Sunday, July 03, 2005

Mira & the Mahatma by Sudhir Kakar

Image hosted by Photobucket.com

இந்த புத்தகத்தைப் பற்றி மூக்கு சுந்தரின் வலைப்பதிவிலும்(ஸாரி... எந்த பதிவென்று நினைவில்லாததால் சுட்டி கொடுக்க முடியவில்லை), டெலிகிரா·ப் புக் ரிவ்யூவிலும் பார்த்தது. புத்தகக் கடையில் இதைப் பார்த்த போது வாங்கத் தூண்டியது எது? காந்தியின் சராசரி மனித பக்கத்தைப் பார்க்கும் க்யூரியாசிட்டியா? யாரிந்த மீரா? அவர்களுக்குள் இருந்த நேசம் பற்றி என்ன சொல்கிறது என்ற கேள்விகளோடுதான் புத்தகம் வந்தது.

காந்தியின் அஹமதாபாத் ஆசிரம வாழ்க்கை, வசதியான குடும்பத்தில் பிறந்து காந்தியைப் பற்றி அறிந்து எல்லாவற்றையும் துறந்து இந்தியா வரும் Madeline(மீராபென்), இவர்களைப் பற்றி சொல்லிக் கொண்டு போகும் கதை சொல்லி, கடைசியில் வந்து சேரும் ப்ருத்வி என்ற பாத்திரம்...

நிச்சயமாக இதை ஒரு நாவலாக நினைத்து வாசிக்க ஆரம்பிக்கவில்லை. ஒரு வாழ்க்கை குறிப்பு. ஆசிரியர் இதை சேகரித்துச் சொல்கிறார். அதை நான் தெரிந்து கொள்ளப் போகிறேன். இப்படித்தான் வாசிக்க கையில் எடுத்தேன். முன்னுரையில் இதில் எது கதை எது நிஜம் என்று சொன்னதை நான் முழுதாக புரிந்து கொண்டேனா என்று தெரியவில்லை. மீராபென் நிஜம். காந்தி நிஜம். அவர்கள் கழித்த காலம் நிஜம். இணைத்த நிகழ்வுகளில் கொஞ்சம் கற்பனை. என்றால் இப்படி கற்பனை செய்து எழுதுவது சரிதானா? அப்படியென்றால் மாய்ந்து மாய்ந்து படித்த பொன்னியின் செல்வனும் மற்ற சரித்திர நாவல்களும் என்னவாம்? இதைப் படித்த பின் எனக்கு வரும் அனுமானங்கள் எவ்வளவு சரி? கேள்விகள். குழப்பம்.

ஒரு புத்தகத்தை வாசிக்கும் போது அதில் எதாவது ஒரு பாத்திரத்தின் ஒரு சின்ன விஷயம், அந்த பாத்திரத்திற்கு பிடித்தது, அந்தப் பாத்திரம் யோசிப்பது... இப்படி எதாவதோடு வாசிப்பவர் தொடர்பு படுத்திக் கொள்ள முடிவது அந்த புத்தகத்தோடு நெருங்கி வர அவசியம் என்று நினைக்கிறேன். 'நான் கூட...' என்று நினைக்க வைக்க வேண்டும். இந்த 'நான் கூட...' கூடக்கூட இன்னும் இன்னும் என்று புத்தகத்துடன் நெருக்கமாகிறோம். Mr. Perfect மகாத்மா, வசதிகளை துறந்து இத்தனை சிரமங்களை தாங்கிக் கொள்ளும் மீராபென்... யாருடனும் என்னை எங்கேயும் தொடர்பு படுத்திக் கொள்ள முடியாமல் போனது துரதிஷ்டம் தான். எல்லாமே தலைக்கு மேலே ஓடுகிறது. கடைசி இருபத்து சொச்சம் பக்கங்கள் பாக்கியிருக்கிறது. ஏனோ முடிக்கத் தோணவில்லை!

ஒன்று புனைக்கதையாக இருக்க வேண்டும். இல்லை நிஜம் சொல்வதாக. இது...


இப்படி எழுதி முடித்த இந்தப் பதிவு ஏனோ அனுப்ப மனமில்லாமல் இத்தனை நாளாகக் கிடந்தது. நேற்று அந்த மீதிப் பக்கங்களைப் படித்து முடித்ததும் என்ன கஷ்டம்டா இது என்று தான் இருந்தது. கடைசி பக்கங்கள் மீரா ப்ருத்வி மேல் கொண்ட காதலைச் சொல்லிப் போகிறது. காந்தி மேல் ஆழ்ந்த பக்தி, அவரால் ஒவ்வொரு முறையும் வலுக்கட்டாயமாக விலக்கப்பட்டது, ப்ருத்வி மேல் நேசம் கொண்டு அதுவும் மறுக்கப் பட்டு... மன்றாடிப் பார்த்ததும்... கொஞ்ச வருஷம் முன்னால் இதைப் படித்திருந்தால் என்ன ஒரு பெண்! என்று மாய்ந்திருக்கலாம்.

மீராபென் காந்திக்கு எழுதியது, காந்தி மீராபென்க்கு எழுதியது, மீராபென் ப்ருத்விக்கு எழுதியது என்று... இந்தக் கடிதங்களை இப்படி வெளியிடுவது சரியா? இந்தக் கடிதங்கள் எல்லாம் ம்யூஸியத்திற்கு எப்படிப் போனது? இவையெல்லாம் இப்படி அச்சில் வருவதில் யாருக்கும் ஆட்சேபனை இல்லையா? வாசிக்கும் போது கொஞ்சம் கூச்சமாக இருந்தது.

எப்போதாவது எதிலாவது கரைந்து போக வேண்டும் என்று தோன்றும் போது மறுபடியும் ஒரு முறை இதை வாசிக்கும் தூண்டல் வர வேண்டும். அப்போது இது வேறு மாதிரி வாசிப்பு அனுபவம் கொடுக்கலாம்! கொடுக்க வேண்டும்.