ந்த போது நான் பிதற்றுவது எனக்கே தெரிந்தது.

ஒரு இடைவேளைக்குப் பிறகு மறுபடியும் அதே போலொரு மயக்கம் வேண்டி தொடர்ந்த சிறுகதை தொகுப்பின் பின்பாதி இதை எழுதும் வரை கொண்டு வந்திருக்கிறது. ஒரு சமயம் ஒரு கதை மட்டுமே வாசிப்பது சாத்தியமாயிருந்தது. அதன் கனம், அதன் தாக்கம் அடுத்ததை கிரகிக்க என்னிடத்தில் எதையும் மிச்சம் வைத்திருக்கவில்லை.

கொஞ்சம் கண்ணாமூச்சி காட்டித் தொடங்கும். நழுவவே விடாமல் வேகமாக இழுத்துக் கொண்டு போய் இறுதியில் திசை தெரியாத ஒரு பெருவெளியில் விட்டுச் செல்லும் கதைகள். அதற்குப் பிறகு கதை உள்ளே unfold ஆவது ஒரு சுகம். சில நேரங்களில் அது பரவசம். சில நேரங்களில் பேதலிக்கச் செய்து கிடத்திப் போட்டது. நல்ல சங்கீதம் கேட்டு கண் கலங்கியது எப்போதும் நடப்பது. அதற்காகவே தேடிக் கேட்டதும் உண்டு. வாசித்து இப்படி உணர்ந்தது இதுவே முதல் முறை.

93 வருடம் டாக்கா லைப்ரரியிலிருந்து எடுத்து யாராலோ திருப்பிக் கொடுக்கப் படாமல் கொல்கத்தா காலேஜ் ஸ்ட்ரீட் பழைய புத்தகக் கடை வந்து சேர்ந்த Not A Nice Man To Know - The best of Khushwant Singh இப்பொது என் வசம். எழுபதுகளிலும் எண்பதுகளிலும் எழுதிய கட்டுரைக்கள், கவிதைகள், நாடகம், நாவலின் ஒரு பகுதி என்றெல்லாம் கலந்தடித்த ஒரு தொகுப்பு. Going Gaga Over Yoga என்ற பதினைந்து பக்கத்தின் நெடுகத்திலும் யோகாவின் பெருமைகள் தியானம்... சார்பில்லாமல சொல்வது போல நீளும் கட்டுரையின் கடைசி சில பத்திகள்....


' I concede that yoga asanas are good for health and perhaps achieve better results than other systems of exercises. I even concede that meditation may do some good to the mentally disturbed, but i cannot comprehend why a healthy man with a healthy mind should waste his time concentrating on some point between his eyes or his navel.'

Dr. Shrimali gave a guarded reply: 'It is said to make a healthy mind more creative. Everything anyone does he can do better after a course of meditation.'

'There is no evidence of increased creativity following meditation. Give me one example of a creative yogi.'

They looked at each other. Once again it was Dr. Shrimali who replied. "Sri Aurobindo.'

'Yes, Sri Aurobindo. You can't deny he was a creative philosopher,' added Dr Udupa.

'Can you name any other?After all the number of meditating yogis run into hundreds of thousands.'

There was complete silence. It gave me the oppurtunity to have my last fling. 'Anything worthwhile is created by restless minds. All the world's greatest artists, musicians, scientists, writers, poets had tortured minds. Your mental equipoise only produces mental equipoise. Nothing else.'

குஷ்வந்த் சிங் எழுத்தில் நீள வாசிக்கும் போதே எந்தப் புள்ளியில் சந்திக்கப் போகிறோம் என்ற ஒரு எதிர்பார்ப்பிருக்கும். பெரும்பாலும் அது நிகழ்வதுண்டு. இந்தக் கட்டுரையின் இந்த வரி... சரி தவறென்ற விவாதங்கள் தவிர்த்து... எஸ்ஸ்ஸ்ஸ்ஸ் இது தான் அந்தப் புள்ளி! சஞ்சலமும் தேடலுமாய் தடுமாறும் போதெல்லாம் யார் யாராலோ வழிகாட்டப் பட்டு வாசல் வரை போய் திரும்பி வந்ததெல்லாம் நினைவுக்கு வருகிறது. இந்த அலை பாய்தலும் தேடலிலும் தான் உயிர் துடிப்பை உணர்வதாயும், அது அமைதியானால் எதுவோ செத்துப் போய் விடுமென்றும் இன்று வரை நம்பும் என் எண்ணங்கள் பத்து முப்பது வருடத்திற்கு முந்தின குஷ்வந்த் சிங் எண்ணங்களோடு அந்தப் புள்ளியில் கை குலுக்கிக் கொண்டது.

இப்படியொரு புள்ளி இது வரை வாசித்த ஜெயமோகன் எழுத்துகளெங்கிலும் இதுவரை அகப்படவேயில்லை. அகப்படவும் வேண்டாமென்று தான் தோன்றுகிறது.