Friday, December 11, 2015

வீணையின் குரல் எஸ். பாலசந்தர்: ஓர் வாழ்க்கை சரிதம்


முதல் முதலாக வீணை பாலசந்தர் பெயரை அப்பா சொல்லித்தான் கேட்டிருக்கிறேன். ஏழெட்டு வயதிருக்கும் அப்போது. யாரிடமிருந்தோ கொண்டு வந்து வீட்டில் சில நாட்கள் இருந்த எல்பி ரெக்கார்ட் ப்ளேயரும் அதை அப்பா மட்டுமே கையாண்டதும் தெளிவில்லாமல் நினைவில் வந்து போகிறது. அதில் தான் கேட்டிருக்கக் கூடும். வாத்திய கருவி இசையைக் கேட்கும் பரிச்சயம் இல்லாததால் அதில் லயிக்க முடியாததுமாக ஞாபகம்.

ஒரு முறை பார்க் வீதியில் நவராத்திரி கொலு பார்க்கப் போன வீட்டில் பார்த்திருந்த வீணையும் ரொம்ப நாள் நினைவில் ஒரு ஆசையாய் தங்கியிருந்தது. லாவகமாக அதை வாசிப்பது போல ஒரு கற்பனை செய்து பார்த்திருக்கிறேன். அதை கற்றுக் கொள்ள ஆசைப் படுகிறேன் என்று சொல்லக் கூட முடியாது என்று மட்டும் அப்போதே தெரிந்திருந்தது. யாரிடமும் சொல்லாமலே மறைந்து போன ஆசை அது.

புத்தகம் வாங்குகிறோமோ இல்லையோ சும்மாவாகவாவது கொஞ்ச நாட்களுக்கு ஒரு முறை ஒரு வட்டம் அடித்துக் கொண்டிருந்த லேண்ட்மார்க்கை மூடியதை ஜீரணிக்கவே முடியாதிருந்தது. எக்ஸ்பிரஸ் அவென்யூவின் சிறிய புத்தகக் கடை அந்த லேண்ட்மார்க் நாட்களுக்கு உறை போடக் காணாது என்றாலும் அங்கே தான் இந்த வீணையின் குரல் கண்ணில் பட்டது. 

 வழக்கம் போல ஓய்ந்து ஒழிந்து வாசித்த போதும் புத்தகம் தந்த ஆச்சர்யம் அளவில்லாதது. விக்ரம் சம்பத் ஆங்கிலத்தில் எழுதி வியெஸ்வியால் தமிழில் மொழிபெயர்க்கப் பட்ட வீணை எஸ். பாலசந்தரின் வாழ்க்கை சரிதம். Genius, extra ordinarily confident, multi talented personality. இசை, ரேடியோ, வாசிப்பு, சினிமா என்று மனிதர் கை வைக்காத துறையேயில்லை. அதிலும் எல்லாவற்றிலுமே தி பெஸ்ட். வீணைதான் தன்னுடைய வாத்தியம் என்று முடிவெடுத்ததாகட்டும், சொந்த முயற்சியில் தானே கற்றுக் கொண்டதாகட்டும், வாத்தியத்தில் ஒவ்வொரு பாகத்திலும் தொடர்ந்து செய்து கொண்டிருந்த மாற்றங்கள்/ முன்னேற்றங்களாகட்டும்... எல்லாமே அசாதாரணமானது.

கர்நாடக இசையை வெளிநாடுகளுக்கு கொண்டு செல்ல, அதை சரியான முறையில் பிரபலப் படுத்த... என்ற எல்லா முயற்சிகளிலும் அவரது திட்டமிடல்களும் நிகழ்த்திக் காட்டியதும்... perfect! மொத்த வாழ்க்கை நிகழ்ச்சிகளை தன்னுடைய குறிப்புகளோடு ஆல்பங்களாக தொகுத்து வைக்க எத்தனை தன்னம்பிக்கை வேண்டியிருக்கும். என் வாழ்க்கை, அதை நான் நிலைத்திருக்க விட்டுச் செல்கிறேன் என்றதோர் தன்னம்பிக்கை.


அதி தீவிர கொள்கைப் பிடிப்பும் அதற்காக அதன் உச்சம் வரை போராடுவதுமான ஹீரோயிஸம் எல்லாரும் செய்ய விரும்பும் ஒன்றாயிருந்தாலும் செய்யக் கூடிய சாத்தியங்கள் குறைவு. எஸ். பாலசந்தர் அதற்காக பெரும் அமைப்புகளோடு, பெரிய இசைக்கலைஞர்களோடு தன்னந்தனியே நிகழ்த்திய போராட்டங்களும் அதற்காக சந்தித்த எதிர்ப்புகளும் மலைக்க வைக்கிறது. அதற்காக முரடரென்று ஒதுக்க முடியாத மென்மையான பக்கங்களுக்கும் சொந்தக்காரர். ஆதர்ச மனிதராயிருந்திருக்கிறார். அவருடைய இயக்கத்தில் வந்த காலங்கள் கடந்தும் பெயர் சொல்லும் படங்களைத் தேடிப் பார்க்க வேண்டும்.

A man with larger than life image... அது போல ஒரு வாழ்க்கை வாழ்ந்திருக்க யாரும் ஆசைப் படக் கூடும், ஆனால் அவரோடு வாழ்ந்திருந்திருப்பது என்பது நிச்சயம் சுலபமல்ல.

No comments: