Saturday, February 03, 2007

Babel & Parzania


ரசனைகள், அவற்றின் முனைப்பு இதெல்லாமே சந்தர்ப்பம் சூழ்நிலைகளால் மழுங்கிப் போய் விடுவதை இவ்வளவு துல்லியமாக உணரப் போகிறேன் என்று ஒரு வருஷம் முன்னால் நி¨னத்தும் பார்க்கவில்லை. ஐந்து நிமிடப் பயணத்தில் INOX ம் அது தடம் காட்டியதில் தொடர்ந்த பெங்காலிப் படங்களும் தந்த நிறைவெல்லாம் சென்னை வந்த பிறகு சத்யம் ரொம்ப தூரம், வேலைக்காரம்மா வேலை முடிக்கும் நேரம், பசங்க வீட்டுக்கு வரும் நேரம் போன்ற சில்லரை காரணங்களால் இழப்பதே தெரியாமல் இழந்தது பெரிய பர்சனல் சோகம். ஆரம்ப கால சென்னை வாழ்க்கையில் தேடிப் போன சத்யம் Lights On நிகழ்ச்சிகளும் சனி, ஞாயிறு காலை ஒன்பது மணி படங்களும் மெல்ல மெல்ல இல்லாமலே போனது உரைத்த ஒரு மாலை Parzania என்று ரொம்ப வேகமாகப் புறப்பட வைத்து இரண்டாவது வரிசை ஓக்கேவா என்று கேட்க, மறுத்ததால் வாய்த்தது Babel. ஒரு விஷயம்... அதைத் தெ¡டர்ந்து நிகழும் வெவ்வேறு விஷயங்கள்... அதை கச்சிதமாக இணைத்திருப்பது... கொஞ்சம் கூட தொய்வில்லாமல்... செதுக்கி வைத்த பாத்திரங்கள், அது காட்டும் முதிர்ச்சி, இப்படித்த¡ன் இருக்கப் போகிறது என்று எதிர்பார்த்த இறுதிக் காட்சி, முகத்தில் அறையாவிட்டாலும் யோசிக்க வைத்ததுமாய்... திரும்பி வரும் வழியெல்லாம் தொடர்ந்த படம் பற்றிய விவாதம்... நிச்சயமில்லாதது தான் வாழ்க்கை என்றால் எப்படி என்ற கேள்வியும், அது தானே அதன் சுவாரசியம் என்ற பதிலுமாய்... மகளும் நானும் அன்றைக்கு படுக்கப் போகும் போது கனமாக உணர்ந்தோம்.

ஆனாலும் Parzania வை விட மனதில்லாமல் அடுத்த நாள் படையெடுப்பில் வழக்கம் போல சத்யம்தியேட்டரின் ட்வின் சீட் இந்த முறையும் மகளுக்கு எனக்கும் வாய்த்தது. போயும் போயும் நாம ரெண்டு பேருமா இப்படி ஒட்டிக்கிட்டு படம் பார்க்கணும்! என்ற வழக்கமான செல்லச் சலிப்பொடு பாப்கார்னையெல்லாம் படம் தொடங்குவதற்கு முன்னாலே முடித்து விட்டு பார்க்கத் தயாரானது ம்ம்ம்... வலிய வருத்திக் கொண்ட இறுக்கம் போல என்று கூடச் சொல்லலாம். படத்தின் இந்த நிகழ்வு நடந்து முடிந்த போது தான் சூரத்திற்கு குடிபெயர்ந்திருந்தோம். அவ்வளவு பக்கத்தில் இத்தனை நடந்திருந்தும், ஊடகச் செய்திகளைக் காட்டிலும் கண் பார்த்த செய்திகள் சட்டென்று பரவும் சாத்தியமிருந்த போதும் அமைதியாயிருந்த அந்த நகரம் பெரிய ஆச்சர்யம்.

அந்த கலவரங்களின் போது குழந்தையை தவறவிட்ட ஒரு குடும்பத்தின் உண்மைக் கதை. சின்னச் சின்ன மாற்றங்கள் செய்து ஒரு கதை போன்ற தோற்றத்தில் பதியப் பட்ட நிஜம். முழு தியேட்டரும் உறைந்து போய்க் கிடந்தது. கதை நாயகன் Parzan னின் கற்பனையில் உருவாக்கி வைத்திருந்த, அவனுக்கும் அவன் தங்கைக்குமான Parzania என்ற உலகம், அதன் சந்தே¡ஷங்கள்... சாக்லெட் வீடுகளும் ஐஸ்க்ரீம் மலைகளும்... ஒரே நாளில் கலைந்து போவதும்.... தேடல்களும் தோல்வியும்...

யார் யார் எப்படி எப்படி நடித்தார்கள் என்று எழுதும் போது அது வெறும் படமாக பதிந்துவிடக் கூடாது என்பதால் இது மட்டுமே போதுமென்று தோன்றுகிறது. வழக்கம் போல!

No comments: