Wednesday, November 09, 2005

ANTARMAHAL: Views of the Inner Chamber

Image hosted by Photobucket.com

படம் விரட்டின விரட்டில் தேடிப் போய் பாஷை புரிய வைக்கும் இடத்தில் பார்த்துவிட்டு வந்தாயிற்று. 'அப்படியாயிருக்குமோ? சேச்சே அதுவாயிருக்காது' என்று நினைத்ததெல்லாம் அப்படியேதான் அதேதான் என்று சொல்லிவிட்டது. பாஷை சரியாகப் புரியாமல் அரைகுறையாய் புரிந்து எதையாச்சும் சொல்லிவிட வேண்டாம் என்று தான் அப்படி ஒரு மொட்டை பதிவு. என்ன செய்ய? படம் பார்த்து விட்டு வந்ததும் அதைப் பற்றி எழுதாமல் இருக்க முடியவில்லை.

ரிதுபர்னோ கோஷின் இன்னொரு பீரியட் படம். ஜமீந்தாரை படம் வரைய வந்த வெள்ளைக்காரர் தான் கதை சொல்லி. 1858 நடக்கும் கதை. சல்லாபி ஜமீந்தாருக்கு(ஜாக்கி ஷெராப்) ராணி விக்டோரியாவிடமிருந்து ராய் பகதூர் பட்டம் வேண்டும். ஆண் வாரிசு ஒன்று கட்டாயம் வேண்டும். இது இரண்டும் தான் பெரிய தலைவலி. முதல் மனைவியாக ரூபா கங்கூலி. புதிதாக வந்த இளம் மனைவியாக சோஹா அலி கான். தலைவலியைத் தீர்க்க எதையும் செய்ய தயாராகிறார் ஜமீந்தார். அந்த 'எதையும்'ல், வரபோகும் துர்கா பூஜைக்கு துர்காவின் உடலில் ராணியின் முகத்தை வைத்து சிலை செய்ய உத்தரவிடுவதும், புரோகிதர் வேதம் வாசிக்க, கேட்டுக் கொண்டே புணர்வதும் அடங்கும். ராணி முகச்சாயலில் சிலை செய்ய வருபவராக அபிஷேக்பச்சன். இந்த பாத்திரங்கள், அதன் இயலாமைகள், தவிப்பு, உணர்வு உரசல்கள்... இதில் ஓடும் கதை.

புரோகிதரை வைத்துக் கொண்டு புணர மறுக்கும் இளம் மனைவிக்காக முதல் மனைவி கட்டிலுக்கும் வாசிப்பவருக்கும் நடுவில் திரை போடச் சொல்கிறார். திரைக்கு அந்தப் பக்கம் ஜமீந்தாரும் இளம் மனைவியும். இந்தப் பக்கம் வாசிப்பவரைச் சீண்ட அவர் முன்னே அமர்ந்து கொஞ்சமாய்(?!) துகிலுரிகிறார். 'பிள்ளை பெற்றுக் கொள்ள நீ செய்வது தவறில்லை என்றால், நான் செய்வதும் தவறில்லை'.

மோப்பம் கண்ட புரோகிதர் கடைசியில் ஜமீந்தாரை வைத்தே பரிகாரம் என்ற பேரில் முதல் மனைவியோடு தன்னையும் சேர்த்து ஐந்து புரோகிதர்கள் புணர அனுமதி வாங்கிக் கொள்கிறார்! ராணியின் முகச்சாயல் துர்கா, பெரிய குற்றம், பரிகாரம், அஸ்வமேத யாகம், குதிரை, அது ஊரெல்லாம் சுற்றி வந்ததில் தீட்டு, அதைப் போக்க வீட்டு பெரிய மருமகள் குதிரையோடு புணர்ந்து சுத்தம் செய்ய வேண்டும், ஆனால் இப்போது அப்படியெல்லாம் செய்ய வேண்டாம் அதற்குப் பதில் இந்த ஐந்து புரோகிதர் சமாச்சாரம்! ஆக்ரோஷமாய் மறுக்கும் முதல் மனைவி பிறகு 'இதையே சாதகமாக்கிக் கொண்டு ஒரு பிள்ளையைப் பெற்றுக் கொண்டு உன் இடத்தைக் காப்பாற்றிக் கொள்' என்ற சேடி பெண்ணின் ஆலோசனையையும் ஏற்றுக் கெள்கிறார். அவசியம் வந்தால் எதுவும் மாறும்... எப்படியும் மாறும்!

கடைசியில் துர்காவை இளம் மனைவியின் முகச்சாயலில் செய்து விட்டு சிலை செய்தவர் தலைமறைவாகிறார். அதை அவமானமாக நினைத்து இளம் மனைவி தற்கொலை செய்து கொள்கிறார். புரோகிதர்களோடு புணரக் குறித்த நாளில் முதல் மனைவி விலக்காகிக் போகிறார்!

விலக்கானது தெரிந்தும் 'அமி ஜாபோ(நான் போவேன்/கிறேன்?!)... அமி ஜாபோ' என்று திரும்பத் திரும்பச் சொல்லி உடைந்து அழும் போது... அந்த பாத்திரத்தை அதன் அவஸ்தையை இதைவிட வேறெப்படியும் சொல்ல முடியாது. விரிந்த அந்தக் கண்களில் மாறி மாறி வெளிப்படும் கோபமும் இயலாமையும்... ரூபா கங்கூலியின்
பாதிப்பு இன்னும் கொஞ்ச நாளுக்கு இருக்கும். இப்படி ஒரு பாத்திரம் செய்த பிறகு என்ன மாதிரி உணர்வார் என்று ஒரு கேள்வி வருகிறது. ஆனால் அம்மையாருக்கு இதொன்றும் புதிதல்ல என்றே தோன்றுகிறது.

சோஹா அலி கான் சின்ன பூனைக்குட்டி போலிருக்கிறார். மெல்லிய குரலும், உயராத விழிகளும்... அந்தக் காலத்துப் பெண்கள் இப்படித்தான் இருந்திருப்பார்களானால் ரொம்ப பரிதாபம் தான். அபிஷேக் பெங்காலி பேசினால் எப்படி இருக்கும் என்ற கற்பனை பலூனுக்கு பரிதாபமாய் காற்று போய் விட்டது. ஹிந்தி பேசும் பிஹாரியாக தப்பித்துக் கொண்டார். முரட்டு ஜமீந்தாருக்கு ஜாக்கி(அய்யோ இப்படி எழுதவே பிடிக்கலை!) அழகாய் பொருந்துகிறார். மனுஷன் பாதிப் படம் புணரும் போஸிலேயே முடித்து விட்டார்! இத்தனை விலாவரியாக இவ்வளவு முறை அதைக் காண்பித்திருக்க வேண்டாம் தான். படம் ஆரம்பிப்பதே அந்த போஸில் தான். மழை இல்லாததால் புழுக்கமாயிருப்பதையும், வியாபாரிகள் நல்ல பணம் சம்பாரித்துக் கொண்டதையும் பற்றி சலித்துக் கொண்டு, கூட ஒரு ஏப்பமும் விட்டு... கோழிக்குஞ்சு போல் ஒடுங்கிக் கொண்டிருக்கும் இளம் மனைவியோடு தொடங்கும் முதல் காட்சி!

ஆள் உயரத்துக்கு வெள்ளையாய் புல் பூத்திருக்கும் நதிக்கரையை எங்கே பிடித்தார்களோ! அழகான ஒளிப்பதிவு. இழைத்து இழைத்து படம் எடுத்தது தெரிகிறது. மை தீட்டிய கண்களும், ரவிக்கையில்லாத தோள்களில் நிறைந்து கிடக்கும் நகைகளும்... அரங்கத்திற்குள் இருந்த நேரத்தை magical moments ஆக்கும் வித்தை பிடித்திருந்தது. படம் முடியும் போது ஒரு சின்ன அதிர்வை எல்லோருக்குள்ளும் தந்ததை இரண்டு நாளும் உணர முடிந்தது. ஒரு ஆழ்ந்த நிசப்தத்திற்கு பின் கலைந்து செல்லும் திரையரங்கம்... என்னவோ செய்தது.

1 comment:

Anonymous said...

சரியான புணர்ச்சி, சாரி உணர்ச்சி படம்னு சொல்லுங்க!

posted by: