Saturday, June 06, 2015

பார்த்த நதிகள் சட்லெஜ், பியாஸ் மற்றும் கிளைநதிகள் பார்வதி, செய்ன்ஜ். தங்கியிருந்த கெஸ்ட் ஹவுஸ் கதவைத் திறந்ததும் கண்ணில் படுவது சுற்றியிருக்கும் மலைகளும், மலை மேல் ஆங்கங்கே தெரியும் வீடுகளும் தான். ஓயாமல் ஓடிக் கொண்டிருக்கும் செய்ன் ஜ் நதியின் இரைச்சலோசை. பசிக்கு கொஞ்சம் சாப்பாடும் ஒரு புத்தகமும் கையிலிருந்தால் குறைந்த பட்சம் நான்கு நாட்களூக்காவது வேறெதும் தேவையிருக்காது. ஜனவரி மாதங்களில் முழு மலையும் பனி போர்த்தி விடும் என்று கேட்கும் போதே கற்பனை விரிகிறது. ஆறு மாதங்களுக்கு மலை மேலிருப்பவர்கள் கீழேயே வருவதில்லையாம். இதற்கு ஒரு வீடும் இன்னொன்றும் பக்கத்தில் கூட இல்லை. வேண்டிய உணவுப் பொருட்களை சேமித்து வைத்துக் கொண்டு ஆறு மாதம்ம் வரை மேலேயே இருப்பதை நினைக்கும் போது அது நம் யூகத்திற்கப்பாலான விஷயம் என்பது நிச்சயம். ஆனாலும் இருந்து பார்க்க வேண்டுமென்றிருக்கிறது. என்ன நமக்கு சாப்பாடோட கொஞ்சம் வாசிக்கவும் எழுதவும் முடிந்தால் போதும். ஆறுமாத அஞ்ஞாத வாசம் வாழ்ந்து பார்க்கும் ஆசை வருகிறது. யார் கண்டது ஒருவேளை அதற்குப் பின்னால் திரும்பி வரவே தோணாதாயிருக்கும்!

செய்ன் ஜ் லிருந்து குல்லு மணாலிக்குப் போகும் பாதையில் மூன்று கிலோமீட்டர் தூரத்திற்கு ஒரு நீண்ட மலைக்குடைவு பாதை. இவ்வளவு நீள மலை குடைவு பாதையில் இதுவரை பயணித்ததில்லை.

வழியெல்லாம் ஷால் கடைகளும், பழங்களும். செர்ரி, ப்ளம்ஸ், குமாணி... அதிகம் தித்திப்பில்லாமல் சாப்பிட திகட்டாமலிருக்கிறது.

குல்லுவில் பார்க்க எதுவுமில்லையாம். ஒரு ஆசிரமம் இருக்கு... கொஞ்சம் வெள்ளைக்காரர்கள் இருக்கிறார்கள் என்று காரோட்டி சொன்னார். பார்க்க எதுவும் என்பது ' சுற்றுலாத் துறையினால் அடையாளம் காட்டப் பட்ட சைட் சீயிங் பாயிண்ட்'. முக்கியமாக இவற்றை தவிர்த்து ஒரு ஊரைப் பார்க்க நாமெல்லாம்
என்றைக்கு கற்றுக் கொள்ளப் போகிறோம்?!

மணாலியில் எங்கே பார்த்தாலும் தங்குமிடங்கள்... எழுநூறிலிருந்து எண்ணூறு வரையிருக்கலாமேன்று சொல்கிறார்கள். எல்லா வகையிலிமிருக்கிறது.

ஹடிம்பா தேவிக்கு ஒரு சிறிய கோவில். பைன் மரக்காடுகளுக்கு நடுவில் ஒரு புராதன அழகுடன். வெளியே இரண்டு மூன்று அடுக்கு போல தெரிந்தாலும் உள்ளே ஒரு பெரிய அறை. நடுவில் கூட இல்லாமல் ஒரு ஓரத்தில் ஒரு தட்டை பாறைக்குக் கீழே ஒரு ஜோடி பாதங்களும் ஒன்றிரண்டு முகமும்.

No comments: