Saturday, April 15, 2006

சென்னையில் Blank Noise

இணையம் இல்லாத ஒரு மாத காலத்தில் மதியிடமிருந்து வந்திருந்த மயில் சொன்னது eve teasing எண்ணங்களை பகிர்ந்து கொள்ளும் blogathon என்ற தொடர் பதிவுகளைப் பற்றி. யாரும் எழுதினார்களா தெரியவில்லை. நான் எழுத யோசித்த போது அங்கங்கே பேருந்திலும் நடைபாதைகளிலும் சந்தித்த நொடி நேர சுகம் தேடும் இடிமன்னர்கள், தொண்ணூறுகளில் ஏதோ ரயில் நிலையத்தில் இருந்து வெளியில் வர முயற்சிக்கையில் அதீத நெரிசலில் பின்னால் உரசிக் கொண்டிருந்த ஒரு ஆண் உறுப்பையும் தவிர பெரிதாய் எதுவும் நினைவுக்கு வரவில்லை. திரும்பிப் பார்த்ததில் விலகிப் போன அந்த முகமில்லாத மனிதரை முற்றிலும் மறந்து போகவில்லை என்று இப்போது தெரிகிறது.

மறுபடியும் கில்லி சொல்லித் தெரிந்தது சென்னையில் இவர்கள் கூடப் போவது. 14 ம் தேதி மாலை நாரத கான சபாவைத் தேட நேரமாகுமோ என்று முன்னாலேயே புறப்பட்டு போனதில், ஆறேகால் மணிக்கு சபாவிற்குள் நுழைவதற்கு முன்னால் வுட்லேண்ட் கபேயில் ஒரு வெட்டுவெட்டிக் கொண்டிருக்கும் கச்சேரி ரசிகர்களில்
வலைபதியும் மக்கள் இலட்சணம் எதும் தெரியாததால் இன்னும் முக்கால் மணி நேரத்தை என்ன செய்வது என்று தெரியவில்லை. சாரதியார் பக்கத்திலிருக்கும் ஹனுமார் கோவிலுக்கு போங்களேன் என்று கூட்டிப் போனதில் ஒரு ஐந்து நிமிடம் ஓட்ட முடிந்தது. ஒரு சலாமுக்கும் குங்குமத்தீற்றலுக்கும் அதுக்கு மேல் எத்தனை நேரமாகப் போகிறது?! இத்தனை சீக்கிரம் முடிஞ்சுதா என்ற சாரதியின் ஆச்சர்யத்தை ஒதுக்கிவிட்டு வேற என்ன? என்று அந்த பிராந்தியத்தை சலித்ததில் ஒரு செருப்புக்கடை, ஒரு மினி கண்காட்சி... எதிலும் எதுவும் வேலையிருக்கவில்லை. சத்தம் அதிகமாய் ஒர் உள்ளடங்கிய கடை கூப்பிட்டதில் எட்டிப் பார்க்க AVM Music Store கண்ணில் பட நேரம் போனதே தெரியவில்லை.

ஏழு பத்துக்கு அவசரமாய் போய் சேர கபேயில் Blank Noise கூட்டம் ஆரம்பமாகி விட்டிருந்தது. மூன்று மேசைகளை வளைத்துப் போட்டு உட்கார்ந்திருந்த கூட்டத்தில் ஆணும் பெண்ணுமாய் எல்லாவயதுகாரர்களையும் பார்க்க முடிந்தது. மேலோட்டமாக சில விவாதங்கள், கருத்து பகிர்தல்கள், என்ன செய்யலாம், ஏன் இப்படி என்ற பேச்சுகள். ஏழு மணிக்கு, அடுத்ததாய் இந்த மாதம் 29ம் தேடி மறுபடியும் கூடுவதாயும் இடம் பின்னர் அறிவிக்கப் படும் என்று முடிவானது. நேரமிருக்கிறது என்னை உபயோகப் படுத்திக் கொள்ளலாம் என்று சொல்லி வந்திருக்கிறேன்.

முடிந்தபின் கொஞ்ச நேரம் அரட்டையில் சில அறிமுகங்கள், அவரவர் கேள்விப்பட்டதும், என்ன செய்யலாம்ங்களும். கொஞ்சம் இணையம்... சந்தர்பம் கிடைத்ததில் தமிழ்மணமும் ஆயிரத்தை எட்டும்(எட்டியாச்சா?) தமிழ் வலைப்பதிவுகளையும் பேசி விடை பெற்றேன். அந்த சிறு கூட்டம் இன்னும் தொடர்ந்து கொண்டிருந்தது. இந்த Blank Noise எங்கே எவ்வளவு தூரம் போகும் என்று தெரியவில்லை. எதாவது முயற்சி செய்ய வேண்டும் என்று நினைப்பதே முதல் படியாய் இருக்கட்டும்.

No comments: