Sunday, May 12, 2013

Perfume - the story of a murderer

கடுமையான தண்டனை வழங்க மக்கள் முன்னால் கொண்டு வந்து நிறுத்தப்படும் ஒரு குற்றவாளியின் கதையைச் சொல்லத் தொடங்கும் குரலோடு பயணிக்கிறோம். பாரிஸ் நகரின் மீன் மார்க்கெட்டில் ஒரு மீன்காரி கழிவுகளுக்கு நடுவில் பெற்றுப் போடும் குழந்தை (Jean-Baptiste Grenouille) க்ருனலே பிறந்ததுமே தன்னைச் சுற்றியுள்ள வாசனைகளை ஒரு வேட்கையோடு உள் வாங்கத் தொடங்குகிறது. பிள்ளையைக் கொல்லப் பார்த்தாள் என்று பழியோடு அம்மா தூக்கு மேடை ஏற அனாதை ஆசிரமம் போய் சேர்கிறான்.  வளரும் போது அவன் பேசும் மொழி அவனுக்கு தெரிந்த வாசனைகளை குறிப்பிட போதுமான வார்த்தைகளை கொண்டில்லாததாக உணர்கிறான். ஒவ்வொரு வாசனையையும் துல்லியமாக பிரித்தறியும் அதி அற்புதமான நாசியோடு பிறந்திருப்பதையும் அறிகிறான்.

பதிமூன்று வயதானதும் ஆசிரமத்திலிருந்து வெளியே அனுப்பப்படும் க்ருனலே தோல் பதனிடும் தொழிற்சாலை சேர்கிறான். கடுமையான வேலைகளில் இன்னும் சில வருடங்கள் கழிகின்றது. முதல் முதலாக நகரத்துக்குள் செல்ல வாய்ப்பு கிடைக்கும் ஒரு நாளில் ஒரு அழகான பெண்ணின் வாசனையைத் தொடர்ந்து பின் செல்லும் அவன் கையால் தவறுதலாக அந்தப் பெண் இறந்து போகிறாள். ஒரு சந்தர்ப்பத்தில் நகரின் குறிப்பிட்ட வாசனை தயாரிப்பவருக்கு தோல் கொடுக்க போகும் போது அவர் கண்டுபிடிக்க சிரமப்பட்ட ஒரு வாசனை தைலத்தை அவன் நொடிகளில் தயாரித்துக் கொடுக்கிறான். அவனுடைய இடம் மாறுகிறது. அவனால் புதுப்புது தைலம் தயாரிக்கப் பட அதற்கு பதிலாக எந்த ஒரு பொருளின் வாசனையையும் கைப்பற்றும் வித்தையைக் கேட்கிறான்.   அவரிடமிருந்து கடிதம் பெற்று தொலைதூர நகருக்கு பயணிக்கிறான். அங்கே கற்ற வித்தையை வைத்து பெண்களின் உடல் வாசனையை பிரித்தெடுக்க தொடங்குகிறான், ஒவ்வொரு பெண்ணையும் கொன்று.  அவனால் உருவாக்கப்படும் உலகின் மிகச் சிறந்த வாசனை தைலமும் அது நிகழ்த்தும் மாயமுமாய் கதை முடிகிறது.
திரைப்படம் கூடுதல் சிறப்பாவது அதன் அற்புதமான ஒளியாக்கத்தினால். வெறுப்பூட்டாத கொலைகாரன்.

 ஜன்னல் - குங்குமம் தோழி, மார்ச் 2013 இதழுக்காக எழுதியது.

No comments: