Sunday, December 31, 2006

தலைப்பு? நோ தலைப்பு

போன மாதம் ஒரு கொல்கத்தா பயணம் இருந்தது. போகும் போதே சரியில்லாத உடம்பு அங்கே போய் அதிகமாகப் படுத்தியதும், கொல்கத்தா கொஞ்சம் என்னை மறந்து போனதாய் உணர்ந்ததும் பெரிய விஷயமில்லை. வழக்கம் போல காளிகாட் போனதும் வழக்கமில்லாமல் ஒன்றைப் பார்த்ததும் தான் விஷயம்.

பத்து நிமிடத்தில் காளியைப் பார்த்து முடிந்தாலும் அங்கேயிருந்து கிளம்ப முடியாமல் வெறுமனே சுற்றிக் கொண்டிருந்ததும், என்ன தான் தேடுகிறேன் என்று தெரியாமல் அலைமோதியதும்... வழக்கம் போல அந்த பலிபீடத்தைப் பார்த்துக் கொண்டே நின்றதும்... ஒன்றிரண்டு வெற்றுச் சுற்று முடித்து கிளம்பப் போகும் போது... இழுத்துக் கொண்டு வந்த கறுப்பு ஆடுகள்... யோசனையே இல்லாமல் பின்னால் போனது... மறுபடியும் அந்த பலிபீடத்திற்கே வந்து சேர்ந்தது... ஏதோ கேள்விகள்... எவ்வளவு என்ன என்று விசாரணைகள்... முடித்து அங்கே ஒரு மேசை போட்டு உட்கார்ந்திருந்தவரிடம் போய் தகவல் சொல்கிறார்கள்... கீழே ஒரு குழாயைத் திறந்து அவசரமாக தலையை மட்டும் பேருக்கு நனைத்தார்கள்... இழுத்துக் கொண்டு வர கழுத்தில் போட்டு வந்த கயறு கழட்டப்பட்டது... அதுவரை பேசாமல் தான் இருந்தது... முன்னங்கால்களை பின்பக்கமாக வளைத்துப் பிடித்த போது தான் அந்த சத்தம் கேட்கத் தொடங்கியது... அதற்குப் பின் அதிக நேரம் எடுக்கவில்லை... அதுவரை போவோரும் வருவோரும் தொட்டுக் கும்பிட்டுப் போன அந்த மரச் சட்டத்தில் தலை வைக்கப் பட்டது... அசையாமல் இருக்க ஒரு இரும்புக் கழியால் நிறுத்தப் பட்டது... உயர்ந்த அந்த அரிவாள் எந்த நொடியில் கழுத்தைக் கடந்தது என்று கவனிக்க முடியவில்லை... துடித்துக் கொண்டிருந்த உடம்பை ஒரு புறமாகத் தள்ளி விட்டு தலையைத் தூக்கிக் கொண்டு வருகிறார்... வழியும் ரத்தத்தில் அவர்கள் குடும்பத்தவருக்கு பொட்டு வைத்து விடுகிறார்... முடிய முடிய அடுத்தது தயாராகிறது... பக்தியும் இல்லாமல் பதைப்பும் இல்லாமல் வெறுமனே தான் பார்த்துக் கொண்டிருந்தேன். முன்று நான்கு வயது சின்னப் பையன் எதற்கு என்று தெரியாமல் கையில் சுமந்து கொண்டு, வரும் போது பேசிக் கொண்டே, அந்த குட்டி ஆட்டைப் பார்த்ததும் அங்கே நிற்க முடியவில்லை. வெளியே வரும் போது கொஞ்சம் வெறுமையாக இருந்தது. யார்கிட்டயாவது சொல்லியே ஆகணும் என்று மண்டை வெடிக்க, கூப்பிட்ட இரண்டு பேரும், 'உன்னை யார் அதையெல்லாம் பார்க்கச் சொன்னது?' என்றும் 'கொஞ்சம் கூட இரக்கமே இல்லையா?' என்று கோவித்ததும்... அதைப் பற்றிப் பேசவே தோணவில்லை.

நேற்று தொலைக்காட்சியில் கை பின்னால் கட்டி கழுத்தில் கருப்பு துணி சுற்றி...