Wednesday, May 16, 2007

ஓ! கொல்கத்தா!

'இன்னொரு' என்று சொல்ல முடியாமல், கடைசி என்று சொல்ல வைக்கும் கொல்கத்தா பயணம். போன தடவையே கடைசியாயிருக்க வேண்டியது! எங்களுக்குள்ளே இன்னும் கொஞ்சம் மிச்சம் மீதி இருக்கிறது போலிருக்கிறது.

ஒவ்வொரு தரமும் கொல்கத்தா வரும் போது விழித்துக் கொள்ளும் எல்லா விஷயங்களும் சென்ற முறையும், ஒரே மாத இடைவெளியில் இந்த முறையும் தவறாமல் நடந்து கொண்டிருக்கிறது. இந்த விழித்துக் கொள்ளும் சமாச்சாரங்களால் வரும் அவஸ்தைகளும். சென்னையில் ஏதோ யோசனையோட போகும் பயணங்களும் இங்கே வரும் போது கவனத்தில் வரும் சின்னச் சின்ன விஷயங்களுமாய்... மரங்களும் மனிதர்களும் கூடுதல் கவனம் பெறுவதும்... சாத்தியமேயில்லை என்று மறந்தே போயிருந்த சங்கதிகளை மறுபடியும் முயற்சி செய்வோமா என்ற உந்துதல்களும்... பத்து நாளைக்கு முன்னால் வாசித்த புத்தகங்களும், பார்த்த சினிமாக்களும், வெறும் பொழுதுகளில் ஓடும் யோசனைகளும் மெதுவாக மாறி வேறு நிறமாவதை ஒவ்வொரு முறை போல இந்த முறையும் அதே ஆச்சர்யத்தோடு கவனிக்கிறேன். இந்த ஊர் என்னவோ செய்கிறது!

மிச்சம் மீதி கொல்கத்தா ஞாபகங்கள்...

மூன்று வருஷம் முன்னால், கொல்கத்தா வந்து நான்கைந்து நாட்கள் தான் ஆகியிருந்தது... ஒரு விண்ணப்பத்திற்கான போட்டோவிற்காக ஸ்டூடியோ தேடி, தெரியாத தெருக்களில் இலக்கில்லாமல் அலைந்தது... யாரோ வழி சொல்லி நுழைந்த தியேட்டர் ரோடு 'Samir dass' ஸ்டூடியோ... சுவரெல்லாம் கறுப்பு வெள்ளை க்§ளாஸப் புகைப்படங்கள்... கொஞ்சம் ஆர்வமும் நிறைய தயக்கமுமாய் குரல் கொடுத்தது... யாரும் வராததால் வேறெங்கோ போய் அப்போதைக்கு காரியத்தை முடித்து விட்டாலும், இப்போதும் அந்தப் பக்கம் போகும் போது அதே ஆர்வம் தலைதூக்குகிறது. எப்போதும் போனதில்லை. ஒருவேளை இனிமேலும்!

'பரினீதா' படம் பார்த்த ஜோரில் அந்த ஓலையில் மூடிய படகுகளைத் தேடியது... விசாரித்தபோது 'அதெல்லாம் இப்போ கிடையாது, சினிமாவுக்காக செய்திருப்பாங்க' என்று சொல்லி ய¡ரோ நம்ப வைத்ததும்.. மறந்தே போய் விட்ட ஒரு நாள் அசந்தர்ப்பமான வேளையில் எங்கோ போய்க் கொண்டிருந்த போது திடீரென கண்ணில் பட்ட அந்த நினைவு மண்டபம்... ஜேம்ஸ் ப்ரின்ஸெப்... கொல்கத்தாவிலும் காசியிலும் ஊர் நிர்மாணத்தில் முக்கியமானவராய் இருந்தவர் நினைவாக அந்த நாளைய கொல்கத்தாவாசிகளால் கட்டப் பட்டது... படத்தில் சை·ப் பிய¡னோ வாசிக்க, வித்யா பாலன் பாடும் அதே மண்டபம்... பகல் நேரத்தில் ஒரு அழகு, ராத்திரி நேரத்தில் வேற மாதிரி... அங்கிருந்து காலாற நடந்தால் படகுத்துறை... அதே பரினீதா படகுகள்... ராத்திரி நேரத்தில் ஒற்றை லாந்தர் எரிய, கங்கையில் படகு சவாரி... சொர்க்கம்! கூட வருகிறவருக்கு கெரசின் வாசம் அலர்ஜி இல்லாம பார்த்துக் கொள்வது அவசியம்!:-)

காளிகாட்டில் இந்த முறை...

கணக்கில்லாத பலிகள்... ரத்தம் சொட்டும் அந்த பீடத்தில், பலிகளுக்கு நடுவில் தன்னுடைய தலையையும் அதே போஸில் வைத்து பக்திப் பரவசமாகும் மக்கள்.

கோவில் காம்பவுண்டிலேயே ஒரு ஓரத்தில் அமைதியாக ஒளிந்திருக்கும் ஏசு புகழ் பாடும் 'நிர்மல் ஹிருதய்' மதர் தெரஸா ஆசிரமம்... கடைசி நாட்களை எண்ணிக் கொண்டிருப்போரும், நடமாட முடியாதவர்களுமாய்... வெள்ளைத் தோல் இளம் வயது வாலண்டியர்கள்... அங்கிருந்த ஒரு கால் மணி நேரத்தில் பார்த்தது... மலஜலம் கழிப்பித்தல், ஷேவிங், உடுப்பு மாற்றல், குடிக்கக் கொடுப்பது... எல்லா வேலைகளையும் சிரித்த முகத்தோடு செய்பவர்களைப் பார்க்கும் போது... எப்போதும் போல 'நான் வேஸ்ட்' என்ற யோசனை... நன்கொடை சமாளிப்புகளில் உறுத்தல்கள் தான் மிச்சம்.

காலை பத்து மணிக்கு வேர்வை கசகசப்பில் சலித்துக் கொள்ளும் மார்க்கெட், வெயிலில் காயும் காய்கறிகள், கன்னா பின்னா நெரிசல்... இதற்கெல்லாம் சம்பந்தமே இல்லாமல் உறுத்தும் மேக்கப்பில் குடை நிழலில் காத்திருக்கும் பாலியல் தொழிலாளர்கள்... காளிகாட், சோனார்காச்சியின் சிஸ்டர் கன்சர்ன்... காலை நேரத்திலேயே சுறுசுறுப்பாயிருக்கிறது. கொள்வாரிருப்பதால் கடை!

ஒவ்வொரு தரம் காளிகாட் போகும் போதும் அந்த இடம் unfold ஆகி எதையாவது புதிதாகக் காட்டுகிறது... இது எல்லா இடங்களிலும் நடப்பதில்லை... அதனாலேயே திரும்பத் திரும்பப் போக வேண்டும் என்ற உந்துதல்.

கை நிறைய பெங்காலி படங்களாய் அள்ளிக் கொண்டு வந்து கிடக்கிறது. 'மெதுவா பார்த்துட்டு குடுங்க' என்று கடைக்காரர் மனமுவந்து கொடுத்ததில் மூச்சு திணறாமல் பார்க்க முடிகிறது. நேற்று பார்த்த முதல் படம் ஊத்திக் கொண்டது. இரண்டாவது படம்... Parama... பிடித்திருந்தது.


தொடரும் உத்தேசமிருக்கிறது....

Wednesday, April 04, 2007

Women & Men in my Life - Khushwant Singh

ஆங்கில புத்தகங்கள் வாசிப்பது ஏறக்குறைய இல்லை என்றாகிவிட்ட ஒரு சமயம் 'to kill a mocking bird' கிடைத்தது. வாசிக்க ஆரம்பித்து தாண்ட முடியாத பத்தம்பது பக்கங்களுக்குப் பிறகு 'வேண்டாம் போ' என்று விலக்கி வைத்தது 'அவ்வளவுதானா?' என்று கேட்டது. ரொம்ப லேட்டா தொடங்கி சீக்கிரம் முடிந்து விட்டதோ நமது ஆங்கில வாசிப்பு என்று தோன்றியது. சென்னை வந்ததில் இதுவும் ஒரு பெரிய மாற்றம். வெளியே இருந்த போது வாசிக்க தமிழ் புத்தகம் எதுவும் கிடைக்காத கட்டாயத்தால் எதேச்சையாக தொடங்கியது ஆங்கில நாவல் வாசிப்பு. இப்போதான் தமிழே வேண்டியமட்டும் கிடைக்கிறதே என்று அதிகம் வாசிக்காமல் இருந்தாலும், பழக்கம் விட்டதில் கொஞ்சம் வருத்தம்.

75% வரை தள்ளுபடி என்று ஆசை காட்டிய சென்னை oxford... பேருக்குத்தான் 75%... அந்த பகுதி எங்கே என்றே பார்க்கவில்லை! வழக்கமாக இழுக்கும் தலைப்புகள் பகுதியில். இதற்கு முன்னாலேயே பார்த்தும் வேண்டாம் என்று விட்ட Women & Men in my life - Khushwant singh... இந்த முறை மறுக்க முடியவில்லை. அவருடைய ஆட்டோபயாகிரபி, death at my doorstep எல்லாம் படித்து முடித்ததில்... என்னவோ எனக்கு அவரைப் பற்றி எல்லாம் தெரியும் என்ற தோணல். அதனாலேயே இதை வாசிக்கத் தொடங்கியதும்... மற்றபடி அதிகம் கேட்டிராத பொது வாழ்கை மனிதர்களை, அவருடைய புத்தகங்கள் மூலம் மட்டுமே அறிந்திருந்த அதே மனிதர்களைப் பற்றிய செய்திகளை கொஞ்சம் மாற்றங்களோடு இன்னொரு முறை கேட்பது... வீட்டில் இருக்கும் வயதானவர்கள் சொன்ன விஷயங்களையே திரும்பத் திரும்பச் சொல்வது போல! மனுஷனுடைய எழுத்து சுவாரசியதினாலே எத்தனை முறை கேட்டாலும் சலிப்பதில்லை.

இந்த புத்தகத்தை எழுதியதில் கோவித்துக் கொண்டு கொஞ்சம் பேர் 'உன் பேச்சு கா' விட்டுப் போய் விட்டதாகவும், வெளிப்படையாக சொன்ன நேசத்தில் கொஞ்சம் பேர் ரொம்ப சந்தோஷப் பட்டதாயும், என்ன எழுதியிருக்கு என்று படித்துப் பார்க்காமலேயே சிலர் மறுதலித்துப் போனதாயும் முன்னுரையில் சொல்கிறார். புத்தகத்தில் பெண்களைப் பற்றி எழுதியிருப்பதில் சொட்டுவது தனி ரசம்... குஷ்வந்த் சிங் ரக ரசம்! அனுபவித்து எழுதிருப்பதால் வாசிக்கும் போது அந்த பிரியம் அப்படியே உள்ளே இறங்கிவிடுகிறது.

வயது வித்தியாசமில்லாமல், இன்ன உறவு என்று சொல்ல முடியாத நேசத்தில், ஏதோ ஒரு விதத்தில் பாதித்த, வெவ்வேறு காலகட்டத்தில் சந்தித்த பெண்கள்... பெண்கள்... பெண்கள். கொஞ்சம் ஆண்களும்! நல்லதையும் கெட்டதையும் தாட்சண்யமில்லாமல் சொல்லிப் போகிறார். வெறும் மனசைத்
தான் பார்த்தேன் என்ற மழுப்பல்கள் இல்லாத 'பிந்தாஸ்' குறிப்புகள். தைரியம், சாமர்த்தியம், வெகுளித்தனம், திருட்டுத்தனம், mysterious... எல்லாமாய் பிடித்தவர்கள்.

சில வரிகள்....

'You Know how much weight i have shed? look.' She turned, pointing to her bare midriff. 'All gone. And dont u tell me slimming down does not suite me.'....... I have been to Bombay many times since but have not had the courage to call on her. I want to preserve the image of the Devyani Chaubal I had known: fat, full of life, malicious gossip, mimicry and a zest for life.

The lady persisted, 'Never mind the age difference, you still look like a married couple.' I slipped out of the dining hall and went to bed without dinner. After the compliment I didnt need any. I was little worried about how the rest of Nirmala's family would take that faux pas.

If this was true (men's gossip is less reliable than woman's) love formed very little part of Amrita's life. Sex was what mattered to her. She was a genuine case of nymphomania, ....

She put on her tape recorder at full blast, sang with it and talked at the top of her voice. I almost went round the bend and pitied her husband who had to put up with such exuberance every day.

ஆண்களைப் பற்றிய மீதிப் பாதி புத்தகம் கொஞ்சம் நியூஸ் ரீடிங் போல! மற்றபடி, ஒரே மூச்சில் படித்து முடித்த புத்தகம். முடித்த கையோடு ரொம்ப நாள் பெண்டிங் 'one hundred years of solitude' படிக்க வைத்ததில் குஷ்வந்த் சிங் பங்கு அதிகம். கொல்கத்தா வந்து, போன சனிக்கிழமை அவருடைய வழக்கமான column வாசித்ததும் இடையில் கொஞ்சம் தொய்ந்து போயிருந்த குஷ்வந்த் சிங்குடனான உறவு மறுபடியும் அதே போலாகி விட்டது.

தலைப்புதான் ரொம்ப தூண்டுகிறது... என்னையும் 'எழுதேன்' என்று! எப்போதாவது செய்யனும்.

Tuesday, April 03, 2007

The Namesake - Mira Nair


சுமார் ஒன்றரை வருடம் முன்பு இந்தப் படம் எடுப்பதற்காக மீரா நாயர் கொல்கத்தா வந்திருந்ததும் ஸ்டார் காஸ்டிங்கிற்காக நடந்த அமளிகளும் வாசித்த நினைவிருக்கிறது. வந்த ஒரு வாரமாய் ஒரு நல்ல பெங்காலி படம் பார்க்கக் கிடைக்காதா என்ற ஒரு அதிக முனைப்பில்லாத தேடலுக்கு பின் பெங்காலி சாயல் அடிக்கும் இந்தப் படம் வாய்த்தது. வழக்கம் போல இப்பவும் இது போல படங்கள் பார்க்க வரும்... எப்படிச் சொல்ல?!... கொஞ்சம் புத்திசாலி களை, வயது வித்தியாசமில்லாமல்...ம்ம்ம்... ஒரு sophisticated crowd. அங்கங்கே இளசுகளின் கெக்கேபிக்கே சிரிப்புகள் மெல்ல தலைகாட்டி, அதிலேயே ஷ்ஷ்ஷ்ஷ்... சொல்லி அடக்கிய குரலைத் தொடர்ந்து, அமைதியான சூழல். சென்னையில் சமீபகாலங்களில் பார்க்க நேர்ந்த படங்கள் எல்லாமே... ஏன் Water படத்தில் கூட அனாவசிய சத்தம் செய்து கொண்டிருந்த மக்களை நினைத்து ஏமாற்றமாயிருந்தது. நாம் இன்னும் நிறைய தூரம் போக வேண்டியிருக்கிறது!
ஜும்பா லாஹிரியின் நாவலை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருக்கிறது. இர்பான் கான், தபு கச்சிதமாக பாத்திரத்துடன் பொருந்திப் போகிறார்கள். அச்சுஅசலான கொல்கத்தா, அந்த மனுஷங்கள், 'ஏ' ந்னு இழுத்து பேசும் பேச்சு... தபு சொல்லும் போது ஒரிஜினல் பெங்காலி தோற்றுப் போகணும்! கொல்கத்தாவிற்கும் அமெரிக்காவுக்கும் மாறி மாறி பயணிக்கும் கதை... இது போல கலாச்சாரங்களுக்கிடையே நடக்கும் கதைகளை நிறைய பார்த்தாகிவிட்டதென்றாலும் இது கொல்கத்தா என்பதால் நெருக்கமாக உணர முடிந்தது.
பெரும்பாலான படங்களில் பார்க்கும் புத்தகம் வாசிப்பில் அதிக ஆர்வமுள்ள ஒரு கேரக்டர் இங்கேயும், அப்பாவாக. எத்தனை வருடங்கள் ஆனபோதும் வேர்களை விடாத, பெங்காலி ஜனங்களோடு அதிகம் புழங்கும் டிபிகல் அம்மா கேரக்டர், கலாச்சாரங்களுக்கு நடுவே திண்டாடும் பிள்ளைகள்... எழுபதுகளில் நடக்கும் கதையென்று சொல்வதால் நிறைய கேள்விகள் முடங்கிப் போகின்றன. Gogol என்ற பெயரைச் சுற்றி நிகழும் விஷயங்கள்... எல்லாமே உணர்வுபூர்வமாக.
மற்றபடி புதிதாக ஒன்றும் இல்லை. வலிய திணித்த ஆக்ராவைத் தவிர்த்தால், இன்னும் கொஞ்சம் என்று ஆர்வத்தைத் துண்டும் கொல்கத்தா, அதன் நிறம், கூச்சல், நெரிசல், சங்கீதம்... எல்லாமே. 'யதார்த்தமாய்' என்பதில் வரும் படுக்கை அறைக்காட்சிகள்... உறுத்தியதா என்றால், இல்லையென்றுதான் சொல்ல வேண்டும்.
மொத்தத்தில் படம் எனக்குப் பிடித்திருந்தது!

Wednesday, March 21, 2007

me n my weirdness

மொதல்ல இந்த weirdness பற்றி எழுதணுமான்னு ஒரு கேள்வி இருந்தது... நான் யார்.. எனக்கு பிடிச்சது என்ன... பிடிக்காதது என்ன... என் கிறுக்குத்தனங்கள் என்ன... இதெல்லாம் ஒரு நெருங்கின வட்டத்திற்கு மட்டும் தெரிந்த விஷயமா இருக்கணும்னு என்ற சிந்தனை இருந்தது. அப்புறம், இதில என்ன இருக்கு? நான் நான் என்று பேசறது எல்லாமே என்னோட ப்ளஸ் மட்டுமேவா? இந்த கிறுக்குத்தனங்களும் தானே? அதனால எழுதிட்டேன்! இப்படி ஒரு ஞானோதயம் கொடுத்த அலெக்ஸ்க்கு நன்றி.

1. எதுவாவது என்னை ரொம்ப பாதிக்கும் போது அதிலிருந்து வெளியே வர நான் செய்யும் முயற்சிகள் அந்த சூழ்நிலைக்கு கொஞ்சமும் பொருந்தாதாயிருக்கும்... உதாரணமா, எல்லோரும் சாப்பாடு தூக்கம் தொலைத்து சோகம் சுமக்கும் சூழ்நிலையில் நான் வயிறு முட்ட சாப்பிட்டு சுகமா தூங்கிடுவேன்!

2. கன்னா பின்னா தன்னம்பிக்கை, அதைவிட அதிக கன்னா பின்னா சிந்தனைகள்!

3. ரொம்ப அமைதியா டிப்ளமேடிக்கா வெளிப்பார்வைக்கு இருக்கும் எனக்கு எப்பவாவது மறை கழண்டால் போச்சு... சிரித்து தள்ளிடுவேன்... அந்த நேரத்தில் 'சிரி' ன்னு சொன்ன கூட நான் ஸ்டாப் சிரிப்புதான்... ஆச்சரியமா யாராவது பார்க்க ஆரம்பித்தால் இன்னும் அதிகமாக!

4. எல்லோரும் துணையோட, குடும்பத்தோட போகணும்னு நினைக்கிற இடங்களுக்கு தனியே போக விருப்பம்... காபி டே, சினிமா தியேட்டர், கோவில் ஏன் தொலைதூரப் பயணங்கள் கூட... கடைசிக்கு மட்டும் வீட்டு அய்யா இன்னும் அனுமதி கொடுக்கத் தயங்குகிறார்!

5. எதாவது ஒன்று வேண்டும் என்று ரொம்ப ஆசைப்பட்டு காத்துக் கொண்டேஏஏஏ இருந்து ஒரு கட்டத்தில் வேண்டாம் போ என்று முடிவு செய்த பின் மடியிலேயே வந்து விழுந்தாலும் 'நோ' தான்!

எனக்கு பிறகு யாரை அழைப்பது என்ற பெரிய குழப்பம் நீடித்ததால்... it is open to everybody who wish to continue...

Wednesday, March 07, 2007

கயிறு - மகளிர் தினத்திற்காக.

விபரம் தெரிந்த நாளாய்
உணர்ந்திருக்கும் கயிறு

கை கால் குரல் சிந்தனையென்று
நேரத்திற்கேற்ப நழுவி
இடம் மாறி இறுக்குமது

வெளிர் நிறத்தில் மெல்லியதொரு
நூலாய்க் கிடந்ததை
உரமேற்றி நிறமேற்றியதில்
அடர்ந்த சிகப்பில் இறுகி போனது
வாலிப நாட்களில்

தாயோடு படுக்கை பகிர்ந்தவன்
என்னோடு தாய்மடி பகிர்ந்தவன்
படுக்கை பகிர்பவன்
நண்பன் அவன் இவன்
எல்லோருக்குமுண்டு
ஒரு ஆண்கயிறு

அதிக தடிமனில்லாததாய்
அடர்ந்த நிறமேறாததாய்
இழுத்த இழுப்பிற்கெல்லாம்
இசைந்து கொடுப்பதாய்

உடலும் மனமும் தளர்ந்த
முதுகிழவியின் கயிற்றில்
உரமோ நிறமோ ஏற்றுவாரில்லை

பட்டத்தின் கயிறாய்
பாதுகாப்புக்கென்றாய்
நீளமாய் நூறு கதைகள்
திரும்பத் திரும்பச் சொன்னதில்
பறவைகள் பட்டங்களாகவே
வரித்துக் கொண்டன

நீள அகலமாய் பரந்த வானமும்
தேடி தெரிய சிறகுகளிருக்கும் பிரஞ்சையற்று
கயிறு கட்டிய கால்களோடு
பத்திரமான(!) வானத்தில்

கயிற்றில் நுனி யாரிடமென்றறியாமல்
எப்போது வேண்டுமானாலும்
முடக்க படலாமென்ற எச்சரிக்கையுடனும்...

அறுக்க முடியாத கயிறொன்றில்லை
பறக்க தொடங்கினால் எல்லையுமில்லை...

Thursday, February 22, 2007

சீஸன் குறிப்புகள் - கடைசி.

ஒரு பட்டியல்:

சின்ன பரபரப்போடு கடைக்குப் போய் புத்தகம் வாங்கி அங்கேயே நின்று அச்சில் வந்திருக்கும் எழுத்தை முதல் முதலாக வாசிக்கும் சந்தோஷம்... அது சொல்லியும் கேட்டுமே ரொம்ப பெரிய விஷயம் போல ஆகிப் போனதால் அதை கர்ம சிரத்தையாக செய்தேன்... அந்த ப்ளுஸ்டார் பஸ் ஸ்டாப் கடை... அதை எப்போது கடந்தாலும் அந்த ஞாபகம் வருகிறது. சீக்கிரம் மறக்க வேண்டும்!

ரசனை தொழிலாகக் கூடாது! இது கற்றுக் கொண்ட பாடம். விட்டேத்தியா ரசிக்க விடாம... இதைக் குறிச்சுக்கணுமோ அதைக் கவனிக்கணுமோ... சதா ஒரு குடைச்சல்.

அடங்கு அடங்குன்னு அடக்கி வைத்திருந்த கொம்பை செல்லமாக வளர விட ஒரு சந்தர்ப்பம். ரிப்போர்ட்டருக்கான முதல் குணாதிசயம் எங்கேயும் யார்கிட்டயும் எதுக்கும் தயங்காம தடாலடியா இருக்கச் சொன்ன குங்குமம் சப் எடிட்டர் ஜி.கௌதம்.

எந்த கச்சேரியை கவர் பண்ண வேண்டும் என்ற சுதந்திரத்தை எனக்கே தந்து விட்ட கௌதம், மற்றும் அவருக்கு பின் பொறுப்பேற்ற திரு. வள்ளிதாசன். யார் யாரையெல்லாம் கேட்க வேண்டும் பார்க்க வேண்டும் என்று நினைத்தேனோ அவர்களை ரிப்போர்ட்டர் என்ற ஹோதாவோடு சந்திக்க முடிந்தது. ரிப்போர்ட்டர்... அந்த வார்த்தைக்கு இருக்கும் வெயிட்டேஜ்... அதை முழுக்க அனுபவித்தேன்.

கர்நாடக சங்கீதம்... மிரட்டியது. தியானம் பழகுகிறவர்கள் அதிலிருந்து நழுவிப்போவது போல எப்போது கவனம் மாறுகிறது என்பது தெரியாமல் ஏதோ யோசனைக்குப் போய் திரும்பி வந்ததை நிறைய தடவை வேடிக்கை பார்த்தேன்.

வயலின் மேல் தீராத காதல் வந்தது. கலா ராம்நாத் தொடங்கி யார் வாசித்தாலும் பிடித்திருந்தது.

கவர் பண்ணாத ஒரு சஞ்சய் சுப்ரமணியம் கச்சேரியில் அந்த குரல் இழுப்பதை உணர முடிந்தது. அந்த அளவுக்கு எண்ணம் குவிவதை தாங்க முடியாமல் பாதி கச்சேரிக்கு மேல் முகத்தைத் வேறு பக்கம் திருப்பிக் கொண்டு உட்கார்ந்தது கிறுக்குத்தனம்!

ராகங்கள் அதன் ஆழம், அளவு இதெல்லாம் தெரிந்து கொண்டு ரசிக்கும் உங்கள் ரசனைக்கு என் ரசனை சளைத்ததில்லை என்று நண்பர் சக்கரபாணியோடான விவாதம்... என் முன்னால நீ பூஜ்யம்மா... வேறு சமயமாயிருந்தால் இதை வேற யாராவது சொல்லியிருந்தால் என்ன கோபம் வந்திருக்குமோ... இப்பவும் சொல்கிறேன் என் ரசனை சளைத்ததில்லை! எதுவுமே புரியாமல் கேட்கும் போதும் நான் விரும்பும் சந்தோஷம் எனக்கு வாய்க்கிறது... அது போதும்!

மூன்று மணி நேர கச்சேரி... முடிந்ததும் வீடு, சமையல்... அத்தனை சீக்கிரம் ஒரு மனநிலையிலிருந்து இன்னொன்றுக்கு மாறும் போது வெறுப்பாக இருந்தது. கச்சேரி முடிந்து கொஞ்சம் நேரம் தனிமை வாய்த்திருக்கக் கூடாதா?

பார்த்தவரை கேட்டவரை போதும் என்றிருந்தது. அதற்கு மேல் திகட்டியிருக்கும்.

ஏறக்குறைய சீஸன் முடிந்த போது ம்யூஸிக் அகடமியின் ஒரு வார நாட்டிய விழா... மறுபடியும் அதே சீஸன் டிக்கெட்... முன் வரிசை பந்தா... ஆடுபவர்களின் பெயர்கள் தந்த டெம்ப்டேஷன் எல்லாம் நேரப் பற்றாக்குறையால் தவிர்க்க வேண்டியதாயிற்று. அடுத்த வருஷம் 'கண்டிப்பாக' லிஸ்டில் அடிக்கோடிட்டு சிவப்பு மையில் எழுதி வைத்தாகிவிட்டது.

கேட்க முடியாமல் தவற விட்டவர்கள்... சிக்கில் குருசரண், ரஞ்சனி - காயத்ரி.

சந்தர்ப்பம் கிடைத்தும் கேட்காமல் விட்ட சில பெரிய தலைகளை ஏன் தவிர்த்தேன் என்ற கேள்விக்கு பதில் தேடிக் கொண்டிருக்கிறேன்!

Monday, February 19, 2007

சீஸன் குறிப்புகள் - 3

நந்தனார் சரித்திரம் - விஷாகா ஹரி - கார்த்திக் பைன் ஆர்ட்ஸ் வழங்கியது. ஆத்துக்காரருக்கு காபி கலந்து கொடுத்த கையோடு காலட்சேப நோட்டுப் புத்தகத்தைத் தூக்கிக் கொண்டு வந்து விட்டாரோ என்று ஆச்சர்யப்பட வைக்கும் எளிமை... அது விஷாகா ஹரி. எளிமை வெறும் தோற்றத்தில் மட்டுமே. அம்மணி உருவாக்கி வைத்திருக்கும் இமேஜ் காலட்சேபம் தொடங்குவதற்கு முன்பே காதில் விழுந்தது. சின்ன குழந்தைக்கும் புரிவது போல சொல்லும் திறமை பரவலாகப் பேசப்பட்டது. கோபால கிருஷ்ண பாரதியால் தமிழில் சுமார் இருநூறு வருடங்களுக்கு முன் எழுதப்பட்ட நந்தனார் சரித்திரத்தைச் சொன்ன காலட்சேபத்தில் கச்சேரி விகிதாச்சாரம் அதிகம். சொன்ன குரல் தேன்... கொஞ்சம் காத்திரமான தேன்.

நந்தனார் சரித்திரத்தை கண் முன்னே ஓட விட்டது குரலா, மொழி எளிமையா அல்லது அவரால் நிறைக்கப்பட்ட உணர்வா என்றால்... எல்லாம் தான். பாடுவதிலிருந்து கதை சொல்லத் தொடங்குவதும், கதையிலிருந்து பாடத் தொடங்குவதுமாய் இயல்பான ஃப்ளோ. ஆரம்பத்தில் கொஞ்சம் மெதுவாகப் போகிறதோ என்று தோன்றி பின்பாதியில் வேகமெடுத்தது. வழக்கமான தெலுங்கு கீர்த்தனைகள் கேட்கும் காதுகளுக்கு தமிழ் கீர்த்தனைகள் கேட்பதன் இதம் புரிந்தது. சுத்தமான உச்சரிப்பு. ஒன்றிரண்டு முறை ஒரே விஷயத்தை ஒரே வார்த்தைகளில் குறைந்த இடைவெளியில் இரண்டாவது முறை கேட்டது கொஞ்சம் நிரடியது. நர்த்தனமாடும் நடராஜர் என்று அரங்கில் மாட்டியிருக்கும் படத்தைக் கண்ணால் காட்டிப் பேச அத்தனை கூட்டமும் திரும்பி அந்த நடராஜரைப் பார்த்தது ரசிகர்கள் குறையா, காலட்சேபம் செய்பவர் குறையா? வர்ணிப்பில் அவரவர் மனதில் நடராஜரின் பிம்பத்தை உருவாக்க வேண்டாமா?

நிகழ்ச்சி முடிந்து மனநிறைவோடு செல்பவர்களைத்தான் வழக்கமாக பார்க்க முடியும்... இங்கே உரிமையோடு முத்தமிட்டு வாழ்த்தும் திருஷ்டி கழிக்கும் ரசிகர்களைப் பார்க்க முடிந்தது. வழக்கமான கச்சேரிகளுக்கு நடுவில் காலட்சேபம் என்று 'மாத்தி யோசி'த்த விஷாகா ஹரிக்கு வாழ்த்துகள்.

வெள்ளிக் கிழமை மாலை ஏழரை மணிக்கு பாரத் கலாச்சாரில் ஷோபனா குழுவினரின் நாட்டியம். ஷோபனா குழுவை ஒரு வார்த்தையில் வர்ணிப்பது என்றால்... 'நளினம்'. நடனமாடுபவர்களை ஒரு வார்த்தையில் சொல்ல வேண்டுமென்றால்... 'மயில்கள்'. உறுத்தாத அலங்காரம். தீர்க்கமான முத்திரைகள். ஷோபனாவின் ஸோலோவில் அவருடைய பாணியும் அது எப்படி அவரது மாணவிகளில் பிரதிபலிக்கிறது என்பதும் துல்லியமாகத் தெரிகிறது. கலைடாஸ்கோப் போல் மாறும் முகபாவங்கள். நாக்கை ஒருபக்கம் அதக்கி குறும்புத்தனம் காட்டுவதில் மயங்காதவர்கள் இருந்திருக்க முடியாது. 'அடங்கா கங்கையும் அடங்கும் உன் சடையில்' பதத்திற்கான அபிநயம் க்ளாஸ். ஒரு கண்ணை மூடி லேசாகப் பற்களைக் கடித்துக் காட்டும் குரோதத்திலும் நளினம் காட்டியது கற்பனைக்கு அப்பாற்பட்டது. வள்ளிக் குறத்தியும், கண்ணப்பனார் குறிப்பும்... எதைச் சொல்ல எதைவிட?!

குழுவினரோடு இணைந்து வழங்கிய கிருஷ்ண கோபியர் கொண்டாட்டம் அருமையான முத்தாய்ப்பு. கிருஷ்ணராக நடனமாடிய சிறுமிக்கு தனிப்பட்ட பாராட்டுகள். செல்லக் குறும்பும் சேட்டைகளுமாய்...! ஒரு குழுவாக இணைந்து நிகழ்த்தும் ஒரு நிகழ்ச்சிக்கு எவ்வளவு ஒருங்கிசைவு தேவை என்பது அழகாகத் தெரிந்தது. சுருக்கமாக, ஒரு விஷுவல் ட்ரீட்.... ஒரு மாலையை நிறைவு செய்ய... ஒரு நாளைப் பூர்த்தியாக்க... ஏகாந்தத்தில் நினைத்து அசைபோட.

Wednesday, February 07, 2007

சீஸன் குறிப்புகள் - 2

செவ்வாய் கிழமை மாலை பாரத் கலாச்சார்- ல் ஓ.எஸ். அருண் கச்சேரி. முல்லைவாசல் ஜி . சந்திரமௌளலி வயலின். ஜே. வைத்தியநாதன் மிருதங்கம். ஸ்ரீரங்கம் கண்ணன் மோர்சிங்.

நல்ல உயரம். ஏதோ ஸ்டூல் போட்டு உட்கார்ந்திருக்கிறாரோ என்று தோன்ற வைக்கும் அளவுக்கு. அனுபவித்துப் பாடிய 'இந்த்த தாமஸமா?' வும் 'அகிலாண்டேஸ்வரி'யை துணைக்கழைத்தும் ரசிகர்களைக் கட்டிப் போட செய்த முயற்சிகள். நான்கு மணி கச்சேரிக்கு பெரிய கூட்டம் எதிர்பார்க்க முடியாதென்றாலும் இருந்தவர்களாவது நல்ல ரசிகர்களாக இருந்திருக்கலாம்! ஐந்தாவது வரிசையில் ஆழ்ந்த தூக்கத்தில் ஒரு ரசிகை(?!), வாசலில் விநியோகிக்கப்பட்ட செய்திக்குறிப்புக்காக ஓவ்வொருவராய் எழுந்து போவதும், வந்து வாசிப்பதுமாயிருக்க... ஸ்வர சஞ்சாரத்தில் ம நி தா... ம த ம நி தா... நி தா நி... ச தா நி... ( மனிதா... மதமனிதா... நிதானி... சதா நீ) என்றென்னால்லாம் ஜாடையாகச் சொன்னதெல்லாம் கேட்காத ரசிகர்களுக்கு கச்சேரிக்கு நடுவில் வேண்டுகோள் வைக்க வேண்டியதாயிற்று. திருமதி ஒய்.ஜி.பி மன்னிப்பு கேட்டு பஜன் பாடச் சொல்லிக் கேட்டுக் கொண்டதும் ஆசிரியர் வந்து ஒரு சத்தம் போட்டதும் சொன்ன பேச்சு கேட்கும் பிள்ளைகள் போல ரசிகர்களில் கொஞ்சம் மாற்றம். 'யமுனை நதியே கண்ணனைக் கண்டாயோ?', 'ஆஜ் ஆயோ ஷ்யாம் மோஹனா'... இரண்டும் மெய்மறக்க வைத்தது.

நிகழ்ச்சி முடிந்து ரிலாக்ஸாக வெளியே வந்த அருணுக்கான கேள்வி... 'பாடுவது கச்சேரிக்காவா? ரசிகர்களுக்காகவா?' பதில் சொல்வதை சாமர்த்தியமாக தவிர்த்து ' நீங்களே சொல்லுங்கள் எப்படி இருக்க வேண்டும் என்று?' என்று எதிர்கேள்வி கேட்பதாக நினைத்துக் கொண்டாலும் ஆழ்ந்து ரசிக்காத ரசிகர்களுக்கு பாட நேரும் அவஸ்தை அவரது வார்த்தைகளில் புரிந்தது.

ஏழரை மணிக்கு அதே அரங்கில் மதுவந்தி அருண் வழங்கிய நாட்டியம். மறைந்த சாவித்திரி கணேசனுக்கான நினைவஞ்சலி. மெல்ல நிறமும் களையும் மாறும் அரங்கத்தை காண சுவையாயிருந்தது. மத்யான கச்சேரிக்கான எளிமையான அரங்கம் மாறி பட்டும் பளபளப்புமாக மாறிக் கொண்டிருந்தது. பத்மா சுப்ரமணியம், வைஜெயந்திமாலா பாலி, சௌகார் ஜானகி, கமலா செல்வராஜ்... நிகழ்ச்சிக்கு வந்திருந்த பிரபலங்களில் சிலர். 'கர்த்தவ்யம்' என்ற கருப்பொருள் கொண்ட நாட்டியத்தில் சீதையாகவும், ஊர்மிளையாகவும், ராமனாகவும், கிருஷ்ணனாகவும் மதுவந்தி. எளிய உடைமாற்றத்தில் வித்தியாசம் காட்டியது சிறப்பு. வாலியாகவும் சுக்ரீவனாகவும் வந்த இளைஞர்களின் வேகமும் ஈடுபாடும் குறிப்பிடாமல் போக முடியாது.

மதுவந்தியின் சற்றே பருமனான உடம்பு கொஞ்சம் உறுத்தல். இத்தனை கேரக்டகளாக மாறும் போது அடிப்படையாக எல்லா பாத்திரங்களுக்கு இருப்பதாக நாம் உணர்ந்திருக்கும் சாத்வீக பாவம் மிஸ்ஸிங்.

சத்தமில்லாமல் வந்தமர்ந்த பானுப்ரியாவைப் பார்த்த போது ஒரு கலைஞராக இவர் எப்படி ரசிப்பார் என்ற கேள்வி வந்தது. 'உங்களை அந்த முக்கிய பாத்திரத்தில் வைக்காமல் வெறும் ரசிகராக உங்களால் ரசிக்க முடியுமா?' என்ற கேள்விக்கு ஒரு சின்ன யோசனைக்குப் பிறகு, 'இப்போ அப்படித்தான் ரசிக்கிறேன். வீட்டுக்குப் போய் நிதானமாக யோசிக்கும்போது அப்படித் தோணலாம்.' என்றார்.

பத்து நிமிடத்திற்கொருமுறை செல்பேசியையை ஒளிர்வித்து அதிலிருந்த மகளின் புகைப்படத்தை பார்த்துப் பார்த்து மூடும் பானுப்ரியாவிற்கு வீட்டுக்கு போன பிறகு இதையெல்லாம் யோசிக்க நேரம் இருக்குமா?!

27 ம் தேதி மாலை ம்யூஸிக் அகடமியின் நான்கு மணி பாம்பே ஜெயஸ்ரீக்காக. மைசூர் ஸ்ரீகாந்த் வயலின். பூங்குளம் சுப்ரமணியம் மிருதங்கம். திருவனந்தபுரம் ராஜகோபால் கஞ்சிரா. நான்கு மணிவாக்கில் சாதாரணமாக இருந்த கூட்டம் அரைமணியில் திருவிழா கூட்டமானது. திரை உயரும் போது மேடையிலோ அரங்கிலோ எங்கும் இடமில்லை.

சிகப்புப் புடவை, மஞ்சள் ஜாக்கெட்டில் எளிய அலங்காரத்துடன் ஜெயஸ்ரீ. ஆற்றோட்டம் போன்ற குரல். அதிகம் வேகம் கொள்ளாமல் அமைதியாக ஓடுகிறது. இதமாக கால்களை நனைத்துக் கொண்டு. வெளியே வர மனசே வருவதில்லை. ஆஹிரியையும் பைரவியையும் ரசித்துப் பாடினார். வயலின் அழகாக ஜோடி சேர்ந்து கொண்டது. ராகம் தானம் பல்லவிக்குப் பிறகு வெளியேறி விட்ட சுத்த சங்கீதக் காதுகள் 'வண்ணச்சிறு தொட்டில்' இட்டு கண்ணனுக்கு பாடிய தாலாட்டை தவறவிட்டார்கள். தாலாட்டுக் கேட்டு கண்ணன் தூங்கினானோ இல்லையோ கேட்டவர்கள் கரைந்து போனார்கள். நிகழ்ச்சி முடிந்த போது எழுந்து நின்று கைத்தட்டிய கூட்டத்தின் திருப்தியை உணர முடிந்தது.

Tuesday, February 06, 2007

சீஸன் குறிப்புகள் - 1

ம்யூஸிக் அகடமியில் என்ன கிடைக்கும்? நல்ல சங்கீதம்? செவியோடு சேர்ந்து நாவு கம் வயிற்றுக்கும் விருந்து? நண்பர் கூட கிடைப்பார் தெரியுமா? கொஞ்சம் கூடுதல் அதிர்ஷ்டம் இருந்தால், எழுபது சொச்சம் வயதின் பெரும்பகுதியை சங்கீதம் ரசிக்கவே கழித்த, வித்வான்களுக்கும் தனக்கும் உள்ள தூரத்தை விஷய ஞானத்தில் கடக்கக் கூடிய, சுவாரசியமான நினைவுகளுக்குச் சொந்தக்கார... எக்ஸட்ரா எக்ஸட்ராகளோடு கூடிய நண்பரும் கூடக் கிடைப்பார்!

ஆச்சாரமாக, பக்தியோடு தொடங்கும் டிசம்பர் கச்சேரிகளுக்கு முன்னால் கொஞ்சம் ஜனரஞ்சகமாகக் கலக்கிய ஹிந்து ம்யூஸிக் பெஸ்ட்-ல் ஸ்டார் ஹோட்டல் பு·பேக்கு நடுவில் நானும் இருக்கேன்னு உரத்துச் சொல்லும் எண்ணெய் கத்தரிக்காய் குழம்பும் தயிர்சாதமும் போல கஸல்களுக்கும் மோஸார்ட்க்கும் நடுவில் கர்நாடக சங்கீதம் கலக்கிவிட்டுப் போன நாட்களில் அறிமுகமானார். இலக்கணவிதிகளுக்கு கட்டுப்பட்ட மரபுக் கவிதை, எந்த விதிகளாலும் பிணைக்கப்படாத புதுக்கவிதை... இரண்டு துருவங்களையும் இணைக்கும் அடிநாதம் கவிதை. இப்படி இரண்டு பேர் கச்சேரி கேட்கப் போனால் எப்படி இருக்கும்?!

டிசம்பர் 12-ம் தேதி ராமகிருஷ்ணா மிஷன் பள்ளி அரங்கத்தில் முத்ராவின் 12-வது பைன் ஆர்ட்ஸ் பெஸ்டிவல் வழங்கிய சஞ்சய் சுப்ரமணியம் கச்சேரி. வயலின் எஸ்.வரதராஜன், மிருதங்கம் குருவாயூர் துரை, கடம் திருப்புணித்துர ராதாகிருஷ்ணன். வாசலில் டென்ஷனாக முத்ரா பாஸ்கர், அவரை காம்பன்ஸேட் செய்ய வாயெல்லாம் வெள்ளையாய் ராதா பாஸ்கர். ஓரளவு பெரிய ஹாலில் ஏறக்குறைய ஐநூறு ஜோடி காதுகள். ஆர்ப்பாட்டமில்லாத ரசிகர் கூட்டம். வேஷ்டியும் வெள்ளைச் சட்டையும் சாயமேற்றிய கேசமுமாய், கர்நாடக சங்கீத விதவானுக்கான பிரத்யேக அடையாளங்கள் எதுவும் இல்லாமல் கச்சேரி முடித்து வேஷ்டியைக் களைந்து ஜீன்ஸ¤க்கு மாறினால் சத்யம் தியேட்டர் வாசல் கும்பலில் வித்தியாசமில்லாமல் கலந்துவிடக் கூடியவராய்... சஞ்சய் சுப்ரமணியம்.

சரியாக ஆறேகாலுக்கு தொடங்கிய கச்சேரி ஆரம்பம் முதலே ஜில்லென்ற வேகம் தான். வயலினும் வாய்ப்பாட்டும் இரண்டு சின்ன பசங்களைப் போல கைகோர்த்து உல்லாச ஓட்டம். இணையாயும், கொஞ்சம் நீ முந்தியா நான் முந்தியா என்றும். குரல் சொன்னபடி கேட்கும் போது சந்தோஷம் முகத்தில் தெரிகிறது. அந்த சந்தோஷத்தில் இன்னும் துள்ளலாய். முகமோ, அதன் பாவனையோ பற்றிக் கொஞ்சமும் கவலையில்லாமல் தளையில்லாத வேகம்.

சஞ்சயிடம் கேட்க குறித்து வைத்திருந்த கேள்வி... சபாக்களில் வாசிக்கும் போது எக்ஸ்டஸிக்கல் பாயிண்ட் ( ஒரு கணத்தில் எல்லாம் மறந்து போகும் நிலை) தொடுவதுண்டா? என்று. அவர் தொட்டாரா இல்லையா என்பது தெரிவதற்கு முன்பே மத்யமாவதியில் என்னைத் தொட வைத்தார். அதற்குப் பிறகு கொஞ்ச நேரத்திற்கு சங்கீதமென்ன எதுவுமே நினைவிருக்கவில்லை. 'கந்தனடி...' பாடி மறுபடியும் இழுத்து வந்தார். பாரதியின் 'திக்குத் தெரியாத காட்டில்...' க்கு ஒரு சபாஷ்.

'நல்லா பாடறார். பெரிய மனசு. முடிச்சுக்கட்டுமா பாஸ்கர்-ன்னு கேட்டுட்டு முடிச்சார் பாத்தியா? மத்யமாவதிலதான் கொஞ்சம் சுருதி பேதம்' - இது மரபுக்கவிதையின் கமெண்ட்.கடைசியில் அந்தக் கேள்வியை கேட்டு வைக்க நேரம் வாய்த்து, கேட்டதில்... ' என்ன? இன்னொரு முறை கேளுங்கள் என்று கேட்டு விட்டு... ', 'இல்லை. அப்படி எந்த இடத்தையும் தொடுவதில்லை. தனிமையில் பாடும் போது கூட'... ஆச்சரியம் தான்! கேள்வி சரியாக புரிந்து கொள்ளப் படவில்லையோ என்ற சந்தேகம் மட்டும் இன்னும் மிச்சம் இருக்கிறது!

மறுநாள் அதே இடத்தில் சுதா ரகுநாதன் நிகழ்ச்சிக்கு முன்னால் ராம்ஜியின் இசை மழலைகள் சத்யநாராயணா - கீ போர்ட், விக்னேஷ் - வாய்ப்பாட்டு... நல்லி குப்புசாமி ஏ.நடராஜன் ஜோடி தலைமையில் சுதாவுடன் சேர்ந்து போகோ சேனல் பரிசு பெற்றதற்கு ஒரு சிறிய பாராட்டு விழா. பெரியவர்கள் ஒரு பக்கம் பாராட்டிக் கொண்டிருக்க வாண்டு வித்வான்கள் சிறுபிள்ளைச் சிரிப்புகளுடன்.

மாறி மாறிப் பொழிந்த பாராட்டு மழை ஓய்ந்ததும் கச்சேரி தொடங்கியது. எம். ஆர். கோபிநாத் வயலின். திருவாரூர் வைத்தியநாதன் மிருதங்கம். ராமன் மோர்சிங். நீலப்புடவையும் தோதான ஆபரணங்களுமாய் சுதா. பெண் கலைஞர்களுக்கு பாடவோ வாசிக்கவோ தயார் செய்வதோடு இந்த அலங்கார மெனக்கெடல்கள் சந்தோஷமா? சுமையா? எனக்கென்னவோ ஒரு கட்டத்திற்கு மேல் சுமையாகத்தான் போய்விடும் என்று தோன்றுகிறது.

பைரவியில் வர்ணம் பாடி தொடங்கிய கச்சேரியில், குரல் ராகங்களின் ஆழங்களை அநாயசமாகத் தொட்டு மேதாவிலாசம் சொன்னது. கோவில் மணி ஓசை எவ்வளவு நேரம் கேட்க முடியும்? சுதாவின் குரலில் மூன்று மணிநேரம் சலிக்காமல் கேட்கலாம். சுதாவின் லதாங்கியும் ஆபேரியும் மரபுக்கவிதையை முழுசாக உள்ளே இழுத்துக் கொண்டது. அங்கே இங்கே அசையாமல் கச்சேரியில் ஆழ்ந்து போனது.வெளியே வரும் போது, ' ஆழ்ந்த இசை ஞானமுள்ள என் போன்ற ரசிகர்களை சபாக்கள் சரியாகப் புரிந்து நடத்துவதில்லை' என்ற வருத்தத்தை சொல்லி விட்டுப் போனது.

மொத்தத்தில் கர்மசிரத்தையான கச்சேரி.

Saturday, February 03, 2007

Babel & Parzania


ரசனைகள், அவற்றின் முனைப்பு இதெல்லாமே சந்தர்ப்பம் சூழ்நிலைகளால் மழுங்கிப் போய் விடுவதை இவ்வளவு துல்லியமாக உணரப் போகிறேன் என்று ஒரு வருஷம் முன்னால் நி¨னத்தும் பார்க்கவில்லை. ஐந்து நிமிடப் பயணத்தில் INOX ம் அது தடம் காட்டியதில் தொடர்ந்த பெங்காலிப் படங்களும் தந்த நிறைவெல்லாம் சென்னை வந்த பிறகு சத்யம் ரொம்ப தூரம், வேலைக்காரம்மா வேலை முடிக்கும் நேரம், பசங்க வீட்டுக்கு வரும் நேரம் போன்ற சில்லரை காரணங்களால் இழப்பதே தெரியாமல் இழந்தது பெரிய பர்சனல் சோகம். ஆரம்ப கால சென்னை வாழ்க்கையில் தேடிப் போன சத்யம் Lights On நிகழ்ச்சிகளும் சனி, ஞாயிறு காலை ஒன்பது மணி படங்களும் மெல்ல மெல்ல இல்லாமலே போனது உரைத்த ஒரு மாலை Parzania என்று ரொம்ப வேகமாகப் புறப்பட வைத்து இரண்டாவது வரிசை ஓக்கேவா என்று கேட்க, மறுத்ததால் வாய்த்தது Babel. ஒரு விஷயம்... அதைத் தெ¡டர்ந்து நிகழும் வெவ்வேறு விஷயங்கள்... அதை கச்சிதமாக இணைத்திருப்பது... கொஞ்சம் கூட தொய்வில்லாமல்... செதுக்கி வைத்த பாத்திரங்கள், அது காட்டும் முதிர்ச்சி, இப்படித்த¡ன் இருக்கப் போகிறது என்று எதிர்பார்த்த இறுதிக் காட்சி, முகத்தில் அறையாவிட்டாலும் யோசிக்க வைத்ததுமாய்... திரும்பி வரும் வழியெல்லாம் தொடர்ந்த படம் பற்றிய விவாதம்... நிச்சயமில்லாதது தான் வாழ்க்கை என்றால் எப்படி என்ற கேள்வியும், அது தானே அதன் சுவாரசியம் என்ற பதிலுமாய்... மகளும் நானும் அன்றைக்கு படுக்கப் போகும் போது கனமாக உணர்ந்தோம்.

ஆனாலும் Parzania வை விட மனதில்லாமல் அடுத்த நாள் படையெடுப்பில் வழக்கம் போல சத்யம்தியேட்டரின் ட்வின் சீட் இந்த முறையும் மகளுக்கு எனக்கும் வாய்த்தது. போயும் போயும் நாம ரெண்டு பேருமா இப்படி ஒட்டிக்கிட்டு படம் பார்க்கணும்! என்ற வழக்கமான செல்லச் சலிப்பொடு பாப்கார்னையெல்லாம் படம் தொடங்குவதற்கு முன்னாலே முடித்து விட்டு பார்க்கத் தயாரானது ம்ம்ம்... வலிய வருத்திக் கொண்ட இறுக்கம் போல என்று கூடச் சொல்லலாம். படத்தின் இந்த நிகழ்வு நடந்து முடிந்த போது தான் சூரத்திற்கு குடிபெயர்ந்திருந்தோம். அவ்வளவு பக்கத்தில் இத்தனை நடந்திருந்தும், ஊடகச் செய்திகளைக் காட்டிலும் கண் பார்த்த செய்திகள் சட்டென்று பரவும் சாத்தியமிருந்த போதும் அமைதியாயிருந்த அந்த நகரம் பெரிய ஆச்சர்யம்.

அந்த கலவரங்களின் போது குழந்தையை தவறவிட்ட ஒரு குடும்பத்தின் உண்மைக் கதை. சின்னச் சின்ன மாற்றங்கள் செய்து ஒரு கதை போன்ற தோற்றத்தில் பதியப் பட்ட நிஜம். முழு தியேட்டரும் உறைந்து போய்க் கிடந்தது. கதை நாயகன் Parzan னின் கற்பனையில் உருவாக்கி வைத்திருந்த, அவனுக்கும் அவன் தங்கைக்குமான Parzania என்ற உலகம், அதன் சந்தே¡ஷங்கள்... சாக்லெட் வீடுகளும் ஐஸ்க்ரீம் மலைகளும்... ஒரே நாளில் கலைந்து போவதும்.... தேடல்களும் தோல்வியும்...

யார் யார் எப்படி எப்படி நடித்தார்கள் என்று எழுதும் போது அது வெறும் படமாக பதிந்துவிடக் கூடாது என்பதால் இது மட்டுமே போதுமென்று தோன்றுகிறது. வழக்கம் போல!

Friday, February 02, 2007

சொல்லாமல் விட்டவை

கொஞ்ச நாளாக செய்ய வேண்டும் என்று நினைப்பதை செய்ய உட்காரவே ரொம்ப சமயம் எடுப்பதற்கு காரணம் என்ன என்று யோசித்துக் கொண்டேயிருக்கிறேன்! சென்ற முறை ஹிந்து ம்யூஸிக் ·பெஸ்ட் எழுதவும் அப்படித்தான் அநியாயத்திற்கு காலம் தாழ்த்தியிருந்தேன். ஆனாலும் அதை செய்யாமல் போயிருந்தால் இப்போது இதையும் எழுத வேண்டி வந்திருக்காது. இந்த இரண்டு மாதத்தின் அதிசுவாரசிய நிகழ்வுகள் என்னுடைய வாழ்க்கையில் இல்லாமல் போயிருந்திருக்கும்! அந்தப் பதிவோ அல்லது வெறும் தகவலோ மதி மூலமாக பத்திரிகை அ(ந)ன்பர் ஒருவரின் பார்வைக்குப் போய், அவருடைய மெயில் முகவரியைக் கையில் வைத்துக் கொண்டு நாலு நாள் முழித்துக் கொண்டிருந்தேன். முழித்ததற்கு காரணம், அந்த ம்யூஸிக் ·பெஸ்ட் சமயம் ஒரு நாளைப் போல தினமும் மாலையானால் புறப்பட்டும் போவதும், ராத்திரி பத்தரைக்கு மேல் வீடு வருவதும், இன்னைக்கு இவரைப் பார்த்தேன் அவரைப் பார்த்தேன் என்று கதை சொல்வதும், அவசர சமையலில் நாளை ஓட்டிக் கொண்டிருந்ததும், இதோ இன்னைக்கு... இல்ல இல்ல நாளைக்கு என்று என் மக்களின் பொறுமை வெடித்து விடப் போகிறது என்று அஞ்சியதும், நல்லவேளை அப்படியெதுவும் நடந்து விடாமல் முடிந்ததே பெரிய விஷயமாய் ஆசுவாசப் பட்டதனால்.... மறுபடியும் இது அவசியமா என்று தான் அந்த முழி. ஒரு சுபமாலையில் பிற்பாடு நண்பராகிப் போன அந்த அன்பருக்கு ஒரு மெயில் தட்டிப் போட அடுத்த நிமிஷம்(சத்தியமாய்) செல்பேசி அடித்தது பெரிய ஆச்சர்யம்.

அடுத்த நாள் போனதும் பேசியதும் எல்லாம் முடிந்து அழைப்பிதழ்களை எடுத்துக் கொடுத்து அவருடைய விசிட்டிங் கார்ட் எல்லாம் கொடுத்து கடைசியில் கேட்டது, 'உங்களுக்கு சங்கீதம் தெரியுமா?' என்பது! அவர் என்னை வரச் சொல்லியிருந்தது இந்த வருட சங்கீத சீஸனை கவர் செய்வதற்காக. எனக்கென்னவோ என் ரசனை மேல் ரொம்ப நம்பிக்கை. அது மட்டும் பே¡துமானதாய் தான் தோன்றியிருந்தது. ஆனாலும் தயங்கிய நண்பருக்கு சமாதானம் செய்ய தைரியம் வந்ததே திரு. சக்கரபாணி ஜிந்தாபாத் என்ற நம்பிக்கைதான். அவரோடு சேர்ந்து செய்து விட முடியும் என்ற ஆணித்தரமான யோசனையோடு வெளியெ வந்து முதல் தொலைபேசி அடித்தது அவருக்குத்தான். கொஞ்சம் நக்கல் கேலியெல்லாம் செய்தாலும் வருகிறேன் என்று ஒத்துக் கொண்டார்.

இரண்டு நாள் அவகாசம் கொடுத்து மூன்றாவது நாள் முதல் ரிப்போர்ட் கொடுத்து விடச் சொல்லியிருந்தார்கள். இன்னாரைக் கவர் செய், இந்த கச்சேரி வேணும் என்றெல்லாம் பத்திரிகையிலிருந்து கட்டாயப் படுத்தவில்லையாதலால் இரண்டு பேரும் பேசி ஏகமனதாய் முடிவு செய்தோம். யார் தெரியுமா? சஞ்சய் சுப்ரமணியம். அப்போது தான் விகடனில் அவரைப் பற்றிப் படித்திருந்தேன். போகப் போகின்ற சபாவிற்கு முன்னாலயே தகவல் போய் விட்டதால் எனக்காக பாஸ் காத்துக் கொண்டிருந்தது. ரொம்ப இளமையா, ஸ்மார்ட்டா ஒரு வித்வான் தோரணையெதுவும் இல்லாத....

இதுவரை எழுதி கிடப்பில் போட்டும் ஒரு பதினைந்து நாளாகிவிட்டது. உள்ளேயிருந்து விரட்டும் சில கேள்விகர்த்தா*க்களும் உறுத்தல்களும் இல்லாமல் இருந்திருந்தால் காணாமல் போயிருக்க வேண்டிய இது மறுபடியும் உயிர்பெறுகிறது! ஆனாலும் அந்த அளவு விவரமாக எழுதும் பொறுமை இல்லாமல் போனதால் பத்திரிகைக்கு அனுப்பிய, கத்தரி வெட்டு வலியறியாத ஒரிஜினல் வர்ஷன்களை ஒவ்வொன்றாய் போட உத்தேசம்.

* ம்யூஸிக் பெஸ்ட் பதிவில் விஸ்தாரமாய் பின்னூட்டமிட்ட மதிக்கு ஒரு பாடாவதி ப்ரௌஸிங் சென்டரில் நீளமாய் அடித்த பதில் கடைசி நிமிஷத்தில் காணாமல் போய் விட, வெறுப்பில் இரண்டு வரி ஆங்கிலப் பின்னூட்டத்தில் முடித்துவிட்டாலும் உறுத்தல் உறுத்தல்தான். அங்கேயே டிசம்பர் சீஸனுக்கு போகும் உத்தேசம் உண்டா என்று கேட்ட பாலாஜிக்கு... ஆசையிருக்கு, முடியுமான்னு தெரியலைன்னு அனுப்பிய பதிலுக்கும் அதே தலைவிதியாகிப் போனதால்.... இந்த தொடர் பதிவுகள்.

Sunday, December 31, 2006

தலைப்பு? நோ தலைப்பு

போன மாதம் ஒரு கொல்கத்தா பயணம் இருந்தது. போகும் போதே சரியில்லாத உடம்பு அங்கே போய் அதிகமாகப் படுத்தியதும், கொல்கத்தா கொஞ்சம் என்னை மறந்து போனதாய் உணர்ந்ததும் பெரிய விஷயமில்லை. வழக்கம் போல காளிகாட் போனதும் வழக்கமில்லாமல் ஒன்றைப் பார்த்ததும் தான் விஷயம்.

பத்து நிமிடத்தில் காளியைப் பார்த்து முடிந்தாலும் அங்கேயிருந்து கிளம்ப முடியாமல் வெறுமனே சுற்றிக் கொண்டிருந்ததும், என்ன தான் தேடுகிறேன் என்று தெரியாமல் அலைமோதியதும்... வழக்கம் போல அந்த பலிபீடத்தைப் பார்த்துக் கொண்டே நின்றதும்... ஒன்றிரண்டு வெற்றுச் சுற்று முடித்து கிளம்பப் போகும் போது... இழுத்துக் கொண்டு வந்த கறுப்பு ஆடுகள்... யோசனையே இல்லாமல் பின்னால் போனது... மறுபடியும் அந்த பலிபீடத்திற்கே வந்து சேர்ந்தது... ஏதோ கேள்விகள்... எவ்வளவு என்ன என்று விசாரணைகள்... முடித்து அங்கே ஒரு மேசை போட்டு உட்கார்ந்திருந்தவரிடம் போய் தகவல் சொல்கிறார்கள்... கீழே ஒரு குழாயைத் திறந்து அவசரமாக தலையை மட்டும் பேருக்கு நனைத்தார்கள்... இழுத்துக் கொண்டு வர கழுத்தில் போட்டு வந்த கயறு கழட்டப்பட்டது... அதுவரை பேசாமல் தான் இருந்தது... முன்னங்கால்களை பின்பக்கமாக வளைத்துப் பிடித்த போது தான் அந்த சத்தம் கேட்கத் தொடங்கியது... அதற்குப் பின் அதிக நேரம் எடுக்கவில்லை... அதுவரை போவோரும் வருவோரும் தொட்டுக் கும்பிட்டுப் போன அந்த மரச் சட்டத்தில் தலை வைக்கப் பட்டது... அசையாமல் இருக்க ஒரு இரும்புக் கழியால் நிறுத்தப் பட்டது... உயர்ந்த அந்த அரிவாள் எந்த நொடியில் கழுத்தைக் கடந்தது என்று கவனிக்க முடியவில்லை... துடித்துக் கொண்டிருந்த உடம்பை ஒரு புறமாகத் தள்ளி விட்டு தலையைத் தூக்கிக் கொண்டு வருகிறார்... வழியும் ரத்தத்தில் அவர்கள் குடும்பத்தவருக்கு பொட்டு வைத்து விடுகிறார்... முடிய முடிய அடுத்தது தயாராகிறது... பக்தியும் இல்லாமல் பதைப்பும் இல்லாமல் வெறுமனே தான் பார்த்துக் கொண்டிருந்தேன். முன்று நான்கு வயது சின்னப் பையன் எதற்கு என்று தெரியாமல் கையில் சுமந்து கொண்டு, வரும் போது பேசிக் கொண்டே, அந்த குட்டி ஆட்டைப் பார்த்ததும் அங்கே நிற்க முடியவில்லை. வெளியே வரும் போது கொஞ்சம் வெறுமையாக இருந்தது. யார்கிட்டயாவது சொல்லியே ஆகணும் என்று மண்டை வெடிக்க, கூப்பிட்ட இரண்டு பேரும், 'உன்னை யார் அதையெல்லாம் பார்க்கச் சொன்னது?' என்றும் 'கொஞ்சம் கூட இரக்கமே இல்லையா?' என்று கோவித்ததும்... அதைப் பற்றிப் பேசவே தோணவில்லை.

நேற்று தொலைக்காட்சியில் கை பின்னால் கட்டி கழுத்தில் கருப்பு துணி சுற்றி...

Wednesday, November 29, 2006

சென்னை ம்யூஸிக் ·பெஸ்ட்

நவம்பர் ஹிந்து ம்யூஸிக் பெஸ்ட் போயிட்டு வந்ததில் கொஞ்சம் கொறிக்க. ஆறிப் போனதுன்னாலும் அதில் ஏதோ சொல்ல வேண்டியிருந்தது. கொஞ்ச நாளா யோசிக்கறது மூணு பாஷை, எழுதறதுக்காக தமிழ்ப்படுத்துவதில் இருக்கற அசௌகரியம்... இதுக்காகவே ஒரு ஆங்கில ப்ளாக் ஆரம்பிக்கலாமான்னு முயற்சி பண்ணியது... நல்லவேளை ஹிந்தி எழுதற, படிக்கற வேகம் இரண்டாம் வகுப்பு குழந்தையோட கூட போட்டி போட முடியாத அளவானதால ஹிந்தி ப்ளாக் உலகம் பிழைத்தது!

இரண்டு வார இறுதிகளில் ஏழு நாள் நிகழ்ச்சி. முழுக்க முழுக்க கர்நாடக சங்கீதமா இல்லை என்பது தான் போகத் தூண்டியதற்கு முதல் காரணம்.

சீஸன் டிக்கெட் வாங்கின ஒரே காரணத்துக்காக முதல் வரிசையில் உட்கார வைத்து விவிஐபி ட்ரீட்மெண்ட் கொடுத்தது ம்யூஸிக் அகடமியா, இல்ல நிகழ்ச்சி அமைப்பாளரா தெரியவில்லை. எந்தரோ மகானு பாவோ, அந்தரிக்கே நா வந்தனம்!

முதல் நாள் ·பரிதா கானும் கஸல் & தும்ரி. உருது வார்த்தைகள் ஒவ்வொன்றாக அர்த்தம் விளங்கி புரிஞ்சுக்க முடிந்த போது ஏதோ பூ விரிந்த மாதிரி இருந்தது. சில நேரம் எதுவுமே புரியாம பாட்டு கேட்கிற சுகம் மட்டும். பக்கத்து இருக்கை அம்மணி மகளிடம் ·பரிதா கானும் போட்டிருந்த கம்மலை கவனிச்சயான்னு ஜாடை காட்டி சின்னதாகச் சிரிக்க வைத்தார். திருத்த்த்த முடியாது!

ஜெர்மனியிலிருந்து வந்திருந்த நால்வர் இளைஞர் அணி Mozart வாசித்ததில் மொத்த அரங்கத்தையும் கட்டிப் போட்டது இசையா அல்லது அசட்டுத்தனம் காட்ட வேண்டாமென்ற பயமா தெரியவில்லை. கைதட்டல் கூட கொஞ்சம் தயக்கத்தோடுதான்.

ஞாயிற்றுக் கிழமை கூட்டம் கலந்து கட்டி இருந்தது. பெரும்பாலும் காஷ¤வலாக வந்திருந்த இளைஞர் கூட்டம். எப்போதோ காதில் விழுந்திருந்த Kandisaa பாடிய Indian Ocean இவர்கள் தான் என்பது ரொம்ப லேட்டாகத்தான் தெரிந்தது. அவர்களுடைய இசை, வெளிப்படையான பேச்சு, தளர்வான உடல் மொழி எல்லாவற்றோடும் சட்டென்று பொருத்திக் கொள்ள முடிந்தது. ஒவ்வொரு பாடல் தொடங்குவதற்கு முன்னால் அது எந்த மாதிரி சூழலில் எப்படி உருவானது என்று சொல்லிப் பாடும் போது அந்த சூழலுக்குப் போய் ரசிக்க முடிந்தது. காட்டாறு மாதிரியான ஒரு ·ப்ளோ. அடிச்சுட்டு போயிடக்கூடாதான்னு இருந்தது.

ஒரு சிரியன் கிரிஸ்டியன் குழு சில நூற்றாண்டுகளுக்கு முன்னால் மதம் வளர்க்க கேரளா வந்து பாடிய பாடல் ஒன்று கேரள வாசம் சேர்த்து நாளாவட்டத்தில் யாருக்குமே அர்த்தம் தெரியாத ஒரு பாடலாகி அது யாரோ பாடி இவர்கள் கேட்டு kandisaa ஆனதாகச் சொன்னது சுவாரசியம்.

எங்களை சூ·பிக்கள் என்று எங்கள் நண்பர் சொல்கிறார். ஆனா எங்களுக்கென்னவோ நாங்கள் லூ·பிக்கள் என்று தோன்றுகிறது என்று சொல்லி ஒரு நிமிஷம் இடைவெளி கொடுத்து லூ·பிக்களுக்கு கொடுத்த விளக்கம்... 'we are the sufis who cannot control the lust'... இதைக் கேட்டு ஒரு கைத்தட்டலோடு சத்தமாகச் சிரித்து வைக்க, பக்கத்தில் உட்கார்ந்திருந்த கனவான் ஓரக்கண்ணால் முறைத்தார். மறுநாள் பக்கத்தில் இடம் காலியிருந்தும் உட்காரவில்லை!

Global conversation-ல் கலா ராம்நாத் வயலின் மற்றும் சான்பிரான்ஸிஸ்கோ ஜார்ஜ் ப்ரூக்ஸின் சாக்ஸபோன். அறிமுகத்தின் போதே அம்மணியின் வயலினை பாடும் வயலின் என்று சொன்னார்கள். எனக்கென்னவோ அது கொஞ்சுவது போலிருந்தது. வாயெல்லாம் சிரிப்பாய் அனாயசமா அவர் கையசைக்க அதென்னவோ குழந்தையாட்டம் சொன்ன பேச்சு கேட்கிறது. இவ்வளவு திறமையிருக்க, சாக்ஸ் கலைஞரை கொஞ்சம் நாதா அல்லது குருவே என்ற பாவத்தோடு பார்த்துக் கொண்டு அவருக்கு இசைந்து வாசித்ததைப் பார்க்க பிடிக்கவில்லை.

ஜுகல்பந்தி பாலமுரளி கிருஷ்ணாவும் அவருடைய சிஷ்யர் அஜோய் சக்ரோபர்த்தியும். குருபக்தியில் சிஷ்யர் குரல் எழும்பவேயில்லை. அரங்கமே குருவை மெய்மறந்து ரசித்துக் கொண்டிருந்தது. அன்றைக்கு கச்சேரியைவிட சுவாரசியமாக ஒரு நண்பர் கிடைத்தார். நாற்பத்தி ஐந்து வருட இசை கேள்வி ஞானம், பாலமுரளி கிருஷ்ணாவுடைய இளமைக்கால நண்பர்,
எக்கச்சக்கமான நினைவுகளுக்கு சொந்தக்காரர்... பதில் சண்டை போடுவேனோ என்ற எதிர்பார்ப்பில் ஏதோ கேட்டு வைக்க நான் எதோ பதில் சொல்ல சட்டென்று நண்பர்களாகிப் போனோம். ராகங்களைப் பற்றி அவர் ஏதோ சொல்லிக் கொண்டு போக நிஜமாகவே புரிந்து கொள்ள முயற்சி செய்ய வேண்டுமா என்று யோசித்துக் கொண்டிருந்த போது ஏனோ லலிதா ராம் ஞாபகம் வந்தது. அந்த இடத்தில் அவர் இருந்திருக்கலாம்! நிகழ்ச்சி முடிந்தும் பேசிக் கொண்டிருந்தது போதாது என்று ஞாயிற்றுக் கிழமை போனில் ஒரு மணி நேரம் அரட்டை. எனக்கு ராகங்களை புரிய வைப்பதில் ஆர்வமாயிருக்கிறார். எவ்வளவு தேறுவேனென்று தெரியவில்லை! உங்களை சந்தித்ததில் சந்தோஷம் மிஸ்டர். சக்கரபாணி. (மனுஷருக்கு தமிழ் படிக்கத் தெரியாதாம்! எப்படியும் இதைப் படிக்கப் போவதில்லை).

சனிக்கிழமை அருணா சாய்ராம் வழங்கிய முழுநீள அபங்க். எப்போதோ வழக்கமாக காதில் விழுந்து கொண்டிருந்த, அவ்வளவாக கேட்கப் பிடிக்காத மராட்டி அவர் குரலில் ஸ்வீட்டாக இருந்த மாதிரி இருந்தது! அந்தக் குரலில் இருந்த பாவம் கேட்கும் போது அழவைச்சுடுமோன்னு இருந்ததால் அம்மணி மேல் சரியான பொறாமை. மனசு சரியில்லையா ஒரு பாட்டு பாடினா போதும்ன்னு இவர்களுக்கெல்லாம் ஒரு வசதி இருக்கேன்னு தான். வழக்கமான கர்நாடக கச்சேரிக்கு பழக்கப் பட்ட சென்னைக் காதுகள் இடைவேளையில் காணமல் போய்விட்டன.

கடைசிநாள் நிகழ்ச்சிக்கு என் காதும் மனசும் காலியிருக்கவில்லை. ஒட்டாம முதல் பாதி கேட்டதோடு சரி. எனக்கு அதுக்குமேல சங்கீதம் ஜீரணமாகாது போல! கொஞ்சம் இடைவெளி விட்டு டிசம்பர் கச்சேரிகளைத் தேர்ந்தெடுத்துக் கேட்க உத்தேசம். நாலு சீட்டு இடைவெளியில் தொடங்கி அடுத்தடுத்த இருக்கை வரை முன்னேறி கடைசி நான்கு நாள் பக்கத்து இருக்கைக்காரராக இருந்த திருமதி. ஒய்ஜிபி அவருடைய சபா நிகழ்ச்சிகளைப் பற்றி சந்தோஷமாகச் சொல்லியிருக்கிறார். பார்க்கணும்.

கம்பியரிங் பண்ண வந்த திரு.*&(% (பெயர் தெரியவில்லை!) வை எங்கேயோ பார்த்த ஞாபகம். நிகழ்ச்சிக்கு ஏற்ற மாதிரி உடையணிந்து வந்ததும் இயல்பான பேச்சையும் சொல்லாமப் போனேன்னா (அத்தனை ஜொள்ளு விட்டதற்கு)சரியாகாது.

என்னதான் நல்ல செட்ன்னு போட்டு அலற விட்டுக் கேட்டாலும் கண் முன்னால உட்கார்ந்து வாசிக்கறதைக் கேட்கற சுகமே சுகம்.

Sunday, October 15, 2006

உயிர்மை.. நான்கு புத்தகங்கள்... சாரு

கவனமாகப் பாரு என்று நண்பர் அனுப்பியிருந்த மின்னஞ்சல் சொன்னது சாருவின் புத்தக வெளியீட்டு விழாவைப் பற்றி. அவர் கவனமாகப் பார்க்கச் சொன்னது வெளியீட்டு விழா அழைப்பிதழில் இருந்த பிரகாஷ்ராஜ், பார்த்திபன் பெயர்களை. பிரகாஷ்ராஜ் ஓக்கே... பார்த்திபன் கூடவா?! கமலையும் பிடிக்கும் பார்த்திபனும் பிடிக்கும்... இதென்ன ரசனை எனறு அவர் சலித்துக் கொள்ளும் போதெல்லாம் தோற்றம் தாண்டி ஒவ்வொருவருக்கும் ஒரு ஈர்க்கும் விஷயம் இருப்பதை சொல்ல முயன்றதில்லை. அங்கே போக வேண்டும் என்ற முதல் தூண்டலுக்கு அவர்கள் காரணமாக இருந்தாலும் தமிழ் புத்தக வெளியீடு அதுவும் இது போன்ற பெரிய அளவில் என்பது தான் பெரிய ஆச்சர்யமாக இருந்தது. ஏதோ ஒரு இருட்டு கல்யாண மண்டபத்தில் இருந்திருந்தால் ஞாயிறு மாலையை அங்கே கழித்திருப்பேனா என்பது சந்தேகம் தான்.

ஆறு மணிக்கு அரங்கிற்குள் நுழையும் போதே நிறைவான கூட்டம். அரைமணி நேரம் வெட்டியாய் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த பிறகு மேடையேறி தொடங்கி வைத்தவர்கள்... திரு. நல்லி குப்புசாமி, முன்னாள் தொலைக்காட்சி...(?) திரு. நடராஜன், திரு. நாஞ்சில் நாடன், திரு. ட்ராஸ்கி மருது, திருமதி. கனிமொழி, திரு. ரா.பார்த்திபன், திரு. சாரு நிவேதிதா மற்றும் அவருடைய எழுத்துகளை மலையாளத்தில் மொழிபெயர்க்கும் அன்பர் (பெயர் நினைவில்லை). பிரகாஷ்ராஜ் மிஸ்ஸிங். (இப்படி ஆனாலும் ஆகும் என்று முன்னாலேயே வெறுப்பேற்றியிருந்த நண்பருக்கு என் மனமார்ந்த எரிச்சல்கள்).

நல்லி குப்புசாமி, நடராஜன் வரவேற்புரைகளை தொடர்ந்த நாஞ்சில் நாடன் பேச்சைக் கேட்கும் போது சமீபத்தில் சென்னை வந்திருந்த உஷா சொன்ன போதும் கூட அவரைப் படிப்பதில் ஏன் ஆர்வம் காட்டவில்லை என்று யோசிக்க வைத்தது. அவருக்கு சாருவில் மேல் உள்ள முப்பதாண்டு கால பொறாமையைச் சொல்லி முன் அனுமாணங்களை விலக்கி, வாசித்து விட்டு திட்டச் சொன்னார்!

கனிமொழி சாருவால் தத்தெடுக்கப்பட்டு தான் அறிந்து கொள்ள முடிந்த உலக இசை மற்றும் உலக சினிமா பற்றி பேசினார். பழசாகிப் போன ஒரு ஜோக் சொல்லி சிரிக்க வைத்தார்! அவரால் இறுக்கம் தளர்ந்ததை மறுக்க முடியாது. மருதுவின் வேறு தளப் பேச்சு சொல்ல வந்த விஷயத்தின் ஆழத்தை உணர்த்தினாலும் உள் வாங்கிக் கொள்ள முடியவில்லை. மொழிபெயர்ப்பாளரின் மலையாள உரை ரசிக்க முடிந்தது. வரிசையில் கடைசியாய் குறிப்புகளைப் பார்த்துப் பேசிய பார்த்திபனின் பேச்சில் ஒரு ப்ளோ இல்லாமல் போனது ஏமாற்றம்.

முடிவாக சாருவின் நன்றி உரை. வழக்கமான நன்றி அறிவிப்புகளைத் தொடர்ந்து தமிழ் இலக்கிய உலகால் எப்போதும் ஒதுக்கப்படுவதும், சுய ஒப்பீடுகளும்... இத்தனை உயரங்களை அடைந்த பின்பும் இந்த எதிர்பார்ப்புகள் இருக்குமா என்ற ஆச்சர்யம்.

ஒன்பது மணிக்கு எல்லாம் முடிய கிளம்பும் போது இரவு உணவு ஏற்பாடு செய்திருப்பதாகச் சொல்லி இருக்கச் சொன்ன போதும் அசௌகரியமாக இருந்தது. சுரேஷ் கண்ணன் வற்புறுத்தியிருக்காவிட்டால் இருந்திருக்க மாட்டேன். இருந்திருக்காவிட்டால் சில அறிமுகங்கள் நிகழாமல் போயிருக்கும். சாப்பிட்டுக் கொண்டே பேசிக் கொண்டிருந்த எங்கள் பேச்சில் இயல்பாகக் கலந்து கொண்ட எஸ். ராமகிருஷ்ணன்... மனுஷ்ய புத்திரனுடன் ஒரு ஹலோ... எல்லோரும் சொன்னது போல விமர்சனங்கள் இருந்தாலும் பாராட்டாமல் விட முடியாத சாரு...

ஒரு நிறைவான மாலை.

Monday, April 24, 2006

கொல்கத்தா சங்கதிகள் - 2

கொல்கத்தாவிலிருந்த போது பெங்காலி படங்களோடு தொடர்பு கொள்ள ஒரு சந்தர்ப்பம் ரே திரைப்பட விழா என்று அறிவித்த INOX கொடுத்தது. சத்யஜித் ரேயா? ஆளைவிடு என்று எல்லோரும் விலகிக் கொள்ள, அப்போது விடுவதைத் தவிர வேறு வழியிருக்கவில்லை. அது தனியாக சினிமா பார்க்கத் தொடங்கியிருக்காத நாட்கள். அதனாலென்ன, சொந்த கலெக்ஷனுக்காகட்டும் என்று வாங்கி வந்த பதேர் பாஞ்சாலியும் அதன் தொடர் பட வரிசையும் ஜீரணிக்க முரண்டு பிடித்ததில் பெங்காலி சினிமாவிலிருந்து தற்காலிகமாக விலகியிருந்தாலும் 'இது பிடிச்சிருக்க பாரேன்' என்று இழுத்து வந்தது ரிதுபர்ணோ கோஷ்.

சோக்கேர் பாலியில் தொடங்கியது... அவருடைய படங்கள், அது சொல்ல வருவதும் எதுவோ எங்கேயோ சகட்டுமேனிக்கு இழுக்க எந்த புள்ளியில் சந்திக்கப் போகிறோம் என்ற ஆவலும் அதைத் தேடும் முயற்சியுமாய் பார்த்த ரிதுபர்ணோவின் ஆரம்ப காலப் படங்கள்... கொஞ்சம் கமர்ஷியல், கொஞ்சம் துப்பறியும் கதை சொல்லும் முயற்சி... subhomuhurat... படத்தில் நந்திதா தாஸ் சொன்ன ஒரு வரி வசனத்தில் அந்தப் புள்ளியைக் கண்டு பிடித்த போது ஒரு உற்சாக ஹே!

தொடர்ந்து முயற்சித்த அபர்ணா சென் இயக்கிய படங்கள்... முழுக்க முழுக்க பெங்காலி, சப் டைட்டில் இல்லாத கண்ணாமூச்சியோடு பார்த்தவைகள் சொல்ல வந்தது என்னவோ ரொம்ப ஆழமானது, ஆனால் எனக்கு சரியாகப் புரியவில்லை என்ற சமரசத்தோடு மறுபடியும் பெங்காலிப் படங்களுக்கு தற்காலிக விடைபெறுதல்.

'அந்தர்மஹால்' குறுக்கீடும், மூட்டை கட்டும் நேரமாச்சு என்ற அறிவிப்புமாய் மறுபடியும் ஒரு பெங்காலி அலை. அடையாளம் காட்டும் வேலை செய்தது PlanetM. படங்களை பொதிந்து வைத்திருக்கும் அட்டைப் படமே சொல்லும் இது தான் நீ பார்க்க வேண்டியது என்று. முதுகில் எழுதியிருக்கும் ஆங்கிலப் பெயரைக் குறித்துக் கொள்வதும், கொச்சையான பெங்காலி உச்சரிப்பில் அதை வீடியோ கடைக்காரரிடம் ஒப்பிப்பதுமாய் பார்த்த பெங்காலிப் படங்கள் 'ஒரு வருஷத்தை வீணடிச்சுட்டே. பேசாம பெங்காலி கத்திருக்கலாம்' என்று லேட்டாக ஒரு ஞானோதயம் கொடுத்தது, ஒரு பத்து முப்பது படம் பார்த்ததில் பாஷை புரிய
ஆரம்பித்ததுதானென்றாலும்.

வழக்கமான பெங்காலி சினிமாவில் பாலிவுட் பாதிப்பில் கமர்ஷியல் கூத்துகளுக்கு குறைவில்லை என்றாலும் குறிப்பிட்ட எண்ணிக்கையில் இந்த வேறு நிறப் படங்களும். நாவல்களை மூலமாகக் கொண்டு என்று எடுக்கும் படங்கள் என்று பார்த்த மாத்திரத்திலேயே தெரிகிறது. சாதாரணமாக பார்க்கக் கிடைக்காத, குறைந்தபட்சம் நான் பார்த்திருக்காத கதைக்கரு... அதைச் சொல்லியிருக்கும் நேர்த்தி... உள்ளுக்குள்ளே இழுத்துக் கொள்ளக் கூடியதாய். சொல்லாமல் போக முடியாது என்ற ஒன்றிரண்டைப் பற்றி எழுதவில்லை என்றால் உறுத்தல் தாங்க முடியாது
என்பதால் கொஞ்சம்...

Nishi Japon ( after the night... dawn)... மலையும் காடுமாய்... அதில் ஒரு வீடு, வயதான அப்பா, விடுமுறைக்கு வந்திருக்கும் மகன்கள், மருமகள், அவளுடைய தங்கை, அப்பாவின் நண்பர்... தொலைக்காட்சி இல்லாத, செல்பேசி தொடர்பில்லாத ஏகாந்தத்தில்... சந்தோஷமான குடும்பம்... ஒரு ராத்திரி அடர்மழையும் நிலச்சரிவும்... தொடர்புக்கு இருந்த ஒரே தொங்குபாலமும் பிய்த்துக் கொண்டு போய் விட, சாப்பாடு தண்ணீர் இல்லாத மூன்று நாட்கள்... பசி மாற்றிப் போன குடும்பத்து ஆட்கள்... வெளியேறும் முயற்சிகளும் தொடரும் போராட்டங்களுமாய்... அந்த வீடும் லொக்கேஷனும்... அங்கேயே இழுத்துப் போன ஒளிப்பதிவும்... சந்திப் ரேயின் க்ளீன் மூவி.

Dahan... ஒரு ராத்திரி கடைத்தெருவிலிருந்து திரும்பி வரும் இளம் தம்பதியை வம்பிழுக்கும் ரவுடிக் கும்பல்... மொத்த ஜனமும் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்க நடுரோட்டில் நடக்கும் இந்த ரகளையை சிக்னலுக்காக காத்திருக்கும் நேரத்தில் கண்ணில் பட இறங்கிவந்து உதவி செய்யும் இன்னொரு பெண்... போலிஸ் கேஸ்,
வசதியான வீட்டுப் பிள்ளைகள், புகாரைத் திரும்ப பெற வைக்கும் முயற்சிகள் எல்லாம் வழக்கமானவைகள் என்றாலும்... பாதிக்கப்பட்ட பெண்ணின் மனநிலை... உதவி செய்த பெண்ணின் மனநிலை... இருவரையும் சந்திக்க அனுமதிக்காத வீட்டு மனிதர்கள்... இந்த திடீர் புகழை உபயோகப் படுத்திக் கொள்ள முயலும் காதலன்...
இதெல்லாம் நிச்சயம் புதுசு.

shunyo e'bukey (empty canvas)... ஓவியமும் சிற்பமும் நாட்டுப்புறபாடலுமாய் நிறைந்திருக்கும் நான்கு நண்பர்களின் கஜுராஹோ விஜயம்... அங்கே சந்திக்கும் ஒரு பெண், உணர்வுப் பூர்வமாய் நேசம் நிறைந்தவன் அவளைக் காதலிக்க, பக்கா ப்ராக்டிகல் கொஞ்சம் வெடுக்கென்ற பேச்சு நண்பன் இது சரிவராது என்று மறுக்க... கொல்கத்தாவில் தொடரும் அந்த காதல் கதை திருமணத்தில் முடிகிறது. முதல் இரவில், சரியான வளர்ச்சியடையாத அவள் மார்பகங்களைப் பார்த்து அதிர்ச்சியில் விலகும் கணவன்... ஏன் முதல்லயே சொல்லலை என்ற கேள்வியும்... என்னன்னு சொல்லியிருக்கணும் என்ற தயக்கம் நிறைந்த பதிலும்... நிறைய யோசிக்க வைத்த படம்.

Antarjali yatra... தொண்ணூறு பளஸ் வயதுகாரர்... கடைசி சுவாசத்தைத் தேடி நதிக்கரை கம் மயானத்திற்கே வந்து விட்டவருக்கு ஜோசியரின் அறிவுரைப்படி சிட்டுப் போல ஒரு பெண்ணோடு திருமணம்... திருமணம் முடிந்த பிறகும் அங்கேயே தொடரும் குடித்தனம்... நாலு மூங்கில் கம்பும் அதில் வெயில் மறைக்கக் கட்டிய ஒரு துணி கொஞ்சம் சமையல் பாத்திரங்களோடு யாருமில்லாத வெட்டவெளியில் குடுகுடு கிழவரோடு... தூரத்தில் ஒரு முரட்டு வெட்டியான்... கல்யாணம் கட்டிக் கொண்ட ஜோரில் உடல்நிலை தேறி, நடுங்கும் கைகளால் கன்னத்தை தடவத் தேடும் அந்த ப்ரேம் 'கொடுமைடா சாமி'! அந்த மூன்று பேருக்குள் ஓடும் உணர்வுகள்... படம் முழுதாகப் புரிந்ததா என்று தெரியவில்லை... ஆனால் பாதித்தது.

ரித்விக் காடக்கின் Meghey dhaka tara, 'அரங்கேற்றம்' 'அவள் ஒரு தொடர்கதை' பாலச்சந்தருக்கு முந்தியதா பிந்தியதா தெரியவில்லை. நான் முதலில் பார்த்தது பாலச்சந்தரைத்தான். மின்னலடித்துக் கொண்டே படம் காட்டிய அந்த மோட்டார் கார் படம் (பெயர் நினைவில்லை)... அதில் யாரும் நடித்த மாதிரி தெரியவில்லை... ஒரு காட்சியில் மாடிப்படியிலிருந்து இறங்கி வரும் சிறுவனின் எந்த அசைவும் அவனை எங்கிருந்தோ ஒரு காமிரா படம் பிடித்துக் கொண்டிருக்கிறது என்ற உணர்வு கொண்டிருக்கவில்லை... சிறுவனுக்கே இது என்றால் மற்றவர்களை யூகித்துக் கொள்ளலாம். யாராவது ஒரு பழைய சினிமா ரசிகரோடு இன்னொரு முறை பார்க்க வேண்டும் என்று யோசிக்க வைத்த படம்... மத்தியான நேரத்தில் தனியே பார்க்கும் போது நழுவிப் போவதை தவிர்க்க முடிவதில்லை.

கடைசியில் மறுபடியும் ரே... அபராஜிதா... சமீபத்திய காசி விஜயத்திற்குப் பிறகு கூடுதல் சுவாரசியத்தோடு ரசிக்க வைத்தது. அந்த நாள் காசிக்கும் இன்றைய காசிக்கும் இன்னும் மிச்சம் இருக்கும் தொடர்பு... ஆனாலும் ரே உங்களை முழுதாக ரசிக்க இன்னும் சில படிகள் ஏற வேண்டும். ஒருவேளை இன்னும் கொஞ்சம் வருஷம் கழிச்சு.

Saturday, April 15, 2006

சென்னையில் Blank Noise

இணையம் இல்லாத ஒரு மாத காலத்தில் மதியிடமிருந்து வந்திருந்த மயில் சொன்னது eve teasing எண்ணங்களை பகிர்ந்து கொள்ளும் blogathon என்ற தொடர் பதிவுகளைப் பற்றி. யாரும் எழுதினார்களா தெரியவில்லை. நான் எழுத யோசித்த போது அங்கங்கே பேருந்திலும் நடைபாதைகளிலும் சந்தித்த நொடி நேர சுகம் தேடும் இடிமன்னர்கள், தொண்ணூறுகளில் ஏதோ ரயில் நிலையத்தில் இருந்து வெளியில் வர முயற்சிக்கையில் அதீத நெரிசலில் பின்னால் உரசிக் கொண்டிருந்த ஒரு ஆண் உறுப்பையும் தவிர பெரிதாய் எதுவும் நினைவுக்கு வரவில்லை. திரும்பிப் பார்த்ததில் விலகிப் போன அந்த முகமில்லாத மனிதரை முற்றிலும் மறந்து போகவில்லை என்று இப்போது தெரிகிறது.

மறுபடியும் கில்லி சொல்லித் தெரிந்தது சென்னையில் இவர்கள் கூடப் போவது. 14 ம் தேதி மாலை நாரத கான சபாவைத் தேட நேரமாகுமோ என்று முன்னாலேயே புறப்பட்டு போனதில், ஆறேகால் மணிக்கு சபாவிற்குள் நுழைவதற்கு முன்னால் வுட்லேண்ட் கபேயில் ஒரு வெட்டுவெட்டிக் கொண்டிருக்கும் கச்சேரி ரசிகர்களில்
வலைபதியும் மக்கள் இலட்சணம் எதும் தெரியாததால் இன்னும் முக்கால் மணி நேரத்தை என்ன செய்வது என்று தெரியவில்லை. சாரதியார் பக்கத்திலிருக்கும் ஹனுமார் கோவிலுக்கு போங்களேன் என்று கூட்டிப் போனதில் ஒரு ஐந்து நிமிடம் ஓட்ட முடிந்தது. ஒரு சலாமுக்கும் குங்குமத்தீற்றலுக்கும் அதுக்கு மேல் எத்தனை நேரமாகப் போகிறது?! இத்தனை சீக்கிரம் முடிஞ்சுதா என்ற சாரதியின் ஆச்சர்யத்தை ஒதுக்கிவிட்டு வேற என்ன? என்று அந்த பிராந்தியத்தை சலித்ததில் ஒரு செருப்புக்கடை, ஒரு மினி கண்காட்சி... எதிலும் எதுவும் வேலையிருக்கவில்லை. சத்தம் அதிகமாய் ஒர் உள்ளடங்கிய கடை கூப்பிட்டதில் எட்டிப் பார்க்க AVM Music Store கண்ணில் பட நேரம் போனதே தெரியவில்லை.

ஏழு பத்துக்கு அவசரமாய் போய் சேர கபேயில் Blank Noise கூட்டம் ஆரம்பமாகி விட்டிருந்தது. மூன்று மேசைகளை வளைத்துப் போட்டு உட்கார்ந்திருந்த கூட்டத்தில் ஆணும் பெண்ணுமாய் எல்லாவயதுகாரர்களையும் பார்க்க முடிந்தது. மேலோட்டமாக சில விவாதங்கள், கருத்து பகிர்தல்கள், என்ன செய்யலாம், ஏன் இப்படி என்ற பேச்சுகள். ஏழு மணிக்கு, அடுத்ததாய் இந்த மாதம் 29ம் தேடி மறுபடியும் கூடுவதாயும் இடம் பின்னர் அறிவிக்கப் படும் என்று முடிவானது. நேரமிருக்கிறது என்னை உபயோகப் படுத்திக் கொள்ளலாம் என்று சொல்லி வந்திருக்கிறேன்.

முடிந்தபின் கொஞ்ச நேரம் அரட்டையில் சில அறிமுகங்கள், அவரவர் கேள்விப்பட்டதும், என்ன செய்யலாம்ங்களும். கொஞ்சம் இணையம்... சந்தர்பம் கிடைத்ததில் தமிழ்மணமும் ஆயிரத்தை எட்டும்(எட்டியாச்சா?) தமிழ் வலைப்பதிவுகளையும் பேசி விடை பெற்றேன். அந்த சிறு கூட்டம் இன்னும் தொடர்ந்து கொண்டிருந்தது. இந்த Blank Noise எங்கே எவ்வளவு தூரம் போகும் என்று தெரியவில்லை. எதாவது முயற்சி செய்ய வேண்டும் என்று நினைப்பதே முதல் படியாய் இருக்கட்டும்.

Wednesday, March 29, 2006

கொல்கத்தா சங்கதிகள் - 1

கொல்கத்தா காளிகாட்... நான்கைந்து முறை போயிருக்கிறேன். ஒவ்வொரு முறையும் அனுபவம் ஏறக்குறைய ஒரே மாதிரியாகத்தான் இருந்திருந்தது. வண்டியை விட்டு இறங்கும் போதே தூரத்தில் நான்கைந்து கூட்டமாய் நிற்கும் பண்டிட் கும்பலால் அளக்கப்படுவோம். அவர்களில் ஒருவர் வந்து அவசரமாகப் பேச ஆரம்பிப்பார்... 'நான் கோவில் பண்டிட். பிராமின்... வேணாப் பாருங்க... உள்ளேயிருந்து பூணலை எடுத்துக் காமிப்பார். க்யூவிலயெல்லாம் நிக்க வேண்டாம். நான் தரிசனம் செய்து தருகிறேன். வெறும் இருபது ரூபாய் தான்' என்பார். இதற்கு கொஞ்சம் மசிவது போலத் தெரிந்தால் உடனே அவருக்கென்று இருக்கும் கடைக்குக் கூட்டிப் போவார். அங்கே போனதும், 'செருப்பை இங்கேயே விட்டு விடலாம்', என்று சொல்லி கூட்டி வந்த பண்டிட் விலகிக் கொள்ள கடைக்காரர் பொறுப்பெடுத்துக் கொள்வார். 'பிரசாதம் வாங்கிட்டுப் போங்க... வெறும் இருபது ரூபாய் தான்' என்பார். மறுப்பு எதுவும் சொல்லாமல் இருக்கிறோமென்றால் ஒரு கூடையை கையில் திணிப்பார்.
அதில் பிரசாதப் பொட்டலம், ஒரு செம்பருத்தி மாலை... இப்பவும் எதுவும் பேசவில்லையென்றால் ஒரு தேங்காய், அரக்கிலோ மண்ணிலோ ஆன இரண்டு சிவப்பு வளையல்கள் (கொஞ்சம் கோணல் மாணலாயிருக்கும்)... அவ்வளவுதானென்று நினைக்கிறேன்... இதையெல்லாம் கையில் திணித்து விட்டிருப்பார். இதெல்லாமே ஒரு அவசரத்தில் நடந்திருக்கும். என்ன ஏதென்று யோசிக்கவெல்லாம் நேரமிருந்திருக்காது.

இப்போது கடைக்காரர் விலகிக் கொள்ள மறுபடியும் பண்டிட் வந்து சேர்ந்து கொள்வார். வேக நடையில் கூட்டிக் கொண்டு போவார். கடைசி ஆள் யாரு... எங்கேயிருந்து வருகிறது என்று தெரியாத ஒரு நீளமான க்யூ நகர்ந்து கொண்டிருக்க நம்மை வேறு வழியில் கூட்டிக் கொண்டு போவார். வழியென்னவோ அந்த வரிசைக்குப் பக்கத்திலேயேதான் இருக்கும். இதோ இப்போ இவர்களெல்லாம் 'ஏன் குறுக்கு வழியில் போறே'ன்னு கூச்சல் போடப் போகிறார்கள் என்ற பதட்டத்தோடு தான் நுழைவோம். ஆனால் அதெல்லாம் எதுவும் நடக்காது. சிகப்புக் கொடி தூக்கும் கொல்கத்தாவா இது என்று சின்ன ஆச்சர்யம் வந்து போகும்.

பண்டிட் கூட்டிப் போகும் இந்த வழியின் வாசலில் ஒரு காக்கிச்சட்டைக்காரர் நின்றிருப்பார். ரொம்ப அவசரமாக நமக்காக நகர்ந்து வழிவிடுவார். படியேறி ஒன்றிரண்டு திருப்பத்திற்கு பிறகு அப்பிக் கொண்டு நிற்கும் மனிதர்களோடு ஒரு சின்ன வாசல் பக்கவாட்டில் தெரியும். இங்கே போய் எப்படி தரிசனம் என்றெல்லாம் யோசித்துக் கொண்டிருப்போம். ஆனால் நம்மைக் கூட்டி வந்தவர் ரொம்ப லாவகமாக அழைத்துப் போவார். நாம் இரண்டு பேராகட்டும், இல்லை நாலு பேராகட்டும்... எல்லோரையும் சேர்த்தணைத்து அந்த சிறிய வாசலுக்குக் கொண்டு போய் விடுவார். வாசலில் இரண்டு பக்கமும் நான்கைந்து பூசாரிகள்... அதில் ஒன்றிரண்டு பேர் மேலே தொங்கிக் கொண்டிருக்கும் ஒரு கயிற்றைப் பிடித்துக் கொண்டு அசௌகரியமாக போஸில் ஊஞ்சலாடிக் கொண்டே வருபவர்களின் பிரசாதங்களை உள்ளே அனுப்புவதிலும் திரும்ப வாங்கிச் சேர்ப்பதிலும் கவனமாயிருப்பார். கூடவே 'இஷ்டப்பட்ட தட்சணை குடுத்துட்டுப் போங்க... ஐநூறோ ஆயிரமோ' என்று கூவி, பத்து ரூபாய் கொடுத்தாலும் சின்ன சலிப்போடு வாங்கிக் கொண்டு ஒரு செஞ்சாந்துப் பொட்டு வைத்து அனுப்பிவிடுவார்.

இது முடிந்ததும் நம்மை கூட்டிப் போன பண்டிட் வேகமாக சன்னதிக்கு முன்னால் இருக்கும் ஒரு மண்டபத்திற்கு அழைத்துப் போவார். அங்கே ஒரு மூலையில் அதற்காகவே காத்துக் கொண்டிருக்கும் ஒருவரிடம் நம்முடைய கூடையை ஓப்படைப்பார். அவர் ஏதோ மந்திர முணுமுணுப்பிற்குப் பிறகு அந்தத் தேங்காயை உடைத்து, ஊதுபத்தியை கொளுத்தி கொஞ்சம் தள்ளி ஒரு இடத்தில் குத்தி வைக்கச் சொல்வார். இது எல்லாமே ரொம்ப சிரத்தையோடு நடக்கும். நாமும் மறுக்கத் தோணாமல் திடீரென்று முளைத்த பயபக்தியோடு அவர் சொன்னபடியெல்லாம் செய்து கொண்டிருப்போம். தேங்காய் உடைத்தவரிடமிருந்து விடை பெறப் போகும் போது அவருக்கு கொடுக்க வேண்டிய தட்சணையை கூட்டிப் போன பண்டிட் நினைவு படுத்துவார். 'அவர் இருபது வருஷமாக வெறும் பழம் மட்டும் தான் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்' என்று சொல்லி முடிக்கும்போது தேங்காய்
உடைத்தவர் ஐநூறு ரூபாய் கொடுக்கச் சொல்லிக் கேட்பார். இவரும் பத்து ரூபாயை மறுப்பு சொல்லாமல் வாங்கிக் கொள்வார். ம்ம்ம் சொல்ல மறந்து போனேன்... அந்த வழி விட்ட காக்கிச் சட்டைகாரருக்கு திரும்ப வரும் போது ஒரு பத்து ரூபாய் கொடுக்க வேண்டியிருக்கும்.

இத்தோடு முடிந்தது. பண்டிட் அதே வேகத்தோடு நாம் செருப்பு விட்டிருந்த கடைக்குக் கூட்டி வருவார். செருப்பை போட்டுக் கொண்டு அந்தக் கூடையைத் திருப்பிக் கொடுக்கும் போது கடைக்காரர் அவசர அவசரமாக ஒரு அட்டையில் கணக்குப் போட ஆரம்பிப்பார். அந்த பிரசாதம்... வெறும் இருபது அதெல்லாம் அந்த கூடையில் இருந்த ஒரு சின்ன பொட்டலத்தின் விலை. பூ மாலை, தேங்காய், வளையல் எல்லாமாய் சேர்த்து நூற்றைம்பது, இருநூறு ருபாய் என்று சொல்வார். காரசார விவாதம், கொஞ்சம் சாமி பெயரைச் சொல்லி பயங்காட்டல் எல்லாம் முடிந்து வெளியே வரும் போது மிஞ்சியிருப்பது வெறுப்பா, ஏமாற்றப்பட்டதா என்று சொல்ல முடியாத ஒரு கலவையாயிருக்கும்.

அன்றைக்கும் இதையெல்லாம் எதிர்பார்த்திருந்தாலும் காளிகாட் வேறு முகம் காட்டியது. முதலில் வந்த பண்டிட் கதையெல்லாம் கேட்ட பின் 'எனக்கு பிரசாதம் பூஜை எதுவும் வேண்டாம். வெறும் தரிசனம் மட்டும் செய்து வைக்க முடியும்னா வரேன்' என்று சொல்ல, காளியை வெறும் கையோடு பார்க்க போகாதே என்ற பயங்காட்டல், கெஞ்சல் கொஞ்சல் எதுவும் பலிக்காமல்... 'போ... நீயே போய் பாத்துக்கோ' என்று வெறுப்போடு விலகிக் போக இன்னொரு பண்டிட் வந்து அவருடைய பல்லவியை ஆரம்பித்தார். சரி பிரசாதம் எதும் வாங்க வேண்டாம் இங்கே வாங்க என்று ஒரு கடைக்குக் கூட்டிப் போய் ஒரு எவர்சில்வர் பேசினில் வைத்திருந்த தண்ணீரைக் காட்டி, 'இது கங்கா ஜல்... கை கழுவிக்கோங்க' என்றார். ஐயா பண்டிட் அளக்காதீரும் என்று நினைத்துக் கொண்டே கழுவி முடிக்க, பிரசாதம் வேண்டாம்... வெறும் தேங்காயாச்சும் வாங்கிக்கோங்க. இல்லைன்னா காளி...' இன்னொரு முறை பயங்காட்டலை கேட்கப் பொறுமையில்லாததால் அவரை அங்கேயே கழட்டி விட்டு நடக்கத் தொடங்கியிருந்தேன்.

முடிந்தால் காளியைப் பார்த்து போயிட்டு வரேன்மா பொண்ணேன்னு சொல்வது, முடியாவிட்டால் சும்மா ஒரு சுற்று சுற்றிவிட்டுப் போய்விடலாம் என்று தான் உள்ளே போயிருந்தேன். அதற்குப்பின் வழிமறித்த பண்டிட்களை உறுதியான ஒரு வேண்டாமில் விலக்க முடிந்தது. வழக்கமான பாதையை விட்டு நடக்க ஆரம்பித்ததில் காளியைத் தவிர நான்கு கோவில்கள் இருப்பது தெரிந்தது. ஒவ்வொன்றாய் பார்த்துக் கொண்டே பின்னால் போக ரத்த சகதியில் தலை வேறு உடல் வேறாய் கிடந்த ஒரு கறுப்பு ஆடும், அதற்கு இடது பக்கத்தில் ஒரு பலிபீடமும். குங்குமமா இல்லை ரத்தமா என்று தெரியாத ஒரு சிவப்பு கசகசப்பு, தாறுமாறாய் கிடந்த மாலைகள், இரண்டாய் மடிந்து கும்பிடும் மனிதர்கள்... இதையெல்லாம் நான் இத்தனை நாள் பார்த்ததில்லை! விரிந்த கண்களும் கொள்ளை கொள்ளையாய் ஆச்சர்யத்தோடும் பத்து நிமிஷம் அங்கேயே குறுக்கும் நெடுக்குமாய் அலைந்து கொண்டிருந்தேன். வெட்டிக் கிடந்த ஆட்டுக்குப் பக்கத்தில் மார்கெட்டில் பார்க்கும் ஒரு கறிக்கடை செட்டப். வெட்ட மரத்துண்டும் பெரிய கத்தியுமாய் ஒன்றிரண்டு பேர் இதற்கு முன் வெட்டிய ஆட்டை துண்டுகளாக்கிக் கொண்டிருந்தார்கள். காளிகாட்டில் இதை நான் சத்தியமாய் எதிர்பார்க்கவில்லை. கோவிலில் இப்படி வெட்டிக் கிடக்கும் என்று சுத்தமாய் தெரியவில்லை. 'சாமி கும்பிட வந்த பக்தியையும் காணோம். என்ன தான் செய்யறே இங்கே?' என்ற கேள்வி ஒன்றிரண்டு கண்களில் தெரிய வேறு வழியில்லாமல் அங்கிருந்து நகர வேண்டியதாயிற்று.

விசாரித்து நேரே போய் நின்றது கோவில் அலுவலகத்தில் தான். நெஞ்சில் இடிக்கும் அந்த செங்குத்துப் படிகளில் ஏறிப் போய் ஒரு பரபரப்பான கோவில் அலுவலகத்தை எதிர்பார்த்த என்னை வரவேற்றது மொத்தமே இரண்டு பேர்தான். கோவிலைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டுமே என்று கேட்டதும் 'நீங்கள் எழுத்தாளரா?' என்று கேட்டு சிலிர்க்க வைத்த பெரியவருக்கு நன்றி. வலைப்பதிவு கதையெல்லாம் சொல்ல, சுத்தமாய் புரியாத போதும் சிரத்தையாய் கேட்டு என்னை கோவிலின் முன்னாள் ட்ரஸ்டியிடம் அனுப்பி வைத்தார். கோவிலுக்கு வந்தோமா சாமி கும்பிட்டோமா என்று போகாமல் இப்படி கேட்க வந்தாலே எங்கயாச்சும் எழுதத்தானாயிருக்கும் என்பது யாரும் யூகிக்கக் கூடியதுதான் என்று அப்புறம் புத்தியில் உரைத்தாலும் எழுத்தாளரா என்று கேட்ட நிமிஷம் வந்த சந்தோஷம்... சந்தோஷம் தான்.

கோவிலுக்கு பின்னாலேயே இருக்கிறது முன்னாள் ட்ரஸ்டி திரு. அம்யோ குமார் ஹல்தார் அவர்களின் வீடு. கூட்டி போனவர், 'இன்னார் அனுப்பி வைத்தார். கோவிலைப் பற்றி கேட்கிறாங்க' என்று சொல்ல, அந்தப் பெரியவர் கண்ணில் நூறு கேள்விகள். கொஞ்சம் கேட்டும் வைத்தார். யார், என்ன என்ற விவரமெல்லாம்
கேட்டுக் கொண்டு, 'கோவிலைப் பற்றி இப்படி திடீரென்று கேட்டால் எப்படி? ஒரு நாள் ஒதுக்கிக் கொண்டு வாங்க. நிறைய இருக்கு' என்று விரட்டி விடும் தொனியில் பேச ஆரம்பித்தவர் கொஞ்ச நேரத்தில் இளக ஆரம்பித்தார்.

ஒரு பெரிய நோட்டுப் புத்தகத்தை எடுத்தும், மேசை மேலிருந்த பெங்காலி புத்தகங்களையும் காட்டிச் சொன்னது...

வங்காளத்தைக் கைப்பற்ற அக்பரால் அனுப்பப்பட்ட மான்சிங், குடிசையாய் இருந்த இந்த கோவிலைப் பார்த்திருக்கிறார். பெரிதாகக் கட்டி நிர்வாகம் செய்வதற்காக 595 பிஹா(bihas) நிலத்தை கோவிலுக்காக அளித்திருகிறார். (பிஹா என்ற அளவை அவர் விளக்கிச் சொல்ல முயன்றது எனக்குப் புரியவில்லை.) 1799 ல் கட்டத் தொடங்கிய கோவில் கட்டும் பணி 1809 ல் முடிந்தது. கோவில் நிர்வாகம் 800 ஜன்சேவாயத்துகளின் பொறுப்பில். இன்றைக்கும் ஒவ்வொரு நாள் பொறுப்பு ஒவ்வொருவருக்கு. காலை நான்கு மணிக்கு தொடங்கும் பூஜையிலிருந்து இரவு மூடும் வரை கோவிலின் தேவைகளை கவனித்துக் கொள்ள வேண்டியது அன்றைய ஜன்சேவாயத் வேலை. கோவிலைச் சுற்றியும் அவர்களுக்கு வசிக்க இடமும், மானியமும் கொடுக்கப் பட்டிருக்கிறது. அன்றைய கோவில் வசூலும் அவருக்கே.

ஒவ்வொரு நாளின் முதல் பலி காளிக்கு. அது ஆடோ, கோழியோ எதுவானாலும் கோவிலுக்கு கொடுத்து விட வேண்டும். அது கோவிலின் சமையலறைக்கு(bhog ghar) போகிறது. அது தவிர மீனும் சாப்பாடுமாய் விருந்து தயாராகி மத்யானம் காளிக்கு படைத்து விட்டு தானமாகக் கொடுக்கப் படுகிறது. கொஞ்சம் அன்றைய ஜன்சேவாயத் வீட்டுக்கும். ஒரு நாள் செலவு சுமார் நாலாயிரம். கோவிலோ ஜன்சேவாயத்துகளோ பலியிடுவதில்லை. வெளியில் இருந்து வரும் பக்தர்கள் பலியிடுவது மட்டுமே. சனிக்கிழமைகளில் அதிகமான அளவில் பலி நடக்கிறதாம். சிலநேரம் இருநூறையும் தாண்டுமாம். அரசாங்கம் இதில் தலையிடுவதில்லையா என்று கேட்டதற்கு, 'இதில் அரசாங்கம் என்ன செய்ய முடியும்? பக்தர்களுக்கு நம்பிக்கை. செய்கிறார்கள்' என்றார். தர்ஷண் ஆச்சா என்று கேட்டு இல்லை என்று சொன்னதால் அவருடைய ஆள் ஒருவரோடு அனுப்பி வைத்தார்.

அதே குறுக்குவழி தரிசனம். இது தவிர கீழேயும் ஒரு வழியிருக்கிறது. அது காளியை ரொம்ப பக்கத்தில் பார்ப்பதற்கு. காலைத் தொட்டுக் கும்பிடச் சொல்வார்கள். ஆனால் சுமார் நாலடிக்கு நீண்டிருக்கும் தங்க நாக்கை தொடுவதும், தொடாதே என்று பூசாரிகள் கத்துவதும் தவறாமல் நடக்கும். வெளியிலிருந்து எட்டிப் பார்க்க மட்டும் அனுமதிக்கப் பட்ட 'போக் கர்' உள்ளே குமித்து வைக்கப் பட்டிருந்த மீன் வறுவல்... கோவில் சமையல் அறையில் அதை சத்தியமாய் எதிர்பார்த்திருக்கவில்லை. இரண்டாவது முறை பலிபீடத்திற்குப் போன போது சீன ஜாடையில் புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்த வாலிபன் கட்டாயம் இன்னொரு தரம் வர வேண்டும் என்று
முடிவெடுக்க வைத்தான்.

திரு. ஹல்தார் உடன் நடந்த இரண்டாவது சந்திப்பில் பெரியதாக எதுவும் தெரியவில்லை. மறுபடியும் அதே தகவல்களை முதலிருந்து சொல்லி முடித்தார். நான் கேட்ட ஒன்றிரண்டு கேள்விகளுக்கும் அவரால் சரியான பதில் சொல்ல முடியவில்லை. எண்பத்து சொச்சம் வயதானவரை அதிகம் தொல்லை செய்ய வேண்டாமென்று கோவில் அலுவலகத்திற்கு நடையை கட்டினேன். அந்த சீனர் புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தாரே என்று காமிராவும் கையுமாய் எதற்கும் அலுவலகத்தில் ஒரு வார்த்தை சொல்லி விட்டு எடுக்கலாமென்று போன போது, ஒரு விண்ணப்பம் எழுதிக் கொடுத்து அனுமதி பெறாமல் ஆகவே ஆகாது என்று மறுத்து விட்டார். அவசரம்,
ஒரேயடியா ஊரை விட்டுப் போறேன் என்ற கெஞ்சல் எதுவும் செல்லுபடியாகவில்லை. 'இன்னைக்கு வியாழன். எழுதிக் கொடுத்துட்டு போங்க. சனிக்கிழமை வந்து எடுத்துக்கலாம். அப்பவும் பலிபீடத்தையெல்லாம் எடுக்கக் கூடாது' என்று சொல்ல, சனிக்கிழமையா?!... அத்தனை பலிகள்... அந்த நேரத்தில் அங்கே என்ன மாதிரி ஒரு உணர்விருக்கும்... அந்த பக்தி வெளிப்பாடு இதெல்லாம் பார்க்கணுமே என்ற யோசனையெல்லாம், சாமானை மூட்டைக் கட்ட வரேன் என்று சொன்ன பேக்கர்ஸ் வருகையால் முடியாமல் போனது.

எல்லா இடத்திலேயும் எதாவது விட்ட குறை தொட்ட குறை இருக்கணுமே... இல்லாமல் போனால் ஒரு பூர்த்தியும், அதனாலயே நினைவிலிருந்து அகன்று போவதுமாயிடாதா? காளிகாட்டிற்கு ஒரு சனிக்கிழமை காலை விஜயம் பாக்கியிருக்கிறது.

Friday, March 24, 2006

மிஸ் யூ கொல்கத்தா

ஒன்றரை வருட கொல்கத்தா வாழ்கை ஒரு செவ்வாய்கிழமையோடு முடிந்து போனது. கிளம்ப வேண்டும் என்றான போது நூறு கை கொண்டு கொல்கத்தாவை துழாவ வேண்டும் போலிருந்தது. தேடிப் பார்த்த சிலதும் பார்க்க முடியாமல் போனதும், பெங்காலி சினிமாவுமாய் கழிந்த கடைசி நாட்கள். கொஞ்ச வருஷமாய்
கொண்டிருக்கும் வைராக்கியம் விலகி நின்று கைகட்டி வேடிக்கை பார்த்ததும், 'மனுஷங்களோட ஒட்ட மாட்டேன்னு தானே சொன்னே... இப்போ ஊரோட ஒட்டிப் போனியே... பாத்தியா உன்னால இப்பவும் முடியலை'ன்னு சிரித்துக் கொண்டே சொன்னதும் கேட்டது.

ரோட்டிற்கு அந்தப் பக்கம் இருந்து, பார்க்கும் போதெல்லாம் வெறும் புன்னகை மட்டும் பரிமாறிக் கொண்டிருந்த மிஸஸ். எதிர்வீடு (இப்பவும் பெயர் தெரியாது)... திடீரென்று வந்த ஞானோதயத்தில் முந்தின இரவு போயிட்டு வரேன் என்று சொல்லி வரப் போனதும், எங்கெல்லாமோ அலைபாய்ந்த பேச்சு வலைப்பதிவிலும், கொல்கத்தா தேடலிலும் வந்து நின்றதில், 'நாம் முன்னரே சந்தித்திருக்க வேண்டும்' என்று இருவருக்குமே தோன்றியது. இன்னும் பத்து வருஷம் போனால் கையில் எடுத்தாலே உதிர்ந்து விடும் போலிருக்கும் ஒரு இரட்டை தலையணை சைஸ் புத்தகத்தைக் காட்டி, 'பெங்கால் வரலாறு பற்றிய புத்தகம்... என் அத்தை கிட்ட இருந்து எடுத்து வந்தேன். அவங்க கிட்ட இதுமாதிரி நிறைய இருக்கு' என்றுசொன்ன போது புத்தகத்திற்காக இல்லாவிட்டாலும் அந்த பாதையில் நிறைய தூரம் பயணித்திருந்திருக்கலாம் என்றிருந்தது.

மாலை வேளைகளில் மொட்டை மாடியில் நடக்கையில் தெரியும் மேகம், சிகப்பு விளக்கெரியும் தூரத்து டவர், சுற்றியும் முளைத்துக் கிடக்கும் மரம் செடியெல்லாம் பார்க்கும் போது கொல்கத்தாவைப் போலத்தான் இருக்கிறது. முச்சு விடும் சத்தம் கூடக் கேட்கும்... அந்த அமைதிக்காகவே சர்வசுதந்திரமாய் வீடெல்லாம் நடமாடும் குருவிகள் போய் மாறி மாறி நடமாடிக் கொண்டிருக்கும் மகளோ மகனோ இது சென்னை என்று நினைவு படுத்துகிறார்கள். ராத்திரிகளில் திடீரென்று கலையும் தூக்கத்தில் உணரும் வெறுமையை அசை போடும் அனுபவமும் புதிதாய் இருக்கிறது. தடுமாற்றத்தோடு அலைபாயும் பந்து போல உணர்கிறேன். நிதானத்திற்கு வரும் போது அல்லது நிதானத்திற்கு வருவதற்காகவேயாவது மறுபடியும் எழுத ஆரம்பிக்க வேண்டும். சொல்ல கொஞ்சம் கொல்கத்தா கதை இருக்கிறது.

Monday, February 13, 2006

சுருக்குப்பை(யிலிருந்து) - 4(கடைசி)

மறுநாள் காலையில் திரும்ப அஸ்ஸாம். 'காஸிரங்கா போக நாலைந்து மணி நேரம் ஆகும். மெதுவாகப் போனாலும் சாயந்தரம் போய் சேர்ந்திடலாம்' என்று ஓட்டுனர் சொன்னதால் வழியில் அந்த உமியம் ஏரியில் கொஞ்சம் இறக்கிப் போக முடிவானது. எந்த அசைவோ ஓசையோ இல்லாமல், ஒரு மெகா சைஸ் சித்திரம் மாதிரி இருந்தது ஏரி. அங்கங்கே ஒன்றிரண்டு மனித முகங்கள்... அதுகூட சித்திரத்தின் ஒரு பகுதி போலத்தான். சிதைந்து போன ஒரு தார்ச்சாலை இறங்கி ஏரியின் ஒரு மூலையில் அமிழ்ந்து போயிருந்தது. அந்த சாலையிலே நடந்து போய் ஏரித் தண்ணீரில் கால் வைத்ததும் அதன் ஜில்ல்லிர்ப்பு உடம்பெல்லாம் ஓடியது. இறங்கி விடலாமா என்ற வந்த ஆசையோடு எங்கே உடுப்பு மாற்ற என்ற கேள்வியும் வந்ததில் வெறும் கால் அளைதலோடு முடிந்தது.

அங்கே தொடங்கிய பயணம் இருட்டுவதற்கு முன்னால் காஸிரங்காவில் முடிந்தது. '·பாரஸ்ட் கேம்பில் தங்க ஏற்பாடாகியிருக்கிறது. ஒரு யானை சவாரி, ஒரு ஜீப் சவாரி, ராத்திரியும் காலையும் சாப்பாடு, தலைக்கு ஆயிரத்து இருநூறு ரூபாய். எல்லாம் அவங்க பாத்துக்குவாங்க' என்று கொல்கத்தாவிலிருந்து தொலைபேசி சொன்னதில் சுவாரசியமான எதிர்பார்ப்பு இருந்தது.

பிரதான சாலையிலிருந்து உள்ளடங்கியிருந்த கேம்பிற்குள் நுழைந்ததுமே பிடித்துப் போனது. சின்னச் சின்ன குடிசைகளாக ஏழெட்டு, நடுவில் ஒரு சாப்பிடும் இடம், வேலிக்கு வெளியே ஒரு தேயிலைத் தோட்டம், அதற்கு பின்னால் நீளும் காடும் மலையுமாய். வணக்கமும் விசாரிப்புகளும் முடிந்தவுடன் குடிசைகள் திறந்து விடப்பட்டது. சுமாரான சுத்தமாய் படுக்கை, போர்த்திக்கொள்ள ஒரு அழுக்கு ரஜாய்.... 'இதை நான் தொடப் போவதில்லை' என்று மனசுக்குள் சொல்லிக் கொண்டது அதற்குக் கேட்டிருக்கும்... 'ம் ம்... பார்க்கலாம்' என்று அது சிரித்தது எனக்குக் கேட்கவில்லை.

எரியத் தொடங்கிய கேம்ப் ·பயர், சுடச்சுட தேநீர், ராத்திரி சாப்பிட என்ன வேண்டும் என்ற விசாரிப்பு எல்லாம் முடிந்து, 'கஸ்டமர் குஷ்' ஆன நேரத்தில் 'அந்த யானை சவாரி ஆகாது போலிருக்கிறது. அதுக்குப் பதிலா இங்க பக்கத்துல ஒரு நைட் ச·பாரி போயிட்டு வந்துடுங்களேன்' என்று அந்த மேனேஜர் சின்னப் பையன் நைச்சியமாகப் பேசி சம்மதிக்க வைத்து விட்டார். இரண்டு கிலோ மீட்டர் தூரத்தில் கும்மிருட்டில் ஒரு ஓடைக்குப் பக்கத்தில் ஜீப்பை நிறுத்தி, 'சத்தம் போடாம இருங்க... எதாச்சும் வந்தாலும் வரும்' என்று சொல்ல, வந்தாலும் தெரியாத அந்த கும்மிருட்டில் காத்திருந்த அரை மணிநேரத்தில் கொஞ்சம் மின்மினியும், இன்னொரு நைட் ச·பாரி ஜீப்பும் தான் வந்தது.

திரும்ப கேம்பிற்கு வந்த போது நாலைந்து ஜீப்புகளும் கொஞ்சம் கூட்டமுமாயிருந்தது. விசாரித்ததில், பத்து நாளாக தங்கியிருக்கும் அஸ்ஸாமி பட ஷ¥ட்டிங் கோஷ்டி என்று தெரிந்தது. அங்கேயே படப்பிடிப்பிற்கு தயாராகிக் கொண்டிருந்தார்கள். குளிர் ஏறத் தொடங்கியிருந்தது. சாப்பாட்டுக்குப் பிறகு ஒரு மணி நேரமாகியும் இன்னும் ஏற்பாடுகளே தொடர்ந்து கொண்டிருந்தது. டைரக்டரையோ, நடிகர்களையோ யாரையும் காணவில்லை. மூட்டி வைத்திருந்த நெருப்பை விட்டு விலகும் வரை குளிர் தெரியவில்லை. குடிசைக்குள் நுழைந்ததும் தான் தட்டியில் மண் பூசிய அந்த சுவரெல்லாம் வேலைக்காகாது என்று தெரிந்தது. கைவசமிருந்த ஸ்வெட்டர், ஷால் எல்லாம் போதாமல் வேறு வழியில்லாமல் அந்த ராஜாயை எடுத்து போர்த்தியும் எங்கெல்லாம் எத்தனை எலும்பு ஓடுகிறது என்று எண்ணிக் கொண்டு இரவு ஓடியது.

குளிரில் தூக்கம் வராமல் நடு ராத்திரியில் ஒரு தரம் லேசாக கதவை திறக்க, வெளியே பாட்டிலும் கையுமாய் உட்கார்ந்திருந்த போலீஸையும் கூட்டாளிகளையும் பார்த்ததில் ஹிந்தி சினிமா சீன்கள் நினைவுக்கு வந்ததில் வெளியே போகும் உத்தேசத்தை விட்டு மறுபடியும் ரஜாயைத் தஞ்சமடைய வேண்டியதாயிற்று.

அரைத்தூக்கத்தில் கழிந்த அந்த ராத்திரி, பறவைகள் சத்தத்தில் விடிந்தது. வீட்டில் இருக்கும் போது பார்த்தே இருக்காத ஐந்தரை மணி காலையை அந்த கேம்ப்பில் பார்க்கக் கிடைத்தது. யாரும் விழித்திருக்காத அந்த நேரத்தில் கொஞ்சம் கொஞ்சமாய் பரவும் வெளிச்சத்தைப் பார்த்துக் கொண்டு தன்னந்தனியாய் உட்கார்ந்திருந்தது மறக்க முடியாது.

அதற்குப் பிறகு போயிருந்த ஜீப் ச·பாரி, பச்சை பூத்திருந்த காட்டு வழி, தூரப்பார்வைக்கு காட்டெருமையாகத் தெரிந்து காண்டாமிருகம் தான் என்று ஊர்ஜிதமான அந்த ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணு காண்டா, இரண்டு மான்கள், ஒரு ஆமை(!), நான்கைந்து காட்டெருமை... இதெல்லாம் அந்த காலை விருந்துக்குப் பின்னால் சாப்பிட்ட கொறிப்புகள். கிளம்பும் போது தான் தெரிந்தது ராத்திரி பார்த்து மிரண்டடித்து போனது சினிமா போலீஸ் என்று! தைரியமாய் வெளியே வந்து டைரக்டர் கண்ணில் பட்டு அஸ்ஸாமி படத்தில் அண்ணியாகவோ அக்காவாகவோ நடித்திருக்கக் கூடிய சந்தர்ப்பம் பாழாய் போன நடுஜாம பயத்தில் பறி போனது! ம்ம்ம்...

Tuesday, February 07, 2006

சுருக்குப்பை(யிலிருந்து) - 3

வாசித்துக் கொண்டே போகையில் எங்கேயாவது ஒரு இடத்திலாவது 'படவா! சரியான குசும்பன்டா நீ'... இப்படியாக மனசில் ஓடி ஒரு புன்னகை வர வைக்கும் எழுத்தாக எனக்கு குஷ்வந்த் சிங்கின் எழுத்து இருந்திருக்கிறது. அவர் இந்த தலைப்பிலா?... இது தான் முதலில் தோன்றியது Obituaries - death at my doorstep புத்தகத்தை கடையில் பார்த்த போது. மேலும், 'தவிர்க்க முடியாததுதானென்றாலும் பேசாமலும் வாசிக்காமலுமாவது இருக்கலாம். அதை நான் வாங்கப் போவதில்லை' என்று தான் முதலில் முடிவானது. ஆனாலும் சில விரட்டல்களைத் தவிர்ப்பது சிரமம். இதுவும் அப்படியே.

வெவ்வேறு சமயங்களில் குஷ்வந்த் சிங் எழுதிய மரணச்செய்தி குறிப்புகளின் தொகுப்பு. குஷ்வந்த் சிங் அவருடைய இருபதுகளில் அவருடைய obituary அவரே எழுதியிருப்பதாக எங்கேயே வாசித்திருக்கிறேன். புத்தகம் அதனோடு தான் தொடங்குகிறது. அது எனக்குத் தெரிந்த குஷ் எழுத்தின் சாயலில் கொஞ்சமும் இல்லை. சாவைப் பற்றி அவர் கேட்டறிந்தவைகள்... கேட்டவர்கள் வரிசையில் தலாய் லாமா, ரஜனீஷ், வி.பி.சிங்... தெளிவில்லாத விளக்கங்கள்.

புத்தகம் உள்ளே இழுத்துக் கொள்வது புட்டோவின் இறுதி நாட்களை விவரித்துக் கொண்டு போகும் போது தான். பனிரெண்டு பக்கங்களுக்கு நீளும் அந்தக் குறிப்புகள்... சாப்பிட்டுக் கொண்டே வாசித்துச் செல்ல, ஒரு கட்டத்தில் அது சொல்லத் தெரியாத அவஸ்தையாகி, புத்தகத்தை மூடி வைக்க வைத்தது. அரசியல் நண்பர்கள், எழுத்தாள நண்பர்கள், அவருடைய வீட்டு காவல்காரர்... தொடரும் மரணச் செய்திகள். வெறும் வார்த்தைகளாயில்லாமல் உணர்வுகளாய். தெரிந்த முகங்களும் தெரியாத தகவல்களும். ஒரே சோக கீதம் பாடாமல், இயல்பாய் சொல்லிப் போகிறது. இந்த புத்தகத்தில் கூட மனுஷன் குறும்புத்தனத்தைக் காட்டாமல் போகவில்லை. இத்தனை சாவு சமாச்சாரங்களையும் படிக்க தயார் செய்யவென்றேயாயிருக்கும்.

'கொஞ்சம் சினிமா' வில் அந்தர்மகாலில் தொடங்கி பார்த்த பெங்காலிப் படங்களையும், கொஞ்சம் ஹிந்தி படங்களையும் சொல்ல நினைத்தது... பெங்காலிப் படங்கள் எண்ணிக்கை நீண்டு போனதில் அதைத் தனியாகத் தான் எழுத வேண்டும். அந்த வரிசைப் படங்களில் கனத்து போன தலையை லேசாக்க இடையில் பார்த்த
'Bluffmaster' ம் , Neal n Nikki' ம் முழு மசாலா. சும்மா அபிஷேக்பச்சனை பார்க்க்க்கவும், ம்யூஸிக்கிற்காகவும் Bluffmaster நல்ல சாய்ஸ். கூல் n லைட் மூவி. Neal n Nikki... ஒரு பைசாவுக்கு தேறாது. இந்த உதய் சோப்ராக்கு என்ன ஆச்சு? நல்லாத்தானே இருந்தார்? அந்த ஓவர் சைஸ் புஜங்களும் அதற்கு கொஞ்சமும் பொருந்தாத முகமும்... கொடுமை! அநியாய மினி சைஸ் ஆடைகளில் தனிஷா... இவ்வளவும் குறைச்சிருக்க வேண்டாம் தான். வேஸ்ட்.

அதையெல்லாம் ஒதுக்கி விட்டு அதிகம் கவனம் பெறாத இந்த படம் பற்றி சொல்லியே ஆக வேண்டும். Hazaar Chaurasi ki maa.

இந்த படத்தை வாங்கும் போது இது என்ன படம், எதைப் பற்றியது என்ற எந்த அனுமானமும் இல்லை. இறுக்கமான ஜெயாபச்சன் முகமும், கோவிந்த் நிஹலானி என்ற பெயரும் தான் அதை வாங்கச் சொல்லியிருக்க வேண்டும். படம் தொடங்கி இரண்டு நிமிடம் வரை தலைப்புக்கு அர்த்தம் கூட தெரிந்திருக்கவில்லை. அப்புறம்
தான் தெரிந்தது hazaar chaurasi... 1084 என்று. 1084 எண் உடலைக் காட்டி அடையாளம் காணச் சொல்வதுடன் படம் தொடங்குகிறது. அதற்குப் பிறகே தன் மகன் நக்ஸலைட் என்று தெரிந்து கொள்ளும் ஒரு அம்மாவின் தேடல்கள்.

மஹாஸ்வேதா தேவியின் Hazaar chaurasir maa என்ற நாவலின் திரைப்பட வடிவம். நக்ஸலைட் என்று கொல்லப் பட்ட மகனின் சுவடே இல்லாமல் செய்ய முயற்சிக்கும் குடும்பம், அதிலிருந்து விலகி மகனின் வேர்களைத் தேடிச் போவதும் தெரிந்து கொள்வதுமாய். கொலை செய்யப் பட்ட இரவு அவன் தங்கியிருந்த நண்பன் வீடு... அவனின் அம்மாவிடமிருந்து மகனுடைய இன்னொரு முகத்தைத் தெரிந்து கொள்வதும், எப்படி இதெல்லாம் எனக்குத் தெரியாமல் போனது என்ற குற்ற உணர்ச்சியும், அதிலிருந்து மீண்டு வருவதுமாய் போகும் கதை.

அம்மாவாக ஜெயாபச்சன். அந்த நிதானம், இறுக்கமான அமைதி... நிறைவாக செய்திருக்கிறார். நண்பனின் அம்மாவாக சீமா பிஸ்வாஸ். உடைந்து அழும் அந்தக் காட்சி ஒன்று போதும். மகன் பாத்திரத்தில் ஜாய் சென்குப்தா. காதலியாக நந்திதா தாஸ். பேரலல் சினிமாவின் வழக்கமான முகங்கள். எந்த அலங்காரமும் இல்லாத க்ளீன் மூவி.

எழுபதுகளின் கல்கத்தா, சொல்லப் போனால் பளபளக்கும் பெரிய சாலைகளுக்கு பின்னால் இன்னமும் அப்படி ஒரு கல்கத்தா இருக்கத்தான் செய்கிறது. பெரிய மாற்றங்களில்லாமல். நக்ஸல் இயக்கம் விட்டுப் போன வலி இன்னமும் எத்தனையோ குடும்பங்களில் மிச்சம் இருக்கலாம். அதனாலேயே அந்த நாட்களின் வேகம் இல்லாமல் போயிருக்கலாம். கோட்டைத் தாண்டி அந்தப் பக்கம் போய் நின்று பார்த்தால் அதனுடைய நியாயங்கள் புரிந்து கொள்ள முடிகிறது.

இதே விஷயத்தைத் தொட்ட Hazaaron khwaishien aisi... ஒரு பீரியட் படம் என்ற பார்வையில் இன்னும் அதிகம் கவனம் எடுத்திருக்க வேண்டுமோ?

இதோ இங்கே சால்ட் லேக்கில் எழும்பும் அடுக்குமாடிக் கட்டிடங்களுக்கு தோண்டிய பள்ளங்களில் கிடைத்த எலும்புகள், ஏரியில் இப்படித் தூக்கி போட்ட கணக்கில்லாத சடலங்களின் மிச்சங்கள் என்று கேள்விப்பட்ட செய்தி நினைவுக்கு வந்து போகிறது. கொல்கத்தாவும் அதன் வரலாறும், ஆழமும் அகலமுமாய்... ரொம்பப் பெரிசு.