Thursday, June 04, 2015

இடப்பெயர்ச்சி பலன்கள் - 5

பாலகுமாரன் கதை படிக்கும் போது கற்பனை செய்து வைத்திருந்தது. காற்றில்
குழலாட, காது ஜிமிக்கி லேசாக அசைய, ஆர்ப்பாட்டமில்லாமல் அமைதியாய்
பாடும் பெண்ணைப் பற்றி. ஒரு பார்ட்டியில் அந்த கற்பனைக்கு உருவம் தந்தது
பூர்வர்ஷா. பெங்கால் தங்கம்?!! நிஜமாகவே எலுமிச்சை நிறம், அளவான
உயரம், அதற்கேற்ற உடம்பு...இதெல்லாம் கண்களைத் திறந்தால் தெரிவது.
மூடிக் கொண்டால் அந்தக் குரல் ஒரு நதி. துள்ளலும் துடிப்புமாய்.

ஏற்கனவே லதாவின் பழைய பாடல்களில் கிறங்கிய அனுபவம் இருந்தாலும் கண்
முன்னே நின்று ஒருவர் பாட அதில் நான் உருகி வழிந்த மாதிரி உணர்ந்தது
அப்போது தான். அன்று அவர் பாடியது எனக்கு ரொம்ம்ம்ப பிடித்த லதாவின்
மீரா பஜன். அதை பூர்வர்ஷா குரலில் கேட்டது நிச்சயம் வேற அனுபவமா
இருந்தது. தனிமையாக உணரும் சில நேரங்களில் எதிலாவது என்னை மறக்க
செய்ய வைக்கும் வழி என்ன என்ற ஒரு தேடல் இருந்தது. அந்தக் குரலும் அதன்
குழைவும்.....இதுதானா அது என்றிருந்தது. பாடி முடித்த அவரிடம் இருந்து
கவனத்தை மாற்ற சிரமமாக இருந்தது. இனி எப்போது மறுபடியும் என்ற
கேள்வியும்.

சந்தர்பங்கள் அடிக்கடி வந்தது. காலனியில் எதாவது விசேஷங்கள் இருந்து
கொண்டே இருந்தது. எல்லாவற்றிலும் பூர்வர்ஷாவின் பாட்டும் தவறாமல். அவர்
பாட ஆரம்பித்தால் போதும். சுற்றி இருக்கும் எல்லாரையும் மறந்து, எல்லா
சப்தமும் மறைந்து அந்தக் குரலை மட்டும் உணர முடிந்தது. ஆனால் 
எத்தனை கேட்டாலும் ஆசை தீராமல் இருந்தது.

குழந்தைகளுக்காக பாட்டு வகுப்பு தொடங்கிய போது எனக்கும் சொல்லிக்
கொடுக்க முடியுமான்னு கேட்க அவர் கண்ணில் தெரிந்ததற்க்கு அர்த்தம்
என்னவாயிருக்கும்? ஆனால் சரின்னு தான் சொன்னார். அதற்கு முன்னால் பாடினது
என்று சொன்னால் அது 'மிலே சுர் மேரா துமாரா' தான். மகளுக்கு இரண்டு
வயதாக இருக்கும் போது வெளிவந்திருந்தது. அந்தப் பாட்டு போட்டாதான்
சாப்பிடுவேன்னு அடம் பிடிப்பாள். டிவியில் அது எப்போது வரும் என்றே
தெரியாது. எப்போதாவது வரும் போது என்ன குடுத்தாலும் மடமடன்னு இறங்கும்.
பிடிக்காததா இருந்தா முதல் வாய் சாப்பிடும் போது இதான்னு ஒரு கேள்வி
கண்ணிலே வரும். அப்புறம், சரி சரி என்னை தொந்தரவு செய்யாதேன்னு ஒரு
பார்வை அறிவிப்பு. சத்தமில்லாமல் சாப்பிட்டாகிவிடும். அவளுக்காக அந்த
பாட்டு மனப்பாடம் ஆகியது. ஒரு நாளைக்கு குறைந்தது மூன்று தரம், சுமார் ஆறு
மாதம், அவளுக்காக மட்டும்.... முகத்திலிருந்து கண்ணெடுக்காமல் கேட்பாள்.
எதாவது ஒரு வரி விட்டு விட்டால் இல்லை தப்புன்னு தலை ஆடும்(வாயில் தான்
சாப்பாடு இருக்குமே!)... அவ்வளவு தான் வாய்விட்டு பாடிய அனுபவம்.

பாட்டு வகுப்பில் முதல் நாள் குரலே வரவில்லை. அப்புறம் கூட்டத்தோட
பாடினாலும் தனியா பாடுன்னு சொல்லும் போது படபடன்னு...வேர்த்துப் போய்!
முடியாதோ என்று தயங்கின போதெல்லாம் பூர்வர்ஷாவின் குரல் மறுபடியும்
மறுபடியும் இழுத்தது. ஸரிகம வில் லேசான அறிமுகத்தோடு மூன்றாவது மாதம்
ஒரு பஜன் சொல்லிக் கொடுத்தார்.
'துமக சலத ராம சந்த்ர'. பாடப் பாட கொஞ்சம் கொஞ்சமாக தயக்கம்
விலகி, கண்ணை மூடி அனுபவிக்க முடிந்தது. (இதை எழுதும் போது அந்த
டைரியை தேடி எடுத்து பார்த்த போது அந்தப் பக்கம் மட்டும் மஞ்சளடித்து
இருந்தது. சமைக்கும் போது கூட அந்த புத்தகத்தை வைத்து பாடிக்கொண்டே
சமைத்ததின் மிச்சங்கள்). பேஹாக் ராகத்தில் சின்னதாக ஒரு அறிமுகத்தோடு
தொடங்கிய அடுத்த பாடம் அந்த புத்தகத்தில் பாதியில் நிற்கிறது.

எங்களுக்கு மாற்றல் வந்து விட்டது!

மூன்று மாத அந்த அனுபவம், ரசனையை நிச்சயம் மாற்றியது. குஜராத்தில்
பெரியவர்கள் சொல்வது..."ஷ்ருத் கி(Ghee) ஹஸம் ந கர் சக்தே யே
பீடி(peedi)' (சுத்தமான நெய்யை ஜீரணிக்க முடியாத தலைமுறை)...அது
மாதிரி சுத்தமான சங்கீதம்... குறிப்பா கர்நாடக சங்கீதம் புரிவதும்
இல்லை, ஜீரணமாவதும் இல்லை.

ஆனாலும் குறையொன்றும் இல்லை.

No comments: